Saturday, August 4, 2012

பகர்வல்ல .பகிர்வே...

         
                                  பகர்வல்ல பகிர்வே
                                   --------------------------
 ( இம்முறை  எழுதுவது  அனைத்தும் எனக்கு வந்த பதிவுகளின் பகிர்வே. 
இரண்டாவதும் மூன்றாவதும் என் மகன் எனக்கு அனுப்பியவை.என் எழுத்துக்கள் 
அவனுக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது )


முதலில்  நாட்டு நடப்பு.
---------------------------------


அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.
அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.
நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.
ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு
தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்
வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்
எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்
உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்
என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.
புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.
ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.
ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி
செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.
தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி
இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்
கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.
இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.
ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்.

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

தமிழா தமிழா..
--------------
தடுக்கி வீழ்ந்தால்மட்டும் அ.........ஆ 
சிரிக்கும்போது மட்டும் இ...........ஈ
சூடுபட்டால்மட்டும் உ........ஊ
அதட்டும்போது மட்டும் எ........ஏ
ஐயத்தின் போதுமட்டும்
ஆச்சரியப்படும்போது மட்டும் ஒ......ஓ
வக்கணையின் போதுமட்டும்
விக்கலின் போது மட்டும் 
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்றுமொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி. 


அட்சர ராமயணம்
--------------------

அனந்தனே அசுரர்களை அழித்து அன்பர்களுக்கு அருள.
அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்.?
அவனே அறிவழகன் அன்பழகன்.அன்பரை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்.

அயோத்தி அடலேறு அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரியவில்லை அடக்கி அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்.

அரியணையில் அமரும் அருகதை
அண்ணனாகிய அனந்த ராமனுக்கே..
அப்படியிருக்க அந்தோ.! அசூயையால்
அயோத்தி அரசனுக்கும் அடங்காமல்
அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
அனுப்பினாள்.அங்கேயும் அபாயம்.!
அரக்கர்களின் அரசன் அன்னையின் அழகால்
அறிவிழந்து அபலையை அபகரித்தான்.

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு
அட்டூழியங்களுக்கு அளவேயில்லை.
அயோத்தி அண்ணல் அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த
அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும் அனைவரும்
அரியை அடிபணிந்து அவனையே
அடைக்கலமாக அடைந்தனர். அவர்களில்
அருகதையுள்ள அன்பனை அரியணையில்
அரசனாக அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர்
அனைவரும் அவனியில் அங்குமிங்கும்
அலைந்தனர், அலசினர். அனுமன்
அலட்சியமாக அடியெடுத்து அளந்து
அக்கரையை அடைந்தான்.அசோகமரத்தின்
அடியில் அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடிபணிந்து அண்ணலின்
அடையாளமாக அக்கணையாழியை
அவளிடம் அளித்தான். அன்னை அனுபவித்த
அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.
அன்னையின் அன்பையும் அருளாசியையும்
அக்கணமே அடைந்த அனுமன் அடுத்து
அரக்கர்களை அலறடித்து அவர்களின்
அரண்களை அகந்தைகளை அடியோடு
அக்கினியால் அழித்த அனுமனின்
அட்டகாசம் அசாத்தியமான அதிசாகசம்.



அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி,அதிசயமான அணையை அமைத்து
அக்கரையை அடைந்தான்.அத்தசமுக
அரக்கனை அயனின் அஸ்திரத்தால் அமரில்
அழித்தான்.அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த
அன்னை அவள் அதியற்புதமாய் அண்ணலை
அடைந்தாள்..அன்னையுடன் அயோத்தி அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை
அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும்
அனுமன் அருளாலே. 
--------------------------------------------   









 


 

 

8 comments:

  1. 1. எல்லாவற்றையும் (சுந்தர்ஜி போன்றோரை உள்ளடக்கிய) நாடு கவனித்துக்கொண்டிருக்கிறது பாலு சார்.ஜாக்ரதை.:)

    அடுத்ததான அவ்விரண்டும் அட்டகாசம் அசாத்தியமான அதிசாகசம்.அயர்ந்தே அமர்ந்தேன். அளியுங்கள் அன்பை அம்மகனிடம்.

    ReplyDelete
  2. முதல் பதிவை ஆங்கிலத்தில் படித்ததாக ஞாபகம், விரசமில்லா தமிழாக்கம் வியப்பைத் தருகிறது.அடுத்தது,தாய்மொழி மறந்த மாதர்க்கு நடு மண்டையில் நச்சென்ற குட்டு. இறுதியாக,அகர விளையாட்டு அசர வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நாட்டு நடப்பு, தமிழா தமிழா, அட்சர ராமாயணம் என அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தமிழர்களிடம் மறக்காமல் சொல்
    உன் மொழி தமிழென்று.

    ஆம். நினைவூட்டுதல்தான் இன்றைய தேவை

    ReplyDelete
  5. மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
    அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
    “முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
    காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
    பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
    முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.”

    அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமன் அருளாலே

    .என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்றுமொழி பேசும் தமிழர்களிடம் மறக்காமல் சொல் உன் மொழி.தமிழென்று.


    முத்தான மூன்று பதிவுகளை
    ஒன்றாகக் கொடுத்து அசத்தியமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அரசியலும் தமிழும் அட்டகாசம்!

    ReplyDelete