Tuesday, March 18, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு .?


                                      உங்கள் ஓட்டு யாருக்கு .?
                                     ------------------------------------




உங்கள் பொன்னான ஓட்டு யாருக்கு.?
அரசியல் என்பது ஒரு சாக்கடையாய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சாக்கடை என்று சொல்லும் நாம் அதை சுத்திகரிக்க ஏதேனும் செய்கிறோமா என்னும் கேள்வி மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அரசியலுக்கு நாம் செய்வதெல்லாம் தேர்தல் வரும் காலத்தில் ஓட்டுச் சாவடிக்குச் சென்று நம் வாக்கைப் பதிவு  செய்வதுதான். அரசியலைக் குறை கூறும் நம்மில் பலரும் அதையும் செய்வதில்லை. மொத்தமாக 60% ஓட்டுப் பதிவாகிவிட்டால்மகிழ்ச்சி காட்டுகிறார்கள். இப்படி ஓட்டுப் பதிவு செய்யாத 40% மக்கள் அரசியல் பற்றிக்குறை கூறுவதில் முன்னில் நிற்கிறார்கள். அல்லது தவிர்க்கப் பட முடியாதது அனுபவிக்கப் படவேண்டும் என்னும் ஸ்திதப் பிரக்ஞை உள்ளவர்களாகக் கருதப் படுகிறார்கள்
வாக்குப் பதிவு செய்த 60% ஓட்டில் பெரும்பான்மை பெற்றவர்கள் பதிவான ஓட்டுக்களில் அநேகமாக 35% வாக்குகளுக்குள் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆக எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் மொத்த வாக்காளர்களின் பெரும்பான்மை ஒப்புதல் பெற்ற வரல்ல என்பதே நிதர்சனம் இவ்வளவையும் நான் எழுதுவதே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பவர்கள் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை பெற்றவர்களலல, என்று குறிப்பிடவே.
இப்படி பெரும்பானமை இல்லாதவர்கள் சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்கள் ஒரு கட்சிக்கு உகந்தது என்று படுவது இன்னொரு கட்சிக்கு உடன்பாடில்லை எதிர்க் கட்சிகளோ எதிரிக்கட்சிகளாகவே இருக்கிறார்கள். இந்நிலையிலும் பல நலத் திட்டங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒரு சில துளிகளே மக்களைச் சென்றடைகிறது வலைத் தளத்தில் இருக்கும் பதிவர்கள் நம்நாட்டு எலைட் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனலாம் நன்கு படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள் இவர்களில் எத்தனை பேருக்கு அரசின் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கிறது என்று நெஞ்சில் கை வைத்துச் சொன்னால் பல விஷயங்கள் பற்றி தெரிந்திருக்காது. அது அவர்கள் குற்றமல்ல. சாதாரண பொதுமக்களுக்கு பல விஷயங்கள் சென்றடைவதில்லை. பரவலாகப் பேசப் பட்டும் உபயோகப்படுத்தப்பட்டும் வரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆண்டில் குறைந்தது நூறு நாட்களாவது ஊதியம் கிடைக்கச் செய்யும் NREGS படிப்புக்கு உறுதி அளிக்கும் RTE, உணவுக்கு உறுதி அளிக்கும் சட்டம் இது போன்ற சிலதே அரைகுறையாய் தெரிந்திருக்கிறது
தேர்தல் காலங்களில் கட்சிகள் கூறும் உறுதி அறிக்கைகள் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும் உதாரணமாக எல்லோருக்கும் கல்வி அளிப்போம் என்று உறுதி அளிப்பதாக அறிக்கையில் வாக்குறுதி இருக்கும். அதை எவ்வாறு செயல் படுத்தப் போகிறார்கள், அதற்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து எவ்வளவு என்பன போன்ற விஷயங்கள் இருக்காது. (இருந்தால் மட்டும் எல்லோருக்கும் எல்லாம் விளங்கி விடப் போகிறதா என்ன.?) ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு என்று இருப்பதும் அதை மாநில அரசு குறிப்பிட்ட நலனுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சாமானிய மனிதனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்
இன்னொரு விஷயம் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்களின் உதவி இல்லாமல் ஊழலில் ஈடுபட முடியுமா.?கட்சிகள் பதவிக்கு வந்தால் இன்னதை இவ்வாறு செய்வோம் என்று கூறுகிறார்கள். அரசியல் வாதிகளில் செயல்முறைபற்றி எத்தனை பேருக்குத் தெரியும்கட்சிகள் செய்ய விரும்புவதை செய்து கொடுப்பது அரசு அதிகாரிகளும் ஊழியர்களும்தானே. முதுகெலும்பில்லாத அரசு அதிகாரிகளை அரசியல் வாதிகள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது நம்பமுடியவில்லை. அரசியல்வாதிக்கு அடிவருடும் அரசு ஊழியரே ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும்  மூல காரணம் அரசியல் கட்டுமானமே அரசு (govt)  அதிகாரிகள் ( (executives)  நீதி( judiciary) ஆகிய மூன்று தூண்களால் தாங்கப்படுகிறது இந்தமுறை நன்றாக செயல் பட்டால் ஒன்றுக்கொன்று  check ஆக இருக்கும். ஆனால் நடைமுறையில் அரசும் அதிகார்களும் கை கோர்க்க நீதித்துறை அவ்வப்போது check வைக்கிறது
In spite of all these things  நாம் முன்னேறவில்லையா.? என்ன...... எதிர்பார்ப்புகள் கூடி இருக்கிறது தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. நம்மை நாம் மேலை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏமாறமடைகிறோம் என் வாழ்விலேயே நாம் அபரிமிதமான அளவுக்கு முன்னேறி இருப்பது கண்கூடாகத் தெரிகிறது நான் பள்ளியில் படிக்கும் போது காலணி என்று ஏதும் அணிந்த்தது கிடையாதுஅந்தக் காலத்தில் ஜப்பானியரின் பேனாக்கள் சலிசான விலைக்குக் கிடைக்கும். ஆனால் தரம் என்பதே இருக்காது.கட்டைப் பேனாவும் இங்க் பாட்டிலும்தான் எழுத உபயோகித்தது.என் பிள்ளைகள் அதைவிட வசதியாக வளர்ந்தார்கள் காரும் பைக்கும் தொலைக்காட்சியும் அண்மைய பிரவேசிகளே. இன்று என் மக்கள் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள் தகவல் தொழில் நுட்ப உதவியால் யாரையும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ள முடிகிறது மாநகரங்களுக்கு இடையேயான தூரத்தை எளிதில் கடக்கவும் சொகுசாக பிரயாணம் அமையவும் தேசிய நெடுஞ்சாலைகள்  முன்னேற்றமில்லையா.? மூன்றாம் தலை முறை இன்னும் நிறையவே முன்னேறும்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மக்கட்த்தொகை 40 கோடிக்கும் கீழே இருந்தது இன்று அதைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது சராசரி வயது சுமார் நாற்பதிலிருந்து அறுபத்தைந்தாகி இருக்கிறது . இத்தனையும் நலத் திட்டங்கள் நடந்ததால்தானே சாத்தியமாயிற்று, இத்தனை மக்களுக்கும் உணவு வழங்க வேண்டிய வேளாண்குடி மக்கள் இடம்பெயர்கிறார்கள். விளை நிலமும் சுருங்கிக்கொண்டே வருகிறது
எனக்குத் தெரிந்தே இந்தக் கணினி செயல்பாடுகளுக்கு வெகுவாகவே எதிர்ப்பு இருந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் என்றெல்லாம் பயமுறுத்தப் பட்டோம் அதையும் மீறி தகவல் தொழில் நுட்பங்களை அரசு கொண்டுவந்தது என்றால் அப்போது மக்களுக்கு நல்லது செய்ய அரசுக்கு பெரும்பான்மை பலமிருந்தது. இப்போது எல்லாமே தலை கீழ். இப்போதோ ஒரு திரைப் படத்தில் வரும் வசனம் போல் ‘ஆளுக்கொரு கட்சி அவனவனுக்கு ஒரு பட்டாளம் தானும் முன்னேறாது பிறரையும் முன்னேற விடாது/ இது காலத்தின் கோலம் இதிலடங்கியே நம் வாழ்வு இருக்கிறது
இப்போது அரசு என்றாலோ அதிகாரி என்றாலோ ஊழலின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது அப்படி ஒரு PERCEPTION நாம் அறியாமலேயே ஏற்பட்டு விட்டது ஆங்காங்கே எக்செப்ஷன்ஸ் இருக்கலாம்  இந்த நிலையில் தேர்தலில் நாம் ஓட்டுப் போட வேண்டியவர்களாக இருக்கிறோம். யாருக்கு நம் ஒட்டு ?அரசியல் கட்சிகள் பற்றி நாம் அறிவதெல்லாம் அவர்கள் குறிக்கோள்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்மில் சாதி மத இன வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒன்றே என்னும் கொள்கை உடையவர்களுக்கு நாம் ஒட்டு .மத(ட)வாதப் பிரிவினைச் சக்திகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் ஏழையைப் பணக்காரனாக்கும் கொள்கை உடையவர்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்பணக்காரனை ஏழை ஆக்கும் சமதர்மம் சரியாகாது. அரசியல் பூசல் மற்றும் சுய மேம்பாட்டுக்காக கட்சி துவங்கி அரசியலில் ஆதாயம் காண்பவரை ஒதுக்க வேண்டும் திரைப்படத்துறையில் பெயர் பெற்றவர்கள் அந்தப் பெயரை மூலதனமாக்கி அரசியல் செய்வதையும் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் அரசியலில் நாம் கொண்டுள்ளஎண்ணங்கள் எல்லாம் பெரும்பானமை அனுமானங்களாலும் மீடியாக்கள் எடுத்துக்காட்டும் நிகழ்வுகளின் PERCEPTION –ஆல் உண்டானதும்தான். அதுவும் படித்து வேலையிலிருக்கும் நடுத்தர மக்கள் ஏதோ அலை அடிப்பதாக நம்பி உண்மை நிலையினை கவனிக்கத் தவறுகிறார்கள் இந்தியா சுமார் 115 கோடி மக்கள் தொகை கொண்டது விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மாநகர மக்களை விட கிராமப் புற மக்களுக்கும் ஒரு PERCEPTION  அல்லது அனுமானம் உண்டு,.அவர்களும் ஓசைப்படாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்
எந்த அரசியல் கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் இன்னதை இன்னமாதிரி செய்வோம் என்கிறார்களா. ஒருவரை ஒருவர் தூற்றுவதுதான் இவர்களின் சாதனை இன்னொரு முறை நினைவு படுத்துகிறேன் நாம் ஒட்டுப் போடும்போது நமக்கு சரியென்று தோன்றுவதை எந்த அரசியல் கட்சி செய்து தருவோம் என்று கூறுகிறதோ அவர்களுக்கு ஒட்டுப் போடுவோம் சென்ற முறை அவர்களின் சாதனை என்ன நம்பிக்கைகுப் பாத்திரமானவர்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் அம்மாதிரி உறுதி அளிக்கும் கட்சியின் வேட்பாளர் நமக்கு இருக்கும் அனுமானங்களால் குறை உள்ளவரானால் நமக்கு பிரதிநிதியாக லாயக்கற்றவர் என்றால் நம் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடையாது நம் அரசியல் அமைப்புப்படி தனி மனிதனால் நாட்டை ஆளும் பணியில் எதையும் செய்ய முடியாது ஆகவே தனிப்பட்ட மனிதரை விடுத்து கட்சிக்கு ஓட்டு இடுவதே நல்லது என்கிறேன்


16 comments:


  1. //தனிப்பட்ட மனிதரை விடுத்து கட்சிக்கு ஓட்டு இடுவதே நல்லது என்கிறேன்.//

    உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  2. உலகில் எங்குமே சனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் வாக்களிப்பில் தான் அடங்கியுள்ளது. எனவே அதிகம் பேர் வாக்களிக்க முன்வர வேண்டும். அதைப்போலவே குறிப்பிட்ட ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை வழங்க முடிவெடுக்க வேண்டும் . தனி மனிதர்களை விட கட்சிகளே முக்கியம்.

    ReplyDelete
  3. சிறப்பான முடிவுகளைத் தாங்கி நிற்கும் அருமையான படைப்பு !
    மக்கள் ஓட்டுப் போடும் முன்பே அறிந்திருக்க வேண்டிய நற்
    செய்தி .முதுமையும் அனுபவமும் கற்றுத் தந்த பாடத்தை உள்
    வாங்கித் தாங்கள் எடுத்துக்கொண்ட முடிவே வரவேற்கத் தக்கது .
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  4. சனநாயகம் என்பதே பெரும்பான்மைதானே. எனவே வேட்பாளரைப் பற்றி என்னாமல், கட்சிக்காகத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்ற தங்களின் முடிவு ஏற்கத் தக்கதே ஐயா.

    ReplyDelete
  5. நியாயம் தான்!..
    தனிப்பட்ட மனிதரை விடுத்து கட்சிக்கு வாக்களிப்பதே நல்லது..

    ReplyDelete
  6. அருமையான பதிவு.

    //தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பவர்கள் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை பெற்றவர்களலல, // இதுவே உண்மை.

    இதனை மீதி ஜனநாயகம் என்று நான் கூறுவேன்.

    ReplyDelete
  7. அருமையான
    தெளிவான முடிவெடுக்கத் தூண்டும் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஆஹா நீங்களும் அரசியலை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். இப்படி அனுபவம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர இயலாவிட்டாலும் அதை ஆக்கபூர்வமாக விமர்சிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஆக்கபூர்வமான சிந்தனை மக்களிடையே பரப்ப முடியும். பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு பாடல் வரும் நால்வகை மதமும் நாப்பது கோடி மாந்தரும் வருகின்றார் என்ற வரியிலேயே அன்றைய மக்கள்தொகை நாற்பது கோடி என்று கோடிட்டு காட்டியிருப்பார் கண்ணதாசன். அது இன்று மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இன்று உலகிலுள்ள பல நாடுகளைக் காட்டிலும் பொருட்செல்வம் நம் நாட்டில் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கட்தொகையால்தான் நாம் இன்றும் பிந்தங்கியே உள்ளோம். ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இல்லாதே நாடே இல்லை எனலாம் அதாவது ஒரு சில ஐரோப்பிய நாடுகளை தவிர. ஆகவே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் மட்டுமே தடையாய் இருப்பதில்லை. மக்கள்தொகைதான் முக்கிய காரணம் என்பது என் கருத்து. இத்தகைய கட்டுரைகளை மாதம் ஒருமுறையாவது எழுதுங்கள்.

    ReplyDelete

  9. @ வே. நடனசபாபதி.
    தைப்பட்ட மனிதரை விடுத்துக் கட்சிக்கே ஓட்டுப்போடவேண்டும் / இந்தக் கருத்துடன் ஒரு RIDER -ம் சேர்க்க மறந்து விட்டது.எந்தக் கொள்கையும் இல்லாத அரசியல்வாதிகள் ஆதாயம் தேடி தேர்தல் நேரத்தில் கட்சி மாறி தேர்தலில் நிற்கிறார்கள் அல்லது நிறுத்தப்படுகிறார்கள். இவர்கள் எந்தக்கட்சியினராயினும் தூக்கி எறியப் பட வேண்டியவர்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

  10. @ செல்லப்பா யக்ஞஸாமி
    இங்கு polarized கட்சிகள் கிடையாது. இனம் மொழி சாதி என்று ஏகப்பட்ட பிரிவினைகளின் அடிப்படையில் கட்சிகள் காளான்கள் போல் முளைத்திருக்கிறது. மனிதனின் சில basic instincts ஐ குறிவைக்கின்றன. அவற்றுக்குள் சிக்காமல் சிந்திப்பதுஅவசியம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

  11. @ அம்பாளடியாள் வலைத்தளம்
    வாசகர்களின் பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  12. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ நண்டு@நொரண்டு
    / இதனை மீதி ஜனநாயகம் என்பேன்/ சொல்லாடல் ரசித்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  15. @ ரமணி
    வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete

  16. @ டி.பி.ஆர்.ஜோசப்
    என்னைப் பொறுத்தவரை பொதுவாக நம் மக்கள் சில jargans களைக் கேட்டு உண்மைஎன்று நம்பிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இந்த அலைகளையே எடுத்துக் கொள்ளுங்கள் மீடியாக்கள் சொல்வது அனைத்தும் வேத வாக்காக எடுத்துக் கொள்ளும் தற்கால படித்த இளைஞர்களுக்கு அதையும் தாண்டி உண்மை இருக்கிறது என்று புரிவதில்லை.நம் முன்னேற்றத்துக்கு வேகத்தடை நம் மக்கள் தொகை என்று பலருக்கும் புரிவதில்லை. வருகைக்கும் ஊக்கப் படுத்தும் பின்னூட்டத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete