காதலுக்கு வயதில்லை
---------------------------------
காதல் கவிதை ஒன்று எழுத எண்ண மனதில்
வந்துதித்த கற்பனைக் கண் கண்ட கன்னி
என்றோ நான் கண்டெடுத்துக் கைத்தலம்
பற்றிய சுந்தரி, என் துணைவி யன்றோ.
இவளா என் பாட்டில் அடங்குவாள்.?
என் நலம் காணும் நாயகி
நான் நாளும் மதிக்கும் நல்லாள்,
என் இமையுள் உறைகின்ற மங்கை
ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்
மிளிர்கின்ற மாணிக்கம் நான்
வாழப் பிடியாய் இருப்பவள்
தஞ்சம் பிறிதில்லை, நெஞ்சம் நினைக்கவே
அஞ்சும் இவளின்றி நானில்லை.
மொழிக்குள் அடங்காது என் விழிக்குள்
அடங்கும் இச்செங்கமலத் திரு உரு பற்றி
அன்றிசைத்த பாடலில் உடலழகு முன் நிற்கும்.
நிலவைப் பழிக்கும் முகம்
அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்
படர்கொடி வெல்லும் துடியிடை
இடர் சேர்க்க இடையிடையாட
இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை
கூறப் போனால் அக அழகு
மாற்றேற்ற மெருகு கூடியே உள்ளது.
காதலுக்குக் கண் இல்லை என்பர். –நான்
ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.
-------------------------------------------- . .