Saturday, December 31, 2011

எண்ணச் சிதறல்கள்

                                          எண்ணச் சிதறல்கள்.
                                          -----------------------------
         ( இது 2011-ம் ஆண்டின் கடைசிப் பதிவு. ஒரு
           மாறுதலுக்காக சற்றே வித்தியாசமாக )    


            அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE.  இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.

       முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
                             **********************************

      இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி
விடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை
ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுதத
வேண்டாமே.

      “பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
        தர்ம ஸம்ஸ்தாபனார்த்தய ஸம்பவாமி யுகே யுகே “

என்று பகவான் கீதையில் கூறியிருக்கிறார். உலகில் எப்போது
எப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அப்போது
அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்கிறார். இது
கிருஷ்ணாவதாரத்தில் தெரியப் படுத்தியது. இதை
அடிப்படையாய் வைத்து மற்ற அவதாரங்களை அலசினால்
அவற்றை ஏற்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நான்முகனின்
ஆணவத்தை அடக்க மச்சாவதரம்;ஆணவத்தால் வலிமை
இழ்ந்த தேவேந்திரனுக்கு செல்வம் சிறப்புடன் கூடிய வலிமை
பெற்றுத்தர ,அமுதமெடுக்க, திருப்பாற்கடலைக் கடைய மந்தார
மலை நிலை பிறழாமல் இருக்க எடுத்த ஆமை அவதாரம்;
வைகுண்டக் காவலர்கள் ஜயன், விஜயன் ஆகியோர்,ஆணவம்
கொண்டு சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட அவர்களை
மீண்டும் ஆட்கொள்ள எடுக்கப்பட்ட அவதாரங்களே பன்றி
மற்றும் நரசிம்மாவதாரம்.;கோயில் விளக்கு அணையாமல்
இருக்கத் திரி தூண்டிக் கொண்டிருந்த எலிக்கு மூவுலகும் ஆள
சிவனார் கொடுத்த வரத்தின் பயனாய் பலிச்சக்கரவர்த்தியாகப்
பிறந்து மூவுலகை ஆண்டவனின் கர்வம் அடக்க எடுத்த வாமன
அவதாரம்;தந்தை சொல் கேட்டுத் தாயை வெட்டிதந்தையின்
காமதேனு பசுவுக்காக அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க
இருபத்தொரு தலைமுறை அரசர்களை அழித்த பரசுராம அவ
தாரம்;மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்ற
ராமாவதாரம்;உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்தக்
கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராம அவதாரம்;பூமியின்
பாரத்தைக் குறைக்கவும் ( எப்படி.? கௌரவ பாண்டவர் போரில்
கணக்கற்றவர்களின் இறப்பாலா.?) சிலபல அரக்கர்களைக்
கொல்லவும் எடுத்த கிருஷ்ணாவதாரம் போன்றவற்றில் எல்லாம்
கடவுளை எங்கே காணமுடிகிறது.?கதைகளில் சொல்லப்பட்டுள்ள
சிலபல கருத்துக்கள் மனசுக்கு இதம் தரலாம். உதாரணத்துக்கு
சிறுவன் பிரகலாதனின் நம்பிக்கையை வலியுறுத்தும் நரசிம்மாவ
தாரக் கதை, தந்தை சொல் தட்டாத ராமன், நண்பனுக்கு உதவும்
ராமன், அநிதியை எதிர்க்கும் ராமன், என்று நல்ல குணங்களை
உணர்த்திச் செல்லும் ராமாயணக் கதை, பிறக்கும்போதே தான்
கடவுளின் அவதாரம் என்றுணர்ந்துஅதற்கேற்பச் செயல் புரியும்
கிருஷ்ணாவதாரக் கதை இவற்றிலிருந்து, வாழ்க்கைக்குப் பலன்
தரும் பல கருத்துக்கள் கொள்ளப்பட வேண்டியவையே தவிர
இவர்கள் எல்லோரும் அதர்மத்தை அடக்க வந்த கடவுளின் அவ
தாரங்கள் என்பது எனக்கு ஏற்றுக் கொள்வது இயலாததாய்
இருக்கிறது. அனைத்து கதைகளிலும் ஆங்காங்கே தெளிக்கப்
பட்டிருக்கும் நல்ல விஷயங்களை முடிந்த வரை பின்பற்ற
முயலுவோம். கதைகளைக் கதைகளாகவே உணர வேண்டும்.
நம்பிக்கை விளைவிக்கும் ,வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும்
கருத்துக்களை உள் வாங்குவோம். மற்றவற்றைப் பதராக உதறு
வோம். எனக்குத் தெரியும், அறிந்தோ அறியாமலோ கேள்வி
கேட்காமல் பழக்கப் படுத்திவிட்ட உணர்வுகளை ஆராயத்தொடங்
கினால் எதிர்ப்புகள் பலமாய் இருக்கும் நான் என் எண்ணங்களைக்
கூறுகிறேன். இதை இன்னொரு கோணத்தில் அணுகுகிறேன்
அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.
                                             *********************

       எதை எழுதும் போதும் தன்னிலைப் படுத்தாமல் பொதுவாக
எழுத முடிவதில்லை. எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறோம்.
எழுதப்படும் எண்ணங்கள் பலரிடம் சென்றடைந்தால் மகிழ்ச்சியே.
பலரிடம் சென்றடைகிறதா, அதன் தாக்கம் என்ன என்று அறிய
வரும் பின்னூட்டங்களை அளவு கோலாகக் கொள்ளலாமா. ?அது
சரியென்று தோன்றவில்லை. பதிவர்களில் பலர், ஒருவருக்கு
நாம் பின்னூட்டம் எழுதினால் அவர்கள் நம் பதிவுக்கு வருகிறார்
கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பலவிதமுண்டு. ஒரு
பதிவுக்கு ஒருவரே ஏழெட்டு பின்னூட்ட மிடுவதை காண்கிறேன்.
சில சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவைவிட நீளமாகிப் போய்
விடுகிறது. அநேகமாக எல்லோரும் பாராட்டியே எழுதுகிறார்கள்
மீறிப் போய் யாராவது விமரிசனமாக எழுதினால் அது விரும்பப்
படுவதில்லை. விமரிசனம் எனும் போது எழுத்துத்தான் விமரி
சிக்கப்பட வேண்டுமே தவிர எழுதுபவரல்ல. ஒரு சிலர் சளி பிடிக்
கும் அளவுக்குப் பாராட்டில் குளிப்பாட்டுகிறார்கள் அந்தக் காலப்
பரிசில் வேண்டும் புலவர்கள் நினைவு வருகிறது. ஒரு சிலர்
பதிவிடும்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரிவதில்லை.
சில ABSTRACT எண்ணங்கள் சென்றடைவதில் சிரமமிருக்கிறது.
புரிந்தால் என்ன, புரியாவிட்டால்தான் என்ன.. இருக்கவே இருக்
கிறது டெம்ப்ளேட் காமெண்ட்ஸ். என்னை பொறுத்தவரை நான்
எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவதில்லை. சிந்தனையைக் கிளறினாலேயே நான்
எழுதுவதன் பலனை அடைந்ததாக எண்ணுகிறேன். யாருடையப்
பதிவையும் யாரும் கட்டாயப் படுத்திப் படிக்க வைக்க முடியாது.
எழுத்துக்கள் வாசகரை ஈர்த்து வர வேண்டும்.என்னுடைய மெயில்
பெட்டியில் வந்து சேரும் பதிவுகள் பற்றிய தகவல்கள்
எண்ணிக்கை என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது. எழுத்தால்
ஈர்க்கப்பட்டு நான் படிக்க விரும்பினால் அவர் பதிவின் தொடர்
பாள்னாகிறேன். அவர் எழுதும் பதிவுகள் உடனுக்குடன் தெரியும்.
சில நேரங்களில் சிலரது பதிவுக்கு நான் இடும் பின்னூட்டம்
எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்று தெரிய மீண்டும் அவர்கள்
வலைக்குச் செல்வேன். மற்ற பதிவர்களும் அப்படித்தான் என்று
எண்ணுகிறேன். சில காமெண்டுகளுக்கு எவ்வாறு REACT  செய்வது
என்று தெரிவதில்லை. முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.
பதிவுகளில் நான் ஒரு I ALSO RUN  என்னும் ரகம்தான் என்று
          -----------------------------------------------------------

நிச்சயமாக இப்படித்தான் நடக்கும் என்று ஏதும் கூற முடியாத
இரண்டு விஷயங்களுக்குப் போராட்டங்கள் நடக்கின்றன.
ஒன்று--கூடங்குளம் அணு உலை. இரண்டு--முல்லைப் பெரியாறு
அணை.அணு உலையினால் அசம்பாவிதங்கள் நடக்கலாம்.
அதனால் அழிவை எதிர்நோக்கும் நிலை இருக்கிறது என்றும்
அதனால் அது செயல்படுத்தப்படக் கூடாது என்றும் கருத்துக்கள்
வெளியாகின்றன. அதேபோல முல்லைப் பெரியாறு அணை
வலுவிழந்து வருகிறது என்றும், நில அதிர்வுகளால் அணை
உடைய வாய்ப்பு உள்ளது என்றும் ,அதனால் அதில் நீர் சேமிக்
காமல் புது அணை கட்ட வேண்டும் என்றும் போராட்டங்கள்
நடக்கின்றன. இந்த இரண்டு கருத்துக்களுக்குமே பயமே அடிப்
படை. இது இப்படி இருக்கும்போது பயத்தால் அணு உலையை
எதிர்த்துப் போராடுபவர்கள், ஏன் அணையால் ஏற்படும் பயத்தை
யும் உணர்வுகளையும் எதிர்கொள்ளத் தயங்கு கிறார்கள் என்று
புரிவதில்லை.
-----------------------------------------------------------------------

                   மாறுதலுக்கு இப்படியும் ஒரு சிறுகதை
                       ------------------------------------------------
தினமும் நான் செல்லும் பஸ்ஸிலேயே வருகிறான். நான்
இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான். என்னையே
பார்த்துக் கொண்டு வருகிறானோ.?நான் பார்த்தால் வேறு
பக்கம் பார்க்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல.
வீட்டில் சொல்லலாமா ? வேண்டாமா.?

நான் அவனுக்குத் தெரியாமல் கண்காணித்ததில் அவன் வேலை
செய்யுமிடம் நான் பணிபுரியும் கட்டிடத்தின் மேல் மாடியில்
இருந்தது. அவன் வீடு எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு
மூன்றாம் வீடு.

ஒரேதெருவில் குடியிருந்தும் ,இரே கட்டிடத்தில் பணி புரிந்தும்
ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறோம். !!!1!!1
---------------------------------------------------------------------------

ஒரு ஜோக் படித்தேன்.ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கினால்
சுவை போய்விடும் .அதனால் அதனை அப்படியே தருகிறேன்.
இது ஒரு "A" ஜோக். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Do you speak English.?
Yes.
Name.?
Abdul al-Rhasib.
Sex.?
Three to five times a week.
No, no, - I mean , male or female.?
Yes, male female, and sometimes camel.
Holy cow.!
Yes. cow,sheep,animals in general. 
But, is it not hostile.?
Horse style, doggy style, any style.
Oh, dear.!
NO, no , deer runs too fast. 
-----------------------------------------------------


புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார். அவர் ஏசு நீரின் மேல் 
நடந்தார் என்றார்.

யாரும் நம்பவில்லை.

அவர் மேலும் சொன்னார்.”ஏசு நீரை வைன்( wine ) ஆக மாற்றினார்.”

பாதி கோட்டயம் கிருஸ்தவர்களாக மாறியது. !
---------------------------------------------------------------

( எல்லோருக்கும் என் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.)
                                    ================













Thursday, December 29, 2011

இப்படியும் ஒரு சாமியார்...

                                       இப்படியும் ஒரு சாமியார்..
                                       -----------------------------------

        நான் இதற்கு முன்பு ஐந்தும் இரண்டும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் எப்படி ஒரு சாமியார் ஒரு கணவன் மனைவியை ஏமாற்றி பணம் வாங்கிச் சென்றார் என்று கதை எழுதியிருந்தேன்.


      அண்மையில் நான் கோயமுத்தூரிலிருந்து குருவாயூர் சென்று திரும்பி வரும் போது பாலக்காட்டில் ஒரு வீட்டுக்குச் சென்றேன். என் தம்பியின் மாமியார் வீடு அது.  அது இருநூறு வருடத்துக்கு முந்தைய கட்டுமான வீடு. அங்கு ஒரு அறையில் ஒரு நந்தா விளக்கு வெகு காலமாக அணையாமல் காக்கப் பட்டு வருகிறது. அதன் உண்மைப் பின்னணியைப் பற்றி ஒரு சம்பவம் விவரிக்கப் பட்டது. அவர்களின் முன்னோரில் மூதாட்டி ஒருவர் மிகவும் கொடைக்குணம் மிகுந்தவர். அதிதிக்கு உணவு படைத்த பிறகே தான் உண்ணும் வழக்கம் கொண்டவர். ஆனால் அவருடைய இந்த உதார குணம் அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் மூதாட்டி அதை சட்டை செய்யாமல் வறியோரையும் முதியோரையும், பக்தர்களையும் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்.


           ஒரு முறை சுவாமிஜி ஒருவர் இவர்கள் வீட்டுக்கு வந்து மதுரை மீனாட்சியின் அருளும் முருகனின் கடாட்சமும் இவர்களுக்கு இருப்பதாகவும், தினமும் விளக்கேற்றி வழிபடுமாறும் கூறி சில மயில் பீலி இதழ்களைக் கொடுத்து அதை பாதுகாக்குமாறும் கூறி இருக்கிறார். வழக்கம்போல் அந்த மூதாட்டி அவருக்கு உணவளித்து உபசரிக்க வழக்கம்போல் உறவினர்கள் இவரைக் குறைகூற வந்த சுவாமிகள் புறப்பட்டுச் செல்லும்போது அவரை வழியனுப்ப வந்த அம்மூதாட்டி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வந்தவர் காணாமல் போய்விட்டார். அவர் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு ஒளிப் பிழம்பு வானில் போவதைக் கண்டவருக்கு வந்தவர் சாட்சாத் முருகனே என்னும் நம்பிக்கை தோன்ற, அன்று ஏற்றப்பட்ட தீபம் இன்னும் அணையாமல் பாதுகாக்கப் படுவதாகக் கூறினார்கள்.


             ஆண்டுதோறும் தை மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடி அந்த விளக்கு பூஜையை ஒரு விழாவாகவே நடத்துகிறார்களாம்.
---------------------------------------------------------------------------

Wednesday, December 28, 2011

இளைய பாரதம்-நம்பிக்கை.

                                    இளைய பாரதம் -நம்பிக்கை.
                                   ---------------------------------------

கூட்டம் அலை மோத நெரிசலில் பெண்ணொருத்தி
படும் பாடு கண்டு கொதித்தது அவன் மனசு.
பேரூந்தொன்றில் பயண்ம் செய்கிறான் அவ்விளைஞன்
சந்தடி சாக்கில் அரைக் கிழவன் ஒருவன் அப்பெண்ணின்
மேல் வேண்டுமென்றே உராய்தல் கண்டு அருகில்
வந்த நடத்துனரிடம் சுட்டிக் காண்பிக்க அவரும்
சமயோசிதமாக நடுவில் சென்று மெள்ள அக்கிழவனை
அப்புறப் படுத்துகிறார். பிறகு தன் கட்டை விரல் உயர்த்தி
இளைஞனுக்கு சமிக்ஞை செய்கிறார். பார்த்துக் கொண்டிருந்த
எனக்கு இளைய பாரதம் மேல் நம்பிக்கை கூடியது
-------------------------------------------------

Monday, December 26, 2011

பள்ளி நாட்கள்

                                              பள்ளி நாட்கள்...
                                             ----------------------
(அண்மையில் கூனூர் சென்று வந்தேன். படித்த பள்ளிக்குச் சென்று திரும்பும்
போது எழுந்த நினைவுகள் இந்தப் பதிவில் )

      ( நான் கோயமுத்தூர் ராமநாதபுரம் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்ந்து படித்தது
       பற்றி “இது லஞ்சமா “என்ற பதிவு எழுதி இருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இதனைப்
         எடுத்துக்கொள்ளலாம் .)

நான் ஃபோர்த் ஃபார்ம் முடித்திருந்தேன். அந்த நேரத்தில் அப்பாவுக்கு வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது. அப்பா அப்பர் கூனூரில் வீடு பார்த்திருந்தார். ஒரு பேரிக்காய் தோப்புக்கு நடுவே ஒரு வீடு. அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன. ஸிம்ஸ் பார்க், பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் அருகில் வீடு. கோயமுத்தூரிலிருந்து நாங்கள் கூனுருக்கு பஸ்ஸில் வந்தபோது, மாலை நேரமாகி இருந்தது.பழக்கப்படாத குளிர் வெடவெடத்தது. அரை நிஜாரும் சொக்காயும்தான் உடை. இதெல்லாம் இப்போது நினைக்கும்போதுதான்,அந்த அனுபவம் உறைக்கிறது.நாங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது, சுற்று முற்றும் பேரிக்காய் மரங்களும், ஆரஞ்சு மரங்களும் ஆக கைக்கெட்டிய நிலையில் பழங்கள் .எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பறித்துத் தின்னலாம்.வீட்டிலிருந்து ஐந்து பத்து நிமிட நடையில் பள்ளிக்கூடம்.செயிண்ட். ஆண்டனிஸ் ஹைஸ்கூல்..பத்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளிக்கட்டணம் மாதம் ரூபாய் ஆறேகால் என்று நினைவு.

      பள்ளியில் சேர்ந்த புதிதில் நடந்த சம்பவம் ஒன்று நன்றாக நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடக்க இருந்தது. நான் புதிதாக சேர்ந்த பையன். வகுப்பு ஆசிரியர் ப்ரதர். மாண்ட்ஃபோர்ட் என்னிடம் அவர் நடத்திக் கொண்டிருந்த பாடத்தைப்படிக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரின் ட்வெல்ஃப்த் நைட் என்ற பாடம். அதில் செபாஸ்டியன், வயோலா என்ற பாத்திரங்கள் வருவர். நான் மிகவும் இயல்பாக தைரியமாகப் படிக்க ஆரம்பித்தேன். VIOLA என்று இடம் வரும்போது, வயோலா என்று படித்தேன். வகுப்பே கொல்லென்று சிரித்தது. எனக்கு அவமானமாகவும் வெட்கமாகவுமிருந்தது. ப்ரதர். மாண்ட்ஃபோர்டும் புன் முறுவலித்துக் கொண்டே வகுப்பை அடக்கி, என்னையும் அமரச் சொன்னார். வகுப்பு முடிந்ததும் என்னருகில் அமர்ந்திருந்த சக மாணவர்களிடம் அவர்கள் கேலியாக சிரித்ததற்குக் காரணம் கேட்டேன்நான் வயோலா என்று படித்தது தவறு என்றும் வியோலா என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நான் ஒரு ப்ராப்பர் நௌனில் வேற்றுமொழியில் உச்சரிப்பு தவறு என்று கூற முடியாது என்று வாதிட்டேன். யாரும் நம்பவில்லை. கேலியும் தொடர்ந்தது. அடுத்த நாள் ஆங்கிலப் பாடம் நடத்த ப்ரதர் மாண்ட்ஃபோர்டுக்குப் பதிலாக தலைமை ஆசிரியர்,ப்ரதர் ஜான் ஆஃப் த க்ராஸ் வந்தார். அதே பாடத்தை அவர் நடத்தும்போது, வயோலா என்றே படித்தார். அப்போது நான் எழுந்து நின்று முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவர் என்னுடைய நிலை சரியென்று கூறினார்.
அன்று நான் அடைந்த கர்வம், ஆங்கிலப் பாடத்தில் நான் வகுப்பில் முதலாம் மாணவனாக நிலைக்க உறுதுணையாய் இருந்தது. அந்த பள்ளியில் இருந்த காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த வெங்கட ராவ், விஸ்வநாதன், தாமோதரன், மற்றும் கால்பந்தாட்ட வீரன் தியோஃபிலஸ் இவர்களையெல்லாம் மறக்க முடியாது.

        பரீட்சை பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் ப்ரத்ர் மாண்ட்ஃபோர்ட், ப்ரதர் ஜான்        ஆஃப் த க்ராஸ், திரு. வேங்கடராம ஐயர், திடு. எம். பி. காமத், திரு. எஸ்.பி. காமத், திரு. தர்மராஜ ஸிவா மறக்க முடியாதவர்கள். ப்ரதர் மாண்ட்ஃபோர்ட் ஐந்தாம் ஃபார்ம் வகுப்பாசிரியர். ;ப்ரதர் ஜா ஆஃப் த க்ராஸ் ஆறாம் ஃபார்ம் வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்;.வேங்கடராம ஐயர் தமிழாசிரியர். எம்.பி. காமத் கணித ஆசிரியர், மற்றும் என்.சி.சி. ஆசிரியர், எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ்  மற்றும் திரு.சிவா விஞ்ஞான ஆசிரியர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் தொழிலை தெய்வமாக மதித்தவர்கள். மாணவர்களிடம் பெரும் அன்பு கொண்டவர்கள். ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவில் நிற்க வைத்த சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு குறிப்பாவது அவசியம். ஒரு முறை வகுப்பு பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கரும்பலகையில் வினாக்களை எழுதி அதற்கு பதில் எழுதப் பணித்திருந்தார்கள். நான் எப்போதும் முதல் பெஞ்சில் உட்காருபவன். அன்று பரீட்சைக்காக என்னைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.எனக்கு கரும்பலகையில் எழுதியது சரியாகத் தெரியாததால் அடுத்திருந்த மாணவனை எட்டிப் பார்த்து, கேள்விகளை தெரிந்து கொண்டேன். நான் காப்பி அடிப்பதாக எண்ணி தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். எனக்கு அழுகை அடக்க முடியவில்லை. நான் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வருபவன். ஆதலால் காப்பியடிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை என்று அழுது கொண்டே வாதாடினேன். என் நிலையைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் ப்ரதர் ஜான் என்னை சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்க்கச் சொன்னார். நான் சற்றே அருகில் சென்று பார்க்க முயன்றபோது,என்னைத் தடுத்து, இருந்த இடத்திலிருந்தே நேரம் பார்க்கச் சொன்னார். என்னால் முடியாததால், அவர் என்னிடம் என் கண் பார்வையில் குறையிருப்பதையும், அதை என் தந்தையிடம் கூறும் படியும் கூறி, என்னைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார். அப்போதுதான் என் கண் பார்வையில் குறை இருப்பது தெரிந்தது. இருந்தும் கண் பார்வையின் குறை அறியவும் கண்ணாடி அணியவும் அப்போது முடியவில்லை. பெங்களூர் வந்தபோதுதான் என் மாமா டாக்டரிடம் காட்டிக் குறையறிந்து கண்ணாடி அணிந்தேன். காலம் கடந்து பரிசோதனை செய்ததால் கண்ணாடியின் வீரியமும் அதிகமாக மைனஸ் ஆறு என்ற நிலையில் இருந்தது.

      கணக்கு ஆசிரியர், எம்.பி. காமத் ட்ரிக்னோமெட்ரி பாடம் நடத்தும்போது, ஒரு கதை சொல்லி பாடம் புரிய வைத்தார். அத்தை மாமன் மக்களை ஆங்கிலத்தில் கசின் என்று அழைப்பர். ஒரு முறை எல்லை மீறிய போது அந்தப் பெண், ah cos,..oh sin.  என்று சொல்லி அணைப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டாளாம். Ah Cos என்பது
ADJACENT SIDE /HYPOTANEUS  FOR COSINE என்றும்  OH SIN என்பது OPPOSITE SIDE / HYPOTANEUS  FOR  SINE என்றும் விளங்க வைத்தார். இதையே என் பேரன் விபுவுக்கும் நான் சொல்லிக் கொடுத்தேன். சயின்ஸ் ஆசிரியர் சற்றே குள்ளமானவர். தலைப்பாகை அணிந்திருப்பார். மெல்லிய குரலில் பேசுவார். அவர் பேசுவது கேட்க வேண்டுமானால் வகுப்பில் நிச்சயம் அமைதி காக்கப்பட வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். அவர் மாணவர்களுக்கு தரும் அதிகபட்ச தண்டனை, வகுப்பில் உள்ள சுவற்றில் பதிக்கப் பட்டுள்ள புத்தக அலமாரிக்கு அடியில் நிற்க வேண்டும். நேராக நிற்க இயலாது. சுவற்றுடன் சேர்ந்து கால்களை சற்றே மடக்கித்தான் நிற்க முடியும். தனிப்பட்ட முறையில் எல்லோரும் சுத்தமாக இருக்க வற்புறுத்துவார். பௌடர் ஸ்னோ போன்றவை உடம்பின் துர்நாற்றத்தை மறைக்கவா என்று கேள்வி கேட்பார். திரு.எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ் பாடம் நடத்துவார். THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH. என்ற காந்தியின் வாக்கினை எங்களுக்கு முறையாகப் பயிற்றுவித்தவர். சமுஸ்கிருதமும் தமிழுங் கற்று பாரதப் பண்பாட்டினை வளர்க்க வேண்டும் என்று பாடங்களூடே பயிற்றுவித்தவர் எங்கள் தமிழாசிரியர். இவர்களைத் தவிர பள்ளி கரஸ்பாண்டண்ட்  ஆக ப்ரதர் க்ளாடியஸ் இருந்தார். பள்ளி மாணவர்களை அவர்களுடைய குழந்தைகள் போல நடத்துவார். ஹூம்.! அது ஒரு கனாக் காலம். ! 


ST.ANTONY"S HIGH SCHOOL-ல் ஃபிஃப்த் ஃபார்ம் படித்துக் கொண்டிருந்தபோது
பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் நடித்தேன். ஆங்கில நாடகம். கடன்
வாங்கி ஏமாற்றியவன் அவனுக்காக வாதாடும் வக்கீலுக்கும் “பெப்பே”என்று 
கூறும் நகைச்சுவை நாடகம். நாடகத்தில் நடிக்க உடை வேண்டும்.கால்சராய்
(பேண்ட் )எதுவும் என்னிடம் இல்லை.அரைநிஜார்தான் இருப்பு. அதற்காக நான்
ஒருவனிடம் இரவல் வாங்கி அதை உடுத்த நான் பட்ட பாடு, இப்போதும் 
சிரிப்பாக வருகிறது.பேண்ட் இரவல் கொடுத்த பையன் என்னைவிட மிகவும் 
உயரமானவன். அவனுடைய பேண்ட் அளவு எனக்கு மிகவும் நீளமானது.
கணுக்கால் அருகே மடித்து என்னுடைய அளவுக்குக் கொண்டுவந்து உடுத்தி 
நடித்தேன். அந்த பேண்டின் நிறம் கூட நினைவிருக்கிறது.ஊதாவும் சிவப்பும் 
கலந்த நிறம். !நாடகம் நடிக்கும்போது அப்பா முன் வரிசையில் உட்கார்ந்து 
இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு நடிக்க பயம் ஏற்பட்டு, ஏதேதோ
கூறியிருக்கிறேன். அதுவே அந்த பாத்திரத்துக்கு ஏற்புடையதாக இருந்ததால் 
நன்றாக நடித்ததாய் பெயர் கிடைத்தது. ஒரு சமயம் அந்த அனுபவம்தான் 
பிற்காலத்தில் நான் நாடகங்கள் எழுதி, நடிக்கவும் ,இயக்கவும் உதவி 
செய்ததோ என்னவோ


 நாங்கள் படிக்கும்போது ஹிந்தியும் ஒரு பாடம். ஆனால் இறுதித் தேர்வுக்கு 
அதில் தேற வேண்டிய கட்டாயம் இருக்க வில்லை. அப்போது படித்த ஹிந்திப்
படம் இப்போதும் நினைவில் இருக்கிறது.”மானே ஹம்கோ ஜன்ம தியா ஹை. 
உசி கா தூத் பீகர் ஹம் படே ஹுவே ஹைன்”அந்த ஹிந்தி பண்டிட் வகுப்பு 
நடத்தும்போது அநேகமாக எல்லோரும் பெஞ்சின் மேல் இருப்போம். ஏதோ 
தோடா தோடா ஹிந்தி வருகிறதென்றால் அது அந்த ஆசிரியர் உபயம்.
                    -----------------------------------  

                    

 


Friday, December 23, 2011

சாமியே சரணம் ஐயப்பா...

                                           சாமியே சரணம் ஐயப்பா..
                                            -----------------------------------
                மோகன் ஜியும்  சுந்தர்ஜியும் சபரிமலைப் பயணம் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முதல் முறையாக 1970-ம் வருடம் சபரி மலைக்கு மகர ஜோதி காணச் சென்றிருந்தோம். மகர ஜோதியை ஆண்டவனின் ஜோதிஸ்வரூபமாய் நினைத்து கண்கலங்கி ,மெய் விதிர்த்து விம்மி விம்மி அழுதது , 1971-ம் வருடம் மீண்டும் அதே அனுபவம் பெற என்னைத் தூண்டி  48 நாட்கள் கடும் விரதம் இருந்து , இம்முறை என் மூத்த மகனையும் ( அப்போது அவனுக்கு ஐந்து வயது ) கூட்டிக் கொண்டு எங்கள் குருஸ்வாமியுடன் BHEL –ல் இருந்து சுமார் 40 பேருடன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் பயணப் பட்டோம். வயதானவர்களும் குழந்தைகளும் இருந்ததால் நேராக பம்பாவிலிருந்து மலை ஏற திட்டமிடப்பட்டது. கன்னி சாமிகளும் இருந்ததால் எருமேலி சென்று பேட்டை துள்ளிப் பின் பம்பா செல்ல தீர்மானிக்கப் பட்டது. போகும் வழியில் ஆலய தரிசனமாக நிறையவே கோவில்களுக்குச் சென்று எருமேலி போய்ச் சேர்ந்தோம். அப்போது எங்களை ஏற்றி வந்த பஸ் ட்ரைவர் பம்பா செல்லப் பெர்மிட் இல்லை என்றும் எருமேலியிலிருந்தே எங்களை திரும்பக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். என்னவெல்லாமோ தாஜா செய்து ( என்ன.. பணம் கொடுத்துத்தான் )ஒரு வழியாக பம்பா சென்று மலை ஏறி அய்யப்பன் தரிசனம் முடித்து திரும்பினோம். (இதை சொல்லவா இவ்வளவு பீடிகை. என்று நினைப்பது தெரிகிறது. ) இனிமேல்தான் கதையே. திரும்பும்போது குருவாயூர் வந்து நிர்மால்ய தரிசனம் காண திட்டம். இரவு சுமார் ஒரு மணியளவில் குருவாயூர் வந்தோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து பிறகு நிர்மால்ய தரிசனம் காணலாம் என்று நாங்கள் சிலர் பஸ்ஸிலேயே இருந்து விட்டோம். மற்றவர்கள் அங்கு நடை பெற்றுக்கொண்டிருந்த ‘கிருஷ்ணாட்டம் “ காணச் சென்றனர். அப்போது ஆஜானுபாகுவாக ஒருவர் எங்கள் பஸ்ஸில் ஏறினார், SORRY, ஒருவர் என்றுசொன்னது தவறு. ஒரு ஐயப்பஸ்வாமி ( நன்றாகக் குடித்திருந்தார் ) பஸ்ஸில் ஏறி , மலையாளத்தில் மிக நேர்த்தியான கெட்ட வார்த்தைகள் கூறிக்கொண்டே,பஸ்ஸின் சீட்டைக் கத்தியால் கீறி கிழித்துக் கொண்டிருந்தார். முரட்டு உருவத்துடன் இருந்த அவரிடம் நல்ல வார்த்தைகளில் பேசிப் பிரயோசனம் இல்லாதிருந்ததால்  அங்கே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. யாரும் வரவில்லை. அவரை வண்டியிலிருந்து கிழே இறக்கி விட்டு எங்களைப் போகச் சொன்னார்கள். இதற்குள் சிலர் அவரிடமிருந்த கத்தியை எடுத்துவிட்டால் அபாயமில்லை என்று கருதி  மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரைப் படுக்க வைத்தனர். சற்று நேரம் கழிந்ததும் மெள்ள அவரிடமிருந்த கத்தியை எடுக்க முயற்சி செய்யும்போது , திடீரென்று அவர் அருகிலிருந்தவரை காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார்.
கூட இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு அவரை அமுக்கிப் பிடித்து அவருடைய துண்டாலேயே அவரைக் கட்டி கொஞ்சம் ஆத்திரம் தீரப் புடைத்தனர் பிறகு அவரை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி பஸ்ஸை நகர்த்த முயன்றனர்.

                      அது கடை வீதியாக இருந்ததாலும் ஜன சந்தடியாக இருந்ததாலும் கூட்டம் கூடிவிட்டது. சிறிது நேரத்தில் “ ஒரு மலையாள ஐயப்பசாமியை தமிழம்மார்  அடிச்சுட்டுப் போகுன்னு “ என்று ஒரே களேபரமாகி பஸ்ஸைச் சுற்றி கலவரம் எழுந்தது. எங்களில் யாரையும் இறங்க விடாமலும் ஏற் வருபவரை அனுமதித்தும் கூச்சலும் குழப்பமுமாக “ பஸ்ஸின் காற்றை இறக்கவும் பஸ்ஸுக்குள் மண்ணை வீசி குத்து கொல்லு என்று கத்தவும் தொடங்கினர். அப்போது எங்கள் குருசாமி , அவரும் நல்ல பெர்சனாலிடி, வந்து என்ன செய்யலாம் என்று பேசலாம் என்றார். அதற்குள் அங்கு ஒரு தலைவன் உதயமாகி இருந்தான். ஐய்யப்பசாமி வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டதென்றும் அதை ஈடு செய்து நாங்கள் செல்லலாம் என்றும் உத்தரவு இட்டான். தரிசனம் எல்லாம் முடிந்து திரும்பும் எங்களிடம் இருந்த எல்லாப் பணத்தையும் (சுமார் ரூ.300-/ தேறியது என்று நினைவு )அந்தத் தலைவனிடம் கொடுக்க உடனே அவன் “ போலாம்..ரைட் “ என்று உத்தரவிட தலை தப்பியது என்று நாங்கள் திரும்பினோம்.



            அன்றிலிருந்து எனக்கு ஐயப்ப சாமிகள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கணிசமாகக் குறைந்து விட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் என் பேரன் மகன் மனைவியுடன் சபரிமலைக்குச் சென்றுவந்தேன். வசதிகள் கூடிவிட்டன. சபரிமலைப் பயணம் அவ்வளவு கடினமல்ல என்று தோன்றுகிறது. ஆனால் கூட்டம் கும்மி யடிக்கிறது.


          என்னவெல்லாமோ எழுத மனம் விழைகிறது. ஆனால் உண்மை 
பக்தர்கள் மனம் நோகுமே என்று தவிர்க்கிறேன்.
------------------------------------------------------------                          

Wednesday, December 21, 2011

ஈ-யின் பெயர் வந்த கதை.

                                   ஈ-யின் பெயர் வந்த கதை.
                                   ----------------------------------


சில நாட்களுக்கு முன் திரு. ஹரணி அவர்கள் புதிய ஆத்திசூடி படித்தபோது
குழந்தைகளுக்கு என்று புதியதாய் ஏதும் எழுத முடியாவிட்டாலும், இருக்கும் பழையதே பலருக்கும் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது. தெரிந்தவர்கள் தாவிச் சென்று விடுவார்கள். தெரியாதவர்கள் படிக்கலாமே.

        பாடம் என்று படிக்கச் சொன்னால் குழந்தைகள் பின் வாங்குவார்கள். அதையே கதையாகவோ, பாடலாகவோ சொன்னால் ஆர்வத்தோடு கற்கிறார்கள். இதை நான் என் ஏழு வயது பேரனுக்குச் சொன்னபோது ஆர்வமுடன் கேட்டான். கேட்டதை புரிந்தும் கொண்டான். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றியது இக்கதை. ஒரு ஈ தன் பெயர் அறியும் முயற்சிதான் பாடல். இதன் மூலம் தொடர்புகள் புரிந்து கொள்ள்ப்படுகின்றன. முதலில் தன் பெயர் அறிய அது ஒரு கன்றிடம் கேட்க அது தெரியாமல் தன் தாயைக் காட்ட ஒன்றின் தொடர்பு அறியும் விதமாக போகும் கதை இனி அப்பாடல்.

கொழு கொழு கன்றே என் பெயரென்ன,?( எனக்குத் தெரியாது. என் தாயிடம் கேள்)
கொழுகொழு கன்றே,கன்றின் தாயே என் பெயரென்ன.?(என்னை மேய்க்கும் இடையனைக் கேள்.)கொழுகொழுகன்றே,கன்றின் தாயே, தாயை மேய்க்கும் இடையா என்பெயரென்ன.?( இப்படியே தொடர்புகள் கூறும் விதமாக

கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
தாயை மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே,
கோலிருக்கும் மரமே,
மரத்திலுள்ள கொக்கே,
கொக்கு வாழும் குளமே,
குளத்தில் இருக்கும் மீனே,
மீனைப் பிடிக்கும் வலையா ,
வலையன் கைச் சட்டியே,
சட்டி செய்யும் குயவா,
குயவன் கை மண்ணே,
மண்ணில் விளையும் புல்லே,
புல்லை தின்னும் குதிரையேஎன் பெயரென்ன. ?

உன் பெயரா.? ஈஈஈஈஈஈஈஈஈ- என்றதாம் குதிரை. 
தன் பெயர் அறிந்த மகிழ்வில் பறந்ததாம் ஈ.
---------------------------------------






Sunday, December 18, 2011

பயண அனுபவங்கள் ...

                                    பயண அனுபவங்கள்.
                                   ------------------------------

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


                  என் பள்ளி நினைவுகளை ஒரு தனிப் பதிவும் , பாலக்காட்டில் ஒரு வீட்டில் எரியும் நந்தா விளக்கு பற்றிய ஒரு இடுகையும் வெளியிடஎழுதியுள்ளேன்.
---------------------------------------------------------------------------        
    
    

         

Thursday, December 15, 2011

அரண்டவன் கண்ணுக்கு....

                                     அரண்டவன் கண்ணுக்கு
                                    ------------------------------------
                                           (  ஒரு சிறு கதை )

அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர்
விடுதி என்று ஏதும் தனியாக இல்லாததால், ஆஃபீஸில் ஒரு
அறையையே  விருந்தினர் விடுதியாக உபயோகப்படுத்தினர்
பணி நடக்கும் இடத்துக்குப் போக வரவும், போக்குவரவு
வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதால்,அவரை
அங்கே தங்க வைத்தனர்.

வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு
திரைப்படமும் பார்த்து இரவு பதினோரு மணியளவில் அறை
வந்தவர், சற்று நேரத்தில் உறங்கி விட்டார். அவருக்கு திடீரென
“ஜல் ஜலங்” என்ற சப்தம் கேட்டு, கண்முழிப்பு வந்தது. உடல்
எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து
சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் பயத்தால் முடியாமல்                                                                        
போய்விட்டது. சிறிது நேரத்தில் எல்லாம் பிரமையாய் இருக்கும்
என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க எத்தனித்தார். சற்று
நேரத்தில் மறுபடியும் “ஜல்ஜலங் “என்ற சப்தம் கேட்டது அவருக்கு
பயத்தில் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது போலிருந்தது.
இருட்டில் பயம் அதிகரிக்கவே கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப்
போட்டார். ஃபானின் வேகத்தை கூட்டினார். மனம் ஒரு நிலைப்பட
மறுத்தது. என்ன என்னவோ எண்ணங்கள் ..கந்தர் சஷ்டிக் கவசம்
சப்தமாகச் சொல்லப் பார்த்தார். வாயசைந்ததே தவிர வார்த்தை
வெளிவரவில்லை. ஒருபேயோ, பிசாசோ வாழும் இடத்தில் தங்க
வைத்து விட்டார்களே என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்
கோபமாய் வந்தது. ஆஃபீஸுக்கு ஒரு வாட்ச் மேன் கூடக்
கிடையாது. இந்த நேரத்தில் யாரிடம் போவது.?எங்கே செல்வது
என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எல்லோரையும்ஒருவழியாகத்
திட்டித் தீர்த்தார். காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது.
முதலில் இந்த இடத்தை விட்டு எங்காவது செல்ல வேண்டும்
என்று தன்னுடைய பெட்டியைத் தன் உடமைகளால் நிரப்பி
வெளியே கிளம்பினார்.

வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப் பெண் மாடிக்குச்
செல்லும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்திலிருந்து எழுந்து
வந்தாள். அவள் நடக்கும்போது அவள் கை அசைவிலும் கால்
அசைவிலும் “ ஜல், ஜலங் “ என்று சப்தம் கேட்டது.
-------------------------------------------------------------------------
     

Monday, December 12, 2011

பொறியாளரும் நிர்வாகியும்....

                        பொறியாளரும் நிர்வாகியும்.
                        ---------------------------------------
                         ( எங்கோ கேட்டது. பதிவாகிறது )


காற்றடைத்த பலூனில் மாதொருத்தி
ககனமார்க்கமாகப் பறக்கையில்
போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்
அறியாமல்,சிறிதே காற்றிறக்கிக் கீழே
பறந்தவள் பார்த்தாள் ஆங்கொரு மனிதனை.
இன்னும் சற்றே கீழே பறந்துச் சத்தமாகக்
கேட்டாள்,” ஐயா, நான் எங்குள்ளேன்.?
ஒரு மணிநேரம் முன்பே ஒருவரை நான்
சந்தித்திருக்க வேண்டும். போகும் திசை
புரியாமல் நானும் விழிக்கிறேன்.”

“நீங்கள் காற்றடைத்த பலூனில் தரையிலிருந்து
சுமார் முப்பது அடி உயரத்தில் ,நாற்பது டிகிரி
வடக்கு லாடிட்யூடிலும் அறுபது டிகிரி
கிழக்கு லாஞ்சிட்யூடிலும் பற்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்”பட்டென்று பதில் வந்தது.

“ நீங்கள் ஒரு பொறியாளரோ.?”

“ ஆம். எப்படிப் புரிந்து கொண்டீர்கள்.?”

“ நீங்கள் கூறியதெல்லாம் சரியான குறியீடுகள்.
 ஏதும் புரியாத புதிராய்,எனக்குதவாத பதில்கள்.
 நான் இன்னும் காணாமல்தான் போகிறேன்.
 போதாக்குறைக்கு உங்களால் இன்னும் தாமதம்.
 இது போதாதா புரிந்து கொள்ள. “

“ நீங்கள் ஒரு உயர்மட்ட நிர்வாகியோ.?”

“ ஆம். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.?”

“எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்று
 புரியாமல் இருக்கிறீர்கள்.கொடுத்த வாக்கைக்
 காப்பாற்ற எந்த சிந்தனையும் இல்லாமல்
 கீழிருப்பவர் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
 எதிர்பார்க்கிறீர்கள் .இதற்கு மேலும் என்ன
 வேண்டும் உங்களைக் கண்டுகொள்ள.”
--------------------------------------------------------

Saturday, December 10, 2011

அம்மா..

                                            அம்மா
                                            ----------

( ஒரு திருமணத்துக்காக நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்னை 
   சென்றிருந்தோம். என் முதல் பேரன் தான் வரவில்லை என்றும் தனியாக
   சில நாட்கள் இருக்க விருப்பம் என்று கூறினான். நாங்கள் திரும்பி வந்த 
   போது அவன் தாயின் பிரிவை ஆங்கிலத்தில் எழுத்தில் வடித்திருந்தான்.
  அதன் தமிழாக்கமே இது.)


         
                தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
-------------------------------------------------------



                       

Tuesday, December 6, 2011

சேவை மனோபாவம்..

                                        சேவை மனோபாவம்
                                         -----------------------------
  வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.

 அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.



       இப்படியாக ரூ.15-/ உடன் 1956-ம் வருடம் ஏப்ரல் 28-/ம் தேதி, பெங்களூர் வந்தேன். என்னிடம் ஒரு சிறிய ட்ரங்க் பெட்டி என் உடைமைகளுடனும், என் சான்றிதழ் , நியமன உத்தரவு போன்றவற்றுடனும் இருந்தது.

       பெங்களூரில் ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும். எங்கு போவது.?எனக்கு பெங்களூரில் கண்டோன்மெண்டில்( கொஞ்சம் முன்னே வந்து போன பழக்கத்தில் )தங்கலாம் என்றும், அதுவே எஸ். ஜே. பாலிடெக்னிக் சென்று வர சௌகரியமாக இருக்கும் என்றும் தோன்றியது. ரயிலில் வந்து கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு குதிரை வண்டிக்காரரிடம், ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் சிவாஜி நகரில் எங்காவது தங்குமிடம் காட்டுமாறும் வேண்டிக்கொண்டேன். அவர் என்னை ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடின் ஆரம்பத்தில் இருந்த அசோகா லாட்ஜ், என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில், மாதத்துக்கு தங்கும் முறை அங்கில்லை என்றும், தினமும் தங்க ரூ.30-/ க்கும் மெலாகும் என்றும் கூறினார்கள். வேறிடம் காட்டுமாறு குதிரை வண்டிக்காரரிடம் வேண்டிக்கொண்டேன் அவரும் என் நிலைமை நன்றாகப் புரிந்து கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் அருகிலுள்ள இப்ராஹிம் சாஹிப் தெருவில் இருந்த ராஜா லாட்ஜ் என்ற இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில் மூன்று பேர் தங்கும் அறையில் எனக்கு ஒரு கட்டில் தரப்படும் என்றும் மாத வாடகை ரூ.10-/ என்றும் கூறினார்கள். நானும் மாதவாடகை ரூ.10-/ அட்வான்ஸாகக் கொடுத்தேன். லாட்ஜில் காலை சிற்றுண்டிக்கும் மதிய இரவு உணவுக்குக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். என் தங்கும் பிரச்சினை முடிய என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அன்று மாலை டஸ்கர் டௌனில் இருந்த என் சகோதரி ராஜி வீட்டுக்குச் சென்று விவரங்கள் கூறினேன். என் பள்ளி நண்பன் தாமோதரன் வீட்டை விசாரித்து அவனைப் போய் பார்த்தேன். அவன் என்னை மறுநாள் வாடகை சைக்கிளில் எச்.ஏ.எல். இருக்குமிடம் காண்பிக்கக் கூட்டிச் சென்றான். நான் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் 10.. அல்லது 11 கிலோமீட்டர் தூரத்தில் எச்.ஏ. எல் இருந்தது.

                  மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல் டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும் வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின் பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன் என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தைக் கொடுத்தனர் மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம். அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை 4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும் கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில் எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் அறிந்தோம்.


 இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வாகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்குக் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலாளியை வரவழைத்து அவரைக் கடுமையாய் எச்சரித்து அனுப்பினார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது

விடுமுறைக்கு பெங்களூர் சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும் சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்  இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத திறந்த வெளியாக இருந்தது.

நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்  இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster  என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபல்கள் ஒரு வாரம்
 ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER  விவரம்.

முன்பின் தெரியாத ஒரு சிறுவனுக்கு உதவியாய் இருந்த அந்தக் குதிரை 
வண்டிக்காரரும் , ஒட்டலில் தங்கி யிருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது
ஆறுதல் கூறிஅவன் துயரங்களைத் துடைக்க உதவும் மனப் பான்மையுள்ள 
போலீஸ் அதிகாரியும் அரசின் தலைமைத் தபால் நிலையம் ஆனாலும் ஊர்
பேர் தெரியாத ஒரு இளைஞன்உதவி என்று வந்தபோது எந்த சட்டமும் 
பேசாமல் உதவி புரிந்த அந்தத் தலைமைத் தபால் நிலைய போஸ்ட் 
மாஸ்டரும் சேவை மனப் பான்மையுடனே செயல் பட்டனர் என்று எண்ணும் 
போது “ ஓ, அது அந்தக் காலம் “என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
-----------------------------------------------------------------.  











Sunday, December 4, 2011

ஒரு திகில் அனுபவம்....ஓ..பாம்பு.!

                                               
                                                         ஓ...பாம்பு.......
                                                         --------------

இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில
நாட்கள் ஓட்டலில் தங்கி விட்டு, பொன்மலைப் பட்டியில் ஒரு
நண்பன் மூலம் வீடு பார்த்தான். பழைய வீடாயிருந்தது.கதவு
களிலும் கதவு நிலைகளிலும் மரம் உளுத்துப் போனதுபோல்
இருந்தது. பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டகை இருந்தது. மாலை
வேளைகளில் பாட்டு கேட்கும்.மனைவி மற்றும் பிறந்து நான்கே
மாதங்களுமான குழந்தையுடனும் குடித்தனம் தொடங்கி
விட்டான். வாழ்க்கைப் படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு
இருந்தது. ஒரு நாள் இரவு, அழுதுவடிந்து கொண்டிருந்த விளக்கு
வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின் பின்புறம் போவதைப்
பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள். என்ன ஏது என்று தீர்க்க
மாகச் சொல்லத் தெரியவில்லை. வேகமாக நெளிந்து ஊர்ந்து
சென்றதுபோல் இருந்தது என்றாள்.என்னதான் அது என்று வீடு
முழுவதும் தேடிப் பார்த்தும், எதுவும் தென்படவில்லை. சமையல்
அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்
அடியில் ஒரு ஓட்டை இருந்தது. அதன் உள்ளிருந்து அவ்வப்போது
ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாக இருந்தது.
பாம்பின் நாக்கு என்றே எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய்
விட்டார்கள். என்ன ஏது என்று தெரியாமல் கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு, வீட்டில் பாம்பும் இருந்தால்.....இவன் கையில்
ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான்.
அவ்வப்பொது நாக்குதான் வெளியில் தெரிந்ததே தவிர, அந்தப்
பாம்பு வெளியே வரவில்லை. அந்த ஓட்டையில் ஒரு நீளமான
குச்சியை வைத்துக் குடைந்தான்.நீளமான குச்சி உள்ளே போகும்
அளவுக்கு பெரிய ஓட்டையாக இருந்ததால்தானோ என்னவோ
அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும். ஊதுபத்தியைக்
கொளுத்தி அந்த ஓட்டைக்குள் புகை போகும்படி செய்து பார்த்தும்
அது வெளியே வரவில்லை. இரவு நேரம் போய்க் கொண்டிருந்தது..
குழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன்
மனைவியும் படுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. படுப்பதற்கு முன்பு
அந்தக் கதவின் நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டுப்
பரப்பினார்கள்.கண் அயர்ந்து தூங்கி விட்டால் , அது தெரியாமல்
வெளியில் வந்து விட்டால்.,தடம் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாமே. அன்று இரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது. அது
வெளியில் போனதற்கான தடம் தெரிய வில்லை. விடிய்ற்காலை
ஒரு பக்கம் இவனும் மறுபக்கம் அவளும் அது வெளியே வரக்
காத்திருந்தனர். அவள் கையில் கழி. இவன் கையில் இரும்புச்
சட்டுவம். அது எப்படியும் வெளி வரும்; வந்தவுடன் ஒரே போடு,
என்பதாகப் ப்ளான். கண்களில் எண்ணையை விட்டுப் பார்ப்பது
போல் கவனமாகக் கண் காணித்துக் கொண்டிருந்தார்கள். அது
உள்ளேதான் இருந்தது வெளியில்போனஅடையாளம்ஏதுமில்லை
திடீரென்று அது வெளியில் ஓடியது. என்ன ஏது என்று பார்க்காமல்
அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு. வெளியே வந்த அது
இரண்டாக வெட்டுப்பட்டு இருந்தது, இறந்தது. பார்த்தால் அது ஒரு
அரணை.!
--------------------------------------------------------------------------------------                                   

Thursday, December 1, 2011

இப்படியும் சிலர்.....

                                            இப்படியும் சிலர்
                                             ................................
                                                   ( 1 )

     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      “நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.

                                                        ====================
                                                      ( 2 )

 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”

 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”

 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”

 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”

  “ஏன், தமிழில்தான். “

 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “

                                -------------------------------------
                                                      ( 3 )

 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”

 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”

 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”

 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”

 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”

 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
    சண்டை போடவேண்டும்?”

 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”

 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’

 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”

 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “

 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”

இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.

                                        ==============================
                                                   ( 4 )

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
    நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
    பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
    கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
    சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
    பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
    பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
    இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
    இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
    சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     விட்டேன்.

 “ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
                மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
                என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
                அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
                வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
                செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
                நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
                வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
                கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
                இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
                நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
                கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
                வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
              பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
              பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               பேசினீர்களா.?”

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
              அவள் கொடுக்கும் இடம். “

நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
                                                      ( 5 )

“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”

“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”

“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
                                          ============================