கண கலங்கி நிற்கும் கணவனிடம் கைப் பிடித்த மனைவி
”என்னால் உன் மன அமைதி குலைந்த தென்றால்,
நீ விரும்பும் பெண்ணோடு, உனை விரும்பும் அவளோடு,
ஒரு நாளோ ஒரு வாரமோ தாராளமாய் இருந்து வா”என்றாள்.கேட்டவன் தன் காதுகளை நம்ப வில்லை.-தன்னையே
ஒரு முறை கிள்ளிப் பார்த்தான்..மனைவியின் அனுமதி
கிடைத்தாயிற்று. நான் விரும்பி ,எனை விரும்பும்
பெண்ணின் கணவர் இதற்கு உடன்படுவாரா.?
எண்ணித் துணிக கருமம் என்றனர் ஆன்றோர்.
செயல்பட வேண்டியதுதானே.துணிந்து சென்றங்கு
அனுமதி கேட்டால் செருமுனைபோலாகுமோ-பயந்தான்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே எனத் துணிந்தான்.
வந்தவனைக் கண்டதும் வாவென்று வரவேற்றார்.
அமர வைத்து ஆசுவாசப் படுத்திய பின் கேட்டார்
வரவின் நோக்கம்தான் என்னவென்று.- தயங்கித்
தயங்கிக் கேட்டான் அவர் தாரத்தை தன்னுடன் அனுப்பச் சொல்லி.தயக்கம் எதற்கு.? அவள் விரும்பி வருவதானால்
தாராளமாய் அழைத்துப் போ,அனுமதி எதற்கு.?
நீயாயிற்று அவளாயிற்று, நடுவில் நானெதற்கு
அன்பு நாடி நீ வர மனம் வாடச் செய்வேனா என்றார்.
அனுமதிக்குப் பங்கம் இல்லை என்றறிந்தவளும்
கண்ணசைவில் கருத்தறிந்து உடன் செல்லத் துணிந்தாள்.
நாளொரு இடமாய் பொழுதொரு விதமாய்
சின்னச்சின்ன ஆசைகள் சிறப்பாக நிறைவேற
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்பி
மனம் எல்லாம் றெக்கை கட்டிப் பற்ந்தவன்
ஒருவாரம் கழிந்தபின் தரையில் காலூன்ற
அன்று போல் என்றும் ஏன் இல்லை எனக்
கேள்வி கேட்டுப் பதில் நாட ,
தாயுடன் தான் கழித்ததெல்லாம் மணவினைச்
சிறையில் மனைவி ஜெயிலர் தந்த பரோலே
என்றுணர்ந்தவன் துள்ளிக் குதித்தான் கண்டது
கனவென்று