ஒரு ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நினைவுகள் எண்ணண்ங்கள் ஒரு ஆய்வு

 

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .