Friday, January 3, 2014

சுவாமிகளும் கோவில்களும்


                             சுவாமிகளும் கோவில்களும்
                              ---------------------------------------


காரிய சித்தி ஆஞசனேயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அண்மையில் சென்னை சென்றிருந்தபோது என் மகன் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிமீ. தூரத்தில் வேளச்சேரியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு என் மனைவியும் மச்சினனும் சென்றிருந்தார்கள். மனதில் ஏதாவது குறை இருந்தால் அந்த ஆஞ்சனேயரை வேண்டிக்கொண்டு ஒரு மட்டையுடன்கூடிய தேங்காயை அர்ச்சித்து அதை கோவில் பிரகாரத்தில் கட்ட வேண்டுமாம். அதற்கு ஒரு அடையாளச் சீட்டும் கொடுக்கிறார்கள். குறை நீங்கியபின் மறுபடியும் கோவிலுக்கு வந்து அதே தேங்காயைஅர்ச்சித்து கொண்டு வரலாம். என் மச்சினனின் குறை நீங்கியதால் என் மனைவியுடன் அந்தக் கோவிலுக்குச் சென்று வந்தார்கள். இந்தக் கோவிலை நிறுவியவர் ஸ்ரீ சச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆவார்.
டிசம்பர் மாதம் 26-ம் தேதி மைசூருக்குச் சென்றோம் எங்களுடன் என் 47 வருட நண்பன் ( இப்போது அமெரிக்க வாசி) கூட வந்தார். அங்கு ஸ்ரீசச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆசிரமம் பார்க்கலாம் என்றார். இந்த ஸ்வாமி அமெரிக்காவில் பிரசித்தமானவராம் அப்போது எனக்குள் ஒரு பொறிதட்டியது, இந்த சுவாமிகளின் சென்னை ஆசிரமத்தில்தானே அந்தக் காரியசித்தி ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது.. மேலும் இந்த மைசூர் ஆசிரமத்தில் தத்தாத்ரேயர்கோவிலும் ,  70 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சனேயரும் பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறினார். எனக்கு எப்போதும் புதிய இடங்களைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். இதே 26-ம் தேதி சென்ற வருடத்தில்தான் ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை ஆகி இருந்தது.
நாங்கள் அன்று மதியம்தான் மைசூர் சென்றதாலும் அடுத்த நாள் ஒரு திருமணத்துக்குச் செல்ல வேண்டி இருந்ததாலும் அன்று மாலையே ஆசிரமம் சென்றோம். ஆசிரமம் ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது. ரம்மியமான சூழ்நிலை நேரம் இருட்டத் துவங்கிவிட்டதால் முழு அழகையும் ரசித்துப் பார்க்க முடியவில்லை. அங்கும் ஒரு காரியசித்தி ஆஞ்சனேயர் இருக்கிறார். மட்டைத் தேங்காய் வைத்து வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறுமாம். நினைத்தது நடக்க ஒரு மட்டைத்தேங்காய் போதுமென்று நினைப்பவர்களைக் குறை கூறமாட்டேன். எல்லாம் அவரவர் நம்பிக்கை.இந்த நம்பிக்கை இப்போது மேலை நாடுகளிலும் பரவி வருகிறதுபோல் தெரிகிறது. இந்த சுவாமியின் ஆசிரமத்துக்கு அநேக வெளிநாட்டினர் வருகை தருகின்றனர். பணத்துக்குப் பஞ்சமில்லை. அழகான தத்தாத்ரேயரின் கோவில் சுற்றிலும் பொன்சாய் தோட்டம். கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கிறது. நாளுக்கு ஒன்று என்று 365 தூண்கள் இருப்பதாகக் கேள்வி. சிற்பங்கள் செதுக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றும் கேள்வி.
அங்கிருக்கும் காரிய சித்தி ஆஞ்சனேயர் கோவிலுக்கு மேல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் எழுபது அடி உயர ஆஞ்சனேயர் சிலையும் அங்கே உருவானதாம் இருட்டிய பிறகு சென்றதால் படங்கள் எடுக்க முடியவில்லை,இருந்தாலும் என் கைபேசியில் படம் பிடித்தேன். மேலும் வலையிலிருந்து சுட்ட படமும் இங்கே

கைபேசியில் எடுத்த ஆஞ்சனேயர் சிலை
.
காரியசித்தி ஹனுமான் தத்தபீடம் மைசூர்



வலையில் இருந்து எடுத்த 70 அடி ஆஞ்சனேயர்



கோவில் பற்றிச் சொல்வதானால் கூடவே ஒரு கதையும் இருக்கும்தானே, அப்போதுதானே சுவைக்கும். அத்ரி முனிவர்-அனுசூயா தம்பதியினருக்கு அந்த பிரம்மா விஷ்ணு மகேசனே குழந்தைகளாய்ப் பிறக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர். அந்த மும்மூர்த்திகளும்
அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.அவர்கள் தங்களுக்குப் பசி என்றதும் உணவு எடுக்கச் சென்றவரிடம் உணவு கொடுப்பவர் நிர்வாண நிலையிலேயே அதைப் பறிமாறவேண்டும் என்று கேட்டனர். இந்த அசாதாரண கோரிக்கை ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்த அனுசூயா அவ்விதமே பறிமாறுவதாகக் கூறினாள்.ஆண்டவனே நான் உண்மையான பதிவிரதை. எனக்கு இப்படி ஒரு சோதனையா “ என்று நினைத்து, , கணவருக்குப் பாதபூஜை செய்த நீரை வந்த மூவரின் மேல் தெளித்து  அவர்கள் குழந்தைகளாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதன் படியே பிரம்மா விஷ்ணு மகேசன் மூவரும் குழந்தைகளாக மாற  அவர்களுக்கு பாலூட்டிப் பசி தீர்த்தாள். சற்று நேரத்தில் அத்திரி முனிவரும் வந்து நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், வந்தவர்கள் மும்மூர்த்திகளேஎன்று தன் ஞான திருஷ்டியால் அறிந்த முனிவர் அம்மூன்று குழந்தைகளையும் ஒரு சேர அணைத்தார். அந்த மூன்று குழந்தைகளும் ஓருடல் மூன்று முகம் ஆறு கைக்கள் கொண்டதாக மாறின. நாரதர் மூலம் நடந்ததை அறிந்த முத்தேவியரும் தங்களது கணவர்களைத் திருப்பித் தர வேண்டி நின்றனர். தேவியரே இந்தக் குழந்தை எங்களிடம் வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை நிறைவேற்றிவைத்தால் உங்கள் கணவர்கள் உங்களுக்குத் திருப்பிக் கிடைப்பார்கள் “ என்றனர், அதற்கு அவர்களொப்புதல் அளிக்கவே அனுசூயா மும்மூர்த்திகளை வேண்டி நின்றாள். மும்மூர்த்திகளும் காட்சியளித்து தங்கள் சக்தியாக அக்குழந்தை விளங்கும் என்றும் அதற்கு  தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டி ஆசியளித்தனர். தத்தாத்ரேயன் என்றால் மும்மூர்த்திகளுக்கும் சமமானவர் என்று பொருள்.
மும்மூர்த்திகளும் மகனாகப் பிறந்தமையால் த்(3)த்தஎன்று பெயர் வந்ததாகவும் கூறுவர். அத்திரி முனிவருக்குப் பிறந்ததால் ஆத்ரேயர் என்ற பெயரும் சேர்ந்து தத்த*ஆத்ரேயர் = தத்தாத்தரேயர் என்று வந்ததாகவும் கூறுவர். தத்தாத்ரேயரின் கோவிலுக்கு சென்றபோது இந்தக் கதையும் மனதில் விரிந்தது, ஏன் என்றால் அந்தக் கோவிலில் பிரதிஷ்டையாகி இருக்கும் தெய்வம் தத்தாத்ரேய வெங்கடேஷ்வரர். மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு தெய்வம் அதில் ஒருவரான விஷ்ணுவின் கோவிலாக இருப்பது ஏன் என்னும் கேள்வி என்னை வலையில் காரணம் கிடைக்குமா என்று தேட வைத்தது.  இந்த தத்த பீடம் ஸ்ரீ சச்சிதாநந்த கணபதி ஸ்வாமிகளால் நிறுவப் பட்டது.தகவல்கள் தேடும்போது கிடைத்ததைப் பகிர்கிறேன், 


Sri Nrusimha Saraswati Incarnation

Lord Dattatreya is incarnation of Lord Vishnu, Lord Shiva and Lord Brahma (The Trio or Trimurthi). Swami Dattatreya is one among the Immortals (‘Chiranjeevi’) – there is no end to this Incarnation. Depending on the state of the world from time to time Lord Dattatreya incarnates himself in various forms for the well being of human beings and for establishing Sanatana Dharma. This is the distinguishing aspect of this Incarnation. During 15th Century A.D. – which was the era of the Incarnation of Lord Dattatreya as Sri Nrusimha Saraswati -India was evolving with rapid changes in social and political fabric of the society. Recognizing this – Sri Nrusimha Saraswati decided to give up his form and advised his disciples that he will very soon continue his journey in ‘new form’. In presence of thousands of disciples and devotees – he disappeared in banks of River Krishna near Sri Sailam.

Sri Ganapathi Sachchidananda Incarnation

After nearly five centuries, In 1942 he re-incarnated as Sri Sri Sri Ganapathi Sachchidananda Swamiji with Datta Peetham, Mysore as the main centre, started to give new lease of life to Sanatana Dharma following modern methodology in line with the global evolution and modern era. To prove this to his new disciples – In 1966 when Sri Ganapathi Sachchidananda Swamiji visited Koti Lingala Ghat in Sri Sailam, the previous incarnation Sri Nrusimha Saraswati gave darshan and Initiated Sri Ganapathi Sachchidananda Swamiji into Avadhoota lineage (‘Shona Vastra Deeksha’).




கோவிலைப் பற்றி சொல்லிவரும்போது ஆரம்பித்த கதை எங்கெங்கோ இழுத்து வந்துவிட்டது.சநாதன தர்மத்துக்கு புத்துயிர் அளிக்க நவீன வசதிகளைப் பயன் படுத்தி உலகளாவச் செய்ய ஒரு ஸ்வாமி வந்துவிட்டார். இவர் ஒரு ஹனுமான் பக்தர். ஆகவே தத்த பீடத்தோடு காரியசித்தி ஆஞ்சனேயரையும் உலகெலாம் பிரதிஷ்டை செய்து வருகிறார் இந்த ஹைடெக் ஸ்வாமிஜி. விட்டில் பூச்சிகளென அயல்நாட்டினரும் இவரை மொய்க்கின்றனர்.
மைசூரில் இவரது தத்தபீடம் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. டெரக்கோட்டாவால் ஆன ஒரு பெரிய மூலிகேஷ்வரரும் உண்டு நாங்கள் சென்றபோது நன்கு இருட்டிவிட்டதாலும் முக்கியமாகச் செல்ல வேண்டிய திருமண் நிகழ்ச்சிகளைக் காண வேண்டி இருந்ததாலும் எல்லாம் பார்த்த திருப்தி இருக்கவில்லை. அடுத்தமுறை , அப்படி என்று ஒன்று இருந்தால் இன்னும் ஆழ்ந்த நோக்குடன் விஜயம் செய்ய வேண்டும்.தத்த வெங்கடேஷ்வரா படம் வலைத்தளத்தில் இருந்து எடுத்தது கீழே.


அடுத்தபதிவு ஒரு திருமணம் பற்றியது. 






16 comments:

  1. நானும் மைசூரிலுள்ள இந்த தத்தாத்ரேயரின் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தங்களின் பதிவைப் படித்ததன் மூலம் இன்னொரு தடவை சென்றுவந்ததைப் போல உணர்ந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஐயா, ஒரு வித்தியாசமான அனுபவம். இவ்வாறான கதைகள் ஆங்காங்கே இப்போது அதிகமாகக் காணப்படுகின்றன. பக்திக்கு அப்பால் நாம் எங்கோ செல்கிறோம் என்பதை இவை உணர்த்துகின்றன.

    ReplyDelete
  3. காட்டியுள்ள படங்கள் யாவும் அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  4. இதுவரை சென்றதில்லை ஐயா... நன்றி...

    ReplyDelete
  5. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!
    அருமையான கோவில் தரிசனம். அழகான படங்களும்!

    நிறைய விடயம் உங்கள் பதிவினால் தெரிந்துகொள்கின்றேன்.
    நம்பிக்கைதானே நம் வாழ்வின் ஆதாரம். அதற்காக
    எல்லா விடயத்திற்கும் எவர் எதைச் சொன்னாலும்
    அப்படியே நம்பும் அளவிற்கும் இருக்கக்கூடாது.

    என் வாழ்க்கையில் மிக அவசியமான அவசரமான ஒரு சம்பவத்தில்
    இந்த நம்பிக்கை என்பதை வைத்தே நம்பவேண்டிய
    சூழல் - நிலையைச் சாதகமாக்கி தம் பாக்கட்டை நிரப்பியவர்களை
    நான் கண்டவள். வெளிநாட்டில் இருப்பதாலும் இந்நிலையைச்
    சாதக மாக்கியவர்களும் உண்டு.

    எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி எம்மை
    இயக்குகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை!
    சாதகமோ பாதகமோ, நம்பிக்கையோ இல்லையோ
    நடப்பது நடந்தே தீருகிறது.

    நல்ல பதிவு. நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
  6. அன்புடையீர்..
    தங்கள் பதிவின் மூலம் புதிய தகவல் தெரிந்து கொண்டேன். நன்றி!..

    ஆஞ்சநேயருக்கும் மட்டைத் தேங்காய்க்கும் வெகு நெருக்கம் போலிருக்கின்றது.

    இங்கே தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலிலும் , தென்குடித்திட்டை நவநீத கிருஷ்ணன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் - இதே போல மட்டைத் தேங்காய் வேண்டுதல் நிகழ்கின்றது.

    ReplyDelete
  7. பல வருடங்களுக்கு முன் மைசூர் சென்றது......

    புதிய கோவில் போல இருக்கிறது. நிறைய இடங்களில் இப்படி புதிய கோவில்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.....

    ReplyDelete
  8. அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  9. தத்தாத்ரேயரின் கதை அறிந்து கொள்ள முடிந்தது. நம்மையெல்லாம் இயக்குபவன் அவன் ஒருவனே. அவனன்றி ஓரணுவும் அசையப் போவதில்லை. Via Media எதுவும் தேவையில்லை என்று நினைப்பவள் நான். எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நல்ல ஒரு கோவில் பார்த்த அனுபவம் கிட்டியது. நன்றி.

    ReplyDelete
  10. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!
    அருமையான கோவில் தரிசனம். அழகான படங்களும்!

    ReplyDelete
  11. வேளச்சேரி ஆஞ்சநேயர் கோவில் போய் இருக்கிறேன்.கணபதி சச்சிதானந்தஸ்வாமிகள் நடத்திய
    இசை மூலம் நோய்களை குணபடுத்தலாம் என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.
    மைசூர் த்ததாரேயரின் கோவில் போனது இல்லை.

    ReplyDelete

  12. @ வே.நடனசபாபதி
    @ சோழநாட்டில் பௌத்தம்
    @ கோபு சார்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ இளமதி
    @ துரை செல்வராஜு
    @ வெங்கட் நாகராஜ்
    @ இராஜராஜேஸ்வரி
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ கோமதி அரசு
    வருகை தந்து கருத்துப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கைகள் பற்றிக் கூறும்போது என்னால் நம்பிக்கை வைக்கும் முன் சற்றே சிந்தியுங்கள் என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை. எத்தனை விதமான ஆண்டவனின் அவதாரக் கதைகள்....!அவரவருக்குள் இருக்கும் ஆண்டவனை மறந்து போகிறோமோ, மீண்டும் நன்றி.

    ReplyDelete
  13. அவரவருக்குள் இருக்கும் ஆண்டவனை மறந்து போகிறோமோ, //

    சரியாக சொன்னீர்கள். நமக்கு அடுத்திருப்பவருக்குள் இருக்கும் இறைவனையும் மறந்துபோகிறோம்.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான தகவல் தந்துள்ளிர்கள் அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
    http://2008rupan.wordpress.com/2014/01/04/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/

    டெங்குவின் கோரவத் தாண்டவம்
    (கவிதையாக)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. புதிய தகவல் ஐயா.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. புதிய தகவல் ஐயா.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete