Thursday, November 21, 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும் -2


   பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்--2
------------------------------------------------------------------



தஞ்சைக் கவிராயரை நான் சந்திக்க விழைந்ததே முக்கியமாக என் நன்றியை நேரில் தெரிவித்துக் கொள்ள நினைத்ததாலும் முகமறியா நட்பை தக்க வைத்துக் கொள்ள விரும்பியதாலும்தான். கவிராயர் பற்றி இன்னொரு முகமறியா நண்பர் சுந்தர்ஜி மூலம் தெரிந்து கொண்டேன். பொதிகை தொலைக்காட்சியில் ஓரிரு முறை “கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் அவர் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன். நான் என் சிறுகதைத் தொகுப்பை புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய போது அதற்கு அணிந்துரை அளிக்கச் சிறந்தவர் இவரே என்று என் மனம் சொல்லியது.என்னைப்பற்றிய எந்தவித அபிப்பிராயமும் இல்லாமல் கதைத் தொகுப்பினைப் படித்து அவர் அணிந்துரை தந்தால் காய்தலோ உவத்தலோ இல்லாமல் நடு நிலை எண்ண வெளிப்பாடாக இருக்கும் என்று நினைத்தேன். புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என் கணிப்பு சரியே என்று தெரிவிக்கிறது.
(கவிராயரை சந்திக்கும் போது சுந்தர்ஜியும் உடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும், ஆனால் என் துரதிர்ஷ்டம் சுந்தர்ஜி அப்போது சென்னையில் இருக்கவில்லை)



ஜி.எம்.பி.யின் கதைகளைப் படித்துப் பார்த்தேன். இக்கதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆனவை அல்ல. ஆகக் கூடியவையும் அல்ல. பத்திரிகைக் கதைகளுக்கான இலக்கணமோ, உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை. 

தற்காலம் தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளைப் பற்றிச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒன்றும் பிரயோசனமில்லை. அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான் செய்கின்றன. 

ஜி.எம்.பி. இந்த இரண்டு பிரிவிலும் அடங்காதவர். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகியிருப்பதை அடையாளப்படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றித் தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகனின் சுவாரஸ்யத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை.


இக்கதைகளில் உண்மைகள் மினுக்கட்டாம் பூச்சிகளாகப் பறந்து செல்கின்றன. இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது - அவற்றிடம்.
                 =======

ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுத்து விடுகின்றன. ஏன் அடங்க வேண்டும்? பத்திரிகைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை, அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்துத் திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன.

இந்த அணிந்துரை புகழவோ இகழவோ இல்லை. மனசில் பட்டதை எழுதி இருக்கிறார். இவர் ஒரு சுவாரசியமான மனிதராக இருக்கவேண்டும்.இவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற உந்துதலாலும் வெளிவந்த புத்தகத்தின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுக்கவும் ஊரப்பாக்கம் போனோம்
அவர் தினமும் நான்கு மணி அளவில் அவரது பேரனைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வாடிக்கை. நாங்கள் ஏறத்தாழ அதே நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்றோம். எங்களை வரவேற்று இருக்க வைத்து குழந்தையைக் கூட்டிவரப் போனார். போகும் முன் அவர் எழுதி வெளியாகி இருந்த “ வளையல் வம்சம் எனும் கவிதை நூலைக் கொடுத்துச் சென்றார். எந்த நேரத்திலும் கவிதை எழுத முடியும், ஆனால் எல்லா நேரத்திலும் படிக்க முடியாதுஎன்று எழுதி இருப்பது கண்டேன். அணிந்துரை தர அவர் எடுத்துக் கொண்ட நேர அவகாசம் நினைவுக்கு வந்தது. கிடைத்த அவகாசத்தில் பல கவிதைகள் படித்துவிட்டேன். எளிமையான வார்த்தைகளில் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறார்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது சிலர் எழுதும் கவிதைகள் abstract-ஆக விளங்காமல் இருப்பது பற்றிக் கேட்டேன். அவர் பாரதியை மேற்கோள் காட்டினார். பாரதி சொன்னதாக அவர் கூறியது “உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அந்தக் கவிதையைக் கிழித்துப் போடு
குழந்தைகள் பற்றிப் பேசும்போது அவர் சொன்னார். குழந்தைகள் கடவுள் போன்றவர்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துக் கெடுத்து விடாதீர்கள்.அவர்களுக்குக் கல்மிஷம் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளும் மிகக் குறைவு என்றார். நான் என் பங்குக்கு குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்வரை கடவுள் போல. ஆனால் வளர வளர அந்தக் குழந்தைமை காணாமல் போவதைப் பார்க்கும்போது வருந்தக் கூடாது என்றேன். அவரது “அவதாரம் என்னும் கவிதையைப் படியுங்களேன்
“பேரனுக்காக
எவ்வளவோ அவதாரங்கள்
எடுக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் அந்த யானை அவதாரம்
ரொம்பக் கஷ்டம்

இல்லாத வால் ஆட்டி
ஆடாத காது அசைய
நாலு கால் நடையில்
ஒரு கை தூக்கிப் பிளிற வேண்டும்.

முதுகில் உட்கார்ந்து
முன்னேறிச் செல் என்பான்
முழங்கால் வலிக்கும்

அப்புறம் சிங்கம் போல்
உறுமு என்பான்
நான் இருமுவேன்
இருமலிலும் உறுமலின் சாயை
இருந்திருக்கும் போல
விட்டு விடுவான்
பிறகு யார் துணையுமின்றி
கனவுலகில் பிரவேசித்து
தூங்கிப் போவான்
நான் சும்மா
பார்த்துக் கொண்டிருப்பேன்
கடவுளைப் போல

கவிதையைப் படித்து விட்டீர்களா. இப்போது இதையும் படியுங்கள்
“நீங்கள் கை தட்டிப் பாராட்டும்
ஒவ்வொரு கவிதையும்
ஏற்கனவே உங்களால்
நிராகரிக்கப் பட்ட  வாழ்க்கையிலிருந்து
சேகரிக்கப் பட்டதுதான்

தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர். பேசும் போது அவருக்கு அவரது தந்தையின் நினைப்பு அடிக்கடி வருகிறது அவருடைய தந்தையை பற்றி ஒரு சம்பவம் பகிர்ந்து கொண்டார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் அவர் இயல்பை விளக்கச் சொன்ன சம்பவம். தந்தையின் கையில் சில ரூபாய்கள் வீட்டுச் செலவுக்காக  இருந்தது. அதில் செலவு போக ரூ.20/- மிச்சமிருக்க அவரது மனைவி மக்கள் இவர் குணம் தெரிந்து அதை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் என எச்சரித்திருந்தனர். அச்சமயம் நண்பர் ஒருவர் வந்து தம் கஷ்டங்கள் சிலதைக் கூறி பணம் கேட்டிருக்கிறார். உறவினர் இல்லை யென்று சொல்லச் சைகை காட்டி இருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இவர் எழுந்து போய் அந்த ரூ20-ஐயும் அந்த நண்பரிடம் கொடுத்தார். அவர் போனபிறகு உறவினர்கள் இல்லையென்று சொல்வதற்கென்ன என்று கேட்டபோது “இருக்கே எப்படி இல்லை என்று பொய் சொல்வது என்றாராம். தன் தந்தையைப் பற்றிப் பேசும் போது நெகிழ்ச்சி தெரிகிறது. வீட்டின் முன் நிற்கும் புங்கை மரம் தந்தை வைத்தது, இப்போது வளர்ந்து நிழல் கொடுக்கிறது என்று சொல்லி உருகுகிறார்.இனிய எழுத்தாள நண்பர் ஜீஎம்பிக்கு அன்புடன் என்று “வளையல் வம்சம் “ கவிதைத் தொகுப்பினை பரிசளித்தார்.

அவருடன் நிறைய புகைப் படங்கள் எடுக்க் நினைத்தது இயலாது போயிற்று. நான் கொண்டு சென்ற காமிராவில் பாட்டரி தீர்ந்து போய் அதை ரீ சார்ஜ் செய்ய சார்ஜர் இல்லாததால் அதன் பிறகு புகைப் படங்களே எடுக்க முடியாமல் போயிற்று. நல்ல வேளை ஓரிரு புகைப் படங்கள் எடுக்க முடிந்ததே மகிழ்ச்சி.
தஞ்சாவூர் கவிராயர், பேரன், மற்றும் நான்
கவிராயர், பேரன் நான், என் மனைவி



கவிராயரிடம் இருந்து விடை பெற்றபோது மணி ஆறாகி இருந்தது.நண்பர் உமேஷ் ஸ்ரீநிவாசன்  என் இருப்பிடம் வந்து என்னைக் காணமுடியாமல் திரும்பி இருந்தார். அவருக்கு ஈரோடு போகும் வேலை இருந்ததால் சந்திக்க இயலாமல் போயிற்று.ஒன்றைப் பெரும்போது ஒன்றை இழக்க வேண்டியதாயிற்று.   


.......
            
 

28 comments:

  1. தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதை மேற்கோள்கள் அபாரம்!(முகவரி தரக்கூடாதா?) இதிலும் புகைப்படங்கள் வரவில்லை ஐயா! ஏதாவது செய்யுங்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete

  2. @ செல்லப்பா யக்ஞஸ்வாமி
    என் பதிவில் படங்கள் வருகின்றன. என்ன செய்ய வேண்டும் என்று கணினி வித்தகர்கள் சொல்ல வேண்டும். மெயிலில் வந்த புகைப் படங்களை image copy paste செய்திருக்கிறேன் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

    ReplyDelete
  3. இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது - அவற்றிடம்.

    மினுங்கும் மின்னல் வரிகள் ..

    ReplyDelete
  4. //“உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அந்தக் கவிதையைக் கிழித்துப் போடு”//

    - பாரதி

    சூப்பர்;

    அதே! அதே ! சபாபதே !!

    ReplyDelete
  5. //இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது //

    அணிந்துரையை சிறப்பித்த அழகான வரிகள்.

    ReplyDelete
  6. //தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர்.//

    இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது.

    நானும் தயார் நிலையிலேயே இருந்தேன்.

    ஏனோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  7. கனத்த இருளும் மின்மினிப் பூச்சிகளிடம் தோற்றுப் போகின்றது!..

    மறக்க இயலாத வரிகளாக மனதில் பதிந்து விட்டன.

    ReplyDelete
  8. கவிதை மேற்கோள்கள் அருமை ஐயா. எனக்கும் படங்கள் தெரியவில்லை ஐயா.

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    அந்த மினுங்கும் மின்னல் வரிகள் என் சிறு கதைகளை அடையாளம் காட்ட எழுதியவை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    @ கோபு சார்
    கவிதைகள் பற்றிய பாரதியின் கணிப்பு abstract கவிதைகள் பற்றிய என் கேள்விக்குப் பதிலாக மேற்கோள் காட்டப் பட்டது.
    கவிராயர் அவசியம் சந்திக்கப் பட வேண்டிய மனிதர்.
    @ துரை செல்வராஜு
    மறக்க இயலாத வரிகளால் என் கதைத் தொகுப்புக்கு அணிந்துரை அளித்திருக்கிறார்
    @ கரந்தை ஜெயக் குமார்
    கவிராயரின் கவிதைகள் பயணிக்கும் தடமே அவரே கூறியுள்ளபடி நம் வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்ட குப்பைகளிருந்து எடுத்தாண்டவை
    அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. கவிதை அருமை ஐயா...

    படங்களை முதலில் கணினியில் ஒரு Folder-ல் காப்பி செய்து கொள்ளுங்கள்... பிறகு பதிவு எழுதும் பக்கத்தில் மேலே படத்தை இணைக்கும் icon இருக்கும்... அதை சொடுக்கி ஒவ்வொரு படமாக இணைக்கவும்....

    ReplyDelete
  11. Nice to see GMB becoming a full time author!Excellent!

    ReplyDelete
  12. ஒன்பது ரூபாய் நோட்டு என்ற சிறுகதையை திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் எழுதி பல வார பத்திரிகைகளுக்கு அனுப்பினாராம் ஆனால் யாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதை அவரே திரப்படமாக எடுத்து வெளியிட்டபோது அதை பாராட்டதவர்களே இல்லை. அதுபோல பத்திரிகைகளில் வெளிவருவன மட்டுமே கதைகள் மற்றவையெல்லாம் குப்பை என்றில்லை. கதைக்கு என்று தனியாக இலக்கணம் ஏதுமில்லை. அது பத்திரிகையாளர்கள் தாங்களாக வரையறுத்துக்கொண்டது.

    தஞ்சை கவிராயரின் கவிதையும் ஒரு கவிதையின் இலக்கண எல்லைகளை தாண்டி உள்ளதை காண முடிகிறது. மனதில் பட்டதை எவ்வித சுற்று வளைப்பும் இல்லாமல் எழுதியுள்ளார். அது கவிதை என்று சொன்னால் கவிதை, இல்லை எடிட் செய்யப்பட்ட prose என்றாலும் சரிதான். படித்தபோது ஒரு தாத்தாவின் வெள்ளை உள்ளம் தெரிகிறதே அது போதும்.

    உங்களுடைய அருமையான சரளமான நடை உங்களுடன் சேர்ந்து நானும் அவரை சந்தித்ததுபோல் இருந்தது.

    இனியும் வருமா?

    ReplyDelete
  13. இரண்டு பதிவுகளிலும் படங்கள் அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  14. இப்போது படங்கள் தெரிகிறது ஐயா...

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா

    பதிவு மிக அருமையாக எழுதியள்ளிர்கள் அதிலும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வணக்கம்
    ஐயா

    பதிவு மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் அதிலும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  17. @ கோபு சார்
    /
    /இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது./ நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்று நான் சொன்னதில் தவறில்லையே

    ReplyDelete

  18. @ இராஜராஜேஸ்வரி
    @ திண்டுக்கல் தனபாலன்
    இப்போது படங்கள் நன்றாகத் தெரிகிறது என்றால் அதற்கு டிடி-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete

  19. @ 2008rupan
    @ திண்டுக்கல் தனபாலன்
    பதிவில் உள்ள கவிதைக்கு சொந்தக்காரர் கவிராயர். பாராட்டு அவர்களைச் சேரும்

    ReplyDelete

  20. @ டி.பி.ஆர்.ஜோசப்
    கவிதைக்கு இலக்கண எல்லைகள் மரபுக் கவிதைகளில் மட்டுமே. கவிதையா எடிட் செய்த ப்ரோஸா என்பதை விடுத்து உள்ளங்களுடன் பேசும் எதுவும் கவிதையாகாலாம் என்று நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  21. @ hns mani-
    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  22. //G.M Balasubramaniam said...

    @ கோபு சார்

    *****இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது.*****

    நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்று நான் சொன்னதில் தவறில்லையே//

    ஆஹா, அழைப்பிதழ் கிடைத்துவிட்டாலே பிரபலமானவனா?

    OK OK நீங்க சொன்னால் சரி தான். ;)

    அப்புறம் .... இப்போது படங்களைப் பதிவினில் பார்க்க முடிகிறது, ஐயா.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. ஒன்றைப் பெறும் போது ஒன்றை இழக்க நேரிடுகிறது...! ஆ.வி.யின் இயர்புக் வேலையில் ஈடுபட்டுவிட்ட காரணத்தால் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை நான் தவறவிட நேர்ந்தது. இதில் எனக்கு ஏற்பட்ட வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல ஐயா...! சென்னை வந்த பதிவுலக நட்புகளில், நான் சந்திக்க இயலாமல் சந்தர்ப்பம் சதி செய்தது தங்களுடனான சந்திப்பில் மட்டுமே! இதைப் பற்றிய என் வருத்தத்தை நாளைய என் பதிவிலும் பதிவு செய்கிறேன். மன்னிச்சூ ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
  24. // புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என் கணிப்பு சரியே என்று தெரிவிக்கிறது.//

    கவிராயரின் புத்தக விமர்சனத்தை படித்த பிறகு, தங்கள் நூல் விமர்சனத்திற்கு சரியானவரைத்தான் தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்பது தெரிந்தது. பேரனுக்காக அவர் எழுதிய யானை அவதாரம் கவிதையைப் படித்த போது அவரது மற்ற கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.

    பதிவில் (BLOGSPOT) படங்களை இணைக்க திண்டுக்கல் தனபாலன் சொல்லியபடி செய்யவும்.

    நீங்கள் எழுதிய நூலை விலைக்கு வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதனைத் தெரிவிக்கவும். இலவசமாக யாருக்கும் ( நிறையபேர் செய்யும் தவறு) தர வேண்டாம்.

    ReplyDelete

  25. @ பாலகணேஷ்
    சந்திக்க முடியாததில் எனக்கும் வருத்தமே.அடுத்த முறை நானே வந்து பார்க்கிறேன்

    ReplyDelete

  26. @ தி.தமிழ் இளங்கோ
    கவிராயரின் கவிதைகள் மிகவும் எளிமையானவை. அதே நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் சுவையாக இருக்கும். புத்தகம் மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது. சந்தைக்கு வந்து விட்டதா தெரியவில்லை. உங்கள் முகவரி கொடுங்கள் நான் அனுப்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  27. கவிராயரின் அணிந்துரையும் அவரது கவிதையும் ரசித்தேன்....

    விரைவில் புத்தகத்தினை படிக்க ஆவல் அதிகமாகிவிட்டது.....

    ReplyDelete
  28. ஐயா,உங்களைக் காணக்கிடைக்காதது மனவேதனையளித்தது. 'வாழ்வின் விளிம்பில்' 10 பிரதிகள் வாங்கி அதில் 3 பிரதிகளைத் தஞ்சையில் என் நண்பன் சத்யமூர்த்திக்கு அனுப்பினேன். ஒன்றை நண்பன் ராமலிங்கம் வாங்கிக் கொண்டார். மற்றவைகளை என்னுடன் கத்தாருக்கு எடுத்து வந்துள்ளேன், இங்குள்ள நண்பர்களுடன் பகிர.அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திப்போம். நூலைப் படித்து விட்டுப் பின்னூட்டத்தை வலைப்பதிவிடுகிறேன்.

    ReplyDelete