Monday, November 25, 2013

சிந்திக்க வேண்டியபிரச்சனை


                            சிந்திக்க வேண்டிய பிரச்சனை
                            ------------------------------------------



 நான் திருச்சியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பெங்களூர் வந்தபோது ஓய்வை அனுபவிக்க வேண்டுமானால் நம் உடல் உறுப்புக்களும் புலன்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதிலிருந்தே கண்ணாடி அணியத் தேவையாகி விட்டது. பணியில் இருக்கும்போது எனக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. வேலையில் இருக்கும் போது சரியாக கவனிக்க முடியவில்லை. ஆகவே இங்கு வந்ததும் ஒரு காது நிபுணரிடம் சென்றேன். அவர் எனக்கு stapidectomy என்னும் காது ஜவ்வு இறுக்கம் இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சொன்னார். அறுவைச் சிகிச்சை செய்தால் இருக்கும் கேட்கும் திறனும் போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. நான் டாக்டரிடம் எனக்கு முழுதும் கேட்கும் திறன் கிடைக்க எத்தனை சதம் வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டேன். அவர் 90% என்றார். நமக்கு என்று அந்த மீதி பத்து சதத்தால் இருக்கும் திறனும் போய் விடுமோ என்ற பயம். எதற்கும் இன்னொரு நிபுணரைப் பார்க்கலாம் என்று தீர்மானித்து வேறொரு டாக்டரை அணுகினோம். அவரும் அறுவைச் சிகிச்சை வேண்டும் என்றார். பூரண குணம் கிடைக்க என்ன வாய்ப்பு என்று அவரிடமும் கேட்டேன். அதற்கு அவர், YOU WILL HEAR WELL  என்றார். அந்த உறுதி என்னை அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வைத்தது உஷ்... அப்பாடா.. ஒரு பதிவு எழுதுவதற்கு இவ்வளவு முன்னுரையா.....நான் இதுவரை எழுதியதற்கும் இனி எழுதப் போவதற்கும் சம்பந்தமில்லை. சம்பவ நிலைக்களனை விளக்க இவ்வளவும் தேவைப் பட்டது.( ? )
அறுவைச் சிகிச்சைக்கு நான் ஒரு நாள் மருத்துவமனையில்  இருக்க வேண்டும் என்றார்கள். என்னுடன் அன்று இரவு மருத்துவ மனையில் என் மனைவியும் தங்க முடிவாயிற்று.அங்கு இன்னொரு அறையில் இன்னொருத்தரும் சிகிச்சைக்கு இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு பெரியவரும் இருந்தார். அன்று இரவு தூங்கப் போகும்முன் அந்தப் பெரியவர் என் மனைவியிடம் தனக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறதென்றும் அதைப் பொறுத்துக் கொள்ளும்படியும் வேண்டினார்.
என் மனைவியும் “ஓ, அதனாலென்ன .... பரவாயில்லை என்றிருக்கிறார் அதுவுமல்லாமல் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் அவர் கூறியது அவர் மேல் ஒரு தனி மதிப்பே வந்துவிட்டது அவளுக்கு. ஆனால் அது அன்றைக்கு மட்டும்தான். இரவு உறங்கப்போக  ஆயத்தம் செய்ய அவளுக்கு பயம் வந்து விட்டது. நிசப்தமான இரவில் ஒரு சிங்கம் அருகில் வந்து உறுமுவதுபோல் இருந்திருக்கிறது. பிறகு அவளுக்கு  அந்தப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் இப்படி ஒரு குறட்டைச் சப்தம் இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.
மும்பை அருகே இருக்கும் உல்லாஸ் நகருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்குச் சென்றோம். முதல் நாள் இரவு ஒரு அறையில் நாங்கள் நால்வர் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இரவு அங்கு ஒரு தாளவாத்தியக் கச்சேரியே நடந்தது. என்னைத் தவிர மற்ற மூவரும் உண்மையிலேயே குறட்டை விட்டுத் தூங்கினர். அன்று சிவராத்திரியாயிருந்திருந்தால்  எனக்கு கண்விழித்த பலன் கிடைத்திருக்கும். வித விதமான ஏற்ற இறக்கங்களுடன் வெவ்வேறு சுருதிகளில் ஒரு அபஸ்வரக் கச்சேரியே இரவு முழுவதும் நடந்தேறியது.
NOW LIGHTER THINGS APART இந்தக் குறட்டை என்பது என்ன.? வியாதியா? நிறுத்த முடியுமா.?குறட்டை விட்டுத் தூங்குபவரை அவர்கள் தூக்கத்தை சற்றே குலைத்தால் ஒரு சில விநாடிகளுக்கு குறட்டை சப்தம் நிற்கலாம்
குறட்டை என்பது என்ன. ?மூச்சுப்பாதையில் ஏற்படும் சில அதிர்வுகளே குறட்டை சப்தமாகத் கேட்கிறது.நாம் உறங்கிய பின் நம் சுவாசக் குழாயில் இருக்கும் தசைகள் relax ஆகுமாம்.அந்த நேரத்தில் தொண்டை சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டையில் காற்று போய் வரும் பாதை போதுமானதாக இல்லாமல் இருக்குமாம் அழுத்தம் அடையும் தொண்டை பின் புற தசைகளை அதிரச் செய்யும்போது வெளியாகும் சப்தமே குறட்டை எனப்படுகிறது குறட்டைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக உடல் எடை.தொண்டை பலமின்மை, தொண்டைப் பகுதியில் கொழுப்பு சேகரம், தாடையின் அமைப்பு, மூக்கு துவாரத்தில் தடுப்பு மல்லாக்கப் படுக்கும்போது நாக்கு பின்னோக்கி இழுக்கப் படுவதால் தடங்கல் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம். இதுவே OSA  எனப்படும் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்னும் நோய்க்கு அடிகோலியாக இருக்கலாம் அப்னியா என்றால் தற்காலிக மூச்சு நிறுத்தம் என்று பொருள்படும் உறங்கும்போது மூச்சு நின்று நின்று தொடரும் . இதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பகல் நேரத்தில் சோர்வாகக் காணப் படலாம்
பொதுவாக வயதானவர்களுக்கு குறட்டை விடும் பழக்கம் வரலாம் குறட்டையால் வாழ்க்கை முறையே அவதிக்குள்ளாகலாம். கணவனின் குறட்டையால் உறக்கம் இழந்து விவாகரத்து கோரிய பெண்களைப் பற்றிக் கேள்விப்படும் அதே நேரத்தில் அந்த சப்தத்துக்குப் ( தாலாட்டு. ?) பழக்கப் பட்ட மனைவியர் அது இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்றும் கூறலாம் எதையும் எளிதாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்ட நாம் எப்பொழுது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருப்பதும் அவசியம். ( விக்கிப் பீடியாவுக்கு நன்றி

SNORING. NOTE that the snorting sound is most often caused by the vibration of the soft palate. and the uvula
Snoring sound production is most often from the soft palate and uvula. The black arrow points to the soft palate and the grey arrow points to the uvul
நாளை பற்றிய ஒருகுறிப்பு. நாளை பார்த்துக்கொள்ளலாமா.?

 

32 comments:

  1. நான் குறட்டை விடுவேன்.என் மனைவி 50 வருடங்களாகப் பொறுத்துக்கொண்டு இருக்கிறாள். வேறு வழி?

    ReplyDelete
  2. /// ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்... ///

    என்னவொரு வேதனை (நல்லெண்ணம்...!)

    ReplyDelete
  3. ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களை நினைத்துப் பாருங்கள் ஐயா, இரவுதோறும் ரயில் வண்டியின் சப்தம்.அவ்வொலிகளுக்கு பழகிவிட்டவர்களுக்கு அமைதியான சூழலில் தூக்கம் வராது என்றே நினைக்கின்றேன்.
    படத்துடன் தங்களின் விளக்கம் அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  4. சிந்திக்க வேண்டிய பிரச்சனை
    சந்திக்கவேண்டியிருந்தால்
    அவதிதான் ..!

    ReplyDelete
  5. //சிந்திக்க வேண்டிய பிரச்சனை
    சந்திக்கவேண்டியிருந்தால்
    அவதிதான் ..!//

    மேலே வெகு அழகாகச் சொல்லிட்டாங்க.

    அதே அதே !

    ReplyDelete
  6. //அந்த இரவு அங்கு ஒரு தாளவாத்தியக் கச்சேரியே நடந்தது. என்னைத் தவிர மற்ற மூவரும் உண்மையிலேயே குறட்டை விட்டுத் தூங்கினர்.//
    ;)

    இது மிகவும் கஷ்டம் தான் ஐயா. நானும் சிலதடவை இதை அனுபவித்துள்ளேன்.;(

    ReplyDelete
  7. கரந்தை அவர்கள் கருத்துத்தான் என் கருத்தும்.
    குறட்டை கேட்டே பழக்கப்பட்டுவிட்டால்
    ஒருவேளை குறட்டை சத்தம் இல்லாது
    தூக்கம் வராமல் கூடப் போகலாம்தான்
    சுவாரஸ்யமான பதிவு
    பதிவைத் துவங்கி தொடர்ந்து முடித்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.//

    மெல்லிய நகைச்சுவை உணர்வு உங்களில் ஒளிந்திருப்பது தெரிந்தது. அதை நீங்கள் டெவலப் செய்யலாம். :))

    ReplyDelete
  9. நானும் கூட குறட்டையப்பன் தான்!.. தாள வாத்தியக் கச்சேரி அளவுக்கா - என்பதெல்லாம் தெரியவில்லை.

    தவிர -

    ஐயாவின் கை வண்ணத்தில் பிடித்தது , பட்டு நூலிழை போல மிளிரும் நகைச்சுவையே!..

    ReplyDelete
  10. எனக்கும் இப்போது குறட்டை விடும் பழக்கம் உண்டு. வீட்டில் எல்லோரும் என்னை திட்டுவார்கள். இதனாலேயே வெளியூர் சென்றால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் இரவில் தூங்குவது கிடையாது. முடிந்த வரை முழித்துக் கொண்டுதான் இருப்பேன். – குறட்டையைப் பற்றி அரட்டை செய்தமைக்கு நன்றி1

    ReplyDelete
  11. குறட்டை எங்கள் வீட்டிலும் பிரச்னைதான். தூங்கவே முடிவதில்லை யாராலும். என்னைத் தவிர! நான் தானே குறட்டை விடுபவன்! ஹிஹிஹி முதலில் எல்லாம் வெட்கமாக இருந்தது. இப்போதெல்லாம் 'அதற்கு என்ன செய்வது?' என்று தூங்கி விடுகிறேன். இப்போதெல்லாம் பிரச்னை இரவுப்பயணங்கள் அமைந்தால்தான். குறட்டையால் குட்டு வெளிப்பட்டு குட்டு வாங்கி விடுவோமோ என்ற பயத்தில் இரவுப் பயணமே செய்வதில்லை - முடிந்தவரை!

    ReplyDelete
  12. கரந்தை ஜெயக்குமார் said...

    //ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களை நினைத்துப் பாருங்கள் ஐயா, இரவுதோறும் ரயில் வண்டியின் சப்தம்.அவ்வொலிகளுக்கு பழகிவிட்டவர்களுக்கு அமைதியான சூழலில் தூக்கம் வராது என்றே நினைக்கின்றேன்.//

    நான் அப்படி ஒரு வீட்டில் இரண்டு வருடம் குடியிருந்தேன். ராமேஷவரம் எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 11 மணிக்கு என் வீட்டைக் கடந்து செல்லும். அப்போதெல்லாம் விழிப்பு வராது. வேறு வீட்டிற்கு வந்த பிறகு தூக்கம் சரியாக வர சிறிது காலம் தேவைப்பட்டது.

    ReplyDelete
  13. குறட்டையை ரசிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் செய்த பாவமோ?

    ReplyDelete
  14. நான் சர்வீசில் இருக்கும்போது ஏசி கோச்சில் பயணம் செய்யும் போது இந்த அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். கடகட ஓசை கேட்காவிட்டாலும் மிக அருகில் கேட்கும் இந்த ஓசையால் பல இரவுப் பயணம் வேதனையில் முடிந்திருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லையாமே?

    ReplyDelete
  15. குறட்டைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்களே! காது சரியானதும்
    உங்கள் மனைவிக்குக் கேட்ட சப்தம் நீங்களும் அனுபவிதீர்களா? அதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே!

    ReplyDelete

  16. @ டாக்டர் கந்தசாமி
    அதுதான் சொல்லிவிட்டீர்களே “வேறே வழி”....?

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    ஆப்பரேஷன் முடிந்ததும் இன்னொரு இரவு அங்கிருக்கவில்லையே.தன்னைக் கிள்ளி வலி தெரியணும் என்பார்கள் அப்படி நினைத்திருப்பாள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

    ReplyDelete

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் குடியிருப்போருக்கு அவ்வப்போதுதானே உறக்கத் தடங்கல். அதுதான் பழகிவிடலாம் என்று சொன்னேனே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஐயா

    ReplyDelete

  19. @ இராஜராஜேஸ்வரி
    சிந்திக்க வேண்டிய பிரச்சனையை சந்திக்க வேண்டி இருந்தால் அவதிதான். நிறையபேர் சந்தித்து சகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வருகைக்கும்கருத்துப்பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  20. @ கோபு சார்.
    தவிர்க்க முடியாவிட்டால் அனுபவிக்கத்தானே வேண்டும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  21. @ ரமணி
    /பதிவைத் துவங்கி தொடர்ந்து முடித்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ ஜீவி
    /மெல்லிய நகைச்சுவை உணர்வு உங்களில் ஒளிந்திருப்பது தெரிந்தது. அதை நீங்கள் டெவலப் செய்யலாம். :))
    இதுவும் ஒரு நகைச்சுவைக் கருத்துதான் . முயன்று பார்க்க வேண்டும்

    ReplyDelete

  23. @ துரை செல்வராஜு
    /
    /ஐயாவின் கை வண்ணத்தில் பிடித்தது , பட்டு நூலிழை போல மிளிரும் நகைச்சுவையே/ எனக்கே தெரியாதது , குறிப்பிட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ தி. தமிழ் இளங்கோ
    ஐயா இது குறட்டை பற்றிய அரட்டை என்று ஒதுக்கி விடாதீர்கள். சிந்திக்க வேண்டிய பிரச்சனை. ஆனால் இது பற்றிய பாதகங்களை நம்மில் பலரும் அசட்டை செய்து விடுகிறோம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete

  25. @ ஸ்ரீராம்
    இதில் வெட்கப்பட ஏதுமில்லை. உடல் சார்ந்த பிரச்சனை. அநேகருக்கு உண்டு. இந்த அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்று கூறி மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. விழிப்புணர்வுக்காகவே இப்பதிவு எழுதினேன். அதிகம் எழுதி பயமுறுத்தவும் விரும்பவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  26. @ டாக்டர் கந்தசாமி
    மீண்டும் வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ செல்லப்பா யக்ஞசாமி
    குறட்டையை ரசிப்பதா.என்ன மாதிரி ஒரு ஆசை.! வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  28. @ டி.பி.ஆர். ஜோசப்
    இதற்கு அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலோர் இதை ஒரு குறையாகக் கருதுவதில்லை. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  29. @ ராஜலக்ஷ்மி பரமசிவம் அப்போது அனுபவிக்காவிட்டாலும் பின்னால் அனுபவித்ததை எழுதி இருக்கிறேனே. வாருகைக்கும் கருத்துக்கும் நன்றி மே’ம்.

    ReplyDelete
  30. நள்ளிரவில் சிங்கம் .. சிரித்தேண்.
    குறட்டை ஒரு பிரச்சினை தான்.

    ReplyDelete
  31. இரவில் இரயிலில் பயணிக்கும்போது குறட்டை விடும் பயணிகளின் ‘ஜுகல்பந்தியை’ கேட்டிருக்கிறேன். ஆனால் சிலர் விடும் குறட்டையின் சப்தத்தைத்தான் தாங்கமுடியாது. நகைச்சுவையாக சொன்னாலும் குறட்டை பற்றி தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  32. சிந்திக்கவேண்டிய பிரச்சனைதான் இது. குறட்டை விடுபவர்களை எழுப்பி ஒருக்களித்துப் படுக்கச் செய்தால் குறட்டையைத் தவிர்க்கலாம் என்று சொல்வார்கள். குறட்டை எதனால் வருகிறது என்று தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா. இன்னும் சிலர் தூக்கத்தில் பல்லை நறநறவென்று கடிப்பார்கள். கேட்கவே பயமாக இருக்கும்.

    ReplyDelete