Monday, August 5, 2013

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு.?




நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .     
       
.

 



 





 

 




11 comments:

  1. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. ஏதோ இப்போதுதான் நான் பள்ளிக்கூடம் சென்றது போல் இருக்கிறது. அதற்குள் நாட்கள் ஓடி விட்டன. உங்கள் பதிவுகள் எனக்கு ஆறுதல் வார்த்தைகளாய் இருக்கின்றன. வாழ்வியல் சிந்தனைகளை எளிமையான வரிகளில் அனுபவத்தோடு எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. //எத்தனையோ போராட்டங்களைப் பார்த்தாயிற்று. நான் வெல்ல வில்லையா?..// தன்னம்பிக்கையூட்டும் அற்புத வரிகள் ஐயா!...

    ReplyDelete
  4. உங்கள் நினைவுகளும், எண்ணங்களும்
    மிக அருமை.
    கனவு கவிதை அருமை.
    வேதாத்திரி மகரிஷியின் எண்ணம் ஆராய்தலிருந்து எண்ணங்கள் ஆராய்ச்சி, பாரதியார் பாடல் எல்லாம் பகிர்ந்து கொண்டு தன்னம்பிக்கையால் வாழ்வில் எல்லாவற்றையும் எதிர்க் கொள்ளலாம் என்று நிறைவு செய்த ஆய்வு அருமை.

    ReplyDelete
  5. 'இருப்பது தெரியாது; பறப்பதைப் பிடிக்க யோசனை' என்று சொல்வார்கள். பொதுவாகவே எது இல்லையோ அதைச் சுற்றித் தான் எண்ணம் போகும்.

    நம்மை வாட்டும் அல்லது கவரும் எண்ணங்களை வரிசை படுத்திப் பார்த்தால் முழுக்க முழுக்க என்றில்லாவிட்டாலும் முக்கால்வாசிக்கு மேலான எண்ணங்களின் சுழற்சி ஒரு காலத்தில் இருந்து இப்பொழுது இல்லாதது, இல்லை, இல்லாததை வசப்படுத்த என்று தான் இருக்கும்.

    இருப்பதைப் பற்றி அதிகமாகவும், இல்லாததைப் பற்றி ஓரளவாகவும் நம் சிந்தனையை அமைத்துக் கொண்டால்
    எண்ணச்சுமைகளினால் ஏற்படும் பாதிப்புகளைக் களையலாம்.

    சரி, நினைவுகள்?..

    இவற்றைப் பொருத்தமட்டில் அவை உபயோகம் உள்ளவையாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருந்தால் போதும். பெருமூச்சு விடுகிற மாதிரியான எண்ணங்களை தவிர்த்தல் சிந்தனை அமைதிக்கு நல்லது. சிந்தனையை கொப்பளிக்க வைக்காமல், அமைதிபடுத்தும் கலை தெரிந்திருந்தால், உலகும்-உலகின் அழகும் வசப்படும். 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற
    நிலை அதுதான்.

    ReplyDelete
  6. எண்ணத் தறியில் எழில் நினைவுப் பின்னிப்
    பிணைந்திழையோட இழையோட
    கன்னக்குழியில் வண்ணக்குமிழ் கொப்பளிக்க
    பைந்தமிழ் மொழிபேசி மொழிபேசி

    ஆய்ந்திட்ட நினைவுகள் எண்ணங்கள் சிந்திக்கவைத்தன..!"

    ReplyDelete
  7. எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.
    அனுபவ வார்த்தைகள் ஐயா

    ReplyDelete
  8. @ ஜீவி
    கூறப்பட்ட கருத்துக்களும்,கூறிய விதமும் மிக அருமை ;

    மாலி .

    ReplyDelete
  9. காற்றின் போக்கில் போகும் பட்டம்போல்
    எண்ணத்தின் போக்கிலேயே போய்
    அதனை விவரித்தது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  10. @ டாக்டர் கந்தசாமி
    நன்றி ஐயா.
    @ தி. தமிழ் இளங்கோ
    / வாழ்வியல் சிந்தனைகளை எளிமையான வரிகளில் அனுபவத்தோடு எழுதி இருக்கிறீர்கள்./ஒருவரின் சிந்தனைகள் பகிர்வதற்கு ஏதுவாக இருக்கும்போது அதைப் பகிர்தல் சரியென்றே தோன்றியது. பாராட்டுக்கு நன்றி.
    @ துரை செல்வராஜ்
    எனக்கு நானே தெம்பூட்டிக்கொள்ள எழுதியபதிவு. கருத்துரைக்கு நன்றி.
    @ கோமதி அரசு
    அந்தமாதிரி இன்னொரு கனவுக் கவிதை இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே. அப்போது கனவு கண்டேன். வாழ்க்கை இன்பமயமாய் இருந்தது. பின் கடமைக் கடலில் பய்ணித்து கரையை சேரும் நேரத்தில்
    எண்ணங்கள் வாட்டி வதைக்கின்றன. அதுவே பதிவாயிற்று. நன்றி.
    @ ஜீவி
    பதிவில் ஜீவியின் பின்னூட்டம் என்றால் கவனமாகப் படிப்பேன்.நான் எழுதி இருக்கும் எண்ணங்கள் இருப்பது இல்லாதது பற்றியல்ல என்று கூர்ந்து படித்தால் தெரியும். /பெருமூச்சு விடுகிற மாதிரியான எண்ணங்களைத் தவிர்த்தல் சிந்தனை அமைதிக்கு நல்லது/ அதுதானே பிரச்சனையாகிப் பதிவாகி இருக்கிறது. எண்ணங்கள் கட்டுக்குள் வர மறுக்கிறது. அதைத்தான் குரங்கின் நினைவு என்றேன். எது நல்லது எது அல்லாதது தெரிகிறது. ஆனால் எது நல்லது இல்லையோ அதுவே மீண்டும் மீண்டும் முன் வருகிறது. எண்ணங்களை திசை திருப்பவே நான் பதிவெழுதுவதில் நேரம் கழிக்கிறேன். அதையே பதிவாகவும் எழுதி இருக்கிறேன். வருகை தந்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவி சார்.
    @ இராஜ ராஜேஸ்வரி
    @ கரந்தை ஜெயக்குமார்
    ஆய்ந்திட்ட கருத்துக்களை அனுபவ வார்த்தைகளாகவும் சிந்திக்க வைப்பதாகவும் கூறியதற்கு நன்றி.
    @ v.mawley
    ஜீவிக்கு எழுதியதையே உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். வெகு நாட்களுக்குப்பின் வருகை தந்ததற்கு நன்றி
    @ ரமணி.
    பொதுவாகவே என் சிந்தனையின் போக்கிலேயே பதிவுகள் எழுதுகிறேன்வாழ்த்துக்களுக்கு நன்றி.



    ReplyDelete
  11. @ GMB Sir; "வெகு நாட்களுக்குப்பின் வருகை தந்ததற்கு நன்றி"... தங்களுடைய பதிவுகளை எல்லாம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன் ..பின்னூட்டமிடு வதை சம்பிரதாயமாக கொள்ள்
    வில்லை ..அவ்வளவே ..மாலி

    ReplyDelete