Tuesday, April 2, 2013

VALUE ANALYSIS-முதல் இனிப்பு வரை.


                  VALUE ANALYSIS-முதல் இனிப்பு வரை.
                -----------------------------------------------------

வால்யூ அனலைசிஸும்   திருப்தியின் விலையும்
-------------------------------------------------------------------


வலைப்பூ தொடங்கிய புதிதில் தரம் எனப் படுவது யாதெனில்என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்தப் பதிவு நான் எழுதிய பதிவுகளில் மிகவும் அதிகமாகப் படிக்கப்பட்ட பதிவுகளில் ஒன்று. ஆனால் நம்புவதே சிறிது கஷ்டமாக இருக்கிறது. அத்தனை பேர் படித்திருந்தாலும் ஒருவராவது கருத்து சொல்லவில்லை. இருந்தாலும் என்ன.? நான் எழுதுவேன், செய்தி போய்ச் சேர்ந்தால் சரி. இப்போது இது எத்ற்கு என்று தோன்றலாம். Fitness for use என்பதே தரத்தின் முதல் படி என்றிருந்தாலும் வாடிக்கையாளரின் திருப்தி மிகவும் முக்கியம் என்று எழுதி இருந்தேன். For reference….. gmbat1649.blogspot.in/2010/11/blog-post.html      இன்னொரு பதிவு இலவசமாக வருவதே தரம்“  வாடிக்கையாளரின் திருப்தியை கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிகள் பல எடுக்கிறார்கள். அந்தவகையில் ஒன்றுதான் வால்யூ அனாலைசிஸ் (value analysis.) உதாரணத்துக்கு தீப்பெட்டியை எடுத்துக் கொள்வோம். தீப்பெட்டியின் அளவு, அதில் இருக்கும் குச்சிகளின் எண்ணிக்கை, அவற்றின் தடிமன் நீளம், தலையில் இருக்கும் மருந்து, பெட்டியின் இரு 
பக்கமும் உராய்க்கும்போது எரிய மருந்து இன்ன பிற விவரங்கள் தீப்பெட்டிய்ல் கவனிக்கப் படுகின்றன. ஏனெனில் இவை உற்பத்திச் செலவை அடிப்படையில் நிர்ணயிக்கும். சரி...... ஒரு தீப்பெட்டியை உபயோகிப்பவர், பெட்டியில் இருந்து குச்சியை எடுத்து பெட்டியின் பக்கவாட்டில் மருந்து தடவிய பக்கத்தில் உரசுகிறார். அது உரசிய முதல் முறையே தீப்பற்றினால் மகிழ்ச்சி. அது அதன் வேலையைச் செய்கிறது. இரண்டோ மூன்றோமுறை உரசவேண்டும் என்றால் அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. தீப்பெட்டி வேலை செய்தாலும் வாடிக்கையாளர் திருப்தி அடைவது இல்லை. காரணங்களை அலசினால், மருந்தின் தரம்,பூசிய விதம் முதல் குச்சி உடைவதுவரை , கைச் சூடாவது வரை, குச்சிகளின் எண்ணிக்கைவரை பலவற்றினால் திருப்தி பாதிப்படைகிறது. இந்தக் குறைகள் எல்லாம் நீக்கப்படவேண்டும் உபயோகிப்பவர் திருப்தியடைய வேண்டும்  கூடவே உற்பத்தி செலவையும் குறைக்க வேண்டும்.நீங்கள் கவனித்திருக்கலாம்

பெட்டியின் ஒரு பக்கம் மருந்து தடவி இருக்கும். அதிலும் விட்டுவிட்டு புள்ளிகளாக இருக்கும். குச்சியின் நீளம் குறைக்கப் பட்டிருக்கும். பெட்டியின் அளவும் குறைந்திருக்கும். மரக்குச்சிகளுக்குப் பதில் வாக்ஸ் தடவிய பேப்பர் குச்சிகள் இருக்கும். இவையெல்லாம் வால்யூ அனாலைசிஸின் விளைவுகளே. 

இன்னொரு கேஸ் எடுத்துக் கொள்ளலாம்.நன்றாக உடை அணிந்து டை கட்டிக் கொள்வது வழக்கத்தில் இருப்பதே. ஷர்ட்டுடன் டையைச் சேர்க்க டை பின்உபயோகிப்பதும் நாம் அறிவோம்.

அந்த டையை ஷர்ட்டுடன் பிணைக்க ஒரு ஜெம் க்லிப் போதுமானதாய் இருக்கும். செலவே இல்லாதது. ஆனால் அதே பணியைச் செய்ய பல ரகங்களில் டை பின்கள்,பல விலைகளில் கடைகளில் விற்பனை ஆகின்றன. இப்போது நான் சொல்ல வருவது ஓரளவு விளங்க ஆரம்பிக்கும். குவாலிடி அல்லது தரம் என்பது ஃபிட்னெஸ் ஃபர்ர் யூஸ்  என்று சொல்லப் பட்டாலும் வாடிக்கையாளரின் திருப்தியும் இருந்தால்தான் பொருள் விலை போகும். உபயோகிப்பவரின் திருப்தியைக் கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர் அதன் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும். அவரவர் திருப்திக்காக நிறைய விலை கொடுக்கத் தயாராய் இருப்பவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பொருள்களோ சேவைகளோ சந்தைக்கு வருகின்றன. VALUE ANALYSIS  மூலம் செலவைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் விலையைக் கட்டுப்படுத்தி உபயோகிப்பவர் திருப்தியடைகிறார்கள் என்றால் ஒரு பொருள் அல்லது சேவை சந்தையில் பெயர் பெறும். ஆனால் பெரிய கேள்விக்குறி என்னவென்றால் வாடிக்கையாளரின் திருப்தி என்பதற்கு சரியான அளவுகோல்  இருக்கிறதா என்பதுதான். THAT IS AN EVER CHANGING FEELING......! THE YARDSTICK VARIES....!
கடவுளின் கைவண்ணம்.
---------------------

ஒரு குழந்தை தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. பிறகு கேட்டதுதாத்தா உங்களை படைச்சது யார்?

தாத்தா.: ஏம்மா. ..என்னைக் கடவுள்தான் படைச்சார்.

குழந்தை.:- அப்போ என்னை யார் படைச்சது.?

தாத்தா.:- உன்னையும் கடவுள்தான் படைச்சார்.
குழந்தை.:- உன்னைப் படச்சப்போ இருந்ததை விட என்னைப் படைக்கும்போ கடவுள் நன்றாகத் தேறிவிட்டார் இல்லையா தாத்தா.?

காசியும் திரிவேணி சங்கமமும். 
---------------------------- 
நாங்கள் சில வருஷங்களுக்கு முன் காசிக்குப் போயிருந்தோம். ஹனுமான் காட் அருகே சங்கர மடத்தில் தங்கினோம். படுக்கை விரிப்பு என்று ஏதுமில்லை. அடுத்த நாள் கங்கையில் ஸ்நானம் செய்து என் பெரிய அண்ணாவுடன் சேர்ந்து பித்ருக் கடன்கள் எல்லாம் செய்தோம். அங்கிருந்து திரிவேணி சங்கமத்துக்கு படகில் சென்றோம். கையால் துழாவும் போட். நான் என்மனைவி, அண்ணா, அண்ணி தவிர படகோட்டியுடன் ஒரு ஐயர்.(பண்டா) இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. சுழலும்கங்கையில் இறந்த விலங்குகளுடன்மனிதப் பிணங்களும் மிதக்க , நீச்சலுக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாத நாங்கள் அவ்வளவு தூரம் படகில் பயணித்தது, இன்னொரு முறை செய்ய தைரியம் இருக்குமா தெரியவில்லை. திரிவேணி சங்கமத்தில் ஒரு படகை நங்கூரம் போல் பாய்ச்சி நிறுத்தி அதில் பூசைகள் எல்லாம் செய்து, படகிலிருந்து கட்டித் தொங்க விடப்பட்டிருந்த மூங்கிலில் நாங்கள் நிற்க எங்களை தண்ணீரில் இறக்கியது.... அப்பப்பா...கிடைக்கப் பெறாத அனுபவம்......!
அங்கிருந்தபோது கேட்ட செய்தி ஒன்று. காசியில் காகங்கள் பறக்காதாம். மல்லிகைப் பூ மணக்காதாம், மாடுகள் முட்டாதாம். இன்னும் இரு செய்திகள் நினைவுக்கு வரவில்லை. கேட்டவற்றை சோதித்துப் பார்க்கவுமில்லை.


பலப்பல நிகழ்வுகள், பலப்பல நினைவுகள், ஒன்றுக்கொன்று பிணைப்பில்லாமல். .இருந்தாலும் பகிரத் தோன்றியது.

என்ன பெயர் வைக்கலாம்...எப்படி அழைக்கலாம்.?
---------------------------------------------

ஒரு கப் பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும் ஒன்றரையிலிருந்து இரண்டு கப் தண்ணீரில் குக்குரில் நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அதில் கால் கப் நெய்யில் வறுத்த கோதுமை மாவைச் சேர்த்து நன்றாகக் கிளரவும்.இரண்டரை கப் சர்க்கரையை மசித்த கலவையில் சேர்த்துக் கிளரவும்சர்க்கரை நீர்விட்டுக்கலந்தவுடன் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக்கொண்டிருக்கவும் ஒன்றரை கப் நெய் விட்டுக் கிளர கிளர அல்வா பதத்துக்கு வந்ததும் பொடி செய்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துக் கலக்கவும். ஒரு அருமையான இனிப்புக் கலவை கிடைக்கும்.இதற்கு என்ன பேரு வைக்கலாம் .நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஓ.. அந்தக் காட்சி...
----------------------



திரையரங்கில் ஒரு படம் பல நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ரசிகர் தினமும் தவறாமல் படம் பார்க்க வருவதை அந்தத் தியேட்டர் மேனேஜர் கவனித்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் அந்த ரசிகரிடம் ‘ இந்தப் படத்தை நீங்கள் ரசித்துப் பார்க்கிறீர்கள்.உங்களை எது அவ்வளவு ரசிக்கச் செய்கிறது ‘ என்று கேட்டார்.ரசிகர் உற்சாகமாய்படத்தில் ஒரு நதிக்கரையில் பெண் ஒருத்தி குளிக்கப் போகுமுன் தன் உடைகளைக் கழற்றுகிறாள்.அவள் கழற்றி முடிக்கும் நேரத்தில் ஒரு ரயில் குறுக்கே ஓடி காட்சியை மறைக்கிறது. ஒரு நாளாவது அந்த ரயில் தாமதமாக வராதா என்ற எண்ணத்தில் படம் பார்க்க வருகிறேன்.என்றார்.....!  
---------------------------------------------  


சொல்லாமலே விளங்கும்.                                                                         


  
    


 
 

 

11 comments:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக VALUE ANALYSIS பற்றி விளக்கமும் கடவுளின் கைவண்ணமும்...

    ReplyDelete
  2. பாசிப்பருப்பு , கோதுமை மாவு கலவைக்கு அசோகா அல்வா என்பார்கள் தஞ்சைப்பக்கம்.

    ReplyDelete

  3. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கோமதி அரசு
    உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. செய்முறையிலிருந்து அது அசோகா அல்வா என்று பெயரிட்ட கோமதி அரசுக்கு இன்னுமொரு முறை நன்றி. சமையல் குறிப்புகளுக்காக ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறேன். ஆதரவு வேண்டும். kamalabalu294.blogspotin

    ReplyDelete
  4. பல்சுவைப் பதிவாக இப்பதிவை அமைத்தது
    மனம் கவர்ந்தது.வேல்யூ அனலைசிங்கிற்கும்
    இந்தப் பதிவிற்க்கும் உள்ள சம்பந்தம் என்னைக் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. குழந்தை.:- உன்னைப் படச்சப்போ இருந்ததை விட என்னைப் படைக்கும்போ கடவுள் நன்றாகத் தேறிவிட்டார் இல்லையா தாத்தா.?

    குழந்தைகள் முன்னோர்களை விட புத்திசாலிகளாக இருப்பது கண்கூடு..

    பல்சுவைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. அம்மாவும் வலைப்பூ தொடங்கிவிட்டார்களா? வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. காசி அனுபவம் சிலிர்க்க வைப்பது உண்மை தான். சில நேரம் கண்மூடித்தன துணிச்சல் வந்துவிடுகிறது. (சரி, அங்கே மல்லிகைப்பூ வாங்கிப் பார்த்திருக்கலாமே?)
    பாசியம்னு சொல்ல நினைச்சேன், அசோகா அல்வாவா? ரைட்.
    கமல்காசன் ஜோக் நைஸ்.

    ReplyDelete

  8. @ ரமணி
    @ இராஜராஜேஸ்வரி,
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்,
    @ அப்பாதுரை.
    வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. ரமணி சார், இது பல்சுவைப் பதிவு ஓக்கே.வால்யூ அனலைசிங் இதில் ஒரு பகுதி. வேறு சம்பந்தம் ...
    அப்பாதுரை சார் கமல்ஹாசன் ஜோக் என்று தெரியாது. எப்போதோ கேட்டது, படித்தது. பாசியம் ஸ்வீட் தெரியாது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  9. பாசிப்பருப்பு.. பாயசம்.. யம்(yum).. கலவைப்பெயர்.. ஹிஹி

    ReplyDelete
  10. அனைத்தையும் இப்போதான் வாசித்தேன் ஸார்! வால்யூ அனலைசிங் எக்சலண்ட்!

    ReplyDelete
  11. இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா. இடையில் வலையுலகத்தில் எடுத்த விடுப்பு காரணமாக தங்களுடைய பல பதிவுகள் வாசிக்காமல் நிலுவையில் உள்ளன. ஒவ்வொன்றாக வாசித்துக் கருத்திடுவேன். இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன். ஒரே பதிவில் எத்தனை விதமான சுவாரசிய பகிர்வுகள்! வியாபார நுணுக்கம், குழந்தை மனவியல், வித்தியாச அனுபவம், சுவையான சமையல் குறிப்பு, நகைச்சுவை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்று அத்தனையும் ரசித்தேன். நன்றி ஐயா.

    ReplyDelete