Tuesday, September 30, 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -9


                                    கீதைப்பதிவு  அத்தியாயம் -9
                                    ---------------------------------------

                                             

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
ஸ்ரீ பகவான் சொன்னது
எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்.(1)
இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து;. மறைபொருளுள் மேலானது.;தூய்மை தருதலில் சிறந்தது.;கண்கூடாக உணர்தற்குரியது.;தர்மத்தோடு கூடியது.; செய்தற்கு மிக எளியது.; அழிவற்றது.(2)
எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.(3)
அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை.(4)
பூதங்கள்  ( உண்மையில் ) என்னிடத்து நிற்பவைகளல்ல.என்னுடைய ஈசுவர மகிமையைப் பார்.! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தும் இல்லை.(5)
எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலை பெற்றிருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்து இருக்கின்றன என்று தெரிந்து கொள்,(6)
குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்ப துவக்கத்தில் நான் அவைகளை தோற்றுவிக்கிறேன்.(7)
என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து, சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள்  யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்(8)
தனஞ்செயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனைப் போல் உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்க மாட்டா.(9)
குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது, ஸ்தாவர ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது.இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது.(10)
என்னுடைய பர சொரூபத்தையும் நான் உயிகளுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.(11)
வீண் ஆசையுடையவர்கள், பயன்படாச் செயலாளர்கள், கோணலறிவு உடையவர்கள், விவேக மில்லாதவர்கள்.மையலூட்டுகிற ராக்ஷச, அசுர இயல்பை அடைகின்றனர்.(12)
பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது, என்னை வழிபடுகின்றனர்(13)
எப்பழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும் பக்தியுடன் நமஸ்கரிப்பவர்கள் ஆகியும் நித்திய யோகிகள் என்னை உபாசிக்கிறார்கள்.(14).
ஞான  யக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும், என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்- இத்தனை விதங்களில் உபாசிக்கிறார்கள்.(15)
நானே கிரது என்ற வைதிக கருமம்;யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்;ஔஷதம் நான்;மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே.(ஸ்வதா=பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவு; கிரது=வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு வ்கை கர்மம் வேட்டல்=வேள்வி வேட்டல் எனும் வினையானது ஹுதம் எனப்படுகிறது)(16)
இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும்,தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.(17)
புகலிடம், வளர்ப்பவன், உடையவன். சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம். தோழன், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம்,அழியாத வித்து.(18)

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும், ஸத்தும், அஸத்தும் நானே.(19)
மூன்று வேதங்களை அறிந்தவர்கள். யாகங்களால் என்னைப் பூஜித்து, சோம பானம் செய்து, பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.(20)
அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்தபின்பு மண்ணுலகில் புகுகிறார்கள்.இங்ஙனம் மூன்று  வேத நெறிகளைப் பின் பற்றும் போக பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்(21)
எனக்கு அன்னியரல்லாதவராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகின்றேன்.(22)
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்கு கிறார்கள்.(23)
நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும்( உண்பவன்) பிரபுவாகவும் (தலைவன்) இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர்(24)
தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்.பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களைப் பெறுகின்றனர், பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர், என்னைப் பூஜிக்கிறவர்கள் என்னையே எய்துவார்கள்.(25)
யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரைப் பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனத்தானனது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்.(26)
குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும்,ஏது ஹோமம் பண்ணினாலும். எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.(27)
இங்ஙனம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய், சன்னியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடு பட்டு என்னை அடைவாய்.(28)
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன்.எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால் என்னை பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர், நானும் அவர்கள்பால் உள்ளேன்.(29)
கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும்.ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்(30)
விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்.நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.(31)
பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.(32)
புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையும் பற்றிப் பின்பு பேசுவானேன்.? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னைப் பஜிப்பாயாக.(33)
மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு.என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதி படுத்தி என்னையே அடைவாய்.(34)
                  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் நிறைவு.         .           



    .
                          
 

Saturday, September 27, 2014

கற்பிக்கும் காணொளிகள்


                                 கற்பிக்கும் காணொளிகள்
                                 ------------------------------------
அண்மையில் திருமதி கீதா சாம்பசிவம் ஒரு பதிவில் பறவைகளைப் பற்றி எழுதி இருந்தார் பறவைகள் என்றபோது எனக்கு வந்திருந்த ஒரு காணொளியைப் பகிர்கிறேன்

 விலங்குகளுக்கு  பகுத்தறியும் சக்தி உண்டா ? இந்த வீடியோவைப் பாருங்கள்.


கெஞ்சினால் மிஞ்சும் , மிஞ்சினால் கெஞ்சும் என்பது நினைவுக்கு வருகிறது.


இந்த வீடியோக்களைக் கண்டவுடன் உங்களுக்குத் தோன்றியதைப் பின்னூட்டத்தில் பகிரலாமே

நவராத்திரியை முன்னிட்டு


Thursday, September 25, 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -8


                                    கீதைப் பதிவு  அத்தியாயம் - 8
                                     ----------------------------------------



அக்ஷரப்ரஹ்ம யோகம்
அர்ஜுனன் சொன்னது
ஓ புருஷோத்தமா, அந்தப் பிரம்மம் யாது, அத்யாத்மம் எது, கர்மம் என்பதுயாது, அதி பூதம் என்று சொல்லப் படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப் படுகிறது.?(1)
மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்.?அவர் எப்படி இருக்கிறார்,? தன்னடக்கம் பழகியவர்களால் மரணகாலத்திலும் நீர் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்.?(2)
ஸ்ரீபகவன் சொன்னது
அழிவற்றதாயும் மேலானதாயும் இருப்பது பிரம்மம். அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் ( தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ளும் குணம்) என்று சொல்லப் படுகிறது உயிர்களை உண்டு பண்ணி, நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மம் எனப்படுகிறது.(3)
உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப் படுகிறது. புருஷன்(அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக் கொண்டு இருப்பவன்)அதி தெய்வம் (ஹிரண்ய கர்ப்பன், எல்லோருக்கும் முன்பே உடலை எடுத்தவன், சுயம்பு) எனப்படுகிறான்.இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன். (ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுக்கும்போது யக்ஞம் உச்சஸ்தானம் பெறுகிறது.(4)
 மரண காலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு, உடலைத் துறந்து, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான்,இதில் ஐயமில்லை.(5)
குந்தியின் புதல்வா, இறுதிக் காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ எப்பொழுதும் அப்பொருளைப் பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.(6)
ஆகையால் சர்வகாலமும் என்னை நினைத்துக் கொண்டே போர் புரி., மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.(7)
பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்பியாசம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரமபுருஷனை சிந்திக்கிறவன் அப்புருஷனை அடைகிறான்.(8)
முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவுக்கும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அக்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும் உறுதியான மனத்தோடும் யோக பலத்தோடும் புருவத்தின் மத்தியில் பிராணன் முழுதையும் வைத்து மரண காலத்தில் யார் நினைக்கிறானோ அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான்.(9, 10)
வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனர், பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனர், எதை விரும்பி அவர்கள் பிரம்மசரியத்தைக் கடை பிடிக்கின்றனர், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்(11)
பொறி வாயில் யாவையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைத்திருந்து, “ஓம்என்கிற ஏகாக்க்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ, அவன் பரமகதியைப் பெறுகிறான்.(12,13)
பார்த்தா,வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.(14)
பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை.(15)
அர்ஜுனா, பிரம்ம லோகங்கள் வரையில் உள்ள உலகங்களுக்கு மறு பிறப்புண்டு,குந்தியின் மைந்தா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை.(16)
ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஒரு இரவு என்றும் அறிபவர், இராப்பகலின் தத்துவத்தை அறிப்வர் ஆகின்றனர்.(17)
(பிரம்மாவின்) பகல் வரும்போது, தோன்றா நிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்போது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன.(18)
அர்ஜுனா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும்போது தன் வசமின்றி ஒடுங்குகிறது.பகல் வரும்போது வெளிப்படுகிறது.(19)
ஆனால் அந்த அவ்யக்த்ததைக்(தோன்றும் அனைத்தும் தோன்றாநிலைக்குப் போவது) காட்டிலும் மேலான, நிலைத்துள்ள அவ்யக்தம் ஒன்று உளது. உயிர்களெல்லாம் அழியும்போதும் அது அழிவதில்லை.(20).
அவ்யக்தம் ,அக்ஷரம் என்று சொல்லப் படுவதை பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து (உயிர்கள்) திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.(21)
அர்ஜுனா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப் பட்டும் இருக்கின்றனவோ அந்த பரம புருஷன் அனன்ய பக்தியால் (ஒரே குறியுடைய ) அடையப் படுகிறான்.(22)
பரதகுலப் பெருமகனே, எக்காலத்தில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தி அடைகின்றனரோ, எக்காலத்தில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ அக்காலத்தைச் சொல்லுகிறேன் (23)
தீ, ஒளி ,பகல், சுக்கில பக்ஷம் , உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் இவைகளில் உடலை நீத்துப் போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகின்றனர்.(24)
புகை, இரவு கிருஷ்ணப்க்ஷம், தக்ஷிணாயணத்தின் ஆறு மாதங்கள்-இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவி அடைகிறான்.(25)
ஒளியும் .இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று எண்ணப் படுகின்றன.ஒன்று பிறவாமைக்குப் போவது, மற்றொன்று பிறப்பைத் த்ருவது.(26)

இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோகத்தை அடைகிறதில்லை.ஆகையால் அர்ஜுனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாய் இரு..(27)
இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பர நிலையை அடைகிறான்(28)
               அக்ஷரப் பிரம்ம யோகம் நிறைவு.  
 

 

Tuesday, September 23, 2014

என் கேள்விக்கு என்னபதில்....


                 என் கேள்விக்கு என்ன பதில்.. ?
                 -----------------------------------------                                
.
நண்பர் ஒருவர் பதிவினில் வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்

வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 

தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே

ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு  
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி

பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

கேள்வி இதோ. எந்தப் பதிவரின் வரிகள் என்னை எழுத வைத்தது? ஒரு க்ளூ தருகிறேன் . என் அந்தப் பதிவுக்கு இந்த வரிகளுக்கு உரியவர் வருகை தரவில்லை. தந்திருந்தாலும் பின்னூட்டமெதுவும் இடவில்லை.ஒரு வேளை அவர் இப்பதிவுக்கு வருகை தந்தாலும் இது அவரது வரிகள் என்று கூறாமல் கருத்திட வேண்டுகிறேன் பதிவுகளில் எழுதுவதை எத்தனை பேர் ஊன்றிப் படிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசின்ன டெஸ்ட்.
(நான்கைந்து நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் வலைப்பக்கமே வர முடியவில்லை. வந்ததும் கனமான கீதைிப் பதிவுக்குப்பதில் சற்று மாற்றத்துக்காக இது )
.

Thursday, September 18, 2014

கீதைப் பதிவு-அத்தியாயம் 7


                                     கீதைப் பதிவு-அத்தியாயம் -7
                                     ---------------------------------------

ராதா கிருஷ்ணா-ராஜஸ்தானி ஸ்டைல்-கண்ணாடி ஓவியம்



ஞானவிக்ஞான யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடத்து அடைக்கலம் புகுந்தவனாய், ஐயமற என்னை முற்றும் அறிவது எங்ஙனமென்று சொல்லக் கேளாய்(1)
விக்ஞானத்த்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்கிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை.(2)
ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மன நிறைவின் பொருட்டு முயலுகிறான்.முயலுகின்ற பெரு வாய்ப்பு உள்ளோர்களில் யாரொ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.(3)
நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாகஎன் பிரகிருதி பிரிவு பட்டிருக்கிறது.(4)
இது என்னுடைய கீழான பிரகிருதி.இதினின்று வேறானதும், உயிர் ஆவதுமாகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. தோள்வலியோய் இந்த ஜகத் ஆனது இதனால் தாங்கப் படுகிறது.(5)
உயிர் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து உண்டானவை என்று அறிவாயாக. நான் ஜகத் முழுவதன் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்(6)
தனஞ்செயா, எனக்கு மேலானது வேறு எதுவும் இல்லை.நூலிலே மணிகள் போன்று இவை யாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன.(7)
குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திர சூரியர் களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும்  ஓங்காரமாகவும், வானில் ஓசையாகவும், மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கிறேன்.(8)
மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9)
பார்த்தா, எல்லா உயிர்களின் நிலைபேறுடைய வித்து என்று என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும் தேஜஸ்விகளுடைய தேஜஸ் ஆகவுன் நான் இருக்கிறேன்.(10)
பரதத் தலைவா,பலவான்களிடத்துக் காமமும்(புலப்படாத பொருள் களைப் பெற விரும்புதல்) ராகமும் (புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல்) நீங்கப் பெற்ற சாமர்த்தியமாக நான் இருக்கிறேன்.உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.(11)
சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடத்துத் தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை, அவைகள் என்னைச் சார்ந்து இருக்கின்றன.(12)
இந்த மூன்று குணங்களால் ஆகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிகிறதில்லை.(13)
குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவ மாயையானது உண்மையில் தாண்ட முடியாதது.யார் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகின்றனர்.(14)
பாபச் செயலை உடையவர், மூடர், மக்களுள் கடைத் தரமானவர், மாயையினால் ஞானம் அபகரிக்கப் பட்டவர், அசுர இயல்பைப் பற்றி நிற்பவர்-இத்தகையோர் என்னைப் போற்றுகின்றதில்லை.(15)
பரதகுலப் பெருமகனாகிய அர்ஜுனா, துன்புற்றவன் , ஞான வேட்கை உடையவன் பொருளின்பம் தேடுபவன், ஞானி ஆகநான்கு விதமான அறச் செயலாளர்கள் என்னைப் போற்றுகின்றனர்.(16)
அவர்களுள் இடையறா யோகம் பூண்டு மாறாத பக்தி பண்ணும் ஞானி மேலானவன்.ஏனென்றால் நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்.(17)
இவர்கள் எல்லாரும் நல்லார்களே.ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைப் பிடித்திருக்கிறான்.(!8)
பல பிறவிகளுக்குப் பிறகே “யாவும் வசுதேவ சொரூபம்என்று ஞானி வணங்கி என்னை வந்தடைகிறான்.அத்தகைய மஹாத்மா கிடைப்பதற் கரியவன். (19)
பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு , அது அதற்கு ஏற்ற நியமத்தை கையாண்டு பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர்.(20)
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன்(21)
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதனின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.(22)
ஆனால் அற்ப அறியாதவர்களாகிய அவர்கள் அடையும் பயன் அல்பமானதாகிறது. தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர்.(23)
என்னுடைய அழிவற்ற , ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(24)
யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான், எல்லோருடைய அறிவுக்கும் எட்டுகிறதில்லை.பிறவாத, அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை.(25)
அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய உயிர்களை எல்லாம் நான் அறிவேன்.ஆனால் என்னை யாரும் அறியார்.(26)
பகைவரை வாட்டுகின்ற பாரதா,விருப்பு வெறுப்பினின்று உண்டாகும் துவந்துவ மோகத்தால்(இருமை மயக்கத்தால்)  பிறக்கும்போதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன(27)

ஆனால் புண்ணிய கருமங்களை உடைய எந்த ஜனங்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ, துவந்த மோகத்தில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகின்றனர்(28)

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த பிரம்மத்தையும் அத்யாத்மம்(ஆத்ம சொரூபம்) முழுவதையும் , கர்மம் அனைத்தையும் அறிகின்றனர்.(29)

யார் என்னை அதிபூதத்துடனும், அதிதெய்வத்துடனும், அதி யக்ஞத்துடனும் கூடினவனாக அறிகிறார்களோ,யோகத்திலே நிலை நின்ற மனதை உடைய அவர்கள் சாகும் தறுவாயிலும் என்னை அறிகின்றனர்.
                 ஞான விக்ஞான யோகம் நிறைவு.  

                                            

Tuesday, September 16, 2014

கடிகார நினைவுகள்


                                       கடிகார நினைவுகள்
                                      ----------------------------


ஒரு செய்தி படிக்கும்போது மனம் அந்த செய்தியை ஒட்டிய நினைவுகளில் சங்கிலித் தொடர்போல் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது அந்த மாதிரியான நினைவின் ஒரு சஞ்சரிப்பே இப்பதிவு. இரண்டு நாட்களுக்கு முந்தைய THE HINDU பெங்களூர் பதிப்பில் HMT  கைக்கடிகாரங்களின் விற்பனை இரண்டு மூன்று நாட்களாகக் கூடி யிருக்கிறது என்றும் தும்கூரில் இருக்கும் அந்த தொழிற்சாலை மூடப்படலாம் எனவும் செய்தி படித்தேன். கண்கள் செய்தியில் இருந்தபோதே மனசு இறக்கை கட்டிக்கொண்டு பின்னோக்கிப் பயணித்தது. 1964-ம் வருடம் என்று நினைக்கிறேன் அப்போது எனக்கு மனைவியாக வரப் போகிறவள் HMT வளாகத்தில் இருந்த வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தாள்.அவளுக்கு தர உறுதி அளிக்கும் செக்‌ஷனில் பயிற்சி. ஜப்பானியர்களோடு ஏற்பட்ட ஒப்பந்தப் படி தொடங்கப் பட்ட தொழிற்சாலை அது. மூன்றாண்டு  பயிற்சி முடிந்த பிறகு  குறைந்தது ஐந்து ஆண்டுகாலம் பணி செய்வேன் என்று பத்திரத்தில் எழுதிக் கையொப்பமிட்டிருந்தாள். இல்லையென்றால்  அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு தருவதாகவும் ஒப்பந்தம். அதற்கு பொறுப்பேற்று அவளது மாமா surety  கையொப்பம் இட்டிருந்தார்.
எங்களுக்கு 1964-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நிகழ்ந்தது. நான் அப்போது HAL ENGINE DIVISION-ல் பணியில் இருந்தேன். என் பணி முன்னேற்றம் கருதியும் சிலபலகுடும்ப சூழல்களாலும் நான் HAL வேலையை ராஜினாமா செய்து சென்னையில்(அப்போது மெட்ராசில்) லூகாஸ் டிவிஎஸ் சில் பணியில் அமர்ந்தேன். அது ஏப்ரல் மே மாதம் 1965-ல். காதல் மனைவியைப் பிரிந்து சென்னையில் வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. அவளது பய்ற்சி வேலையை ராஜினாமாச் செய்யச் சொல்லி தனிக்குடித்தனம் மெட்ராசில் அமைத்தேன்.
அவள் HMT யில் ஒப்பந்தத்தில் இருந்ததால் எப்பாது கேஸ் போடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்தாள். நான் என்ன ஆனாலும் சமாளிக்கலாம் என்று தைரிய மூட்டினேன்.அவளுக்கு அவள் மாமா என்ன சொல்வாரோ .செய்வாரோ எனற பயம்.
பயப்பட்டது போலவே HMT ல் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தாள். நான் அவளிடம் JUST IGNORE என்றேன். பத்து நாட்களுக்குஒருமுறை அம்மாதிரி நோட்டீஸ் வந்து கொண்டிருந்தது. அவளது மாமாவுக்கும் அதே போல் போயிருக்கிறது. நான் அப்படி நிலைமை கட்டுக்கு மீறிப் போனால் நஷ்ட ஈட்டின் தொகையை மாதாமாதம் ஒரு சிறிய தொகை கொடுக்கலாமென்றும் நஷ்ட ஈட்டை ஒரே தடவை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தமில்லை என்றும் சொல்லி தைரியப் படுத்தினேன். ஆனால் அவர்களது ஒரு கடிதத்துக்காவது பதில் போடவில்லை. நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படியும் கடிதங்கள் வந்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எழுதி கடிதங்கள் வந்தது/.நான் அவளிடம் சொன்னபடி we just ignored every letter.  நாளாவட்டத்தில் கடிதங்களும் நோட்டீசுகளும் வருவது நின்றன. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நான் செய்தது சரியா என்னும் கேள்வி எழுகிறது அவள் மொத்தமாக ஒன்பது மாதங்கள் பயிற்சியில் இருந்தாள். எல்லாம் சேர்த்த தொகையாக மாதம் 90 ரூபாய் வருமானம். நஷ்ட ஈடு என்றால் மூன்றாண்டு பயிற்சிப் பணமும்  பிறகு பணியில் கிடைக்கப் போகும் ஐந்தாண்டுகால சம்பளமும் அடைக்க வேண்டி இருந்திருக்கும்.
வாழ்க்கையில் எதையும் சமாளிக்கலாம் என்ற இள ரத்தம் ஓடிய காலம் அது.
நினைவுகள் திசை மாறுகின்றன.
நான் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோது என் நண்பன் ஒருவன் நல்லவசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் ஒரு கைக்கடிகாரம் கட்டியிருந்தான். அதை மிகவும் பெரூமையோடு எல்லோருக்கும் காட்டிப் பெருமை கொள்வான். அது ஒரு ரோலெக்ஸ் வாட்ச். உலகிலேயே சிறந்தது என்று கூறுவான். அதை அடுத்தது OMEGA வாட்ச் சிறந்தது என்பான். என் கையில் கடிகாரம் ஏதுமிருக்கவில்லை. அப்போது உறுதி எடுத்தேன் நான் காசு கொடுத்து எனக்காக வாட்ச் வாங்குவதென்றால் அது ஒரு ரோலெக்ஸோ அல்லது ஒமேகாவோ வாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஆனால் என்னால் அம்மாதிரி வாட்ச் காசு கொடுத்து வாங்க முடியவே இல்லை.நான் ஜப்பான் போயிருந்தபோது நண்பர்களுக்காக மூன்று சோலார் வாட்சுகள் வாங்கி வந்தேன். 1971-ல் என் நண்பன் ( இப்போது அமேரிக்காவில் இருக்கிறான்)ஒரு சீகோ வாட்ச் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான் அது வைப்ரேஷனில் ஓடும். சாவி கொடுக்க வேண்டாம் பேட்டரி கிடையாது. இன்றும் என்னிடம் இருக்கிறது ஒரு முறையேனும் ரிப்பேர் என்று ஆனதில்லை. ஆனால் சற்றுக்கனமாக இருக்கும்.
அதன் பின் என் மகன் அவனது முதல் சம்பளத்தில் ஒரு TITAN வாட்ச் வாங்கிக்கொடுத்தான் (1988 என்று நினைக்கிறேன்) அதைத்தான் இப்போது கட்டிக் கொண்டிருக்கிறேன்  என் பேரன் சொல்லுவான். அவனது முதல் சம்பளத்தில் அவன் வாங்கிக் கொடுக்கும் கைக்கடிகாரம் என் கையிலிருக்க வேண்டும் என்று. அவனும் படிப்பு எல்லாம் முடிந்து இப்போது வேலைக்குப் போகிறான். எனக்காக வாட்ச் வாங்கி வைத்திருக்கிறானாம்.
HMT வாட்ச் தொழிற்சாலை பற்றிய செய்தி தலை முறை நினைவுகளில் முடிகிறது
 
என் பேரன்
.     

Saturday, September 13, 2014

கீதைப் பதிவு-அத்தியாயம்-6


                               கீதைப் பதிவு - அத்தியாயம் -6
                               ------------------------------------------
குட்டிக் கண்ணன் -கண்ணாடி ஓவியம்


தியானயோகம்
ஸ்ரீபகவான் சொன்னது,
கர்ம பலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்பவனே ஸந்யாஸி,அவனே யோகி,அக்னிஹோத்திரத்தை( யாகம் செய்வதை ) நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் ஸந்யாஸி யாகான்.(1)
பாண்டவா, எதை ஸந்யாஸம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக.ஏனென்றால்  சங்கற்பத்தைத்(கர்ம பலனைப் பற்றிய கற்பனை) துறவாதவன் யோகியாவதில்லை.(2)
தியானயொகத்தில்முன்னேற விரும்புகிற முனிவனுக்குக் கர்மம் உபாயமாகிறது. தியான சித்தி அடைந்தவனுக்கோ செயல் அற்றிருப்பது உபாயமாகிறது.(3)
எப்பொழுது ஒருவன் விஷயங்களில் பற்றற்றுக் கருமத்தில் கருத்து வைக்காது எண்ணங்களை விட்டொழிக்கிறானோ அப்போதுதான் அவன் யோகாரூடன்(யோகத்தில் நிலை பெற்றவன்)எனப்படுகிறான்.(4)
தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை.(5)
தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன்.ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போல பகைமை சூழும்.(6)
தன்னை வென்றுமனம் தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும் இன்ப துன்பங்களிலும் அங்ஙனமே புகழ்ச்சி இகழ்ச்சிகளிலும் பரமாத்ம தரிசனம் நிலைத்திருக்கும்(7)
ஞான விக்ஞானத்தில் திருப்தி அடைந்த, மனம் சலியாத, புலன்களை வென்ற, மண், கல், பொன்னைச் சமனாகக் கருதுகின்ற யோகியானவன் சமாதியில்(யோகத்தில்) உறுதி பெற்றவன் எனப்படுகிறான்(8)
நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், வெறுப்பவர், சுற்றத்தார்,சத்புருஷர், பாபிகள் ஆகியவர்களிடத்து ஒரே மனமுடையோன் மேலோன்.(9)
யோகி யாருக்கும் தென்படாது தனியனாய் இருந்து கொண்டு, உள்ளத்தையும், உடலையும் அடக்கி, ஆசையகற்றி, உடைமைப் பொருள் இலனாய் யாண்டும் மனதை ஒடுக்க வேண்டும். (10)
சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமில்லாததும், மிகத் தாழ்வில்லாததும், துணி, மான்தோல், தர்ப்பை இவைகளை உடையதுமாகிய ஆசனத்தை நன்கு அமைத்துக் கொண்டு(11)
ஆங்கு ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப் படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.(12)
தேகம் தலை கழுத்து, இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு உறுதியாயிருந்து, தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளை பாராதிருத்தல் வேண்டும்.(13)
உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தை அகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனதை அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.(14)
இங்ஙனம் யாண்டும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோகி, என்னிடத்துள்ள முக்தியிலே முற்றுப் பெறுகிற சாந்தி எய்துகிறான்.(15)
அர்ஜுனா, அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் அது இல்லை.மிகைபட உறங்குபவனுக்கும்  மிகைபட விழித்து இருப்பவனுக்கும் யோகம் இல்லை.(16)
மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது.(17)
ஆசைகள் அனைத்திலுமிருந்து நாட்டத்தை அகற்றி, நன்கு அடக்கப் பட்ட மனது, ஆத்மாவிலேயே நிற்கின்றபோது ஒருவன் யோகத்தில் உறுதி பெற்றவன் எனப்படுகிறான்.(18)
ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் அடங்கிய மனதுக்கு, காற்றில்லா இடத்து வைத்த தீபம் அசையாதிருப்பது உபமானமாகக் கருதப் படுகிறது.(19)
யோகப் பயிற்சியால் எப்பொழுது சித்தம் நன்கடங்கி அமைதி பெறுகிறதோ, மேலும் எப்பொழுது ஆத்மாவால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவில் மகிழ்ச்சி அடைகிறானோ,(20)
இந்திரியங்களுக்கு எட்டாததும், புத்தியினால் கிரகிக்கப் படுவதும், முடிவில்லாததும். ஆகிய எந்த சுகத்தை யோகி அறிகிறானோ, எதில் நிலைத்தபின் ஆத்ம சொரூபத்திலிருந்து அவன் அசைவதில்லையோ(21)
எதை அடைந்து, அதிலும் மிக்கதொரு வேறு லாபத்தை  நினைப்பதில்லையோ எதில் நிலைத்திருந்து பெருந் துக்கத்தாலும் அசைக்கப் படுவதில்லையோ(22)

துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்து கொள்தலே யோகம் எனப்படுவதாகத் தெரிந்து கொள்க. தளரா நெஞ்சத்துடன் உறுதுயாகத் தொடர்ந்து அந்த யோகத்தைப் பயிலுக.(23)
சங்கற்பத்தில் பிறந்த ஆசைகள் அனைத்தையும் மிச்சமறத் துறந்துவிட்டு, உள்ளத்தால் எல்லாப் பக்கங்களினின்றும் இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கிக் கொண்டு(24)
உறுதியான அறிவினாலும் ஆத்மாவின்கண் நிலை நாட்டப் பெற்ற மனதாலும் சிறிது சிறிதாக அமைதி பெறுக.வேறு ஒன்றையும் நினையாதிருந்திடுக.(25) ,


அலைவதும் நிலை அற்றதுமாகிய மனது எக்காரணத்தால் எதன் எதன் கண் திரிகிறதோ அதன் அதனிடமிருந்து  மீட்டுவித்து ஆத்மாவின் வசத்துக்குக் கொண்டு வருக,(26)

மிகச் சாந்தமான மனதையுடைய,ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, பாபமற்ற, தானே பிரம்மமான யோகிக்கே பேரின்பம்  வந்தடைகிறது(27)

இங்ஙனம் மனதை ஆத்மாவில் சதா லயிக்கச் செய்து பாபம் நீங்கப் பெற்ற யோகியானவன் பிரம்ம ஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதில் எய்துகிறான்(28)
யோகத்தில் உறுதி பெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்திலும் , எல்லா உயிகளிடத்தும் தன்னையும் இருப்பதாக காண்கிறான்.(29)
யார் என்னை எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.(30)

உள்ளது ஒன்றே என்று உறுதி கொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கிற என்னைப் போற்றும் யோகி, எப்பாங்கில் இருப்பினும் என்னிடத்து இருப்பவன் ஆகிறான்(31)
அர்ஜுனா, தன்னையே உவமையாகக்கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் எங்கும் ஒப்பக் காண்பவன் பரமயோகி எனக் கருதப்படுகிறான்.(32)
அர்ஜுனன் சொன்னது
மதுசூதனா, ‘சமமாகப் பார்த்தல்என்று தாம் புகட்டிய இந்த யோகமானது உறுதியாக நிலைத்திருக்கும் என்று அலைகின்ற என் மனதுக்குத் தோன்றவில்லை.(33)
கிருஷ்ணா, மனம் அலையும் தன்மையது, திகைக்கச்செய்வது, வலிவுடையது, திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் (34)
ஸ்ரீபகவான் சொன்னது
தடந்தோளாய், மனம் கட்டுப்படாதது அலையும் தன்மையது என்பதில் ஐயமில்லை. எனினும் , குந்தியின் மைந்தா, அப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம்.(35)
மனதை அடக்கான் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் முயலுபவனுக்கே அதை அடைய இயலும்.(36)
அர்ஜுனன் சொன்னது
சிரத்தை உடையவன் ஆயினும், முயற்சிக் குறைவால் யோகத்திலிருந்து மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியை அடைகிறான் , கிருஷ்ணா.?(37)
பெருந்தோளோய், பிரம்ம மார்க்கத்தில் மோகமடைந்தவன், பற்றுக் கோடின்றி, இரண்டிலிருந்தும் வழுவி, சிதறடைந்த மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா?(38)
கிருஷ்ணா, எனது இந்த ஐயத்தை அறவே அறுக்கத் தெரிந்தவர் நீரே. உம்மையின்றி இச்சந்தேகத்தைச் சிதைப்பவர் எவருமிலர்.(39)
ஸ்ரீபகவான் சொன்னது.
பார்த்தா அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பது இல்லை. நலஞ் செய்பவன் (சுப காரியம்) எவனும் நலிவுறுதல்(துர்க்கதியை, கீழ்மையை அடைவதில்லை) இல்லையப்பா.(40)
யோகப் பிரஷ்டன் புண்ணியம் செய்தவர் உலகங்களை அடைந்து, அங்கு நெடிது வாழ்ந்திருந்து செல்வம் நிறைந்த புண்ணியவான் இல்லத்தில் பிறக்கிறான்.(41)
அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே (யோகப் பிரஷ்டன்) பிறக்கிறான். இது போன்ற பிறவீவ்வுலகில் பெறுதற்கரியது.(42)
குருநந்தனா, இதில் முற்பிறப்பின் யோக சாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான், மோக்ஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான்(43)
தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாச வேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப் படுகிறான் வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதத்தைக் (வேதம் சொல்லும் கர்மபலனை) கடப்பவன் ஆகிறான்.(44)
பெரும் முயற்சியுடைய யோகி, பாபங்களற்றுப் புனிதவனாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகிறான்.(45)
தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்வி ஞானம் உடையவர்களைவிட மேலானவனாக அவன் கருதப் படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன். ஆகையால் அர்ஜுனா யோகியாவாயாக,(46)
யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்துப் பஜிக்கிறானோ, அவன் யோகிகளெல்லோர் உள்ளும் மிக மேலானவன் என்பது என் கருத்து(47)
                     தியான யோகம் நிறைவு           


 .