எண்ணங்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 நவம்பர், 2012

பதிவுகளும் வாசகர்களும்.


                    பதிவுகளும் வாசகர்களும்
                    ------------------------------------


வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.

ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , : வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.

நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து  எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE.  அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.என் பதிவுகள் இன்னும் பல திரட்டிகளில் இணைக்கப் பட வேண்டும் வலையகத்தில் இணைக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைந்த மாதிரி தெரியவில்லை. பதிவுலக வாசக நண்பர்கள் உதவினால் எனக்காக பல்வேறு திரட்டிகளில் இணைத்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.           
.





செவ்வாய், 25 செப்டம்பர், 2012

புலன்கள்.....


                                                    புலன்கள்.
                                                    -------------


பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம்  என்று கூறுவார்கள். (நிலம், நீர்,நெருப்பு, காற்று ,ஆகாயம் )இதேபோல் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம் என்பார்கள். இந்தப் பூவுலகில் இன்ப துன்பங்களை துய்க்க ஐம்புலன்களின் பணி மகத்தானது. இந்தப் புலன்களின் செயலில் குறைகள் இருந்தால், வாழ்வு நிறைவாவதில்லை. சிலருக்கு சில புலன்களின் பயனே கிடைக்காமல் போகும். பார்வையற்ற , காது கேட்காத, வாய்பேசாத, பலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியுமென்பார்கள். சிலருக்கு இந்தப் புலன்கள் இருந்தும் , குறைவான செயல்திறம் கொண்டிருப்பார்கள். சிலருக்கு வயதாக வயதாக, இப்புலன்களின் செயல் திறமை குறைந்து கொண்டு வரும். இருந்தாலும் மருத்துவத் துறை முன்னேறி இருப்பதால் இப்புலன்களின் செயல் திறனை மேம்படுத்த முடிகிறது. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

வை. கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஒரு பதிவில் , பல்லைப் பிடுங்கி புதுப் பல் கட்டும் , அதன் சாதக பாதகங்களோடு நகைச்சுவையாக எழுதி இருந்தார். அத்தனையையும் அனுபவித்தவர்களுக்குப் புரியும் ஒரிஜினலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசம். இதேவரிசையில் காது மந்தமாகும் போது ஒரு செவிட்டு மெஷின் பொருத்தப் படுகிறது. ஆனால் என் போன்றோரால் காதில் எதையாவது வைத்துக் கொள்வது என்பது சிரமமாக இருக்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித்தான் சதா சர்வ காலமும் இந்த ஒலி பெருக்கி சாதனத்தைக் காதில் வைத்துக் கொண்டு இந்த உலகையே மறக்கிறார்களோ தெரியவில்லை. பிறர் பேசும்போது சரியாகக் காதில் விழாமல் 
மலங்க மலங்க விழிப்பது எவ்வளவு பரிதாபமானது என்பது நமக்குத் தெரிவதில்லை. அனுபவித்தால்தான் தெரியும். சற்றே உரக்கப் பேசினால் காதில் விழும். ஆனால் சிலர் அவர்களுக்குள்ளாகவே முணுமுணுப்பது போலிருக்கும். ஒருவர் பேசுவது காதில் விழாவிட்டால் அவர் முகம் நோக்கி சரியாகக் கேட்கவில்லை என்றால் அவர்கள் காதருகே வந்து சத்தமாகப் பேசுவது கேட்பவருக்கு அவமானமாக இருக்கும் என்பது தெரிவதில்லை. 1991-ம்  ஆண்டு எனக்கு காது கேட்பது சிரமமாக இருந்ததால் ENT ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை அணுகினேன். அவர் இது STAPIDECTAMI  என்றும் அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்கும் என்றும் கூறினார். எனக்கோ பயம் . இருக்கும் கேட்கும் சக்தியும் போய்விட்டால்... ஆகவே அவரிடம் சிகிச்சை வெற்றியடைய வாய்ப்பின் விழுக்காடு என்ன என்று கேட்டேன். , அவர் 90-லிருந்து 95 சதம் வெற்றிவாய்ப்பு உண்டு என்றார். எனக்கு அந்த ஐந்து பத்து சதமே பயம் கொடுத்தது. வேறு ஒரு பிரபல மருத்துவரிடம் சென்றேன். அவரும் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார். அவரிடம் வெற்றி வாய்ப்புபற்றிக் கேட்டேன். அவர், சிகிச்சை முடிந்தபிறகு உங்களுக்குக் கேட்கும் என்றார். சதவீதத்தில் பதில் சொல்ல வில்லை. அவ்வளவு கான்ஃபிடெண்ட். நான் அவரிடம் சிகிச்சை பெற்று பலன் அனுபவித்தேன். கேட்டே இராத சப்தங்கள் கேட்கத் துவங்கின. இருபது வருடங்கள் ஆயிற்று. இப்போது கேட்கும் திறன் குறைவது உணர்கிறேன்.

சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடால் கண்ணாடி அணிந்து வந்தேன். இப்போது தூரத்தில் தெரிபவை மங்கலாகத் தெரிவதால் மருத்துவ செக் அப் செய்தேன். CATARACT. அறுவை சிகிச்சை வேண்டுமென்றார்கள். முதலில் ஒரு கண் என்றும் இரண்டு மாதங்கள் கழிந்து மற்ற கண்  என்றும் ஆலோசனை கூறினார்கள். ஒரு கண் ஆப்பரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. இப்போது நன்றாகத் தெரிகிறது. ஆனால் இன்னொரு கண்ணின் குறை பாட்டால் பக்கத்தில் இருப்பது படிக்க எழுத சிரமமாய் இருக்கிறது. எல்லாம் இரண்டு மாதங்களில் சரியாககி விடும் என்று நம்புகிறேன். கண் ரிபேர், காது ரிபேர் , வாய் ( பல் ) ரிபேர். இருந்தால் என்ன வாழ்க்கையை துய்க்க முடிகிறதே. எல்லாப் புலன்களும் சிறப்பாய் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். சில புலன்கள் உபயோகமில்லாமல் இருப்பவரிடம் கனிவாய் இருப்போம்.