Monday, June 29, 2015

ராமன் எத்தனை ராமனடி..........


                               ராமன் எத்தனை ராமனடி......
                               ---------------------------------------


அவதாரக் கதைகளில் அவதார புருஷர்களின் தோற்றம் பற்றி மட்டுமே சேதி இருக்கிறது கிருஷ்ணர் தவிர மற்றவர்களின் மறைவு பற்றி எங்கும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை  என்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . திருமதி கீதா சாம்பசிவம் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் அவரே எழுதி இருப்பதாகவும் எழுதி இருந்தார்.திரு அப்பாதுரை அத்யாத்ம ராமாயணத்தில் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் பின்னூட்டம் எழுதி இருந்தார். அதில்லாமல் துளசிதரன் மற்ற அவதாரங்கள் கடவுளாகவே தோன்றியதால் மறைவு இல்லை என்றும் ராமனின் மறைவு பற்றி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார்கள். இந்த செய்திகள் என் சந்தேகத்தைப் போக்கவில்லை. அப்பாதுரை கூறி இருந்த அத்யாத்ம ராமாயணம் பற்றிய விவரங்களுக்காக கூகிளில் தேடினேன் அப்படித் தேடி அறிந்த சில விஷயங்களைப் பகிர்கிறேன் 

ராமாயணக்கதை என்பது பொதுவாக ராமர் சீதையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் விஷயங்கள் கதைசொல்லிகளைப்  பொறுத்து மாறுபட்டிருக்கிறது முதன் முதலில் வால்மீகி ராமாயணம் எழுதினார் என்றும் அது 24000 பாடல்கள் கொண்டது என்றும் பலருக்கும் தெரிந்திருக்கும் இந்த ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல  ராமாயணங்கள் எழுதப் பட்டது என்றும் தெரிகிறது.சம்ஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் , அத்யாத்ம ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் அகஸ்தியராமாயணம், ஆநந்த ராமாயணம் போன்றவைகளும் தமிழில் கம்பராமாயணம், தெலுங்கில் ரங்கநாதராமாயணம் , ஹிந்தியில் துளசி ராமாயணம் அல்லது ராமசரித மனசா, பெங்காலியில் கீர்த்திவாச ராமாயணம் , மற்றும் மலையாளத்தில் துஞ்ச்த்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயண மொழி பெயர்ப்பும் பிரசித்தி பெற்றவை. இவை எல்லாவற்றுக்கும் மூலமாகக் கருதப் படுவது வால்மீகியின்  ஆதி காவ்யம் எனக் கருதப் படும் ராமாய்ணமே.

 ராமனின் மறைவு பற்றிய செய்திகள் தேடப்போன இடத்தில் அது பற்றிய கதை ஏதும் கிடைக்கவில்லை. அத்யாம ராமாயணத்தில் இருக்கலாம் என்றால் எனக்கு சம்ஸ்கிருதமோ மலையாளமோ எழுதப் படிக்கத் தெரியாது. இருந்தாலும் இந்த ராமாயணங்களுக்குள்ளான வேறுபாடுகளைக் கண்டறிய ஒரு வாய்ப்பாயிருந்தது
அத்யாத்ம ராமாயணம் பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது இதை எழுதியவர் வேதவியாசர் என்றும் இது பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையிலான சம்பாஷணையை பிரம்மா நாரதருக்குக் கூறியதாகவும் சொல்லப் படுகிறது ஏற்கனவே வால்மீகியின் ராமாயணம் இருக்கும் போது இது ஏன் என்னும் கேள்விக்குப் பதிலாக, இது அத்வைத மார்க்கத்தின் ஒரு நீட்சியாகவே கருதப் படுவதாலேயே வியாச ராமாயணம் என்பதற்குப்பதிலாக  அத்யாம ராமாயணம் என்று அழைக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது 24000 பாக்களின்  சாரத்தை 4000 பாக்களிலேயே சொல்லியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் வரும் பாக்கள் மந்திரங்களாக எண்ணப் படுவதால் இதை மந்திர சாஸ்திரம் என்றும் சொல்கிறார்கள் இதை முறைப்படி பாராயணம் செய்வது பக்தியின் வெளிப்பாடு என்றும் எண்ணப்படுகிறது

அதனால்தானோ என்னவோ கேரளமக்கள் மலையாள கர்க்கடகமாதத்தை (ஆடி) ராமாயண மாதமென்று கூறி துஞ்சத்து எழுத்தச்சனின்அத்யாத்ம ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வார்கள்

கதை சொல்லிகள் அவரவர் பண்புகளின் படி சில சம்பவங்களை வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டு எழுதி இருப்பார்கள். சரி. வால்மீகி ராமாயணத்துக்கும் அத்யாத்ம ராமாயணத்துக்குமான சில்முக்கிய வேறுபாடுகளைக் காண்போம்
வால்மீகி ராமாயணத்தில் ராமன் ஒரு சிறந்த மனிதப்பிறவியாக, எல்லா ஆசாபாசங்களுடனும் சித்தரிக்கப்படுகிறான் அத்யாத்ம ராமாயணத்தில் ராமனை விஷ்ணுவின் அவதாரமாகவே சித்தரிக்கிறார்கள்.வால்மீகி நாரதரிடம் எல்லா நல்ல குணநலன்களுடனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமாயணமாக வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது இந்த இரு ராமாயணக்கதையில் முக்கியமாக உள்ள வேற்றுமைகள் சில
.வால்மீகி ராமாயணத்தில் சீதை சீதையாகவே கடத்தப் படுகிறாள் அத்யாத்ம ராமாயணத்தில் சீதை கடத்தப் படுவாளென்பது ராமனுக்கு முன்பே தெரிந்து சீதையை அக்னிப் பிரவேசம் செய்ய வைத்து அவள் இடத்தில் ஒரு நிழல் சீதையை உருவாக்க அவள் கடத்தப் படுகிறாள் இது லக்ஷ்மணனுக்கும் தெரியாமல் செய்தது. போர் முடிந்தபின் அக்னிப் பிரவேசம் செய்வது  நிழல் சீதை. அதில் இருந்து மீண்டு வருவது உண்மை சீதை.அத்யாத்ம ராமாயணத்தில் ராவணனுக்கு ராமன் யார் என்று தெரிந்து அவர் கையால் இறப்பது முக்தி என்று தெரிந்திருந்தது. லங்கைக்குப் போகும் முன் ராமேஸ்வரத்தில் லிங்க்த்தை ஸ்தாபித்து வண்ங்கியது வால்மீகி ராமாயணத்தில் இல்லையாம்அத்யாத்ம ராமாயணத்தில் ராவணன் சீதையை ஒரு தாயைப் போல் மரியாதையுடன் நடத்தினான் என்று சொல்லப் படுகிறது அத்யாதம ராமாயணத்தில் ராமன் நான்கு கைகளுடன் ஒரு அவதார புருஷனாகவே பிறக்கிறான் கௌதம முனிவரின் மனைவி அஹல்யா வால்மீகி ராமாயணத்தில் உருவமில்லாதவள். அத்யாத்ம ராமாயணத்தில் கல்லாகக் காட்டப் படுகிறாள்.அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் வனவாசத்துக்குக் காரணமாக சரஸ்வதி தேவியே மந்தரை கைகேயி ரூபத்தில் செயல் படுகிறார் என்று சொல்லப் படுகிறது. அத்யாத்ம ராமாயணத்தில் வால்மீகி முனியின் பின்னணி விவரிக்கப் படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் அது இல்லை அத்யாத்ம ராமாயணத்தில் வாலியின் மனைவியை ஆறுதல் படுத்துவது ஹனுமான். ஆனால்வால்மீகிராமாயணத்தில் ராமனே தாராவுக்கு ஆறுதல் கூறுகிறான் மாயையால் ஒரு சீதையை உருவாக்கி அவளை இந்திரஜித் கொல்வது போல் சொல்லப்பட்டிருப்பது வால்மீகி ராமாயணத்தில் அத்யாம ராமாயணத்தில் அது போல் இல்லை போருக்குப் போகும் முன் அக்னி யாகம் செய்து சிரஞ்சீவித்தனமையை அடைய  ராவணன் சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படி முயற்சிப்பதும் அது வானரங்களால் முறியடிக்கப் படுவதும் அதயாம ராமாயணத்தில் உண்டு. வால்மீகியில் இல்லை
அத்யாம ராமாயணத்தில் ராமன் ஒரு அவதார புருஷனாகவே ஆரம்பத்திலிருந்தே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் வால்மீகியில் அது

இலைமறை காய் மறையாகவே கூறப்பட்டிருக்கிறது 

நாம் கேள்விப்பட்டிருக்கும் கதைகள் எல்லாம் எல்லா ராமாயணங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப் பட்டவையே

எததனை ராமாயணங்கள் இருந்தாலென்ன. தாத்தா பாட்டி சொல்லிய கதைகளின் ராமாயணம்தான் மனசில் நிற்கும்அவர்களும் எல்லாக் கதைகளையும் கலந்து கட்டித்தான் சொல்கிறார்கள் ஏறத்தாழ எல்லாவிதக் கதைகளையும் கேட்டிருந்தாலும் அவற்றின் துவக்கம் எங்கே என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. ராமனின் மறைவு பற்றித் தேடப் போன எனக்கு அது பற்றிய செய்தி மாத்திரம் கிடைக்கவில்லை. நானிது வரை திரட்டியசெய்திகள் ஹிந்து பிடியாவின் வெளியீட்டிலிருந்துதான்.

கடைசியில் மனிதனாக சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு குறித்து வால்மீகியில் இல்லை. ஆனால் அவதாரமாகவே சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு பற்றி அத்யாத்ம ராமாயணத்தில் இருப்பதாக அப்பாதுரை சொன்னார்.படித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லையே.                 
-  

Friday, June 26, 2015

FROM ADOLESCENCE TO ADULTHOOD(அந்தக் காலம்)


                          FROM ADOLESCENCE  TO ADULTHOOD
                        -------------------------------------------------------

பதினாறு வயதில் நான்(மைசூர் லாட்ஜில்  பணியில் இருந்தபோது)
        கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர
மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்
.
       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்
கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய் என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன

உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச்சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.
அவை பிறிதொரு சமயம் 
( என் நினைவலைகள் அனுபவங்கள் சுயசரிதையிலிருந்து எடுக்கப் பட்டது).



  



Tuesday, June 23, 2015

ஓ...அந்தக் காலம் சில சந்திப்புகள்


                       ஓ.. அந்தக்காலம் சில சந்திப்புகள்
                        -------------------------------------------------


ஓ ... அந்தக் காலம் பதிவில் சிலநேரங்களில் முன்பே பகிர்ந்த விஷயங்களும் இருக்கலாம் ஒரு முறை நினைவில் வந்தால் மறு முறை வரக்கூடாது என்றில்லையே.
நாங்கள் என் சிறு வயதில் அரக்கோணத்தில் இருந்தபோது தேசப் பிதா மகாத்மா காந்தியைப் பார்த்தது  குறித்து எழுதி இருக்கிறேன் இது அது பற்றி அல்ல. இருந்தாலும் ஒருசில உலகத் தலைவர்களை சந்தித்தது பற்றியே எழுதுகிறேன்
முன்பெல்லாம் இப்போது போல் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை. பத்திரிக்கைகளில் படித்தும் புகைப்படங்களைப் பார்த்துமே தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் அந்த மாதிரியான சூழலில் நான் மிக அருகில் இருந்து பார்த்த தலைவர்களைப்பற்றிய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன்
 நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.


           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.
     1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
   
  HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

                                             ----------------------------------------------------------------------.
    


Sunday, June 21, 2015

தந்தையும் மகனும்


                                              தந்தையும் மகனும்
                                              ------------------------------
(ஞாயிற்றுக் கிழமை 21-06-2015 தந்தையர் தினம். அது சார்ந்து இது .என்பேரனுக்கும் என் மகனுக்கும் நடந்த ஓடப் பந்தயம் பார்த்து எழுதியது மீள்பதிவாக)

             ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய். 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிட 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஓடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை. 
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன். 
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை. 

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது, 
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான். 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல், கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர். 
============================================  

Friday, June 19, 2015

அறிந்து கொள்ள புரிந்து கொள்ள.....



                                 அறிந்து கொள்ள.....புரிந்து கொள்ள....
                                 --------------------------------------------------



நிகழ்ந்த விக்ருதி ஆண்டு உற்றாரும் உறவினரும் குறித்த நாள் ஒன்றில்  திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி ராஜேஸ்வரிக்கும், நடை பெற்ற திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்டினான் மாங்கல்யம். 
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு உயிர்கள் இணைந்து மூன்றாவது உயிருக்கு அடிகோல அனுமதி வழங்குவதே திருமணத்தின் தாத்பர்யம். ஆணும் பெண்ணும் நேரமறிந்து இணைந்தாலேயே மூன்றாவது உயிருக்கு வித்திட்டதாகும்..விலங்கினங்கள் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே நேரமறிந்தே கூடும்..அன்பு பரிவு எல்லாம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும்.,அதிகம் கட்டுப் பாடுகளை வகுத்துக் கொள்வதில்லை. பெற்றுப் போட்டவை தன் காலில் நிற்கும்வரை மட்டுமே அரவணைப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம். ( மேலை நாடுகளில் மக்களிடம் மெல்ல மெல்ல அப்படி ஒரு நிலை உருவாகி வருகிறதாமே.! இருக்கிறதாமே.!  HEY.! THAT IS BESIDES THE POINT.. OH.! AS IF EVERYTHING WRITTEN IS TO THE POINT AND RELEVANT.!) ஆனால் மனித குலத்தில் திருமணம் இனப் பெருக்கத்துக்குக் கொடுக்கப் படும் லைசென்ஸ். அனுமதி. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து, அன்பும் அறமும் பெற்று இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்யக் கிடைக்கும் அவகாசம். இதெல்லாம் தெரிந்ததுதானே, எதற்காக இந்தப் பீடிகை எல்லாம் என்று அலுத்துக் கொள்வது புரிகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நடந்தது சிவராமன் ராஜேஸ்வரி திருமணம்.எதிர்பார்ப்புகள் உற்றம் சுற்றத்துக்கு மட்டுமல்ல. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததும் நியாயமே.


ஊரும் உலகமும் கொடுத்த அனுமதியின் பேரில் இருவரும் இணைய அன்றைய மாலைப் பொழுதில் ரம்யமான சூழல் ஏற்படுத்தப் பட்டிருந்தது.
கையில் கையும் வச்சு, கண்ணில் கண்ணும் வச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன் நேரம் சப்ர மஞ்சத்தில் ஆட , சொப்ன லோகத்தில் கூட, ப்ரேமத்தின் கீதங்கள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, சயன நேரம் மன்மத யாகம்,புலரி வரை நமது யோகம் என்றே சிவராமன் காத்திருந்தான். அவன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏராளமான புத்திமதிகளும் அறிவுரைகளும் கொடுக்கப் பட்டிருந்தன. ஒரு வித ஆர்வமும் பயமும் ஒருசேரக் காத்திருந்தான்.( ஆணுக்கு மட்டும் பயமில்லையா என்ன.?)
பெண்ணுக்கு உன் மேல் மதிப்பு ஏற்படும்படி நடந்துகொள். அனாவசியத்துக்கு அவளை பயமுறுத்திவிடாதே. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளை  உன்பால் ஈர்க்கவேண்டும். முதலிரவு முக்கியமானது .கவனமாய் நடந்து கொள்.
வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் சிவராமன். மெல்லக் கதவு திறக்க தோழிகளின் கிண்டல்களும் கேலிகளும் தொடர அழகுப் பதுமையென ராஜேஸ்வரி உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் நேரத்தில் அணிந்திருந்த நகைகளில் பெரும்பாலானவை காணப்பட வில்லை. பட்டுச்சேலைக்குப் பதில் நல்ல நூல் புடவையே அணிந்திருந்தாள். திட்டமிட்டே உள்ளே அனுப்பப் பட்டிருந்தாள். ‘ செதுக்கிய சிலைபோல் இருக்கும் இவள் எனக்குச் சொந்தம் ‘என்னும் நினைப்பிலேயே அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். ’ஜில்’ என்றிருந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் அவள் பெயர் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அவளிடம் பேச முயன்றான். அவள் அவனிடம் சரளமாகப் பேசவில்லை.பெண்களுக்கே உரித்த நாணமாயிருக்கும் என்று அவன் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழிந்தது. ‘ அணைக்கட்டுமா’ என்றான். ’ஹாங்’ என்று அவள் திடுக்கிட்டாள். ‘இல்லை; விளக்கை அணைக்கட்டுமா என்றேன்’ என்று சமாளித்தான். விளக்கு அணைத்து சில வினாடிகள் இருவரும் அசைவில்லாமல் இருந்தனர். சிவராமன் முதலிரவை இழக்க விரும்பவில்லை. மெள்ள அவளைக் கட்டி அணைத்தான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.
ராஜேஸ்வரி இணங்குகிறாற்போல் தோன்றவில்லை. அணைப்பை சற்றே இறுக்கினான். திடீரென்று அவனுள்ளே ஏதொ வெடித்ததுபோல் இருந்தது. அவன் உடலின் வெப்பம் தணிந்து உடல் இறுக்கம் குறைந்து தளர்ந்தது. அவளை அணைப்பிலிருந்து தளர்த்தினான்.இது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஒரு பயம் பிறந்தது ‘ ஏன் என்னால் அவளை அடைய முடியவில்லை. அவளது தயக்கம் புரிந்தாலும் தயக்கம் விலகிய பிறகும் என்னால் அவளை அடைய முடியுமா?கேள்விகள் மனசைக் குடைய மறுபடியும் அவளை லேசாக அணைத்தான். அவள் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது. ‘மயிலே மயிலே இறகு போடு என்றும் போடாவிட்டால் பறிக்க வேண்டியதுதான் கைகள் அவளது உடலின் எல்லா பாகங்களிலும் நகர ஆரம்பித்தது. ராஜேஸ்வரி கொஞ்சமும் இணங்குவதாகத் தெரிய வில்லை. ‘ அவள் பெண் அப்படித்தான் இருப்பாள் நான் ஆண் என்னை என் சக்தியை நிலை நாட்ட வேண்டும் ‘ என்று மனதில் உறுதி கொண்டு அவளை நெருக்கினான். மறுபடியும் அவனுள்ளே ஏதோ நிகழ்ந்தது. உடல் இறுக்கம் தளர்ந்தது.சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தான். சொர்க்கத்தில் ஆனந்தம் தேட சயன நேரம் மன்மத ராகம் புலரிவரை யோகம் என்று கனவு கண்டவன் தான் எங்கோ மேலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாக எண்ணினான். அவள்தான் அப்படி என்றால் எனக்கு என்ன ஆயிற்று, கடவுளே இது என்ன சோதனை. திருமணம் உடல் இன்பம் எல்லாம் இனி கனவுதானா என்றெல்லாம் எண்ணி மறுகினான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ராஜேஸ்வரி எழுந்து விட்டாள். இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் அவதிப் பட்டவன் அயர்ந்து தூங்கினான்.

காலையில் வெகு சீக்கிரமாக எழுந்துவிட்ட ராஜேஸ்வரியை குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போய் அவளையும் அவளது உள்ளாடைகளையும் பெரியவர்கள் சோதித்தனர். ‘எல்லாம் நல்ல படியாக இருந்ததா ‘என்ற கேள்விக்கு உம்..உம்.. என்று பதில் கூறி அகன்றாள்.
காலை உணவு முடித்துக் கொண்டு முதல் வேலையாக சிவராமன் காணச் சென்றது அவனுடைய நெருங்கிய நண்பனும் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமான கோபால்ன் வீட்டிற்குத்தான். ‘ என்ன சிவராமா, திருமணம் நடந்த மறு நாள் காலையிலேயே வந்திருக்கிறாய். ஏதாவது ப்ராப்ளமா.?என்று கேட்ட கோபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறி கிட்டதட்ட அழுதே விட்டான்.
 ‘ சரி போகட்டும் . நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிக் சொல்லிக் கொண்டு வா,
சரி. கேள் “
நீ எப்பொழுதாவது சுய இன்பத்தில் ஈடு பட்டிருக்கிறாயா.?
“ என்ன விளையாடுகிறாயா.? அதெல்லாம் தவறு என்று எனக்குத் தெரியும்.
 “நீ அப்படி ஏதாவது செய்திருந்தால் தவறு ஒன்றுமில்லை. உன்னைப் பற்றி நீயே கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பாய். போகட்டும்.ஆண்குறிக்கு CIRCUMSITION என்னும் அறுவை சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா.? ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள உறை போன்ற தோல் புண்ர்வின் போது மேலே செல்ல வேண்டும் இல்லாவிட்டால் உணர்வு ஏற்படும் போதே விந்து வெளியேறி உனக்கு ஏற்பட்ட அனுபவம் சாத்தியக் கூறாகும். நீ என்ன செய்கிறாய் என்றால் முதலில் ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள தோல்   உறை மேலும் கீழும் போக முடிகிறதா என்று நீயே சோதனை செய்து கொள். பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி CIRCUMSITION  தேவையா என்று அறிந்து கொள். ,பிறகென்ன இன்பத்த்தின் எல்லைக்கே செல்ல முடியும்.


“ ஆனால் ராஜேஸ்வரிக்கும் உடலுறவில் சிறிதும் ஆர்வம் இருப்பது போல் தெரிய வில்லையே “
“ அது உறவு பற்றிய பல விஷயங்களை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். வேண்டாதது எல்லாம் கூறப்பட்டு உடலுறவு மேல் அவளுக்குஒரு வெறுப்போ பயமோ இருக்கலாம். ஆணின் ஆதிக்கம் ,குழந்தைப் பேறு குறித்த பயம் என்று என்னவெல்லாமோ ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கலாம். இவை எல்லாம் ஒரு பெண் FRIGID  ஆக இருப்பதற்குக் காரணமாகலாம்.
 இதல்லாமல் சாதாரணமாக பெண்கள் உடலுறவுக்குத் தயாராக நேரம் பிடிக்கும். ஆண், பெண் இருவரின் அணுகுமுறையும் உடலுறவு என்று வரும்போது வித்தியாசமானது. இருவரும் ஒருசேர இன்பம் அனுபவிப்பது பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளல் மிக அவசியம். வெறுமே இன விருத்திக்காக உடல் உறவில் ஈடுபட மனிதன் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் விலங்கினத்திட மிருந்து மனிதன் வெகு தூரம் வந்து விட்டான். எதற்கும் கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். “ என்றெல்லாம் ஆறுதல் கூறி கோபாலன் ,சிவராமனை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து கோபலன் சிவராமன் ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது
காது கொடுத்துக்கேட்டேன்
குவா குவா சப்தம்
இனி கணவனுக்குக் கிட்டாது
அவள் குழந்தைக்குத்தான்  முத்தம்
என்ற பாட்டு சப்தம் கேட்டு புன்முறுவலுடன் திரும்பி விட்டார்.
( ஆண்களிடம் IMPOTENCE  பெண்களிடம் FRIGIDITY  போன்ற குறைபாடுகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுவதில்லை. மனதிற்குள் குமுறி வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்போர் சிலர் எனக்குப் பரிச்சயம் உண்டு. ஒரு விழிப்புணைச்சிக் கதையாக இதனைப் பதிவிடுகிறேன். )                        :      .               .                                  .                                    

Wednesday, June 17, 2015

ஓ....அந்தக் காலம்......! 3..


                                     ஓ....அந்தக்காலம்.......! ( 3)
                                      -----------------------------------
ஏரோ எஞ்சின் டிவிஷன் துவங்கப் பட்ட இடம் காடாக இருந்திருக்க வேண்டும் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. HAL MAIN FACTORY-ல் செக்யூரிடி பிரிவில் ஒருவர் இருந்தார். பெயரெல்லாம் மறந்து விட்டது எங்காவது பாம்புகள் தென்பட்டால் உடனே அவருக்குச் செய்தி போகும் அவர் வருவார். பாம்பினைப் பிடிப்பார். அதை எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடம் காட்டினால் அவருக்கு ஒரு தொகை (ரூ10/என்று நினைக்கிறேன்) கொடுக்கப் படும். ஒரு முறை இவர் தான் பிடித்திருந்த பாம்புடன் அப்போதைய ஜெனரல் மேனேஜர் அறைக்குள் நுழைந்து பாம்பைக் காட்டி இஎருக்கிறார். ஜெனரல் மேனேஜர் ஒரு விமானப் படை உயர் அதிகாரி. பாம்பைப் பார்த்தவுடன் தனது கன்னை எடுத்து சுட்டுவிடுவேன் என்று பயமுறுத்த அந்த செக்யூரிடி அதிகாரி வெலவெலத்துப் போய் விட்டார் என்று கேள்வி.
ஏரோஎஞ்சின் தயார் செய்ய ப்ரிஸ்டல் சிடெலி எனும் கம்பனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஒபந்தப்படி நிறைய ஆங்கிலேயர்கள் வந்திருந்தனர் அவர்களுக்கெல்லாம் இந்தியா என்றால் சாலையில் மாடு. பாம்பாட்டிகள் இருக்கும் ஊர், கழைக்கூத்தாடிகளுக்கும் மேஜிக் காரர்களுக்கும் குறைவில்லாத இடம் என்ற ஓர் எண்ணம் இருந்தது. அவற்றை எல்லாம் ஊர்ஜிதப் படுத்தும் விதமாக ஏரோஎஞ்சின் டிவிஷன் தொடங்கிய பொழுதில் நிறையவே பாம்புகள் தொழிற்சாலைக்குள் தலைக்காட்டும் தொலை பேசி அழைப்பு போகும் . செக்யூரிடி அதிகாரி வருவார். பிடித்த பாம்பைக் காண அந்த வெள்ளையர்களுக்கெல்லாம் ஒரு குஷி பிறக்கும் நம் செக்யூரிடி அதிகாரி லேசுப்பட்டவர் அல்ல. பாம்பைக் காட்டியே கணிசமான தொகை கறந்து விடுவார்.சில பாம்புகள் நீளம் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கும் . ஆனால் அவை தாவித்தாக்கும்  அந்த வகைப் பாம்பு கிடைத்துவிட்டால் செக்யூரிடி அதிகாரி அவற்றை தொப்பியால் சீண்டி ஜம்ப் செய்ய வைப்பார்.ஒவ்வொரு சீண்டலுக்கும் அவருக்கு தொப்பியில் நிறையவே பணம் சேரும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெரிந்த செக்யூரிடி அவர். இந்தியா பற்றி யார் என்ன நினைத்தால் என்ன . அவருக்குப் பணம் வரும்
 இதை எழுதி முடித்த்பின் எனக்கு ஒரு செய்தியும் புகைப்படமும் வந்தது. என் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு குட்டிப்பாம்பு வந்திருக்கிறது அதை அவர்கள் ஒரு பாட்டிலில் போட்டு விட்டனர் படம் கீழே 
குட்டியானாலும் படம் எடுக்கும் பாம்பு  பாட்டிலில்

உற்பத்தி தொடங்க பல விதமான மெஷின்கள் இம்போர்ட் செய்யப்பட்டன. அவற்றில் வெர்டிகல் டர்ரெட் என்னும் ஒரு வகை. பெரிய மெஷின் அவை ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து  இறக்குமதி ஆனவை.BERTHIEZ MAKE உதிரி பாகங்களாக வந்தவற்றை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்ய அந்தக் கம்பனியிலிருந்து ANDRE என்னும் பெயர் கொண்ட ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவருக்குச்சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வராது.அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் என்றாலே கோபம் பொத்துக் கொண்டு வரும் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்குவது தெரியும் அவருடன் சேர்ந்து பணிச்செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பேச்செல்லாம் கிடையாது எல்லாமே செய்கைகள் தான் விளக்குவது சிரமம் என்று தோன்றினால் படம் போட்டுக் காண்பிப்பார். அவருடன் இருந்த காலத்தில் ஒரு சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றேன். ஏன் ஆங்கிலேயரிடம் அவ்வளவு பகை என்று கேட்டதற்கு அவர் ஒரு EX NAVY MAN என்றும் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படைகளில் ஒன்றான ஃப்ரான்ஸ் படையினரை முன்னுக்கு அனுப்பிவிட்டு அந்த ஆங்கிலேயர்கள் சதி செய்தனர் என்றும் கூறுவார் ஒரு முறை ஒரு ஸ்பானரோ ஏதோ இல்லாததால் வெள்ளையர்களிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு அப்படிக்கேட்டால் தான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார்( அந்தக்கால நினைவுகள் தொடரும்)