தொடர் பயணம்........ துவக்கம்
-----------------------------------------------
2015-ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஒரு நீள் சுற்றுலா உறவினர்கள் சிலர் செல்லத் திட்டமிடுவது அறிந்தேன் நானும் என் மனைவியும் வர விரும்புவதாக என் மச்சினனிடம் கூறினோம் / அவன்தான் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு வழி நடத்திச் செல்பவன் போகத் திட்டமிட்டிருந்த இடங்கள் நாங்கள் ஏற்கனவே சென்று பார்த்ததுதான் இருந்தாலும் பயணிப்பது எனக்குப் பிடிக்கும் என்பதாலும் இந்த வயதில் இவ்வளவு நீண்ட பயணத்தை என் உடல் தாங்கும் என்று எனக்கு நானே நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளவுமே நானும் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்
இம்மாதம் 17-ம் தேதி துவங்கி 26-ம் தேதி முடிய
மதுரை, இராமேஸ்வரம் நாகர் கோவில் போன்ற
இடங்களில் தங்கி சுற்று வட்டார
இடங்களுக்குச் சென்று வருவதாகத் திட்டம்
இந்தப் பயண நிரல்களைத் தயாரிக்க உதவிய திருமதி
கீதா சாம்பசிவம் , திரு எஸ்பி செந்தில் குமார் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் பயணத்தில் பங்கு கொண்டோர்
அனைவருமே உறவினர்களே. அதில் நானும் என் மச்சினனும் மட்டுமே ஆண்கள் மற்ற எல்லோரும்
பெண்கள். ஒரு பெண்ணையே சமாளிப்பது எவ்வளவு
கஷ்டம் என்று பலரும் அறிவார்கள் இந்த நிலையில் என் மச்சினன் ஒன்பது பெண்களை
சமாளித்து சரியான மேய்ப்பனாக விளங்கினான் அவனுக்கு எங்கள் நன்றிகள் கலந்து கொண்ட
பெண்கள் அவனை ரிங் மாஸ்டர் என்றே அழைத்தனர் எந்த நேரத்திலும் கோபம் கொள்ளாமல்எல்லோர்
தேவையையும் பூர்த்தி செய்த அவன் பயணத்துக்குத்
தேவையான ரயில் முன்பதிவுகளையும்
தங்குவதற்கான அறை முன் பதிவுகளையும்
திறம்படச் செய்திருந்தான்
18-ம் தேதியும் 19-ம் தேதியும் மதுரையிலும் 20-ம்
தேதிதொடங்கி 23-ம் தேதி முடிய இராமேஸ்வரத்திலும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி
முடியநாகர் கோவிலிலும் தங்கினோம் எல்லோருக்கும் குளிரூட்டப் பட்டுள்ள வசதியுடன்
கூடிய தங்கும் அறைகள் பயணத்தின் போது ஏசி த்ரீ
டியர் ரயில் டிக்கட்டுகளும் எடுத்திருந்தான்
முதலில் பத்து பெண்கள் வருவதாக இருந்தது. அதில் இருவர் கடைசி நேரத்தில் வர
முடியாமல் போகவும் கடைசி நேரத்தில் வேறொரு பெண்மணியும் சேர மொத்தம் ஒன்பது பெண்கள் இரு ஆண்களுடன் சுற்றுலா தொடங்கியது
மைசூர் தூத்துக்குடி ரயிலில் 17-ம் தேதி இரவு
நாங்கள் ஏறிய போது எனக்காக ஒதுக்கப் பட்டிருந்த இருக்கை/ கிடக்கையில் ஏற்கனவே ஒருவர் படுக்கை விரித்துப் பயணித்துக் கொண்டிருந்தார் ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்றால் அவர் செல்ல
வேண்டிய ரயில் கொச்சுவேலி எக்ஸ்ப்ரெஸ்.
வண்டி மாறி பயணிக்கிறார் என்று சொன்னதும் பாவம்
என்ன செய்தாரோ தெரியவில்லை. மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கையைக் காலி
செய்தார். 18-ம் தேதி காலை எட்டரை மணி
அளவில் மதுரை வந்து சேர்ந்தோம் ( தொடரும்)
| இடமிருந்து- என் மச்சினன் மதுரையில் வண்டி ஓட்டுனர் மற்றும் பயணித்த பெண்மணிகள் |
(சுமார் இரு வாரங்கள் பதிவுப்பக்கம் வராமல் இருந்து இன்று வந்து பார்த்தால் என் பதிவுகளைத் தொடர்பவர்களில் எட்டுபேரைக் காணவில்லை 162 ஆக இருந்தவர் எண்ணிக்கை 154 ஆகக் குறைந்து இருக்கிறது..! )