Thursday, August 30, 2012

கல்யாண வைபவங்கள்- நினைவலைகள்.


                                        கல்யாண வைபவங்கள் -நினைவலைகள்.
                                        -----------------------------------------------------------------


பல நண்பர்களது திருமணத்துக்குச் சென்று வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர் ஒருவருக்கு வடுகூரில் ( வழுதூர் ?) திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள் மாலையே திருமணத்துக்குப் போக திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை ஐந்து மணி அளவில் அவருடைய ஷெர்பா மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி நேரப் பயணம் இருக்கும் என்று கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கக் காத்திருக்கும்போதே இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு வழியும் சரியாகத் தெரியாது. சமயம் பார்த்து வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர் செய்தது. நான் பில்லியனில் அமர்ந்து கையில் ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக் கொண்டு போனான். எதிரில் வரும் லாரிகளின் வெளிச்சம் கண்கூச வைத்து மெலே போக முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான். நல்ல வேளை.! மேலே சென்றிருந்தால் அருகிலேயே ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் போயிருப்போம்.கையில் டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட தெய்வாதீனமாக விபத்து நேராமல் தப்பித்த அந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது, அன்று ஒரு வழியாக திருமண வீட்டை அடைந்த போது இரவு பத்து மணியாகிவிட்டது. மழையில் சகதியான சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக தள்ளிக் கொண்டே சென்றோம்.


திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக் கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு நாகர்கோயிலில் இருந்ததுஎன் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக் குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை கட்டுகின்றனர். அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில் பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில் உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள் என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம். நண்பனின் உறவினர்கள் “ பெண்ணு கொள்ளாமோ “ என்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள் “ சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லை “ என்று பதில் கூறினர். அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகு ‘திருச்சிபோவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம் என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்.

கும்பகோணத்தில் ஒரு நண்பன் திருமணத்தில் ஒரு சடங்காக ஆர்த்தி எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் அரை மணிநேரம் அவனை வீதியில் காக்க வைத்தசம்பவம் இன்றும் அவனைப் பார்க்கும் போது கேலி செய்ய உதவும்.


கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில் அவனை கோயில் கோயிலாக அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று நினைக்க வைத்தது.

மனைவியின் உறவினர் மகளுக்கு மும்பையில் திருமணம். என் மனைவி அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய உறவினர் மும்பையில் இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு வந்து இருக்கலாமா என்று கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களை எதிர்பார்பதாகவும் பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி மாதுங்காவில் திருமணம் முடிந்த பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. திருமண வைபவங்கள் முடிந்து உணவு அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார். எங்களை அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும் விருந்துக்குக் கூட்டிச் சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே வந்திருந்தார். அவருக்கு வேண்டப் பட்டவர்கள் அவர் வீட்டுக்கு வந்திருப்பதால் நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத இடத்தில் எதிர்பாராத விதத்தில் சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன் ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்து என் உறவினர் வீட்டையும் விசிட் செய்தோம்.


உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது 
                  
                     குருவாயூரில் நண்பர் ஒருவரின் மகனது திருமணத்துக்குச் சென்றிருந்தேன். குருவாயூரில் கோயில் சன்னதி முன்புதான் தாலி கட்டுவார்கள். திருமணத்துக்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று அறிய ஏதாவது இடம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதா என்று பெண்வீட்டாரிடம் கேட்டேன். இல்லையென்றால் யார் வந்தார்கள் யார் வரவில்லை என்பது தெரியாமல் போய் விடுமென்ற எண்ணத்தில் கேட்டது. அவர்கள் அதை திருமணத்துக்கு வந்தவர்கள் உண்ணாமல் போய் விடுவார்களோ என்ற எண்ணத்தில் கேட்கிறோம் என்று நினைத்து, “கவலைப் பட வேண்டாம். திருமணத்துக்கு வந்தவர்கள் எப்படியாவது தெரிந்து கொண்டு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவ்வார்கள்” என்று பதிலளித்தனரே பார்க்கலாம்.!

                   வேறு ஒரு முறை நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என்னை மாப்பிள்ளையின் தந்தை என்று எண்ணிக்கொண்டு விசேஷமாக கவனித்தது மாப்பிள்ளையின் தந்தையார் என் மேல் கொஞ்சம் பொறாமைப் பட வைத்து என்னை சற்று ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்.!
                    ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை குலுக்கக் கை நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே ஒர        த மாஷாகி விட்டது.

                    குடும்பத்தில் நெருங்கிய உறவினர் திருமணம் குருவாயூரில் நடக்க இருக்க முதல் நாள் மாலையே அங்கு போய் சத்திரத்தில் தங்கினோம். திருமணம் காலை  7 மணிக்கு என்று கூறியிருந்தார்கள். அதற்கு முன்பாக விடியற்காலை 3 மணிக்கு எழுந்து கண்ணனின் நிர்மால்ய தரிசனம் காணச் சென்றோம். தொழுதுவிட்டு அறைக்கு வந்து இன்னும் நேரமிருக்கிறதே என்று சற்று கண் அயரலாம் என்று படுத்துவிட்டோம். காலை ஏழு மணி அளவில் எங்கள் அறை தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்தால் நாங்கள் இன்னும் வராதது கண்டு குழம்பி எங்களைத் தேடி வந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்துக்கு எப்படியோ சேர்ந்து விட்டோம்  
                      -------------------------------------------------------------------------------------------------------------              .   








Tuesday, August 28, 2012

பதிவுலகில் இரண்டு வருடங்கள்.


                            பதிவுலகில் இரண்டு வருடங்கள்
                            ---------------------------------------------
                                  ( திரும்பிப் பார்க்கிறேன். )

   2010-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் என் பேரன் எனக்கு இந்த வலைப் பூவை அமைத்துக் கொடுத்தான். ஆயிற்று இரண்டு வருடங்கள்.

இந்த இரண்டு  ஆண்டு காலத்தில் சுமார் 250 இடுகைகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். கொஞ்சம் சுய புராணம் தேவைப் படுகிறது. பதிவுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நான் இப்போது ஓரளவுக்குப் பலராலும் அறிந்தவனாக இருக்கிறேன். ஆரம்பத்தில் ,என் இளவயதில் என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவற்றைப் பதிவிட்டேன். எழுதுவதில் ஒரு வெரைட்டி இருக்க வேண்டும் என்பதிலும், எழுதுவது என் உள்ளக்கிடக்கைகளைக் கடத்துவதற்குப் பயன்பட வேண்டும் என்பதிலும், குறியாய் இருந்தேன். பல பதிவுகள் என் கற்பனை என்றாலும்சில பதிவுகள் நான் படித்து மகிழ்ந்ததை தமிழாக்கம் செய்ததாலும் உருக் கொண்டதாகும். சில கதைகளைக் கவிதை வடிவில் கொடுத்திருக்கிறேன். பலருக்கும் தெரிந்த அவதாரக் கதைகளை எழுதி இருக்கிறேன். ‘ சாதாரணன் ராமாயணம் ‘என்ற தலைப்பில் ராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன். கிருஷ்ணனின் கதையைக் ’கிருஷ்ணாயணம் ‘என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். முருகனிடம் உரிமை எடுத்துக் கொண்டு எனக்கு அவனை ஏன் பிடிக்கும் என்றும், எனக்கென்ன செய்தாய் என்று கோபித்துக் கொண்டும் எழுதி இருக்கிறேன். என் மனைவியைப் பற்றி மூன்று நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று ‘பாவைக்கு ஒரு பாமாலை’என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில் அந்தாதியாக எழுதி இருக்கிறேன்.

பல பதிவுகளில் என் ஆதங்கங்கள் முன் நிற்கும். நம்முள் காணும் ஏற்ற தாழ்வுகள் என்னுள் ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதற்குக் காரணங்கள் என்றும் தீர்வுகள் என்னவாக இருக்கலாம் என்றும் எழுதி வருகிறேன்.

வாழ்க்கையில் பல உணர்வுகளைச் சந்தித்த வகையில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். என் அனுபவங்கள் பலவற்றைத் தொகுத்திருக்கிறேன். அந்த நாளில் எழுதிய நாவல் ஒன்றைத் தொடராக வெளியிட்டிருக்கிறேன்

இந்த நேரத்தில் ஒன்றைக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப காலத்தில் என் பதிவுகள் சீந்துவாரின்றிக் கிடந்தது. அது என் எழுத்தின் குறையல்ல. கணினி அறிவு அறவே இல்லாதவன் நான். எனக்கு எழுத மட்டுமே தெரியும்.(இப்பொழுது மட்டும் என்ன வாழ்ந்ததாம்.?)தமிழ் மணத்தில் இணைக்க நான் பட்ட பாடு!.தமிழ் தெரியாதவர்கள் உதவியோடு எப்படியோ இணைத்து விட்டேன். சித்ரன், டாக்டர் கந்தசாமி,சக்திபிரபா,காளிதாஸ்போன்றோர் மட்டுமே என் வாசகர்களாய் இருந்தனர். நான் பல தளங்களுக்குச் சென்று பிறருடைய வாசகனாகி பின்னூட்டம் இடத் தொடங்கியபோது,மேலும் பலர் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினர். நான் அப்போது படித்த சில தளங்களில் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொந்தளிக்கக் கண்டேன். வெறுப்பைக் காட்டாமல் சொல்ல வருவதை மனம் நோகாமல் சொல்லலாமே என்று என் பதிவில் எழுதி இருக்கிறேன். என்னைக் குறைந்த கால அவகாசத்தில்பிரபல பதிவராக்க முடியும் என்ற கருத்துக்கு எதிராக என் இடுகைகளின் பலத்தால் பலரும் வாசகர்களாவார்கள் என்று நம்பினேன்.

பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கருத்திடுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதற்கு முக்கியமாக நான் பலரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடாததும் காரணமாயிருக்கலாம். கருத்திடுவது பற்றி என் எண்ணம் வேறு. பலரும் கருத்துகளைப் பார்வையிட்ட பிறகே பிரசுரிக்க அனுமதிக்கிறார்கள். ஒரு சமயம் குறை சொல்லிக் கருத்துக்கள் வந்தால் ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதாலோ என்னவோ. இங்கொன்றும் அங்கொன்றுமாக எங்கோ சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டமாக மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. பொதுவாக இந்திரன் சந்திரன் என்றும், உங்களைப்போல் எழுதுபவர் இல்லையென்றும், எப்படி உங்களால் மட்டும் இப்படி நன்றாக எழுத முடிகிறது என்பன போன்ற கருத்துக்கள் அதிகம். என் பதிவுகளின் கருத்துக்களோடு எல்லோரும் ஒத்துப் போக வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை. நன்றாக இருக்கிறது ,நன்றாக இல்லைஎன்று மட்டும் சொல்லாமல் அபிப்பிராயங்களையும் தாராளமாகக் கூறலாம் என்று பல முறை எழுதி இருக்கிறேன். நாம் எழுதுவது வாசிப்பவருக்குப் புரிய வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்கள் ABSTRACT -ஆக இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். எழுதுபவர் நினைக்காத கோணத்தில் பொருள் கொண்டு பின்னூட்டமிடுவதையும் காண்கிறேன்.

கவிதை என்னும் பெயரில் பல பதிவுகள் நான் எழுதி இருந்தாலும் முறையாக மரபுக் கவிதை பற்றி ஏதும் தெரியாதவனாகவே இருக்கிறேன். வெண்பா இலக்கணம் கற்று எழுத முயற்சித்தேன். அது சரியாக வந்ததா என்ற என் கேள்விக்குப் பதிலே கிடைக்க வில்லை. அந்த வகையில் திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ரத பந்தனக் கவிதை பற்றி விளக்கம் கேட்டு எழுதி இருந்தேன், முற்றிலும் புரியும்படியான விடை கிடைக்க வில்லை. பல வலைத்தளங்களுக்குச் சென்று அண்மையில் ஒரு பதிவு எழுதினேன். மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கிருந்து கற்றுக் கொண்டேனோ அங்கிருந்தே பின்னூட்டமும் கிடைத்தது. நம்மில் பலரும் தமிழ் கற்றவர்களே. இருந்தாலும் நம் தமிழ் ஞானம் எவ்வளவு என்று நமக்கே தெரிவதில்லை. அநேக பாடல்களுக்குப் பொருளே தெரிவதில்லை. நான் என்னையே அளவுகோலாக எடுத்துக் கொண்டு தெரிவிக்கும் இக்கருத்து மற்றவருக்குப் பொருந்தவில்லை என்றால் மன்னிக்கவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக எழுதுகிறார்கள். வெறுமே பொழுது போக்க எழுதுபவர் குறைவாகவே இருப்பர். கணினி நமக்குக் கிடைத்த வரம். இருந்த இடத்தில் இருந்தே நம்மை தெரியப் படுத்திக் கொள்ள உதவும் இந்த அற்புத வாய்ப்பை வீணாக்காமல் பல விஷயங்களில் விவாதிக்க, தெளிவாக்க, ஒத்தக் கருத்து உருவாக்க எனப் பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். ஆனால் நாம் சிறந்தது என்று எழுதுவது அதே கருத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆக எழுதுவது ஏன் யாருக்காக என்பதில் தெளிவு இருந்தால்தான் பதிவுலகில் தொடர்ந்து எழுதத் தோன்றும். இந்தக் கருத்து என் பதிவுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை வைத்து எழுந்தது. நான் சிறப்பாக அமைந்தது எனக் கருதும் பதிவுகளுக்கு வரும் வாசக்ர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் அள்வைவிடக் குறைவாய் இருப்பதும், சுமார் எனக் கருதும் பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்ப்பதும் என்னால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை..

எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் சீரியஸாக அணுகும் என் குணம் என்னை இந்த மாதிரி எல்லாம் சிந்திக்கச் செய்து எழுத வைக்கிறதோ. ?         .  
                     

Sunday, August 26, 2012

ராமானுஜனின் மேஜிக் எண்கள்.


                                   ராமானுஜனின் மேஜிக் எண்கள்.
                                  ----------------------------------------------



                       22         12         18          87

                       88          17          9          25

                       10          24          89        16

                       19          86          23         11    

மேலே உள்ள எண்கள் ஒவ்வொரு கட்டத்தில் இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். (கட்டம் போட்டுக் காட்ட என் கணினி அறிவு போதவில்லை.) இது ஒரு மேஜிக் சதுரம். இதில் உள்ள  தனித்தன்மை என்ன என்று புரிகிறதா. ? இது நம் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வடிவமைத்தது. அப்படி என்ன தனித் தன்மை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா.?இதில் எந்த வரிசையில் கூட்டினாலும் கூட்டுத்தொகை (இடமிருந்து வலம் அல்லது மேலிருந்து கீழ்.) 139 வரும்.

குறுக்காகக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 139 வரும்.( 22+17+89+11 = 139
                                                    87+9+24+19  = 139

மூலைகளில் இருக்கும் எண்களைக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 139 வரும்.
                                                    22+87+11+19 =139
நடுவில் இருக்கும் நான்கு எண்களின் கூட்டுத்தொகை 139 (17+9+89+24 =139 )

மேல்வரிசை கீழ்வரிசைகளில் இருக்கும் இரண்டாவது மூன்றாவது எண்களின் கூட்டுத்தொகை 139 வரும் ( 12+18+86+23 = 139 )

மேலிருந்து கீழாக உள்ள வரிசைகளில்முத்ல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும்  கடைசி வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 139.( 88+10+25+16 =139 ) 

இதோ இன்னொரு கூட்டின் எண்ணிக்கை:
முதல் வரிசை இடமிருந்து வலம் இரண்டாவது எண்.
முதல் வரிசை மேலிருந்து கீழ் இரண்டாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை மூன்றாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை மூன்றாவது எண்  இவற்றின் கூட்டுத்தொகை 139.
18+10+86+25=139
( 12+88+23+16 =139.

இன்னுமொரு காம்பினேஷன்
முதல் வரிசை இடமிருந்து வலம் மூன்றாவது எண்
முத்ல் வரிசை மேலிருந்து கீழ் மூன்றாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை இரண்டாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை இரண்டாவது எண் இவற்றின் கூட்டுத்தொகை 139( 18+10+86+25 = 139 )



இந்த சதுரத்தை நான்கு சம சதுரங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு சிறிய சதுரங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 139
உ-ம் 22+12+88+17= 139
      18+87+9+25= 139
      10+24+19+86=139
      89+16+23+11= 139.

இன்னும் சில காம்பினேஷன்களை முயற்சி செய்து பாருங்கள்.

இதோ முத்தாய்ப்பாக ஒரு செய்தி. ஸ்ரீனிவாசன் ராமானுஜனின் பிறந்த நாள் உங்களுக்குத் தெரியுமா.? முதல் வரிசை எண்களைப் பாருங்கள். என்ன தெரிகிறது.?
22   12   18   87   விளங்க வில்லையா.?அவரது பிறந்த நாள் 22 -12 -1887......!

இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.










( 18+10+86+25 = 139 )




Tuesday, August 21, 2012

திருவெழுக் கூற்றிருக்கை..என் பாணியில்


                          திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
                          ----------------------------------------------------------


திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் கோயிலிலும் இது எழுதி இருப்பது கண்டு, முன்பே ஒரு முறை விளக்கம் கேட்டு இடுகை இட்டிருந்தேன். சோமாயணம் கலாநேசனும் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அம்மாவும் இது குறித்து எழுதிய பின்னூட்டங்கள் மிகவும் உதவியாய் இருந்தன.

எனக்குள் நானும் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை  எழுதினால் என்ன என்று ஆசை எழுந்தது. என் தமிழ் தேர்ச்சி குறித்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்க முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.

இனி அடியேனின் பாடல்    
    ஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.

குலம் ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்றென்றே சாற்றுகின்றீர்.

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.

குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.

ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ணால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?


சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.                








Sunday, August 19, 2012

அத்வைதம்... சில சந்தேகங்கள்...?


                                   அத்வைதம் சில சந்தேகங்கள்....?
                                   ------------------------------------------


சிலநாட்களுக்கு முன் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதைப் படித்துப் பார்த்தபிறகு எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டேன். அத்துவைதக் கருத்துக்களுக்கு அது வேறு ஒரு வியாக்கியானமாகத் தோன்றியது. இம்மாதிரி சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் என்ன காரணமிருக்கும் என்று யோசித்தேன். தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள நினைக்கும் மனமே காரணம் என்று புரிந்தது. இந்தக் கேள்வியும் தேடலும் ஒன்றும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது போலவும் அதை புரிந்துகொண்டு அனுஷ்டிக்கத் தெரியாததாலோ, முடியாததாலோதான் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எழுகிறது போலவும் தோற்றமும் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் கீழ்ப்பாக்கம் போன்ற இடத்துக்குத்தான் போக வேண்டும் என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

முதலில் நான் என்பது யார்.?கண்ணும் , காதும் , மூக்கும் இன்ன பிற உறுப்புகளும் கொண்ட உடலா.? அப்படியானால் இறந்தவுடன் பேரென்ற ஒன்று இருந்ததையெ மறந்து பிணம் என்று அழைப்பார்களா.?நான் இருக்கிறேன் இல்லை இறந்துவிட்டேன் என்று தெரியப் படுத்துவதேநான் விடும் மூச்சுக் காற்றுதான் அல்லவா?அதையே நான் ஜீவாத்மா என்றும் இறந்தபிறகு அது பரமாத்மாவுடன் கலக்கிறது என்றும் வியாக்கியானித்தேன். அண்மையில் சங்கராச்சாரியாரின் தெய்வக் குரல் எனும் நூலை படித்துக் கொண்டிருந்தேன்

.ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் சங்கரர். அதாவது நாம்தான் கடவுள் என்கிறார். தன்னைத் தவிர வேறு கடவுளே கிடையாது என்ற ஹிரண்யகசிபு அகங்காரத்தில் சொன்னான்.ஆனால் கடவுள் தவிர வேறெதுவும் கிடையாது என்பதால் நாமும் கடவுளே என்கிறார். ஜீவன் ஆனது “ நான் “ என்னும் எண்ணத்தைவிட்டுவிட்டு  பிரம்மத்துடன் கலந்தால் அதுவும் பிரம்மமாகிவிடும் என்கிறார். நாம் இப்போது உத்தரணி ஜலத்தைப் போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஆண்டவன் அகண்ட சக்தியுடன் சமுத்திரம்போல் இருக்கிறார்.அந்த சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணிஜலம் தான் தனி என்னும் அகங்காரம் நீக்கிசமுத்திரத்துடன் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்என்கிறார்.( கவனிக்கவும்: நான் மூச்சுக் காற்று என்றேன், அவர் உத்தரணிஜலம் என்றார். நான் அகண்டவெளிக் காற்று என்றேன். அவர் சமுத்திரம் என்றார். நான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்துவிடும் என்றேன். அவர் சமுத்திரமாக மாற வேண்டும் என்கிறார்.) இப்படி எழுதுவதன் மூலம் நான் என்னை அவருடன் ஒப்பிடுகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். There was a striking similarity which prompted me to compare


நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, 'ஸ்வாமியே நாம்' என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப்பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, 'ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு' என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத்தான் இருந்தாக வேண்டும்.

அவர் எல்லாப் பொருட்களிலும் இருந்தாலும் மனிதனாக இருக்கும்போது மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதை பாப புண்ணியங்களில் ஈடுபடுத்தி பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

கடவுள் என்னும் தத்துவத்துக்கு எல்லா சக்திகளும் உண்டென்று எண்ணி பாப புண்ணியங்கள் அதன் பலன்கள் கொடுப்பவர் என்று நம்பினால் அவர் ஏன் நம்மில் இருந்து கொண்டே அந்தத் தவறுகளைச் செய்ய வேண்டும்.?கடவுளுக்கு நிர்க்குணன் என்றொரு பெயருண்டு, எந்த குணமும் இல்லாதவன் என்று பொருள். ஒரு நிர்க்குணன் மனிதரில் ஏன் பலரையும் சற்குண , துர்குணராகப் படைக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும்?இதற்குப் பதிலாக கர்ம வினைகள் என்று காரணம் கூறுவொருமுண்டு.,

ஜீவன் என்பது பரம் பொருளின் ஒரு பாகமே என்றால் இவ்வுலகில் ஏற்ற தாழ்வுகள் ஏன்.? மனிதனின் ஆதிக்கக் குணமே இம்மாதிரியான ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம். இகமும் பரமும் ஒன்றானால் அப்படி இருக்கக் கூடாதே, ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.

நம் மனம்தான் நாம் படைத்த கடவுளிடம் சேர்க்கிறது, இல்லாவிட்டால் பிரிக்கிறது. அழிந்து போகப் போகும் உடலே சாசுவதம் என்பதுபோல் எண்ணுகிறோம். வாழ்க்கையின் மதிப்பீடுகளைத் தொலைத்துக் கொண்டு வருகிறோம். எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் இருக்க வேண்டும் அதுவும் சமமாகவும் நேர் எதிராகவும் இருக்க வேண்டும் என்பதுதானே விஞ்ஞானவிதி..அப்படி என்றால் எல்லோர் உள்ளும் இருக்கும் கடவுளுக்குள்ளும் ஏற்ற தாழ்வு இருக்கக் காரணம் என்ன..

நான் முன்பெ எழுதி இருந்தேன். கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான புனைவுகள்

என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?

மனதில் தோன்றும் எண்ணங்கள் பகிரப் படுகின்றன. இவை யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க அல்ல. ஒரு அறிவு பூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கலாம் என்னும் நம்பிக்கையே காரணம்.




.











  
 compare.


Friday, August 17, 2012

பொருள் தெரிந்து பாட


                                        பொருள் தெரிந்து பாட....
                                       --------------------------------
என்னுடைய “ சொல்லாமல் செல்வதே மேல்” என்ற  பதிவுக்குப்  பின்னூட்டமாக திரு வீ. மாலி அவர்கள்,சொன்னால் தவறாக எண்ணப் படுமோ என்னும் எண்ணம் வரும் போது “சொல்லற சும்மாயிரு “எனும் அருணகிரிக்கு முருகன் அளித்த உபதேசத்தை குறிப்பிட்டிருந்தார்.அந்த சொற்றொடர் என் மனதைப் பிடித்துக் கொண்டு விட்டது. கூடவே ,அதன் பின் தான் அருணகிரிநாதர் திருப் புகழ் எழுதினார் என்பதும் நினைவுக்கு வந்தது.

முருகனின் சொற்படி ஏதும் பேசாமல் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த அருணகிரிநாதரை முருகன் ”நம் புகழ் பாடுக “எனவும் ஏதுமறியாதவன் என்ன பாடுவேன், எப்படிப் பாடுவேன் என்று கேட்க “முத்தைத் தரு “ என்று அடியெடுத்துக் கொடுக்க எழுந்த முதல் பாடலே

முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண்
முத்திக்கொரு வித்துக் குருபர                      எனவோதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமு வர்க்கத்தமரரும்.........................அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு, 
பட்டப்பகல் வட்டத் திகிரியில்...........................இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தருபொருள் 
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் .........................ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர, 
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொடகந டிக்கக் கழுகொடு.............................கழுதாட

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக........................................எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென..............................முது கூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல.................................பெருமாளே

 என்பதாகும்.

இப்பாடல் பலமுறை கேட்டிருந்தும் பொருள் முழுதும் தெரியாமல் இருந்தது. எனக்குப் பொருள் தெரிந்திருக்கவில்லை என்று சொல்வதில் எந்த வெட்கமும் இல்லை. எனக்குத் தெரியும் இதில் நான் தனியாக இல்லை என்று. பொருள் தெரிந்து படித்தால் அதன் மகிழ்ச்சியே வேறு. என்னில் ஒரு வேகத்தைக் கூட்டியவர் திரு. மாலி என்று சொல்வது மிகையாகாது.

நான் அறிந்த பொருளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். . முதலில் சில அருஞ் சொற்கள்
-------------------------------------------

அத்திக்கிறை = தெய்வயானை அம்மைக்குத் தலைவர்
சுருதி = வேதம்;
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்தரமலை. ;
திகிரி = சக்கரம்;
பச்சைப் புயல் = பச்சை மாமலை போல் மேனி கொண்ட திருமால்.
பரிபுர = சிலம்புகள் அணிந்த
கழுது = பேய்கள்;
சித்ரப் பவுரி= அழகிய கூத்து;
கொத்துப் பறை = கூட்டமாகப் பல பறை வாத்தியங்கள்;
முது கூகை = கிழக் கோட்டான்.;
கொட்பு = சுழலுதல்;
அவுணர் = அரக்கர்;
குலகிரி =கிரௌஞ்ச மலை
பொரவல = போர் செய்ய வல்ல
பெருமாளே = பெருமை மிகுந்தவரே.

முத்தினைப் போல் ஒளிர்விடும் சிரிப்பினை உடைய தெய்வயானை அம்மையின் தலைவரே, அன்னை உமையவள் ஈன்றிட்ட சக்திவேல் ஏந்தும் சரவணபவ எனும் ஆறுமுக, முத்தி எனும் வீடு பெற வித்தாய் இருப்பவனே, தகப்பனுக்கே உபசரித்த குருவான பெருங் கடவுளே,/-

 என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கும் முந்தைய வேதத்தின்  முழுப் பொருளும் அடங்கும் ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, திருமால் பிரமன் முதலான முப்பத்து  முக்கோடி தேவரும் அடிபணிய ,/

- திக்குக்கு ஒரு தலை என்று பத்துத் தலை சிதற அம்பெய்தி அரக்கரை அழித்து, மந்தர மலை கொண்டு பாற்கடல் கடைந்து , சக்கரத்தால் சிலகணம் சூரியனை மறைத்து இரவாக்கி (ஜயத்திரனைக் கொல்ல வழிவகுத்த )/-

 பக்தனுக்குத் தேரோட்டிய,மரகதம் எனும் பச்சை மணி ஒத்திட்ட , அன்பர்க்குப் புயல்வேகத்தில் வந்தருளும் பச்சை மாமணி வண்ணனும் மெச்சுகின்ற பரம்பொருளே எனைப் பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் நாளும் உண்டோ என இறைஞ்சுகிறேனே. 

தித்தித்தெய் எனும் தாளத்துக்கு ஒப்ப சிலம்பொலி எழும்ப நர்த்தனம் செய்யும் பத்ரகாளி எல்லாதிக்கும் சுழன்றாட பிணங்கொத்தக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னிப் பேய்களும் ஆட /-

 எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்ட பயிரவர் எனும் எண்மரும் இவ்வாட்டத்துக்கு ஏற்ப  த்ரிகடக என தாளமிடக்/

- கூடவே தாரை தமுக்கு எனும் பல வகை தாள வாத்தியங்களும் அதேகதியில் முழங்கிடவும், பலகாலம் வாழ்ந்திருந்த கிழக் கோட்டான்களும் குக்குக்குகு குக்குக்குகுகுகு ,குத்திப் புதை புக்குப் பிடி என்று குழறி வட்டமிட்டு எழ,/

-சிவனாரின் வரம் பெற்றவன் எனும் இணக்கத்தை மறந்து அசுரர்களை வெட்டிக் குவித்து அவுண குலத்துக்கு இசைவாய் நின்ற குலகிரி ( க்ரௌஞ்ச மலை.)யையும் வேலாலே குத்திப் பொடி செய்து அறவழியில் நின்றன்று போர் செய்த பெருமைக்கு உரியவரே.



                                                                                                           
வேலும் மயிலும் துணை
-----------------------------------

  ...

Tuesday, August 14, 2012

பணம் பொருட்டே...MONEY MATTERS


                                பணம் பொருட்டே....MONEY MATTERS.
                                --------------------------------------------------


அஞ்சு ரூபா நோட்டு கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ” “கத்திரிக்கா விலெ கூடக் கட்டுப்படியாகலே, காலங் கெட்டுப் போச்சு “இந்த பாடல் வரிகள் இப்போது கேட்கும்போது நகைச்சுவை போல் தோன்றினாலும் காலம் மாறியும் காசின் மதிப்பு குறைவது குறையவில்லை. என்பது நன்றாக விளங்குகிறது. வயதான காலத்தில் மனசுக்குத் தெம்பு கொடுக்க கையில் காசு அவசியம். ஆனால் பெரும்பாலான வயது முதிர்ந்தவர்கள் அது இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். இள வயதிலேயே அரை வயிற்றுக்கு அவதிப் படுபவர் எப்படி வயதான காலத்தைப் பற்றி சிந்திக்க முடியும். வயதான காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்னும் ஆலோசனை சரியே. சேமிக்க முடிபவர்கள் எப்படி சில விஷய ஞானம் இல்லாமல் கோட்டை விடுகிறார்கள் என்பதையாவது சொல்லலாமே என்னும் நோக்கம்தான் இப்பதிவு.

அன்றைக்கு நூறு ரூபாய் சம்பாதித்தால் சுமாராக இருவர் அடங்கிய குடும்பம் ஒப்பேற்றிவிடும். ஆனால் இன்றோ.... எண்ணிப் பார்க்க முடியுமா.?அன்றைய ரூபாயால் வாங்க முடிந்த பொருள்கள் இன்றைக்கு முடியுமா. அன்றைக்கு சம்பாதித்ததைப் போல் பல மடங்கு இன்று சம்பாதிக்கிறார்கள். இருந்தும் ஏன் இந்த நிலை. இங்குதான் நமக்குப் பண வீக்கம் பற்றிய தெளிவு அவசியமாகிறது.


கிடைக்கும் சேவைக்கும், வாங்கும் பொருளின் விலைக்கும் கொடுக்க வேண்டிய அதிக பணமே பண வீக்கத்தின் காரணத்தால் விளைவது என்று கொள்ளலாமா.?பணவீக்கம்  விலை ஏற்றத்தையோ பணத்தின் மதிப்புக் குறைவையோ குறிக்கும் குறியீடு  வாரம் ,மாதம் வருடம் என்று ஒப்பிடப்பட்டுக் கணக்கிடப் படுகிறது. இதை கணக்கிட குறிப்பிட்ட தேவையான பொருட்களின் விலை ஏற்றமோ குறைவோ குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப் பட்டு ஒப்பிடப்பட்டு பண வீக்கம் கணக்கிடப் படுகிறது.

பணவீக்கத்தின் மாற்றத்துக்கு ஏற்ப ரூபாயின் (கரன்சி )மதிப்பும் மாறும். பணவீக்கம் 10% என்றால், ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு ஒரு ரூபாய் பத்து காசு கொடுக்க வேண்டி இருக்கும். பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது பணவீக்கம் இன்றியமையாதது என்று கருதப் படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் இரண்டு வகையாக கருதப் அடுகிறது. 1) DEMAND PULL INFLATION. 2.) COST PUSH INFLATION  அருகிய பொருளை அதிகம் பேர் துரத்துவதால் ஏற்படுவது முந்தையது.( Demand is more than the supply. ) உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்படுவது பிந்தையது.


DEFLATION, STAGFLATION, HYPER INFLATION   என்றும் பொருளாதார நிலைகள் இருக்கும். பணவீக்கம் குறைவது, எந்த மாற்றமும் இல்லாது இருப்பது, கட்டுப்பாடு இல்லாமல் பணவீக்கம் ஏறுவது போன்றவையும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.

பணவீக்கம் பலரை பல விதமாக பாதிக்கிறது. அன்றாட செலவுகளுக்கு கஷ்டப் படும் ஏழைகள் அத்தியாவசிய செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டி இருக்கும் சில்லறை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், அதிக விலையை ஈடுகட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க அதிக சம்பளம் , அதை ஈடுகட்ட வங்கிக் கடன் அதிகமாகத் தேவைப் பட வட்டிவிகிதம் அதிகம் என்று சுழற்சியாக எல்லோரையும் பாதிக்கிறது பண வீக்கம்.

இந்த நிலையில் ஓய்வு காலத்துக்காக சேமித்தல் அவசியம் நான் ஓய்வு பெற விரும்பி வேலையை விட்டபோது யூனிட் ட்ரஸ்டில் 15% வட்டி சேமிப்புக்குக் கிடைத்தது. இப்போது ஒரு இலக்க வட்டி வீதமே கிடைக்கிறது. மாதம் 5000 ரூபாய் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கலாம் என்று கணக்குப் போட்ட என்னால் இப்போது மிகவும் அவசியமான செலவு கூட சிந்திக்க வைக்கிறது. வரவு கூடாமல் செலவு அதிகமாகும் நிலையை ஓய்வு காலத்தில் அனுபவிக்கிறேன். இது அநேகமாக எல்லா முதியவர்களுக்கும் பொருந்தும். டாக்டர் கந்தசாமி ஐயா அவர்கள், சேமிப்பின் அவசியத்தை இரண்டு மூன்று பதிவுகளில் எழுதி இருக்கிறார். நான் ஆரம்பத்திலேயே சொன்னபடி கைக்கும் வாய்க்கும் ஈடுகட்டவே கஷ்டப் படுபவர் சேமிப்பு பற்றி எப்படி யோசிப்பது. ஏதாவது செய்து அதிக வருவாய் ஈட்டத்தான் வேண்டும் அனாவசிய செலவினங்கள் குறைக்கப் பட வேண்டும் இதிலும் அவசியம் எது அனாவசியம் எது என்பதிலும் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் . இருந்தாலும் தவிர்க்கப் படக் கூடியதற்கு செய்யும் செலவு அனாவசியம். வெளியே உண்பது, நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்.

சேமிப்பது என்று தீர்மானித்து விட்டால் , சேமிக்க வேண்டிய தொகையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் பொருளுக்கு ஒருவர் ஓய்வு பெரும்போது என்ன மதிப்பு இருக்கும் என்று ஓரளவாவது கணக்கில் கொள்ள வேண்டும் பணவீக்கம் இப்போதெல்லாம் இரண்டு இலக்கத்தில் இருக்கிறது. ஏதோ சேமிக்கிறேன் என்று இருந்தால் போதாது. எல்லாக் காலத்தையும்  சமாளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். இதெல்லாம் நல்ல ஆரோக்கியம் இருக்கும் வரை தான் செலாவணியாகும். நோய்நொடி என்று வந்து விட்டால் எல்லாக் கணக்கும் பணால்

எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆலோசனை. யார் மணி கட்டுவது.? வங்கிகளில் காசோலை வசதி இருக்க  குறைந்த அளவு  இவ்வளவு பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்தப் பணத்துக்கும் சேமிப்பு வட்டியாக 4- லிருந்து 5 சதவீதமே கொடுக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு ஏன் அதிக வட்டி FIXED DEPOSIT –க்கு             
தருவதுபோல் கொடுக்கக் கூடாது. ?