வியாழன், 21 மார்ச், 2013

மன சாட்சி ( நாடகம் )-4







                                 மன சாட்சி ( நாடகம் )
               ---------------------

காட்சி-5          இடம் .:-சாலை
பாத்திரங்கள்.:-கனகசபை, நவகோடி, சபாபதி, பத்திரிக்கை நிருபர்.

( திரை உயருகிறது.கனகசபை, சபாபதி வர, எதிரே நவகோடி வேகமாகக் கடந்து போகிறார். )

கனகசபை.:- டேய்.. சபாபதி, .........இப்போ போனது நவகோடி தானேடா....
சபாபதி.:-  இன்னும் அரை ஃபர்லாங் போனப்புறம் கேளுங்க.. எதிர்ல வரும்போ போறதப்பார்த்தா எலியும் பூனையும் போல இருக்கிறது.எனக்கென்னன்னு இருந்துட்டேன். ....ஹும்...சரி... அவரைக் கூப்பிடவா ( கைதட்டி ) இந்தாங்க மிஸ்டர்..... உங்களைத்தானே... ..ஓஓ....அடடே... நவகோடி சார்....
கனகசபை.:- என்ன நவகோடி, ..பார்த்தும் பார்க்காமப் போறீங்க.
சபாபதி.:- ( மெள்ள ) கிட்டப் பார்வை போலிருக்கு.....
நவகோடி.:- அதெல்லாம் ஒண்ணுமில்லை. ..என்னவோ யோசனை...
கனகசபை.:- ரொம்ப பலமோ.?
நவகோடி.:- பின்னென்ன கனகசபை.....கேட்டியா அநியாயத்தை........
கனகசபை.:- என்ன விஷயம்...? பதறாமச் சொல்லு....
நவகோடி.:- ஹூம்.....! நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.... கேட்கிற வழியைக் காணோம்....நான் எவ்வளவு பாடுபட்டுச் சேர்த்தது...ஹும்....
கனகசபை.:- என்ன நவகோடி... விஷயத்தைச் சொல்லாமல்.....
நவகோடி.:_ என்ன அநியாயமிது... என் பெண்ணு நவநீதம் கல்யாணம் செய்துக்குவேங்குது.....!
சபாபதி.:- அடிரா சக்கைன்னானாம். ...ரொம்பப் பொல்லாத ஆசையாயிருக்கே...
கனகசபை.:-என்னைய்யா இது... பொண்ணா பொறந்தா கல்யாணம் செய்துக்கறதுதானே லட்சணம்.

சபாபதி.:- இதுல மட்டும் கொறச்சலில்லை...ஏன் ஆணாப் பொறந்தாக் கல்யாணம் செய்துக்கறது லட்சணமில்லையா..?
கனகசபை.:- அதெல்லாம் லட்சணமானவங்களுக்கடா....
நவகோடி.:- என்னைய்யா இது ... விஷயம் தெரியாம என்னென்னவோ பேசிட்டிருக்கீங்களே.. நவநீதத்தைத் தவிர வேறு வாரிசே எனக்குக் கிடையாதே....அதைக் கட்டிக் கொடுத்திட்டா..என் சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கில்ல போயிடும். ..
சபாபதி.:- அப்பா... எனக்கு ஒரு ப்ரில்லியண்ட் ஐடியா... அப்படிச் செஞ்சா என்ன...?
கனகசபை.:- எப்படி.?
சபாபதி.:- நானே நவநீதத்தைக் கட்டிக்கிட்டா அவரு சொத்து நம்ம சொத்து எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும்.
கனகசபை.:- நல்ல யோசனைதான்....... அப்ப ஷீலாவோட சொத்து....?
சபாபதி.:- அதுவும் நமக்குத்தான். நானே அவளையும் கல்யாணம் செய்துக்கறேன்.
கனகசபை. :-டேய்..... டேய்.....சொத்துக்காக எவ்வளவு கல்யாணம்டா செய்துக்குவே......சட்டத்துல பைகாமி. பாலிகாமி எல்லாம் நாட் பெர்மிட்டெட்.பலதாரச் சட்டம் இங்கே கிடையாது...
சபாபதி.:- நவகோடி சார்... எங்க அப்பாவுக்கு ஒலகமே தெரியலை. அப்பா... புருஷன்னா தெய்வம் ஆச்சே பாரதப் பெண்களுக்கு. ..!எந்தப் பெண்டாட்டி புருஷன் பேர்ல கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்புவா,.? என்ன மிஸ்டர் நவகோடி, நான் சொல்றது சரிதானே. ..?
கனகசபை.:-டேய்..டேய்..டேய்...என்னடா இது...மிஸ்டர் நவகோடி சிவகோடின்னுட்டு... ஹாங்.....மாமான்னு கூப்பிடு...
சபாபதி.:-போங்கப்பா.... எனக்கு வெக்கமா இருக்கு....
நவகோடி.:- அதனாலென்ன... பரவாயில்லை... பரவாயில்லை....
சபாபதி.:- அப்போ... ஹையா... எனக்கு ரெண்டு கல்யாணம்னு தீர்மானம் ஆயிடுச்சு. ..அப்பா.... மேரேஜுக்கு முந்தி இந்த ரோட்டிலெ பாதியை அடமானத்திலிருந்து மீட்கணும். !
கனகசபை.:- என்ன சொல்றெ நீ.....
சபாபதி.:- இல்லேப்பா....வந்து...எனக்கு அந்தக் கடையில கொஞ்சம் பத்து வரவு.......கடன் கொஞ்சம் ஜாஸ்தியானபோது, இந்த ரோட்டிலெ பாதியை அடமானம் வெச்சேன். அந்தப் பாதி ரோட்டை இப்ப நான் யூஸ் பண்றதேயில்லையே.......இப்ப அந்தக் கடனைத் தீர்க்கணும்.....நவநீதம் மூலமா.....நவகோடி மாமாகிட்டெயிருந்து கொஞ்சம்......
நவகோடி.:-அதுதான் நம்ம நவநீதத்துக்கிட்ட நடக்காது. அது உன்னைக் கொண்டுபோய் ஜவுளிக் கடையிலெ அடமானம் வெச்சிட்டு கடையையே வீட்டுக்குக் கொண்டு வந்திடுவா......என்ன  கனகசபை.....
கனகசபை.:- என்னடா இது.... சம்பந்தி விஷயம் தெரியாதவராயிருக்கார்.... சொல்லுடா.. அவர்கிட்ட.....சம்பந்தம் பண்ணிக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் நேருக்கு நேரா பேசிக்கிற வழக்கம் இல்லைன்னு..சொல்லுடா அவர்கிட்ட...
சபாபதி.:- அட ...ஆண்டவனே.....மாப்பிள்ளைக்கே தரகு வேலையா....?
நவகோடி.:- ஆமா... மாப்பிள்ளை...! அதை நான் மறந்துட்டேன். ... இதப் பாருங்க ....கல்யாணம்னு நிச்சயம் ஆயிட்ட பிறகு சட்டுப் புட்டுன்னு லௌகீக காரியங்களை முடிக்கணும். நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களோடதுன்னு உங்கப்பாகிட்ட சொல்லுங்க மாப்பிள்ளை.
சபாபதி.:- அப்பா.... நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போறக் கல்யாணச் செலவு உங்களோடதாம்... ஹாங்...இல்லேப்பா... நவநீதத்துக்கும் எனக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களுடையது...
கனகசபை.:- என்னது.....?
சபாபதி.:- நான் சொல்லலை. இவர் சொன்னாரப்பா.....
கனகசபை.:- ஊம்ம்ம்ம்....மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது.புதுசா கார் வாங்கற செலவு பெண் வீட்டாருதுன்னு உங்க மாமனார்கிட்ட சொல்லுடா மகனே. ..
சபாபதி.:- போங்கப்பா.... மாமனார்ட்ட பேசணும்னா மாப்பிள்ளைக்கு வெக்கமா இருக்காதா.....
கனகசபை.:- அடப் படவா ராஸ்கல்... சொல்லுடான்னா......
சபாபதி.:-மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது. புதுசாக் கார் வாங்கற செலவு பெண்வீட்டாருடையது... அப்பா சொன்னார்..
நவகோடி.:- கலியாணச் செலவை வேணுன்னா நான் ஏத்துக்கறேன். கார் வாங்கற செலவு மாப்பிள்ளை வீட்டாருடையது....ஆம்   மாம்..!
கனகசபை.:- அதுதான் நடக்காது. ...
நவகோடி.:- நடக்காதா...?
கனகசபை..:- நடக்குமா... ?
சபாபதி.:- கல்யாணத்துல ஒரு ஐட்டம் சம்பந்திச் சண்டை ... ஆரம்பமாயிடுச்சு ஆமா... சண்டை வந்தா மட்டும் சம்பந்திகள் நேருக்கு நேர் பேசிக்குவாங்க போலிருக்கு.
நவகோடி.:- நடக்குமா நடக்காதான்னு நான் பார்த்துடறேன்..நீ  வா... மாப்பிள்ளை.
கனகசபை.:- போயிடுவியாடா நீ...( என்று இருவரும் சபாபதியை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க)
சபாபதி.:-கை...கை...கை..அப்பா ....மாமா....கை....என்னோட கை...( அப்போது அங்கு ஓடிவரும் )
பத்திரிக்கை நிருபர்.:-என்னையா இது.... நடுரோட்டிலெ யுத்தம்..... நீங்க யாரு.... உங்க பேரு.....?
நவகோடி.:-ஐயா...ஐ..நா.. சபைப் பார்வையாளரா....?

ப.நிருபர்.:- சேச்சே.... நிமிஷக் கொலைநிருபர் நான். எங்கெங்கே வாலிபர்களைப் பருவப் பெண்கள் ‘ கும், கும்னுகுத்தறாங்களோ.எங்கெங்கே குடிகாரர்கள் சினிமாப் பாட்டைப் பாடி கலாட்டா செய்யறாங்களோ எங்கெங்கே கொலைகார மாப்பிள்ளைகள் மாமனார்களை சதக், சதக்னு குத்தறாங்களோ அங்கெல்லாம் நான் காட்சி அளிப்பேன். பெர்மநெண்ட் அட்ரஸ் c/o  கோர்ட். இந்த நடுரோட்டு யுத்தத்துக்கான காரணங்களைச் சொல்றீங்களா....?
சபாபதி.:-எழுதிக்குங்க சார்...மகனுக்கும் மகளுக்கும் நடக்கப் போற கல்யாணத்தை பற்றி சம்பந்திகள் நடுத்தெரு சண்டை. தாலி கட்டப்போகும் மாப்பிள்ளை கைகளை ஆளுக்கொன்றாகப் பிய்த்தெடுத்த கோரம்.... அந்தோ பரிதாபம்....
கனகசபை.:- ஆமாண்டா........மெனக்கெட்டு எல்லாத்தையும் புட்டுப் உட்டுச் சொல்லு. சம்பந்திகள் இன்னைக்கு அடிச்சுக்குவாங்க  நாளைக்குக் கூடிப்பாங்க..... என்ன... நவகோடி....?
நவகோடி.:- நாளைக்கென்ன.... இன்னிக்கே கூடிக்குவோம்....வாங்க.....
சபாபதி.”-உங்களுக்கு என் அனுதாபம் சார்.. .. இன்னும் எப்பவாவது சண்டை வந்தா உங்களுக்குத் தெரிவிகிறேன்.......வரேன் சார்....வணக்கம் போடக்கூட கையைத் தூக்க முடியலியே......!
  
                        ( திரை )                   ( தொடரும் ).  
 

 
 ...

செவ்வாய், 19 மார்ச், 2013

கணவன் மனைவிகள்.



                                       கணவன் மனைவிகள்..
                                       ---------------------------------
பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம், பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும், என்பது போன்றபதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்தத் தொடர்ச்சியில்  கணவன் மனைவிகள் என்று இப்போது படித்த சிலவற்றைப் பகிர்கிறேன். All in lighter vein.!  



மனைவி..:-மணலில் உன் பெயர் எழுதினேன்
          கடலலையில் கரைந்து மறைந்தது.
          காற்றில் உன்பெயரை எழுதினேன்
          புயலில் அது காணாமல் போய்விட்டது.
          பிறகென் இதயத்தில் அதை எழுதினேன்
          எனக்கு இதய வலியே மிஞ்சியது. !( ஹார்ட் அட்டாக்)

கணவன்..:_ பசியில் இருந்தேன் கடவுள் பிஜ்ஜா படைத்தார்.
           தாகத்தில் இருந்தேன் கடவுள் பெப்ஸி படைத்தார்.
           இருளில் இருந்தேன் கடவுள் ஒளியைப் படைத்தார்.
           சோதனை. வேதனை ஏதுமின்றி இருந்தேன்
           கடவுள் உன்னைப் படைத்தார்.
                    --------------

கணவன்.:- மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது.
           புல்லிற்கும் பூவுக்கும் புத்தொளி தருகிறது.
           மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது
           உன் மேல் மட்டும் மழை ஏன் பெய்வதில்லை. 
                  ----------------  


கணவன் ஒரு குடும்பத்தின் தலைவன் என்றால்.
மனைவி என்பவள் அவனது கழுத்து.
அது திரும்பும் திசை நோக்கியே அவன் செல்வான்
                ---------------------

நரகத்தில் இருந்து ஒருவன் அவனது மனைவியை தொலை பேசியில் அழைக்க சாத்தானிடம் அனுமதி கேட்டான். பேசிமுடித்தவுடன். எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டான். நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் பேச காசில்லை. ஃப்ரீ என்றது சாத்தான்.
                 ---------------------------

மனைவி.:- நான் ஒரு நாளிதழாக இருந்தால் எப்போதும் உன் கையில்
           இருக்கலாமே.
கணவன்.:- நானும் அதை விரும்புவேன். தினமும் புதிதாய்க் கிடைக்குமே.
                    ---------------------------
மருத்துவர்.:- உங்கள் கணவருக்கு ஓய்வும்  அமைதியும் தேவை.இதோ சில தூக்க மாத்திரைகள்.
மனைவி.:- இதை அவருக்கு எப்போது கொடுக்க வேண்டும்.?
மருத்துவர்.:- இவை அவருக்கல்ல. உங்களுக்கு
                     -----------------------

மனைவி.:- நீங்கள் எந்த அளவு முட்டாள் என்று தெரிந்து கொள்ள உங்களைத்
           திருமணம் செய்ய வேண்டி இருந்தது.
கணவன்.:- நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டபோதே  
           தெரிந்து இருக்க வேண்டுமே.
                   ----------------------------

மனைவி.:- நான் எவரெஸ்டின் உச்சியில் ஏறினால் என்ன தருவாய்.?
கணவன்..:- அங்கிருந்து ஒரே தள்ளு.
                       --------------------



Husband
: Do you know the meaning of WIFE?
It means, Without Information, Fighting Everytime!
Wife
: No darling, it means - With Idiot For Ever
 
                        --------------  


 

.
 

 



 

 



                             

ஞாயிறு, 17 மார்ச், 2013

மன சாட்சி ( நாடகம் )-3






                                 மன சாட்சி ( நாடகம்.)
            ----------------------
காட்சி-4 இடம்:-ஷீலா வீடு.
பாத்திரங்கள்:-ரவி, ஷீலா, சபாபதி, கனகசபை, நவகோடி.
ஷீலா:- இவ்வளவு நேரமா என்னைப் பத்தி உங்களுக்குச் சொல்லிட்டேன்.நான் ஒரு விதத்தில அனாதை. தாய் தந்தையின் அரவணைப்பும் அன்பும் ஆதரவும் தெரியாம வளர்ந்திட்டேன். இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களும் தெரியாமத்தான் வளர்ந்திட்டேன். தட்டிக் கேட்க ஆளில்லை. என் தலைவிதியையும் நானேதான் நிர்ணயிக்க வேண்டும். நான் மேஜரானதும் என் சொத்துக்கள் எல்லாம் என் கைக்கு வரவேண்டும்.எனக்கும் 18-/ வயது முடிந்துவிட்டது. என்னென்னவோ சொல்லிட்டுப் போகிறேன் பார்த்திர்ர்களா.? எனக்கு உங்களைப் பார்த்தவுடன் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிற மாதிரி இருக்கு. சொல்ல வந்ததைக் கோர்வையாச் சொல்லவும் முடியலெ.என் மனசு தடுமாறுது ரவி.

ரவி.:_ ஷீலா... என்ன இது... control yourself.பெண்களுக்கு முக்கியமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியணும். உன்னைப் பற்றியெல்லாம் சொல்லிட்டெ . என்னைப் பற்றி நான் உனக்குச் சொல்லித் தெரியறதைவிட சொல்லாமலேயே புரிய வேண்டியது அதிகம்., முக்கியம்....புதிர் மாதிரி இருக்கு இல்லையா. என் வாழ்க்கையே புதிராயிடுமோன்னு எவ்வளவு முறை சஞ்சலப் படறேன் தெரியுமா.?
ஷீலா.:- ரவி.. உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையால் வடிவம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் காய்ந்து போன சருகு மாதிரி மனமும் உள்ளப் புயலில் அல்லல்படும் ரவி...மாற்றங்கள் மாறி மாறி வரும் நிகழ்ச்சி நிரலின் மறு பெயர்தான் வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன. ?Please cheer up..!
ரவி.:-ஆமா ஷீலா...நீ சொல்றதிலயும் உண்மை இருக்கு. எனக்கு ஆதரவு காட்டவும் உலகத்திலெ ஒருத்தி இருக்கான்னு எண்ணும்போது கொஞ்சம் தெம்பாத்தான் இருக்கு.
ஷீலா.:- தெம்பாத்தான் இருக்குன்னு வார்த்தையிலெ சொல்றீங்களே தவிர முகத்திலெ தெளிவைக் காணோமே. .ஹூம்,.! அது சரி ரவி, நம் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க. ....?
ரவி.:- ஹாங்......! திருமணமா..? நம்ம திருமணமா ,,,, ஹாங்... ஷீலா  வந்து.....நாம் திருமணம்செய்து கொண்டு ஆக வேண்டியதுதான் என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.( கனகசபை, சபாபதி வருகை )
கனக.:- யார் சொன்னது..? ஆண்டவனின் அருளாலே இஷ்ட மித்ர பந்துக்களாலும் , பெரியவங்க ஆசிர்வாதத்தினாலையும் அல்லவா திருமணங்கள் நிச்சயிக்கப் படுது.
நவகோடி.:- ( வந்துகொண்டே )அந்தப் பெரியவங்க இடத்திலெ நானும்  இருந்தாத்தானே பூர்த்தியடையும்.
கனக.:_( சபாபதியிடம் )பார்த்தியா.... மனுஷனுக்கு மூக்கிலெ வேர்க்குது.மோப்பம் பிடிச்சு வந்துட்டான்.
ஷீலா.:- நீங்க யாரும் எதுக்கு வந்தாலும் சரி, நானே உங்களைப் பார்க்ணும்னுதான் இருந்தேன். . உயிலைப் பத்திய எல்லா விஷயங்களும் எனக்குத் தெரிஞ்சாகணும்.
சபாபதி.:- உயில்....!அது உங்கப்பா சாகறப்போ எழுதியது.அது கைக்கு வரதுக்கு முன்னாலெ எங்கப்பா பாரதம் படிப்பாரு. நவகோடி அவர்கள் பகவத் கீதா படிப்பாரு. உயில் கைக்கு வந்ததிலிருந்துரெண்டு பேரும் உயில் பாராயணம் பண்றாங்க
நவகோடி.:- இல்லேன்னா இவ்வளவு நாளா இவ்வளவு சீரா நிர்வகிக்க முடியுமா.?

கனக.:- முடியாது... போகட்டும் .அந்தப் பொறுப்பு கஷ்டம் எல்லாம் உனக்கு மெதுவா தெரியட்டும். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.
ஷீலா.:- எனக்கு வயசு பதினெட்டு ஆச்சு. அது முடிஞ்சுஒரு வாரம் ஆச்சு மாமா..... உங்களைத்தான் மாமா.........!
கனக.:- ஹாங்....... என்னையா ஷீலா மாமான்னு கூப்பிட்டே.... டேய்...சபாபதி...ஷீலா என்னை மாமான்னு கூப்பிடுதுடா.....!
சபாபதி.:- கவனிச்சேன்...கவனிச்சேன்.....
நவகோடி.:- வயசில பெரியவங்களெ மாமான்னு கூப்பிடறது சகஜந்தானே....
கனக.:- அப்படீன்னா உன்னை ஏன்யா கூப்பிடலை.?
நவகோடி.:- ஐய்ய.... உங்க வீட்டு மருமகளா வரப் போறோமேன்னு உன்னை மாமான்னு கூப்பிடுது....!
சபாபதி.:-அமைதி....அமைதி..... பிள்ளையும் பெண்ணும் நாங்க இருக்கும்போது எங்கள் கல்யாணத்தைப் பற்றி நீங்க ஏன் சண்டை போடறீங்க.....ஹூம்..?என்ன ஷீலா... எப்படிப் போட்டேன் ஒரு போடு பார்த்தியா.....

ஷிலா.:- கல்யாணம் .. கல்யாணம்...எப்போக் கல்யாணம் பண்ணிக்கணும் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்.நான் மேஜராயிட்டேன். சொத்து என் கைக்கு வந்தாகணும். நல்லதுகெட்டது எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். ....
நவகோடி.:- ஷீலா... நீச்சல் தெரிஞசவங்களைக் கூட வெள்ளம் அடிச்சிட்டுப் போயிடும். உதாரணமா என்னையே கட் பண்ணி டௌன் பண்ணப் பாக்கறாங்களே.
ஷீலா.:- என் சொத்தை யாரும் அடிச்சிட்டுப் போக முடியாதுன்னு நான் சொல்றேன்.
சபாபதி.:- உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை அவருதுன்னு அப்பா நெனைக்கிறார்.
கனக.:- சொத்தை, உன் கலியாண்ம் ஆகி , மாப்பிள்ளைகிட்ட ஒப்படைக்கணும்னு.நான் நெனைக்கிறேன்.
ஷீலா.:- நான் கல்யாணமே செய்துக்கலைன்னா..

கனக.:- அப்ப நான் நெனைச்சாலும் உன் சொத்தை உங்கிட்ட ஒப்படைக்க முடியாது.....
ஷீலா.:- But  why….?ஏன்...?
சபாபதி.:- உனக்கு கல்யாணம் ஆனப் புறம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்காரே... அட.... சொல்லுங்கப்பா........
கனக.:- உங்கப்பா என்ன சாமானியமா.? அவர் திரிகாலமுணர்ந்த ஞானி..! அவருக்கு தலையிலெ மட்டுமா மூளை.? உடம்பெல்லாம் மூளை....! இல்லேன்னா இப்படி ஒரு உயிலை எழுதுவாரா...
ஷீலா.:-பாத்தீங்களா ரவி... பாத்தீங்களா.... என்னை என்னென்னவோ சொல்லிக் குழப்பப் பார்க்கறாங்களே.
நவகோடி.:- ஏம்மா பதர்றே... ஒரு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... எல்லோரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறாதே. அதுதான் நான் சொல்லுவேன்.... நான் வரேன்.( போகிறார்.)
கனக.:-ஷீலா......! யோசிக்காதே...எல்லாம் நல்லதுக்குத்தான்.
சபாபதி.:- நானிருக்கப் தயக்கமேன் ஷீலா.

ஷீலா.:- ஊம்ம்ம்ம்.....!( கனகசபை சபாபதி போகிறார்கள்) ரவி... ரவி.... இங்கே நடந்த இவ்வளவையும் பார்த்திட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்களே. எனக்குத் தெரியும் யூ டோண்ட் லவ் மீ..!நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்பீங்க இல்லை.....!.
ரவி.:- ஓ...நோ....ஷீலா.! நீ தவறாக நினைக்கிறெ. கல்யாணம் என்பது உனக்கு சொத்தை அடைய மட்டும்தானா...? வாழ்க்கைப் பிரச்சனை அல்லவா.? இதில் நம் இருவர் கருத்தும் ஒன்றாக இணைய வேண்டாமா.?
ஷீலா.:- நீங்க சொல்றத கொஞ்சம் விளக்கமாச் சொல்லக் கூடாதா. ?

ரவி.:- நாம் எதற்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.? களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா.? நான் சொல்றேன் ஷீலா.... திருமணம் என்பது ஒரு லைசென்ஸ். கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக வெறியை , உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம் வழங்கும் ஒரு பெர்மிட். அது இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே மனித நிலையிலிருந்து மாறுகிறோம். நாம் பாபிகளாகிறோம். அது இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.?
ஷீலா.:- ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். ரவி..!ஆனால் கண்ணிறைந்த புருஷனுடன்நீங்கள் கூறுகின்ற திருமண லைசென்ஸ் பெற்று கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன். அதைப் பாவச்செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்துக்கே விரோதமான பேச்சு.

ரவி.:- ஷீலா...ஷீலா... புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே..திருமணம் செய்யற முக்கிய நோக்கமே இருவருக்கும் உள்ள பரஸ்பர அன்பை, ஊருலகத்துக்குத் தெரியப் படுத்தணுங்கறதுக்கு மட்டும்தானா....
ஷீலா.:- ஆண்டவா.... இதைப் புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா உங்களுக்கு. சரியான ட்யூப் லைட்தான்.
ரவி.:- தமாஷ் பண்ற காரியமில்லை இது ஷீலா. திருமணங்கறது ஆயிரங் காலத்துப் பயிர். அதைப் பத்தி எத்தனையோபேர் என்னவெல்லாமோ வியாக்கியானம் பண்ணி இருக்காங்க. ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. பின்னால் வருந்தக் கூடாது. ..
 ஷீலா.:- இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பெஸ்ஸிமிஸ்டை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை. ரவி, உங்களுக்கு என் மேல அன்பிருக்கு இல்லையா.?
ரவி.:- இருக்கு...
ஷீலா.:- என் காதல்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.?
ரவி.:- இருக்கு ஷீலா.... இருந்தாலும்.....
ஷீலா.:- Then the matter is settled. அன்பிற்காகவே நடக்கும் திருமணம் இது. என் சொத்தை அடையறதுக்கு மட்டும்னு தயவு செய்து நினைக்காதீங்க,. உயில்ல இருக்கிற சொத்தை அடையறதுக்கு மட்டும்னா அந்தக் காலி சபாபதிக்கே கழுத்தை நீட்ட மாட்டேனா......! என் அன்பிலே இன்னுமா சந்தேகம் ரவி.
ரவி.:- இல்லை ஷீலா.....!எதுக்கும் பின்னாலே நீ வருத்தப் படக் கூடாதேன்னுதான் அவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கேன். கொஞ்சம் முன்னாலெ சொன்னியே , உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கணும், இல்லேன்னா உணர்ச்சிகள் வாடி வதங்கி சருகாயிடும்னு அந்த மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் என்னால் உருவம் கொடுக்க முடிஞ்சா......... ஹூம்.....! That is just not possible. ..! ஷீலா.. என் வாழ்க்கையிலும் ஒரு பெண், அதுவும் உன்னை மாதிரி அழகான அறிவுள்ள
பெண் குறுக்கிட முடியும்னு நான் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. (ஷீலா ரவியைக் கிள்ளுகிறாள்.) ஆஅவ்வ்... என்ன ஷீலா இது..?
ஷீலா.: -நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும். ரவி.... நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.?
ரவி.:- That which can not be cured must be endured. முடிவு எடுத்த பிறகு தள்ளிப் போடறதுல அர்த்தமேயில்லை. I am ready at any time.
  .                                                      ( திரை )                                                         ( தொடரும் )
 
...
....
 
 
 

                       
                       
                    


வியாழன், 14 மார்ச், 2013

மன சாட்சி ( நாடகம்) ....2....





                                 மன சாட்சி ( நாடகம் )
காட்சி-3. இடம்.- கனகசபை வீடு.
பாத்திரங்கள்.- கனகசபை, வேதவதி, சபாபதி.
( திரை உயரும்போது, கனகசபை ரூபாய் நாணயங்களைத் தட்டிப் பார்ப்பதும் எண்ணிப் பார்பதுமாக இருக்கிறார்.உள்ளே ரேடியோ “ பணமே உன்னால் என்ன குணமேஎன்று பாட எரிச்சலுடன் )
கனகசபை.:- வேதவதி... வேதம்...!  ஏ...வேதா....!

வேதவதி.:-( கையில் கரண்டியுடன் வந்து கொண்டே )வேதா...வேதா... வேதா..... வேதத்துக்கு இப்ப என்னவாம்.?
கனகசபை.:- சரி..சரி.. ரேடியோவைக் கொஞ்சம் மூடு.....
வேதவதி.:- ரேடியோ பாடறதுக்குத்தான் இருக்கு. மூட இல்லை....
கனகசபை.:- அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவைத் திறந்திட்டேனே. ....
வேதவதி.:- என்னையா ரேடியோங்கறீங்க... ...
கனகசபை.:- சேச்சே....! ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம். உன் திருவாயை மூட ......
வேதவதி.:- என்ன......!( என்று மிரட்ட கனகசபை தன் வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப் பார்த்து )பணம்.... பணம்... ரூபா நோட்டுங்க ... ரூபா நோட்டு..இதை வாயிலே போட்டுக்கப் பாத்தீங்களே... ஏங்க... காயிதம்னு நெனச்சீங்களா..?
கனகசபை.:- அட.. யார்றா இவ... சுத்த இவளா இருக்கா ,,, கழுதை கூட ரூபா நோட்டுன்னா காயிதம்தானேன்னு தின்னுடாது.தெரியுமா... .எடுத்து மடியிலே வெச்சுக்கும்.... !( ரேடியோ இன்னும் பலமாக , “ பணமே உன்னால் என்ன குணமே.எனப் பாட) அடச்சே   பாட்டைப் பாரு பாட்டை.! பாட்டைப் பாட பேரம் பேசி ஒரு ரேட்டைக் கரெக்டா வாங்கி இருப்பான். ஆனா பாட்டு மட்டும் “ சரிகமபதநிச பணமே உன்னால் என்ன குணமே...ஹூம் வேஷக்கார உலகம்.
 ..
வேதவதி.:- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. சங்கீதத்தை ரசிக்க உங்களுக்குத் தெரியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்.
கனகசபை.:- எனக்காடி தெரியாது... ரூபாயோடு ரூபா மோதறப்போ ... ஆஹா... இதைவிட என்ன சங்கீதம் வேற இருக்கு.? சங்கீதஸ்வரம் ஏழும் இந்த ஸ்வரம் பேசலைன்னா சைலண்ட் தெரியுமா. ? ஆம்மா... ஆதார ஸ்ருதியாச்சே இது.......வேதம் நெசமாச் சொல்றேன்.... அந்தக் காலத்தில உன்னைத் தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்லை.
   வேதவதி.:- போதும் ...போங்க..
.


கனகசபை.:-ஆஹா ..ஆஹா.. நீ இப்படி நாணிக் கோணி நிக்கறது, நம்ம சாந்தி முகூர்த்தத்தில நீ முகம் செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது.
வேதவதி.:- ஐயே ...போதும் போங்க
...
கனகசபை.:- வேதம்..... வேதம்.....( கிழட்டு தாபத்தில் நெருங்க, ரேடியோவில் “ மன்மத லீலையை வென்றார் உண்டோ) அடச்சீ....மூடுடா...ரேடியோவை.....( ரேடியோ நிற்கிறது )
சபாபதி.:- ( வந்துகொண்டே) சே...சே...இந்த வீட்டில மகனாப் பொறந்ததைவிட ஒரு கூத்தாடிக்குப் பிள்ளயாப் பொறந்திருக்கலாம். நல்ல அப்பா.....ஒரு பாட்டுப் பிடிக்காது... ஒரு கூத்துப் பிடிக்காது.....உங்களுக்கு என்னதான் பிடிக்கும்.?

வேதவதி.:- ஏன்... அவருக்குப் பைத்தியம் பிடிக்கும்......!
கனகசபை.:- இனிமேதானா பிடிக்கணும்.? செத்துப்போன ச்ண்முக சுந்தரம் ஷீலாவுக்கு உயில் எழுதி என்னக்கி என்னையும் நவகோடியையும் ட்ரஸ்டியா வெச்சானோ அன்னைக்கே பிடிச்சாச்சுடி பைத்தியம்.....
வேதவதி.: ஏன் நவகோடியையும் உங்களையும் சேர்த்து ட்ரஸ்டியா வெச்சாரு.?
சபாபதி.:- ஹாங்... மனுஷனுக்கு உலகம் தெரியும்.நவகோடி இல்லேன்னா, ஷீலாவுக்கு உயில் மட்டும்தாம்மா மிஞ்சும். உயில்ல உள்ளதெல்லாம் உன் உடம்பில நகையாக் கொஞ்சும்..
..
கனகசபை.:- இப்ப மட்டும் என்ன கெட்டது? எப்படியும் அவளுக்குக் கலியாணம் ஆனபிறகுதான் சொத்துன்னு உயில்ல எழுதி இருக்கு. நீ மட்டும் மனசு வெச்சு ஷீலாவைக் கட்டிக்கிட்டா .....ஹாங்...ஹாங்.. ஷீலாவை உன்னைக் கட்டிக்க சம்மதிக்க வச்சீன்னா.
.
சபாபதி.:-நானென்னப்பா செய்யறது.... ஷீலாவுக்கு என்னையெல்லாம் பார்த்தா ஆம்பிளைன்னே தோண மாட்டேங்குது. அவளுக்குன்னு உள்ளவன் ஒரு ஆணழகனா இருக்கணுமாம். ...யார் மேல அவளுக்கு ஒரு இது ஏற்படுதோ அவனையே கட்டிப்பாளாம். அந்தக் காலத்துல ஒரு அல்லின்னா இந்தக் காலத்துல ஒரு ஷீலா.
..
கனகசபை.:- அந்த அல்லிக்கு ஒரு அர்ச்சுனன். இந்த ஷீலாவுக்கு ஒரு சபாபதி.
.....
சபாபதி.:- அதெப்படி முடியும்.....அர்ச்சுனன் ஆணழகன்.....நானு எவம்மா என்னை ஆணழகன்னு சொல்லுவா.? அவன் அல்லிக்காக எதையும் செய்வான். நானு.... என்னால முடியுமா.? எனக்கு உயிருன்னா வெல்லமாச்சே ...ஷீலா சொத்து கெடச்சாக் கெடைக்கட்டும் இல்லேன்னா போகட்டும். ..உங்களுக்கப்புறம் உங்க சொத்தாவது கிடைக்கணும்னா நான் உசிரோடு இருக்கணுமேப்பா 
கனகசபை.:- அது என் நல்ல காலம்.என் உசிரை வாங்கினப்புறம்தானே முடியும்னு சொல்லாம உட்டியே.  ஊம்... அங்க நவகோடி என்னடான்னா மொத்து மொத்துன்னு சாத்தறான் அவன் பெண்டாட்டிய. ஷீலாவக் கட்டிக்க ஒரு ஆண் பிள்ளையப் பெறாம ஒரு பெண்ணப் பெத்ததுக்காக. பகவான் புண்ணியத்தில நீ தப்பிச்சுக்கிட்டெ ஒரு பிள்ளையப் பெத்து. இருந்தும் அதன் லட்சணத்தப் பாரு. 
...
வேதவதி.:- உங்களால வேறெப்படியும் ‘ அட்ஜீஸ்ட் செய்ய முடியாதா...?
கனகசபை.:- அட்ஜீஸ்ட்பண்றதாம் ‘அட்ஜீஸ்ட்என்னத்தடீ பண்ணித் தொலைக்கிறது.?
சபாபதி.:- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு வாங்க. எப்படியாவது ஷீலாவைக் கட்டிக்கிறேனா இல்லையாப் பாருங்க.
   கனகசபை.:- பணத்தைத்தவிர வேறெதுவானாலும் கேளு.
.......
சபாபதி.:-அதைத் தவிர உங்ககிட்ட என்ன இருக்கு.? ஆங்... பணம் தர மனசில்லேன்னா சாவிக் கொத்தைத் தாங்க.
கனகசபை.:- ஐயையோ வேண்டாண்டா.... பணமே தரேன்.
                     ( திரை )                      (தொடரும்)   ...
      .