Monday, December 9, 2013

என்னென்னவோ நினைவுகள்....


                            என்னென்னவோ நினைவுகள்.
                            ------------------------------------------



எனக்கு என்னாயிற்று.?எதிலும் மனம் செலுத்த முடிவதில்லை. நினைவுகளில் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு நேற்றைய நினைவுகள் சுகமாயிருப்பது போல் அல்லாமல் நாளைய நினைவுகள் சுமையாய் தெரிகிறதே. நாளை தினம் பற்றி நான் பொதுவாகக் கவலைப் படுவதில்லை. உடல் சோர்ந்து இருந்த போதும் மனம் சோர்ந்து இருந்ததில்லை

உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!

செய்யாத குற்றம் என்னும் பதிவுக்கு ஜீவி அவர்கள் பின்னூட்டத்தில் இவ்வாறு எழுதி இருந்தார் நினைவுக்கு வருகிறது. இருந்தாற்போல் இருந்து இரண்டு வினாடிகள் நான் எங்கோ இழுத்துச் செல்லப் படுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று திமிறிக் கொண்டு சுய நினைவுக்கு வந்தபோது உடல் மிகவும் சோர்வுற்றிருந்தது. ஒரு வேளை என்னால் அப்படித் திமிறி வர முடியாமல் போயிருந்தால்....................!.

நானென்ன நசிகேதனா.? அதற்குப் பின்னால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள.?அவனை முன் வைத்து இப்புவியில் நாமெப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்த நம் முன்னோர்கள் சொல்லிப் போன உபனிஷத் கதை அல்லவா அது.? நான் மறைந்தபின் என்னாவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியும். .முன்பே எழுதி இருக்கிறேன். பேரினை நீக்கி பிணமென்று சொல்லி பாடையில் ஏற்றி புதைக்கவோ எரிக்கவோ செய்வார்கள். நானும் என் அப்பன் அவனுக்கப்பன் போல நினைவாக மாறி விடுவேன். இப்போது எனக்கு அது பற்றி சிந்தையில்லை. இருக்கும்போதுயாருக்கும் பாரமில்லாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?. என் உடல் நலம் பேணுவதும் நலமாய் இருப்பதும் முற்றிலும் என் கையிலா இருக்கிறது.?என்னென்னவோ எழுதத் தூண்டுகிறது. ஆனால் எண்ணங்கள்தான் கோர்வையாக வருவதில்லை. ஆகவே அன்று ஒரு முறை எழுதியதை மீள் பதிவாக்குகிறேன்.

எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

       அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

         அந்த நாள் அக்குயவன் கை
     
  ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன் தானே நீ.?

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
    என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
        
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.

         மூ டிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் நீ  என்னில் எண்ணச் சிறகடிப்பாயே

 




24 comments:

  1. //அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;

    வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

    என்னுயிர்ப் பறவையே,
    நான் கண்களை மூடிக் கொள்கிறேன்

    நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.

    என் நெஞ்சுக்கூட்டை விட்டு
    அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//

    அழகான வரிகள்.

    எல்லோரும் இதுபோன்றே உண்மையில் மனதில் நினைக்காவிட்டாலும், வாயால் வெளியில் சொல்வதுண்டு.

    இதுபோன்ற வாய்ப்பினைப் பெறுபவர்கள் உண்மையில் பாக்யவான்களே.

    பகிர்வுக்கு நன்றி, ஐயா.

    ReplyDelete
  2. எண்ணச் சிறகுகளில்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. விண்ணில் பறக்கும் எண்ணச்சிறகுகள்..!!

    ReplyDelete
  4. இந்தக் கவிதை அருமையாக இருக்கிறது. மனதைப் பிசையும் கவிதை.

    ReplyDelete
  5. அன்பின் ஐயா!..

    மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம் தான் என்றாலும்,

    மனம் வலிக்கின்றது.

    சுகானந்த சுகந்த அலைகள் எங்கும் பரவித் திகழ்வதாக!..

    சிவ.. சிவ..

    ReplyDelete
  6. அன்பின் ஐயா!..

    மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம் தான் என்றாலும்,

    மனம் வலிக்கின்றது.

    சுகானந்த சுகந்த அலைகள் எங்கும் பரவித் திகழ்வதாக!..

    சிவ.. சிவ..

    ReplyDelete
  7. //என்னுயிர்ப் பறவையே,
    நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
    நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
    என் நெஞ்சுக்கூட்டை விட்டு
    அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//
    செய்திட வேண்டிய செயல்கள் இன்னும் மீதமிருக்கின்றன ஐயா

    ReplyDelete
  8. இந்த வயதில் தோன்றும் இயற்கையான எண்ணங்கள்தான். இதுதான் நிதரிசனம் என்றாலும் இதையே நினைத்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.சோர்வுதான் மிஞ்சும். அனைத்தும் விதிப்பயனால் நடக்கும் என்று நம்பி, அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டு விட வேண்டியதுதான்.

    ReplyDelete
  9. //மூ டிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் நீ என்னில் எண்ணச் சிறகடிப்பாயே//

    கவிதையின் முத்தாய்ப்பான வரிகள் மனதை என்னவோ செய்தது.

    ReplyDelete

  10. மூ டிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் நீ என்னில் எண்ணச் சிறகடிப்பாயே//

    அழகான வரிகள்.

    அந்தி நெருங்குவதாய் நமக்கு நாமே கற்பித்துக்கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள்தான் இத்தகைய எண்ணங்கள். வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் இல்லை என்பதை நாம் உணர்ந்துக்கொண்டாலே போதும். இறை நம்பிக்கையுடையவர்கள் இறைவன் கையிலும் மற்றவர்கள் இயற்கையின் கையிலும் அவர்களை ஒப்படைத்துவிட்டால் மனம் அமைதி பெறும்.

    ReplyDelete

  11. @ கோபு சார்
    /இதுபோன்ற வாய்ப்பினைப் பெறுபவர்கள் உண்மையில் பாக்யவான்களே./ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படிப் பார்க்க முடியும் நானே இல்லாமல் ஆனபிறகு. வருகைக்கும் மருத்டுக்கும் நன்றி.

    ReplyDelete

  12. @ திண்டுக்கல் தனபாலன்
    பாராட்டுக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  13. @ இராஜராஜேஸ்வரி
    விண்ணில் பறக்கும் வண்ணச் சிறகுகள்.!!வண்ணமெங்கே இருக்கிறது. கருமை நிறம் வண்ணத்தில் சேர்த்தியா.? வாருகைகு நன்றி மேடம்.

    ReplyDelete

  14. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    / மனதைப் பிசையும் கவிதை./என்றோ எழுதியது. எழுதும் போது இருந்த மனநிலைக்கு ஒத்து வந்தது. மீள் பதிவாயிற்று. வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    எழுதுவது எண்ணங்களைப் பகிரத்தானே தவிர யார் மனத்தையும் நோகடிக்க அல்ல. வரிகளின் பொருள் நிதர்சனம் என்று கூறியதற்கு நன்றி.

    ReplyDelete

  16. @ கரந்தை ஜெயக்குமார்
    /செய்திட வேண்டிய செயல்கள் இன்னும் மீதமிருக்கின்றன ஐயா/மிச்சம் ஏதுமில்லாமல் செய்துவிட்டுத்தான் போவேன். போவது தெரியாதபடி நிகழவேண்டும் என்பதே உள்ளக் கிடக்கை.

    ReplyDelete

  17. @ டாக்டர் கந்தசாமி
    எந்த விதிப்பயனாலும் எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இப்படி இப்படி இருக்கக் கூடாது என்று விரும்புவது தவறில்லையே. வருகைக்கும் மேலான கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ வே. நடன சபாபதி
    கவிதையின் முத்தாய்ப்பான வரிகள் நிதரிசன எண்ணங்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  19. @ டி.பி.ஆர் ஜோசப்
    நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் என்று சொல்வார்கள். நான் இப்படி நினைக்கிறேன். எண்ணங்களுக்குச் சக்தியுண்டு என்று நம்புபவன் நான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  20. எண்ணச் சிறகுகள் அருமையாய்ச் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. GMB சார்! எப்போழுதும் போல இருங்கள்! கவிஞர் வாலி எல்லோருக்காகவும் ஒரு பாடல். எழுதி இருக்கிறார்1

    உனக்கென்ன குறைச்சல்
    நீயொரு ராஜா..
    வந்தால் வரட்டும் முதுமை!
    தனக்குத்தானே துணையென நினைத்தால்
    உலகத்தில் ஏது தனிமை?

    கடந்த காலமோ திரும்புவதில்லை..
    நிகழ்காலமோ விரும்புவதில்லை..
    எதிர்காலமோ அரும்புவதில்லை..
    இதுதானே அறுபதின் நிலை..

    எதையோ தேடும் இதயம்
    அதற்கு இன்பம்தானே பாலம்
    அந்த நினைவே இன்று போதும்
    உன் தனிமை யாவும் தீரும்!

    - கவிஞர் வாலி (படம்: வெள்ளிவிழா)

    ReplyDelete
  22. என் வரிகளை நினைவு கொண்டமை க்கு நன்றி. இப்படித் தான் சிலர் சொன்னது -- மனசுக்குப் பிடித்திருக்கணும்ன்னு கூட இல்லை, வார்த்தைகள் நம்மைக் கவர்ந்தால் போதும் -- பசுமரத்தாணி போல நினைவில் படிந்து விடும்.

    உங்கள் பெயரைப் பார்த்தாலே உங்கள் வரிகள் சில சட்டென்று என் நினைவுக்கு வரும். திருமணத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அதில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

    கணினியின் எழுத்துரு பலகை கொஞ்ச நாட்களாக பழுதுற்றிருந்தது. அதனால் தான் வருகை குறைந்திருந்தது. இப்பொழுது தான் சரி செய்யப்பட்டது. இனி தவறாது சந்திக்கலாம்.

    உடல் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு பதிவு போட்டால் போதும். அதுவே அதிகம். கணினி முன் பதிவு போடுவதற்காக உட்காரும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். புது மாதிரியான அனுபவத்தைப் பெறுவீர்கள்.

    நாம் சொன்னது அதற்கு பிறர் சொன்னது என்கிற வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். அதுவே புதுக்காற்றை சுவாசிக்கிற மாதிரி இருக்கும். ஆக்கபூர்வமாக பிறர் சொன்னவற்றில் உங்கள் அனுபவத்தை உரசிப் பாருங்கள்.
    அதுவே புதுப் புதுச் சிந்தனைகளை நம்மில் கிளர்த்தும். புதுசு புதுசாக நிறைய எழுதத் தோன்றும்.

    இயற்கையை ரசியுங்கள். அதனிடமிருந்து உற்சாகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பெற்றதை மனசில் தேக்கிக் கொள்ளுங்கள். காலையோ மாலையோ கால்மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    புதுசு புதுசாக நிறைய படியுங்கள். இந்த படிப்பு பல விஷயங்களில் நாம் கொண்டுள்ள கருத்துக்களை செழுமைபடுத்தும். படித்ததில் தேர்ந்தெடுத்தவற்றில் உங்கள் எண்ணங்களைக் கலந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தனிப்பட்ட அர்த்தமில்லாத புகழ்ச்சிப் பின்னூட்டங்களை புறந்தள்ளுங்கள்.
    இனிமேல் யார் புகழ்ந்தும் அல்லது இகழ்ந்தும் எதுவும் ஆகப்போகிற தில்லை. அதே நேரத்தில் அறிவை பட்டை தீட்டி சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தக் கூடிய பின்னூட்டங் களைக் கண்டால் லேசில் விட்டு விடாதீர்கள். அந்த மாதிரியான கருத்துப் பகிர்தல்கள் இந்த வயசில் உற்சாகத்தை ஊட்டும். உடல் சோர்வுக்கு அதுவே மருந்துமாகும்.
    புத்தாண்டு புதுமையாக மலரட்டும்.

    ReplyDelete
  23. அன்புள்ளம் கொண்ட , எழுத்துலக அனுபவங்கள் நிறைந்த, வாழ்க்கையின் நிதர்சனங்களை தெளிவாக உணர்ந்து விவேகத்துடன் எழுதியுள்ள திரு. ஜீவி ஐயா அவர்களின் பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அதுவும் அந்தக்கடைசி பாரா சூப்பரோ சூப்பர் தான்.

    வாழ்க !

    திரு. ஜீவி ஐயா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்களுடன் கோபு

    ReplyDelete

  24. @ கீதா சாம்பசிவம்
    வருகை தந்து எண்ணச் சிறகுகளை ரசித்தமைக்கு நன்றி.

    @ தி. தமிழ் இளங்கோ
    என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்போருக்குத் தெரியும், நான் எதற்கும் அசைந்து கொடுப்பவனல்ல என்று. இருந்தாலும் சில நேரங்களில் வேண்டாத நினைவுகள் வருகின்றன. அதைப் பகிர்வதன் மூலம் என் போன்றோர் இதுவும் கடந்து போகும் என்று எண்ண ஒரு வாய்ப்பாகும் . வருகைக்கும்
    கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    @ ஜீவி
    வெகு நாளைக்குப் பின் ஒரு நீண்ட பின்னூட்டத்துடன் கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி. மிகுந்த அக்கறையுடன் சில அறிவுரைகள் கொடுத்ததற்கு நன்றி. இத்தனை வயதுக்கப்புறம் அர்த்தமில்லாத புகழ்ச்சி யெது என்று தெரியாதவன் அல்ல நான். நான் எழுதிய வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டிச் சிலர் புகழும்போது , அந்த வரிகளின் தாக்கத்தைக் கூறாமல் வெறுமனே புகழ்கிறார்களே என்று நான் நினைப்பது உண்மை. அதே போல் தாக்கம் ஏற்படுத்திய வரிகளும் என் நினைவில் வரும். மீண்டும் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    @ கோபு சார்
    மீண்டும் வந்ததற்கு நன்றி. ஜீவி அவர்கள் மீண்டும் வருவார் என்றால் உங்கள் கருத்தும் அவர்களுக்குப் போய்ச் சேரும்.

    ReplyDelete