Monday, June 30, 2014

ஒன்றில் இரண்டு


                                                    ஒன்றில் இரண்டு
                                                      ------------------------



 ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...சில அத்வைதக் கருத்துக்களும்
                                 ----------------------------------------
கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா என்றேன்.
எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய்.
அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே.
சரி. உண்மைதான் என்ன.? “
உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.?
பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள்.
கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
இறந்தவனாகக் கருதப் படுவான்.
மூச்சு என்பது என்ன.?
சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம்.
எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன.
உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான்

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்று ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்து எழுதியதைப் படித்தவுடன்  எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டேன். அத்துவைதக் கருத்துக்களுக்கு அது வேறு ஒரு வியாக்கியானமாகத் தோன்றியது. இம்மாதிரி சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் என்ன காரணமிருக்கும் என்று யோசித்தேன். தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள நினைக்கும் மனமே காரணம் என்று புரிந்தது. இந்தக் கேள்வியும் தேடலும் ஒன்றும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது போலவும் அதை புரிந்துகொண்டு அனுஷ்டிக்கத் தெரியாததாலோ, முடியாததாலோதான் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எழுகிறது போலவும் தோற்றமும் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் கீழ்ப்பாக்கம் போன்ற இடத்துக்குத்தான் போக வேண்டும் என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

முதலில் நான் என்பது யார்.?கண்ணும் , காதும் , மூக்கும் இன்ன பிற உறுப்புகளும் கொண்ட உடலா.? அப்படியானால் இறந்தவுடன் பேரென்ற ஒன்று இருந்ததையெ மறந்து பிணம் என்று அழைப்பார்களா.?நான் இருக்கிறேன் இல்லை இறந்துவிட்டேன் என்று தெரியப் படுத்துவதேநான் விடும் மூச்சுக் காற்றுதான் அல்லவா?அதையே நான் ஜீவாத்மா என்றும் இறந்தபிறகு அது பரமாத்மாவுடன் கலக்கிறது என்றும் வியாக்கியானித்தேன். அண்மையில் சங்கராச்சாரியாரின் தெய்வக் குரல் எனும் நூலை படித்துக் கொண்டிருந்தேன்

.ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் சங்கரர். அதாவது நாம்தான் கடவுள் என்கிறார். தன்னைத் தவிர வேறு கடவுளே கிடையாது என்ற ஹிரண்யகசிபு அகங்காரத்தில் சொன்னான்.ஆனால் கடவுள் தவிர வேறெதுவும் கிடையாது என்பதால் நாமும் கடவுளே என்கிறார். ஜீவன் ஆனது நான் என்னும் எண்ணத்தைவிட்டுவிட்டு  பிரம்மத்துடன் கலந்தால் அதுவும் பிரம்மமாகிவிடும் என்கிறார். நாம் இப்போது உத்தரணி ஜலத்தைப் போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஆண்டவன் அகண்ட சக்தியுடன் சமுத்திரம்போல் இருக்கிறார்.அந்த சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணிஜலம் தான் தனி என்னும் அகங்காரம் நீக்கிசமுத்திரத்துடன் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும் என்கிறார்.( கவனிக்கவும்: நான் மூச்சுக் காற்று என்றேன், அவர் உத்தரணிஜலம் என்றார். நான் அகண்டவெளிக் காற்று என்றேன். அவர் சமுத்திரம் என்றார். நான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்துவிடும் என்றேன். அவர் சமுத்திரமாக மாற வேண்டும் என்கிறார்.) இப்படி எழுதுவதன் மூலம் நான் என்னை அவருடன் ஒப்பிடுகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். There was a striking similarity which prompted me to compare


நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, 'ஸ்வாமியே நாம்' என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப்பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, 'ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு' என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத்தான் இருந்தாக வேண்டும்.

வர் எல்லாப் பொருட்களிலும் இருந்தாலும் மனிதனாக இருக்கும்போது மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதை பாப புண்ணியங்களில் ஈடுபடுத்தி பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

கடவுள் என்னும் தத்துவத்துக்கு எல்லா சக்திகளும் உண்டென்று எண்ணி பாப புண்ணியங்கள் அதன் பலன்கள் கொடுப்பவர் என்று நம்பினால் அவர் ஏன் நம்மில் இருந்து கொண்டே அந்தத் தவறுகளைச் செய்ய வேண்டும்.?கடவுளுக்கு நிர்க்குணன் என்றொரு பெயருண்டு, எந்த குணமும் இல்லாதவன் என்று பொருள். ஒரு நிர்க்குணன் மனிதரில் ஏன் பலரையும் சற்குண , துர்குணராகப் படைக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும்?இதற்குப் பதிலாக கர்ம வினைகள் என்று காரணம் கூறுவொருமுண்டு.,

ஜீவன் என்பது பரம் பொருளின் ஒரு பாகமே என்றால் இவ்வுலகில் ஏற்ற தாழ்வுகள் ஏன்.? மனிதனின் ஆதிக்கக் குணமே இம்மாதிரியான ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம். இகமும் பரமும் ஒன்றானால் அப்படி இருக்கக் கூடாதே, ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.

நம் மனம்தான் நாம் படைத்த கடவுளிடம் சேர்க்கிறது, இல்லாவிட்டால் பிரிக்கிறது. அழிந்து போகப் போகும் உடலே சாசுவதம் என்பதுபோல் எண்ணுகிறோம். வாழ்க்கையின் மதிப்பீடுகளைத் தொலைத்துக் கொண்டு வருகிறோம். எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் இருக்க வேண்டும் அதுவும் சமமாகவும் நேர் எதிராகவும் இருக்க வேண்டும் என்பதுதானே விஞ்ஞானவிதி..அப்படி என்றால் எல்லோர் உள்ளும் இருக்கும் கடவுளுக்குள்ளும் ஏற்ற தாழ்வு இருக்கக் காரணம் என்ன..

நான் முன்பெ எழுதி இருந்தேன். கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான புனைவுகள்

என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?

மனதில் தோன்றும் எண்ணங்கள் பகிரப் படுகின்றன. இவை யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க அல்ல. ஒரு அறிவு பூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கலாம் என்னும் நம்பிக்கையே காரணம்.








  




44 comments:

  1. சிந்தனை மிகுந்த விவாதங்கள்..!

    ReplyDelete
  2. ஜீவாத்மா, பரமாத்மா பற்றி அறிந்து கொண்டேன் ஐயா.. அதற்க்கு தாங்கள் அளித்த உவமைகள் அருமை ஐயா.. வாயுவின் முக்கியத்துவத்தையும், சுற்றுப்புற தூய்மையின் அவசியத்தையும் தங்கள் பதிவு உணர்த்துவதாகவே கருதுகிறேன் ஐயா..ஆன்மீகம் அளிக்கும் நன்மைகளில் இதுவும் ஒன்று.. தாங்கள் கூறுயதைப்போல்,

    மக்களிடம் நம்பிக்கை வளர்ப்பதற்க்கும், நல்லதை பரப்புவதற்க்காகவும், கடவுள் எனும் "மீடியம்" தேவைப்பட்டது..

    //என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
    தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
    காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
    என்று நம்புகிறேன்..//

    நிச்சயம் தங்கள் கனவு ஒரு நாள் நினவாகும் ஐயா..

    பதிவிற்க்கு மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  3. விவாதம் சிந்தனையினைத் தூண்டுகின்றது ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. சைவ சித்தாந்த வகுப்பிற்கு நான் சென்றுள்ளேன். தங்களின் பதிவைப் படித்தபின் அவ்வாறான ஒரு வகுப்பிற்கு மறுபடியும் சென்றதைப் போலிருந்தது. நன்றி.

    ReplyDelete
  5. அன்பின் ஐயா..
    தாங்கள் இந்தப் பதிவினை வெளியிட்ட அந்த நொடியில் நான் தளத்தில் தான் இருந்தேன்.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள படி - இந்தக் கேள்வியும் தேடலும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது.

    ஆனால் அது உரைக்கக் கூடியதும் அல்ல.. உணர்த்தக் கூடியதும் அல்ல..

    வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு தான் - நாம் பிறந்திருக்கின்றோம்.

    குழந்தை பேச ஆரம்பிக்கும் வரை அதன் முற்பிறவிகளின் நினைவுகள் அதனுடனேயே இருக்கின்றன.

    அந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டால் -

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு..


    ReplyDelete
  6. அன்பின் ஜி எம் பி - சிந்தனை ந்ன்று - ஆனால் கடைப்பிடிக்க கடின முயற்சி தேவை - முயலலாம் - வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள்- நட்புடன் சீனா

    ReplyDelete
  7. தீவிரமான சிந்தனை.

    பிராணவாயு இல்லமல் வாழ முடியாது என்பது இன்றைய நிலை. இன்னும் சில நூறு ஆண்டுகளில் அப்படி இருக்க வேண்டியதில்லை. இரண்டு சாத்தியங்கள். பிராணவாயுவிலிருந்து உருவாகும் ATPஐ செயற்கை முறையில் உருவாக்கி மனிதம் அதை ஏற்கப் பழகலாம். அல்லது லிபிட்கள் வழியாக பிராணவாயுவின் தேவையை மெள்ள நீக்கலாம். பரமாத்மா அருளிலிருந்தால் ;) அப்பவும் ஜீவா பரமானு புருடா வுட்டுகினே இருப்போம்.

    குழந்தைகள் பேசத் தொடங்கும் வரை முற்பிறவி நினைவுகள் இருக்குமா? இதென்ன கூத்து செல்வராஜு அவர்களே? ஊமைக் குழந்தைகள் அனைவரும் முற்பிறவி நினைவுகளுடன் திரிகிறார்களா? ம்ம்ம்..

    ReplyDelete
  8. //சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் //

    ஐயோ...!

    அப்பாதுரை... ATP?

    ReplyDelete
  9. //கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான புனைவுகள்//

    ஒரு பக்கம் புனைவு என்னும் அவநம்பிக்கை!


    //“ பரித்ராணாய ஸாதூனாம்
    விநாசாய ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
    சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
    அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
    வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
    பகவான் கூறியது உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
    நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
    தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார் என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?//

    இன்னொரு பக்கம் அவன் வரவில்லையே என்னும் எதிர்பார்ப்பு. :)))))) நம்பிக்கை!

    ReplyDelete

  10. //ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.//

    சரியாய் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  11. ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது//

    இதுதான் சரி என்று தோன்றுகிறது.


    ReplyDelete
  12. அட! நான் மேற்கோள் காட்டியதையே நண்பர் நடனசாபபதி அவர்களும் காட்டியுள்ளாரே! இதைத்தான் Great men think alike
    என்கிறார்களோ :)

    ReplyDelete

  13. @ இராஜ ராஜேஸ்வரி
    சிந்தனையை ஒட்டியும் வெட்டியும் கருத்துக்கள் வந்தால்தான் விவாதமாகும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  14. @ இல.விக்னேஷ்
    ஜீவாத்மா பரமாத்மா பற்றிய ஒரு சர்ச்சையைத்தான் கிளப்பி விட்டிருக்கிறேன் கடவுள் எனும் மீடியம் முதலில் எதற்காகவோ ஏற்படுத்தப் பட்டிருக்கலாம் ஆனால் நம்பிக்கைகள் எனும் பெயரில் நடக்கும் நிகழ்வுகள் பல நேரங்களில் அறிவுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறதே. எல்லா விஷயங்களிலிருந்தும் நிறையவே கற்க இருக்கிறது. வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி விக்னேஷ்.

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    /விவாதம் சிந்தனையினைத் தூண்டுகின்றது ஐயா/ஒட்டியோ வெட்டியோ கருத்துக்கூற வைக்கவில்லையே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    உரைக்கக் கூடியதோ உணர்த்தக் கூடியதோ இல்லாமல் இருப்பதுதான் விஷயமே. பிறக்கும்போது நம் வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு பிறக்கிறோம் என்பதே சரியாகத் தோன்றவில்லை. புரிந்து கொள்ள முடியாதவற்றுள் இதுவும் ஒன்று. கடவுளையும் மதத்தையும் அவரவர் இஷ்டத்துக்கு வளைத்துப் போடுவதால் வந்த வினையே சுயமாகச் சிந்திக்கவும் முடியாமல் செய்விக்கிறது.இப்பிறவியில் பலரும் படும் அவலங்களுக்கு கேள்வி கேட்க முடியாதபடி முற்பிறவி பற்றி சொல்லித் தப்பிப்பதும் ஒருவழி என்றே நினைக்கிறேன் தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

  17. @ சீனா
    வருகைக்கு நன்றி ஐயா. கடைபிடிக்கக் கடினமான சிந்தனை என்பதால்தானே ஒரு ஒத்தக் கருத்து உருவாக்க எழுதுகிறோம். குறைந்தபட்சம் விவாதிக்கவாவது செய்கிறோம்

    ReplyDelete

  18. @ அப்பாதுரை.
    முன்பே ஒருமுறை எழுதி இருக்கிறேன் சில விஷயங்களைப் புட்டுபுட்டு வைத்தால்தான் தெரிகிறது என்று,இந்த ATP விஷயம் அது போன்றதே. எது புருடா எது நிச்சயமானது என்று தெரியாதிருப்பதே நம்மில் பலருக்கும் சௌகரியம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  19. @ ஸ்ரீராம்
    வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீ.இந்தமாதிரிய என் பதிவுகளில் அவரவர் எண்ணங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் அதற்காகவே எழுதுகிறேன்

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கு நன்றி மேடம் பாலிலிருந்து நீரை பிரித்து எடுக்குமாம் அன்னப் பறவை. அதுபோல் புனைவுகள் எது அதன்பால் எற்பட்ட நம்பிக்கைகள் எவை என்றெல்லாம் எழுதி வருகிறேன் ஒரு ஹிரண்யகசிபுவை வதம் செய்ய வந்த பரந்தாமன் எண்ணிக்கையில் அடங்கா பாதகர்களை வதம் செய்ய அவதாரம் எடுக்காதது ஏனோ என்றுதான் எழுதி இருக்கிறேன் பல விஷயங்கள் hypothetical ஆக இருப்பதைக் குறித்தே எழுதி இருக்கிறேன் நம்பிக்கைகள் சரியில்லையே என்னும் தொனி அதில் தென்படவில்லையா.?

    ReplyDelete

  21. @ வே.நடனசபாபதி.
    கடவுளும் அது சார்ந்த நம்பிக்கைகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள நாமே படைத்த் உருவகங்கள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன்.வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  22. @ டி.பி.ஆர்.ஜோசம்
    Yes. great men think alike. ஆனால் பின்னூட்டம் நடனசபாபதி முன்பே பதிவிட்டு விட்டார். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    சைவ சித்தாந்த வகுப்புக்குப் போனதுபோல் இருக்கிறது என்கிறீர்கள். பல இடங்களில் படித்ததும் கற்றதும் பெற்றதும் சிந்தனைகளாக உருமாறி இப்போது பதிவாய் ஆகிவிட்டது. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  24. உடல் கீழே உயிர் மேலே கீழே என்னைச் சுற்றி நடப்பதை பார்க்கும் – இந்த அனுபவம் ( ஒருவித பிரம்மை போல்) எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. சொன்னால் யாரும் நமபவில்லை. கட்டுரை முழுக்க தத்துவ அலசல். மறுபடியும் படித்தால்தான் நீங்கள் சொல்ல வந்தது எனக்கு விளங்கும்.

    ReplyDelete
  25. ஆழமான சிந்தனை
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    சிந்தனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  26. @ தி.தமிழ் இளங்கோ
    நான் கூறி இருந்தது கற்பனை. அதேபோல் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம் கட்டுரை கனமான பொருளைத் தாங்கி வருவதால் இன்னும் எளிமையாகச் சொல்லத் தெரியவில்லை வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ ரமணி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  28. “ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.”//

    ஆஹா! ஐயா நல்ல ஒரு விளக்கத்தை க் கற்றுக் கொண்டோம்! அருமை!

    தாங்கள் சொல்லுவது போல், தேடலும், கேள்விகளும், சிந்தனைகளும் பலருள்ளும் இருக்கத்தான் செய்கின்றது! தேடல் இருந்தால் நம்பிக்கையும் இருக்கின்றது என்பது தானே அர்த்தம் ஐயா! தேடலோ, கேள்விகளோ இல்லை என்றால் நாம் அதைப் பற்றி நினைக்கவில்லை, நம்பவில்லை என்றுதானே அர்த்தம்?!!!! சைவ சித்தாந்தம்/அத்வைத சித்தாந்தம் தான் ஆதியோ? அப்படித்தான் தோன்றுகின்றது! ஆனால் ஜீவாத்மா, பரமாத்மா என்று வேறுபடுத்திப் பார்த்தால் அது விசிஷ்டாத்வைதம் அல்லவா?!!

    தங்கள் இந்தப் பதிவு மிகவும் சிந்திக்க வைத்த ஒரு பதிவு ஐயா! மிக அருமையான ப்திவு!!!

    மிக்க நன்றி!

    ReplyDelete

  29. @ துளசிதரன் தில்லையகத்து.
    /ஆனால் ஜீவாத்மா பரமாத்மா என்று வேறுபடுத்திப் பார்த்தால் அது விசிஷ்டாத்வைதம் அல்லவா/ஒரு உண்மை சொல்கிறேன். அது பற்றியெல்லாம் நான் படித்ததில்லை. என் மனசில் தோன்றியது பரமாச்சாரியாரின் அத்வைதக் கருத்துக்களோடு கொஞ்சம் ஒத்துப் போனதுபோல் இருந்தது. அதைப் பதிவிட்டேன். எனக்கு திரு அப்பாதுரை சொன்னதில் உடன்பாடு உண்டு. /ஜீவா பரமான்னு புருடா வுட்டுக்கினே இருப்போம்./பதிவில் எழுதி இருப்பதுபோல் பல நிகழ்வுகளுக்குக் காரணம் தேடும்போது உதிக்கும் சிந்தனைகளின் பிரதிபலிப்பே என் பதிவு. நம்பிக்கையை நிலைநாட்ட தேடவில்லை. நம்பிக்கைகளின் பெயரால் நிகழும் பல செயல்களுக்குக் காரணம் காணவே தேடல். வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  30. //பல நிகழ்வுகளுக்குக் காரணம் தேடும்போது உதிக்கும் சிந்தனைகளின் பிரதிபலிப்பே என் பதிவு.//

    ஒன்றைப் பற்றியதான ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு என்பது வேறு. அது அந்த ஒன்றைப் பற்றி தொடர்புடையதான ஆழ்ந்த கல்வியின் வெவ்வேறு கோணங்களிலான பார்வையாய் இருக்கும்.

    சிந்தனை என்பது மேலும் மேலும் அது பற்றியதாய் அறிந்த அறிவையும் மேலும் அறியக்கூடியவற்றையும் கிளர்த்துவதாய் இருக்கும். முக்கியமாய் அது, அதுபற்றி இதுகாறும் தெரிந்தவற்றை முன் எடுத்துச் செல்வதாயும் இதுகாறும் தெரிந்தவற்றிலிருந்து கிளைக்கும் புதிய சிந்தனைக்கு வழிகோலுவதாயும் இருக்கும்.

    இப்படிப்பட்ட குணநலன்களைக்
    கொள்ளாமல் இருப்பதை ஒரு செய்தி பற்றி ஒருவரின் எண்ணங்கள் என்று சொல்லலாம். நிச்சயமாய் இவையெல்லாம் சிந்தனை என்கிற வரையறைக்குள் வராது.

    அது அப்படிப்பட்ட வரையறைக்குள் வர வேண்டுமானால்---

    அதற்கு என்ன செய்ய வேண்டும்?..

    இங்கு நான் படித்த சில பின்னூட்டங்கள் மேற்கொண்டு அது பற்றியதான விவரக் குறிப்புகளைத் தேடித் தெரிந்து உங்கள் எண்ணங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வழிகோலுவதாய் எனக்குத் தெரிந்தது..

    பின்னூட்டங்களைப் பற்றிக் கொண்டு நீங்களும் செழுமையான
    உங்கள் எண்ணங்களை பிரதிபலித்தால் ஒரு கலந்துரையாடல் போல நீங்கள் எழுதியிருக்கும் சப்ஜெக்ட் பற்றி செழுமையான கருத்துச் செறிவுகள் பகிர்ந்து கொள்ள வாய்பேற்பட்டிருக்குமே என்று தோன்றியது.

    விவரமாகப் பின்னூட்டம் போடுபவர்களும் நீங்கள் எழுதியிருப்பவை பற்றி தங்களுக்குத் தெரிந்தவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் பின்னூட்டமிடுகிறார்கள். அவற்றை ஒற்றியோ அல்லது மாறுபட்டோ எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் சிதைந்து விடாமல் நீங்களும் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினால் தானே இந்த பதிவுக்கான உங்கள் எண்ணங்கள் (நிச்சயம் சிந்தனைகள் அல்ல)மேலும் மேலும் சிறந்து ஒரு முழுமையான விவரங்களாய் உருக்கொள்ளும்?

    இந்த வாய்ப்புகளெல்லாம் சரிவர உபயோகப்படுத்தாமல் நீங்கள் ஆரம்பித்து வைத்த பதிவொன்று அரைகுறையாய் போன உணர்வே மிஞ்சி விட்டது.

    ஜீவாத்மா, பரமாத்மா, கடவுள், முற்பிறவி, அத்வைதம், (இதுவரை தெரியாத தெரிந்து கொள்ளவும் முயற்சிக்காத) விசிஷ்டாத்வைதம் என்று சகட்டு மேனிக்கு தொட்டுச் சென்று..

    இந்த மாதிரி அவியலில் எதைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியுமா, சொல்லுங்கள்.

    ReplyDelete

  31. @ ஜீவி
    உங்கள் பின்னூட்டத்தை பலமுறை படித்தேன். உங்களுக்கு பதிவில் எழுதிய கருத்துக்கள் (அவை சிந்தனைகளின் விளைவா வெறும் எண்ணங்களின் விளைவா நான் இப்போது தர்க்கிக்கப் போவதில்லை. நான் எழுதும்போது இந்த வார்த்தைகள் இவ்வளவு கருத்துக்கு வித்திடும் என்று நினைக்கவில்லை) புரிந்து கொள்ள முடியாதவை அல்ல. ஜீவாதமா பரமாத்மா என்று சகட்டுமேனிக்குத் தொட்டுச் செல்லவில்லை. நான் அது பற்றிய சர்ச்சையிலும் இறங்கவில்லை. நான் உணர்ந்ததை உணர்ந்தபடி எந்தவிதமான frills ம் வைக்காமல் எழுதி இருக்கிறேன் விசிஷ்டாத்வைதம் அல்லவா என்ற நண்பரின் கேள்விக்கு எனக்கு அது பற்றித் தெரியவில்லை என்றே எழுதி இருக்கிறேன் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் எதிர்மறைக் கருத்துக்கள் வந்தால் நாம் எழுதியவற்றை defend செய்யத் தோன்றும் என்று எழுதி இருந்தார். நான் ஒட்டிய கருத்து வெட்டிய கருத்து என்று சொல்லும்போது என் கருத்தைப் பதிவிட்டிருக்கிறேன் உங்கள் கருத்தைச் சொல்லலாமே என்றுதான் பொருள் கொள்கிறேன் நான் எழுதுவதை வழிமொழியவோ அவற்றுடன் உடன்படவோ வேண்டும் என்று நினைப்பதில்லை. கருத்தாடல்களின்போது எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கும் என்று தெரியாதவன் அல்ல நான். ஆனால் என் எழுத்தும் ஒரு கருத்துப் பரிமாற்றமே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் பிந்தைய பின்னூட்டம் ஒன்றில் அப்பாதுரை ஜீவியின் கனமான பின்னூட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மறுமொழியாக நான் அந்த மாதிரிப் பின்னூட்டங்களினால் திணறி இருக்கிறேன் என்றும் எழுதி இருந்தேன். என்னைத் திணற அடித்த பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. வருகைக்கும் என் எண்ணங்களை ( சிந்தனைகளையா ) வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்புக்கும் நன்றி ஜீவிசார்.

    ReplyDelete
  32. மீண்டும் ஜீவி. நிறைவான பின்னூட்டம் சுவற்றில் எறிந்த சாயம்?

    ReplyDelete

  33. @ அப்பாதுரை
    சுவற்றில் எறிந்த பந்து கேட்டதுண்டு. அது என்ன சாயம்...புரியலையே.

    ReplyDelete
  34. அப்பாதுரை சார்!

    'எறிந்த'வுக்கு பதில் 'தீட்டிய' என்று சொல்லியிருந்தால் தான் என்னவாம்?..

    //பின்னூட்டங்கள் ஏறத்தாழ எல்லாமே வாழ்த்தாகவே இருக்கும். என் எழுத்துப் பற்றி ஏதும் இருக்கப்போவதில்லை. //

    ஜி.எம்.பீ. சார் தான் தனது அடுத்த பதிவுக்கு போய்விட்டாரே! தனது அந்த 500-வாவது பதிவில் தனது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.

    ReplyDelete
  35. சாரி, ஜிஎம்பீ சார்! என் பின்னூட்டத்தை அனுப்பிய பிறகு தான் உங்களது தொடர் பதிலைப் பார்த்தேன்.

    இந்தப் பதிவுக்கான இதே தொடர் எண்ணத்தில் வேறொரு பதிவு நீங்கள் போட்டால், அதில் அப்பாஜி, கீதா சாம்பசிவம், பக்தி மணம் கமழும் பதிவுகளை வழங்கும் இராஜராஜேஸ்வரி, கோமதி அரசு அவர்கள் மற்றும் விரும்பிச் சேரும் பல பதிவுலக நண்பர்களை உள்ளடக்கிக் கொண்டு ஒரு குழுவாக அத்வைதம், விசிஷாட்வைதம், துவைதம், கடவுள், முற்பிறவி, என்று எல்லா பொருள்களிலும் கருத்து பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். மிக்க நன்றி.

    ReplyDelete

  36. @ ஜீவி
    நான் அப்பாதுரையின் விளக்கத்தை எதிர் நோக்குகிறேன் 500-வது பதிவு என்றதுமே வலையுலகில் பாராட்டுவது வழக்கமாகவே இருக்கும் என்று சொன்னேன்.
    /இந்தப் பதிவுக்கான தொடர் எண்ணத்தில்...../ ஜீவி சார் நான் ஏதோ நினைப்பதை எழுத்தில் கொண்டுவந்து வாசகர்கள் சொல்வதையும் கருத்தில் கொண்டு கற்றுக்கொள்கிறேன் நீங்கள் கூறீருக்கும் தலைப்புகளில் எழுதும் தகுதி எனக்கில்லை. பிறர் எழுதினால் நான் என்ன நினைக்கிறேனோ அதைக் கூறப் பின் வாங்க மாட்டேன் முன்பே திரு அப்பாதுரையின் ஒரு பதிவுக்குப் பின்னூட்டமாய் இதே கருத்தை brainstorming என்று குறிப்பிட்டு இருந்தேன்.( குழுவில் சுப்புத் தாத்தாவை விட்டு விட்டீர்களே. மீள்வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  37. நீங்கள் சாயம் தீட்டியிருக்கிறீர்களா எறிந்திருக்கிறீர்களா என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியுமே ஜீவி சார்?

    தீட்டுவது ஒரு குறிக்கோள், எறிவது இன்னொரு குறிக்கோள் இல்லையா ஜிஎம்பி சார்?

    தீட்டிய சாயம் - உள்நோக்குடனான வரம்புக்குட்பட்ட ஆயுள்.

    எறியும் சாயத்துக்கு சுவரும் முக்கியம். எல்லாச் சுவரிலும் சாயம் எறிய முடியுமா?

    தெரிந்தே எறிந்த ஜீவி :-).

    ReplyDelete

  38. @ அப்பாதுரை
    சொல்ல வருவதை, சம்பந்தப் பட்டவர்கள் அறிந்து உணர்ந்ததை இவ்வளவு diplomatic-ஆக வேறு எவராலும் சொல்ல முடியுமா.? நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  39. நல்ல கலந்துரையாடல்.
    அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள்.

    மனித வாழ்விற்கு இறையுண்ர்வு அவசியம். அது காலம் காலமாய் கொண்டுள்ள நம்பிக்கை.

    நாம் இருந்தாலும் இல்லையென்றாலும் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டு தான் இருக்கும்.

    ReplyDelete

  40. @ கோமதி அரசு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி/நல்ல கலந்துரையாடல்.
    அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள்./ அதுதானே இலக்கு.

    ReplyDelete
  41. //இவ்வளவு diplomatic-ஆக வேறு எவராலும் சொல்ல முடியுமா.? //

    delightful-லாக அப்பாஜி சொல்லியிருப்பதாக என் உணர்வு.

    ReplyDelete

  42. @ஜீவி
    அப்பாதுரையின் அண்மையப் பதிவு ஒன்றில்”எழுதுபவரைப் பொறுத்தே வரவேற்பும் புரிதலும் இருக்கிறது “என்று எப்போதோ எங்கோ நான் எழுதிய பின்னூட்டத்தைக்குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு இதுவும் ஒரு சான்று. நானும் எல்லாவற்றையும் delightful ஆகவே எடுத்துக் கொள்கிறேன்நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  43. நல்ல சிந்தனைகள், ஐயா. இதே சிந்தனைகளை என்னால் இவ்வளவு பக்குவமாக எடுத்துச் சொல்ல இயலாது. கடவுளைப் பற்றி விமர்சித்தால் கடவுள் கோவிச்சுக்க மாட்டார். மனிதனர்கள்தாம் மனபாதிப்புக்கு உண்டாவர்கள், வெகுண்டெழுவார்கள்! விமர்சித்தவர்களையும் கேள்வி எழுப்பியவர்களையும் சாடுவார்கள்.
    கற்பனஇ என்றாலும் கற்சிலை என்றாலும் கடவுள் ஒரு பாவமும் அறியாதவர்தான். :-)

    ReplyDelete

  44. @ வருண்
    லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டான
    கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete