அன்றும் இன்றும் என்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்றும் இன்றும் என்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஏப்ரல், 2018

என்றும் நான்



                                                      என்றும் நான்                                                        -----------------------


மனம் ஒன்றுவதில்லை எழுத, என்று எழுதி இருந்தேன் புதிதாக ஏதும் எழுத வராவிட்டாலும் பழைய பதிவுகள் சில மனம்கவர்ந்தன ஆண்பெண் ஈர்ப்பு பற்றி நான் எழுதி இருந்த சில பதிவுகள் இன்று படித்தாலும்  நன்றாகத்தான்  இருப்பது போல் இருக்கிறது இரண்டு மூன்று பதிவுகளை மீள் பதிவாக்குகிறேன் இவற்றின்  ஊடே இழையோடும்சில எண்ணங்கள் ஒரு வேளை என்  மனத்திண்மையைக் காட்டுகிறதோ  நான்  எழுதியதை நானே விமரிசிப்பதுஅழகல்ல  நீங்களும்   படித்துப் பாருங்களேன்  
           ----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது தகுமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி
.               ---------------

நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல்கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
                       -------------------------

           
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என் 
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க 
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை 
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால் 
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி 
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும் 
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி 
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------

        எந்தன்    உயிருக்குயிர்     நீயே
                
நாடும்    அன்பு     நானோ
           
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
                
கருத்தின்  ஒளியும்  நானோ
            
நற்பண்பின்    சுவை    நீயே ---உன்
                
பாவின்   நயமும்   நானோ
            
என்    எண்ணின்   பொருள்   நீயே
                 
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !
            

 --------------------------------------------------------------------------