கைராசி முகராசி அல்லது ஏன் நாங்கள்
---------------------------------------------------------------
.
கைராசி முகராசி
எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் சில
நிகழ்வுகள். காரண காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஏதோ abstract எண்ணங்களின் வெளிப்பாடே.
இந்த நிகழ்ச்சியும் நாங்கள் திருச்சியில் குடியிருப்பிலிருக்கும்போது நிகழ்ந்தது.
ஒரு விடுமுறை நாள். ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரும் குடியிருப்பில்
வசிப்பதாகக் கூறினார். அறிமுகப் படுத்திக் கொண்டவர் பின் அவர் மகன் பெயரில் திருவெறும்பூரில்
ஒரு மின்சாரக் கருவிகள் சேல்ஸ் அண்ட் செர்வீஸ் கடை திறக்க இருப்பதாகக் கூறினார்.
முன் பின் பழக்கமில்லாத எங்களிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்று
நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் அந்த விண்ணப்பம் வைத்தார். அவர்
புதிதாகத் திறக்க இருந்த கடையை என் மனைவி குத்து விளக்கேற்றி திறக்க
வேண்டும் என்றார். முதலில் அவர் விலாசம் தவறி வந்து விட்டார் என்றே நினைத்தேன்.
அப்போது BHEL நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தவர் பெயரும் என் பெயர்தான். என் இனிஷியல்
ஏதோ தவறுக்கு வழி வகுத்துவிட்டதோ என்று சந்தேகம் வந்தது.எத்தனையோ பெரிய
பிரமுகர்கள் இருக்கும்போது எங்களைஅழைத்தது ஏன் என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது
அவர் என் மனைவியைக் கோயிலில் பார்த்திருப்பதாகவும் அவர் மேல் ஒரு மரியாதை எழுந்து
அவரே அந்தப் புதுக் கடையை விளக்கேற்றி திறக்க வேண்டுமென்று தோன்றியதாகவும்
கூறினார். பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் என் மனைவியால் எனக்கும்
மரியாதை கிடைத்தது அது நடந்து சில காலத்துக்குப் பின் இன்னொரு திறப்பு
விழாவுக்கும் என் மனைவியை (கூடவே என்னையும் ) முதல் கடை நன்றாக இயங்கியதால் அழைத்தார்
ஏன் நாங்கள்
-----------------------
ஒரு நாள் காலை உணவு
அருந்திக் கொண்டிருந்தேன். என் வீட்டு தொலை பேசி அழைத்தது. என் மனைவி அதை
எடுத்தாள். நாங்கள் அன்று மதியம் ஃப்ரீயாக இருக்கிறோமா, மதியம் பள்ளிக்கூடத்துக்கு
வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார் நிசர்கா வித்தியாநிகேதன் ப்ரின்சிபால். ஏன்
எதற்கு என்று என் மனைவி கேட்க, வண்டி அனுப்புகிறோம் வாருங்கள் என்றார் அவர்.
இந்தப் பள்ளிக்கூடம் பற்றி “கற்ற பாடமும் இன்ன பிறவும் “ என்னும்
பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . எனக்கு பள்ளிச் சிறார்களைக் காண்பதில் மகிழ்ச்சி
என்று அவருக்குத் தெரியும். மதிய உணவு பள்ளியில் ஏற்பாடு செய்கிறோம் என்றார்.
நாங்கள் மதிய உணவை முடித்துவிட்டே வருகிறோம் என்றாள் என் மனைவி. எதற்கு நம்மை கூப்பிடுகிறார்கள்
என்று தெரியாமலேயே நாங்கள் தயாராகி விட்டோம். மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில்
கார் வந்தது.எங்களைக்கூட்டிப்போக. பள்ளிக்கு நாங்கள் சென்றவுடன் வாசலிலேயே
ப்ரின்சிபால் எங்களை எதிர் கொண்டு அவரது ஆஃபீசுக்குக் கூட்டிச் சென்றார். எங்களை
வரவழைத்ததன் காரணம் கேட்டோம். அதற்கு அவர் பிள்ளைகள் முழுப்பரீட்சைக்கு தயார்
ஆகும் நிலையில் . காலையில் சரஸ்வதி பூஜை நடந்ததென்றும். மதியம் அதுவரை தேர்வுகளில்
சிறந்த மாணவ மாணவிகளுக்கும் , மற்றும் விடுப்பே எடுக்காத மாணவ மாணவிகளுக்கும்
பரிசு தர இருப்பதாகவும் அதை அச்சிறார்களுக்கு எங்கள் கையால் தரவேண்டும் என்றும்
கூறினார். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள் பதவி ஏதும் இல்லாதவர்கள் எங்களை ஏன்
தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதவிகளில் இருப்பவரைவிட நல்லவர்களிடம்
இருந்து மாணவ மாண்விகள் ஆசி பெறுவது சிறந்தது என்று அவர் சொன்னபோது நாங்கள்
நெகிழ்ந்து விட்டோம். அதுவுமல்லாமல் இன்னொரு நாள் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவ
மாணவிகளுக்கு நான் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இந்தமாதிரி மரியாதைக்கு நாங்கள் தகுதி உடையவர்களா என்னும் சிந்தனையே மேலோங்கி
இருந்தது.
வழக்கம் போல இறைவணக்கத்துக்குப் பிறகு என்னை அறிமுகப் படுத்தினார்கள்.குழந்தைகளின் முகங்களைப்பார்ப்பதே மகிழ்வாக இருந்தது. எங்களுக்கு மரியாதையாக ஒரு ஃப்ரேம் செய்த ஆஞசநேயர் படமும் என் மனைவிக்கு பூ. பழம் அரிசி, வெல்லம் போன்றவையும் தரப் பட்டன. நாங்கள் மேடையிலிருந்ததால் எங்களால் ஃபோட்டோ ஏதும் எடுக்க முடியவில்லை. அவர்கள் எடுத்த ஃபோட்டோக்களை அஞ்சலில் அனுப்பி உள்ளனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினோம் அதை வாங்கும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது
இந்த நிகழ்வு என்னை 1967-க்கு இட்டுச் சென்றது. நான்
பி.எச்.இ.எல் நிறுவனத்தில் வேலையில் இருந்தபோது அருகில் துவாக்குடி என்னும்
கிராமம் இருந்தது( இருக்கிறது) அங்கு இருந்த ஒரு பள்ளிச் சிறார்களுக்குப்
புத்தகங்களும் பேனா பென்சில்களும் இலவசமாக வழங்க மெஷின் ஷாப் பணியாளர்கள் முடிவு
செய்திருந்தனர்,.அதை வழங்க என்னைக் கூப்பிட்டு விழாமாதிரி செய்தது நினைவிலாடியது.
அது அப்போதைய தமிழ் தினசரி ஒன்றில் படத்துடன் வெளியானது. எந்தத் தகுதி என்னை
இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது என்பது எனக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. I WAS
ONLY FEELING VERY HUMBLE THEN AND NOW.