எண்ணங்கள்--ஆதங்கம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள்--ஆதங்கம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 மார்ச், 2012

நினைத்ததை எழுதவா.?

                         
                                      நினைத்ததை எழுதவா.?
                                      -------------------------------
                                        எண்ணச் சிதறல்கள்.
                                           -----------------------

1.        காத்திருப்பு வட்டம்.

கருவிலிருக்கும் குழந்தைப் புவியில் வந்துதிக்கக் காத்திருந்து,பிறந்து,
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்ந்து, ஏதுமறியாப் பருவத்தில் எல்லாவற்றுக்கும் காத்திருந்து, உடலும் உள்ளமும் பருவமடைய இரு பாலரும் மறுபாலரைக் கவரக் காத்திருந்து,பின் மணவினையில் ஒருவர் கைப் பிடித்து, சந்ததி பெருக்கக் காத்திருந்து பின் நரை கூடிக் கிழப் பருவம் எய்தி, கூற்றுவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது , காத்திருப்பு என்பது ஒரு வட்டம் என்று நன்றாகத் தெரிகிறது.

புகழொடு தோன்றல்.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.. அவருக்கென்ன எழுதி விட்டார். தோன்றும்போது புகழோடு தோன்றுவது நம் கையிலா இருக்கிறது.? மேலும் புகழ் என்பது ஒரு RELATIVE TERM..அதற்கு அளவு கோல் என்ன.? வள்ளுவர் வாக்குப்படி நடப்பதென்றால் 90% க்கு மேற்பட்டவர்கள் தோன்றியே இருக்கக் கூடாது. வள்ளுவருக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்புகிடைக்கப் பாடுபட்டு, தோன்றியபின் புகழடைக என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்.!

எதையும் எதிர்க்க வேண்டாம்.

இதை நான் எழுதுவதற்கே எதிர்ப்புகள் இருக்கலாம். இருந்தாலும் மனசில் பட்டதை எழுதாமல் இருக்க முடியவில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்துவிட்டால் முன்னேற்றம் பகல் கனவாகி விடும். மேலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதலே நம்மை முன்னோக்கி நகர வைக்கும். ஆனால் அதற்காக இதுவரை முன்னேறவே இல்லை என்று அழிச்சாட்டியத்தில் எதையும் குறை கூறுவது எனக்கு ஏற்புடையதல்ல. நான் என்னைப் பற்றித்தானே கூற முடியும். நான் எந்த 


நிலையில் இருந்தேன். கடந்து வந்த பாதை என்ன. என் தந்தை எனக்குச் செய்தது என்ன. நான் என் மக்களுக்குச் செய்த்து என்ன. என் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்குச் செய்வது என்ன. செய்ய முடிவது என்ன. என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் பெற முயலும்போது. எங்கள் முன்னேற்றம் தெரிகிறது. இது இக்கால சந்ததியினர் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் கூறத்தேவையில்லை. என்ன.? இன்னும் வேகமாய் வளர்ந்திருக்கலாமோ என்னும் எண்ணம் வேண்டுமானால் தோன்றலாம். நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நம் மக்கள் தொகை சுமார் நாற்பது கோடி என்றால், இப்போது அது நூறு கோடியைத் தொட்டுவிட்டது.அப்போது சாராசரி இந்தியன் வயது 35-க்கு பக்கம் இருந்தது. தற்போது 65 வயது என்று கூறப் படுகிறது. எழுத்தறிந்தவர் தொகை 30% க்கும் குறைவாக இருந்தது. இன்று சுமார் 60% சராசரியாக இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையின் எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக ஏற்ற தாழ்வுகள் மறைந்து கொண்டு வருகின்றது. இன்னும் சில இடங்களில் அது நீடிக்கிறதென்றால் அது நாம் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரக் காரணங்களே ஆகும். ஏற்ற தாழ்வற்ற இலவசக் கல்வி எல்லோருக்கும் பொதுவாக்கப் பட்டால் அதுவும் மறையலா.ம். ஆனால் இப்போதைய EMANCIPATED  மக்கள் அதை வரவேற்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏற்ற தாழ்வுள்ள சமுதாயம் தான் இவர்களுக்கு ஆதிக்கம் செய்ய உதவும்.

முதல் படியாக அரசு கொண்டு வரும் சமச்சீர் கள்வியோ, இலவசக் கல்வியோ நடைமுறைப் படுத்தப் பட்டால் கல்வி வியாபாரிகள் பாடு திண்டாட்ட மாகி விடும். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். விளை நிலங்கள் விற்கப்பட்டு விவசாயிகள் இடமாற்றம் செய்ய முயல்கிறார்கள். விவசாய வேலை இல்லாமல் திண்டாடும் மக்களுக்கு வருடத்தில் குறைந்தது நூறு நாட்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் வந்த MGNRES   திட்டம் ஒழுங்காக் ந்டைமுறைப் படுத்தப் பட வேண்டும். திட்டத்தில் குறையில்லை. நடைமுறைப் படுத்துவதில் புறங்கையை நக்குகிறவர்கள் அதற்குப் பதில் அள்ளிக் குடிக்கிறார்கள். FOOD SECURITY என்னும் திட்டம் வருமுன்பே ஏகப்பட்ட எதிர்ப்பு. எங்கெங்கு சட்டங்களில் ஓட்டை இருக்கிறதோ அதை திறமையாகப் பயன் படுத்துபவரை நமக்கு ஏனோ அடையாளம் தெரிவதில்லை. எழுபதுகளுக்கு முன்பு குடி என்றால் என்ன என்றே தெரியாத ஒரு சமுதாயம் தலை எடுக்க இருந்தது. இப்போது குடியில்லாமல் இருக்க எண்ணினாலும் முடியாது.

 நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். எதையும் எதிர்க்கும் மனோபாவம் உள்ள இளைய சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போதைய மத்திய தர இளைஞர்கள் அதிகம் ஆவேசப் படுகிறார்களே அல்லாமல் ஆழ சிந்திப்பது இல்லை. இம்ம் என்பதற்குள் எல்லோரையும் இறக்கி விட்டு , உம்ம் என்பதற்குள் உயரப் பறக்க விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இளைஞர்களின் உணர்வுகளை சாதி மத இன மொழி என்றெல்லாம் கூறி உசுப்பேற்றுகிறார்கள். இருந்தால்தானே அவர்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.


எண்ணச் சிதறல்கள் என்று எழுதத் துவங்கினேன். ஆனால் சிதறிய எண்ணங்கள் என் ஆதங்க்கக் குவியலில் மூழ்கி எழ ஆரம்பித்து விட்டது.

எழுதுவதன் நிமித்தம்

என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போகிறதா என்பது சந்தேகமே. இப்படியும் சிந்திக்கலாமா என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வலையில் எதையும் சீரியஸாக எழுதினால் அது படிக்கப் படாமலேயே போகும் என்றே தோன்றுகிறது. நானும் பார்த்துவிட்டேன். மூளையைக் கசக்கி எழுதுபவை சீண்டப் படாமலும் மொக்கையாய் எழுதப் படுபவை அமோக வரவேற்பு பெறுவதையும் நான் வலையில் எழுதத் துவங்கியதிலிருந்து கவனித்து வருகிறேன். இந்த வயதுக்குமேல் மொக்கையாக எழுத மனம் வருவதில்லை. இதில் மொக்கை என்பது என் கணிப்பே அல்லாமல் மொக்கைக்கு அளவு கோல் என்னிடம் இல்லை. சொல்லாமல் செல்வதே நன்று என்று எழுதி விட்டு இவ்வளவையும் சொல்கிறேன் என்றால் என் மனத்தாங்கல் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ஆமாம்  புரிந்து கொண்டு என்ன ஆகும்.? 
------------------------------  ------------------------------------------------------------------------

                            


  
                        :          .               .                                  .