Thursday, November 20, 2014

பகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்


                                  பகவத் கீதை--சில எண்ணப் பகிர்வுகள்.
                                   ----------------------------------------------------


கீதையின் 18 அத்தியாயங்களில் இருக்கும் சுலோகங்களுக்கு  ஒரு வழியாக தமிழ்ப் பதவுரை கொடுத்து முடித்துவிட்டேன். பகவத் கீதை படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என் பதிவுகள் மூலம் படித்தறிய ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணி ஒரு யக்ஞம் என்பதுபோல் செய்து முடித்த திருப்தி.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்




நானும் பகவத் கீதையின் தமிழ்ப் பதவுரை முழுவதும் எழுதிவிட்டேன். இருந்தாலும் பெரும் பாலோரால் மேற்கோள் காட்டப்பட்டு, சுவாமி அறையில் மாட்டப்படும் மேற்படி வாசகம் கீதையில் எங்குமே காணவில்லை. விரிவுரை கூறியவர்களின் எழுத்துக்களை ஸ்ரீபகவான் கூறியதென்று சொல்லி பரப்பவேண்டிய கட்டாயம் ஏதோ.?. புரியாத ஒன்று. அதேபோல் ‘கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்றும் கீதையில் இல்லை. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறதுவினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய்,வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே, வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே
கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பதில் பதினேழாம் சுலோகத்தில் “இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும் ஓங்காரம், ரிக், சாம யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே” என்று வருகிறது. அதர்வண வேதம் அவருக்குத் தெரியாதா? அப்போது அதர்வண வேதமே இருக்கவில்லையா என்று என்னுள் கேள்வி எழுந்தது.   



பகவகீதை மகாபாரதத்தில் ஏற்றப்பட்ட ஒரு இடைச் செருகல் என்றே தோன்றுகிறது. மகாவியாசர் எழுதியதாயிருந்தால் விருஷ்ணிகளுள்  நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் நான் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன்என்று தன்னை குறித்தே எழுதி இருப்பாரா.?
இது வரை எழுதியவற்றில் என் கருத்தாக எதையும் சொல்ல முற்படவில்லை. இப்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக எண்ணுகிறேன்
கீதை தன்னகத்தே எத்தனையோ நல்ல விஷயங்களைப் பேசிச் செல்கிறது. மனதை ஒருமுகப் படுத்துவது பற்றி, விருப்புவெறுப்பு இன்றி நினைக்கவும் செயல் படவும் அறிவுறுத்துகிறது.இருந்தாலும் படித்து முடிதபின் ஏதோ மனம் நிறைவு பெறாத ஒரு எண்ணம்.தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தில் தெய்வ அசுர குணங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. படித்தபின் தெய்வ குணங்கள் உள்ள மானிடரைக் காண்பதே அரிதோ என்று தோன்றுகிறது.



என் எண்ண வெளிப்பாடுகளைப் படிக்க முற்படுமுன் ஒரு வேண்டுகோள்..
When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.

நான் இவ்வாறு எழுதுவதன் நோக்கமே நம்மில் பெரும்பாலோர் மனதளவில் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து அடிமையாய் இருக்கிறோம் அல்லது சிந்திக்க மறுக்கிறோம் என்று நினைப்பதால்தான். என் முந்தைய பதிவு ஒன்றில் நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்துவிட்டோமா என்று கேள்வி கேட்டிருந்தேன். பதிலாக எது அடிமைத்தனம் என்றும் பதிலையும்( உபயம் திரு அப்பாதுரை அவர்களின் பதிவு ஒன்று) எழுதி இருந்தேன். நினைவூட்டலுக்கு அதனை இங்கு மீண்டும் கொடுக்கிறேன்.

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"
பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

மேலே கூறி இருக்கும் கருத்துக்கள் இதைப் படிப்பவர்களைத் தயார் செய்யவும் பகவத் கீதையை என் கண்ணோட்டத்தில் நான் பார்ப்பதைப் புரிந்துகொள்ளவும் வேண்டித்தான் படிக்கத் துவங்கும் முன் மனதை ஒரு clean slate ஆக வைத்துக் கொள்ளவேண்டும் அதையே WE HAVE TO UNLEARN , WHAT WE HAVE LEARNT AND KNOWN என்று கூறி இருக்கிறேன்

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் தெரிந்த உண்மை.. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை

இப்படி அனுபூதியில் உணர்ந்தமூலப்பொருள்  பற்றிய எண்ணமே ஒரு உருவகம் அல்லது ஒரு concept என்றே தோன்றுகிறது. கீதையில் உபதேசமாகக் கூறப்பட்டவை அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படும் ஒரு மனிதனுக்குப் புகட்டப் பட்ட indoctrination என்றே கூறலாம்  நடைமுறை வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் தெரியாமல் அல்லாடும் மனிதனிடத்தில் அவனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத உண்மை இல்லாமல் இருக்கக் கூடிய வாய்ப்புகளுள்ள , சாதாரண வாழ்க்கையில் செயல்படுத்த இயலாத ஆத்மா ஜீவன் இறப்புக்குப் பின் பிறப்பு கர்ம பலன் போன்ற  விஷயங்கள் விளக்கம் என்பதுபோல் புகட்டப் படுகிறது
கணிதங்களில் ஜியோமிதி ஒரு வகை. பல தேற்றங்களைக் கூறி அவற்றை நிரூபிக்கவும் செய்வார்கள். நிரூபித்து முடிவில்(QED) என்று முடிப்பார்கள். Quad erat demonstrandum meaning  proof  of mathematical argument என்று பொருள்படும். நாங்கள் படிக்கும்போது QUITE EASILY DONE  என்று கூறுவோம். ஆனால் கீதையில் கூறப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு முடிவில் QED என்று போட முடியுமா. என்பதே பெரிய கேள்விக்குறி.


ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கீதையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்குகிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது.என்றும் அறிவுறுத்தப் படுகிறது.

கீதையைப் படிக்கும் போது ஒன்று புரிகிறது செய்ய இயலாத அனுஷ்டானங்களைச் செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை. ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்தால் போதும் என்று குறிப்பாக உணர்த்துகிறது

ஒரு கோட்பாடு ஓரிடத்தில் பகரப்பட்டால்  அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அது விளக்கப் பட்டிருக்கிறது. சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்று ஓரிடத்தில், பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகவும். மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்றும்  கூறப்படுகிறது. இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாளப்பட்டிருக்கிறது  என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல் எங்கும் விரவிக் கிடக்கிறது. செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.




ஆனால் கீதை சாமானியனால் படித்து அறிந்து கொள்ளமுடியாதபடி எழுதப் பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது இப்படிப் பல விதமான வார்த்தைப் பிரயோகமே படிப்பவனை  அல்லது அது குறித்துக் கேட்பவனை சிந்திக்க முடியாமல் செய்கிறதோ அல்லது ஒரு பிரமிப்பு  ஏற்படுத்துகிறதோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதையும் மீறி வியாக்கியானம் செய்பவர்களின் வெவ்வேறு விளக்கங்கள் , நான் பகவத் கீதையைப் பற்றி எந்தக் கருத்தும் கூறினால், அது ஏற்புடையதா என்று சிந்திக்கக் கூட வழியில்லாமல் நம் ஜீவ அணுக்களிலேயே (genes) மூளைச் சலவை செய்யப் பட்டிருக்கிறோம்.
மீண்டுமொரு முறை நான் நம் மன சுதந்திரம் பற்றி மேலே எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள்.
நான் என் பல பதிவுகளில் எழுதி வரும் ஏற்ற தாழ்வுகளுக்கான அடித்தளம் அந்தக் காலத்திலேயே போடப் பட்டிருக்கிறது பதிவு சற்று நீண்டாலும்சொல்ல வருவதை ஒரே மூச்சில் சொல்வது நலம் என்று கருதி தொடர்கிறேன்




உலகில் எல்லா இனத்தவரையும் செய்யும் தொழிலால் நான்குவகைகளாகப் பிரிக்கலாம் மத சிந்தனைகளை வளர்ப்பவர்களை அந்தணர்கள் என்றும் போர்ப் படையில் இருப்பவர்களை க்ஷத்திரியர்கள் எனறும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை வைசியர்களென்றும் உடல் உழைப்பு செய்பவர்களை சூத்திரர்கள் என்றும் செய்யும் தொழிலை வைத்து வகைப் படுத்தலாம்.இதைத்தான் கீதையில் 4-ம் அத்தியாயத்தில் 13-ம் சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூற முற்பட்டிருப்பார் என்று தெரிகிறதுகுணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன்.அதற்குக் கர்த்தாஎனினும் என்னை அவிகாரி என்றும் அகர்த்தா என்றும் அறிக மனபரிபாகத்திலும் செய்கின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ண பேதம் என்று புரிந்து கொள்ள முடிகிறது
பகவான் உலகத்தைச் சிருஷ்டித்தபோதிலும் அவர் கர்த்தா அல்ல என்னும் தொனியில்  9-ம் அத்தியாயம்5-முதல் 10 வரையிலான சுலோகங்கள் தெரிவிக்கின்றன



 ஆனால் பிறப்பால் வேறு படுத்திப் பார்ப்பதே நம் நாட்டில் ஏற்ற தாழ்வுகளுக்கான வித்திட்டிருக்கிறது அதையே கீதையும் செய்கிறது. கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பது சுலோகம் 32பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர் வைசியர் சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.
கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் இல்லை.கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன.புண்ணிய நதி சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன கடவுளைக் கருதும் மனிதர்கள் எல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர்.செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர்’-என்னும்படியான வியாக்கியானம் வேறு...! இறந்தபின் எல்லோரும் சவம்தானே......!  
கீதை காலத்திலேயே பெண்களைத் தாழ்வாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு அத்தியாயம் ஒன்று சுலோகம் 41 அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர்.கிருஷ்ணா, மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக்கலப்பு உண்டாகிறது  ஆனால் இன்றைய நாட்களில் கலப்புகள் எல்லா இடங்களிலும் சீரிய பயன் தருகிறது என்றே கருதப் படுகிறது




கீதையின் பெரும்பாலானபகுதிகள்  ஸத்துவ ராஜஸ தமோ குணங்களைப் பற்றியே கூறுகின்றன. அந்தந்த குணங்களின் வெளிப்பாடுகள் அதனதன் பலன்கள் என்றே விதவிதமாகச் சொல்லப் படுகிறது.
அத்தியாயம் 2 சுலோகம் 19 “ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்று எண்ணும் இருவரும் அறியாதார். ஆத்மா கொல்வதுமில்லை கொலையுண்பதுமில்லைஇது போன்ற விஷயங்கள் சாதாரண மனிதனுக்குப் புரியாதது. புரியாத விஷயங்களைப்புரிந்து கொள்ள முயலும் போது கேள்விகள் எழுகிறது. கேள்விகள் கேட்டுத்தெளிவுற அடிப்படைகள் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்க வேண்டும் அல்லவா.?


மனிதன் உடலில் இந்திரியங்களால் வாழ்பவன் அவனிடம் உடலுக்கு உணர்வு உண்டு ஆத்மாவுக்கு இல்லை என்று கூறி இல்லாத , அல்லது தெரியாத ஒன்றை நோக்கி வழி நடத்திச் செல்ல முயற்சியே. இந்த போதனைகள் என்று தோன்றுகிறது. கதைக்கு வேண்டுமானால் இது சுவை சேர்க்கலாம். ஆனால் இக வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத கோட்பாடுகளே. இதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டாம் சில பதிவுகளுக்கு வந்துள்ள பின்னூட்டங்களே இதைத் தெளிவாக்குகின்றன. எந்த ஒரு abstract  விஷயத்திலும் கவனம் செலுத்துவது இயலாதது. தான் செய்யும் காரியங்களுக்குப் பொறுப்பு ஏற்கமுடியாதவன் இம்மாதிரி abstract எண்ணங்களில் கவனம் வைக்க முயலுவான். இன்றைய வாழ்வில் நடப்பது நமக்குத்தெரியும்  FOR EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE  REACTION  என்பது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞானம் அதுவே நம் வினைகளுக்கும் பொருந்தும் இருக்கும் வரை அன்பே பழகி நல்வினையே செய்து அதனால் விளையும் மகிழ்ச்சியில் வாழ்வதே சிறந்தது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. இருக்கும் போது நடப்பதை அனுபவிப்பதே நிதர்சனம். இறந்தபின் எப்படியானால் என்ன ?ஒருவனுக்குத் தெரியவா போகிறது.?  இறந்தவர்திரும்பிவந்து அனுபவங்களை பகிரவா போகிறார்.?
அறியாத ஒரு உருவகப் பொருளைத் தேடித்தேடி அலைந்து உழலுவதை விட எல்லோரையும் நேசித்து அன்பால் வாழ்ந்தாலேயே போதும் என்று சொல்லி முடிக்கிறேன்.
( தயை கூர்ந்து ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன்.)  


               
.
    
 

 

 

 

 

 
 
 
 

 

 

51 comments:

  1. ஐயா,
    வணக்கம்.
    கீதைப்பதிவு பற்றய தங்களின் எண்ணப்பகிர்வுகள்,
    சமன் செய்து சீர்தூக்கும் கோல்.
    மனுவும் சாதிகளும் படைக்கப்பட்டுப் பெண்ணடிமைத்தனமும் ஏற்றதாழ்வும் பரவலாக்கமும் பொதுமைப்பாடும் நடந்தபின் கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தங்களின் அகச்சான்று ஒன்றே தங்களின் நடுநிலையைக் காட்டப் போதுமானது.
    குணமும் குற்றமும் காட்டிவிட்டால், அவற்றில் மிகைநாடி மிக்கக் கொளல் கற்போர் கடன்தான்.
    எல்லா மதங்களும் அன்பை வலியுறுத்துகின்றன.
    மதம் பிடிக்கும் போது முதலில் பலியாவதும் அதுதான்.
    பகிர்வுக்கு நன்றி அய்யா!!!!

    ReplyDelete
  2. "அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

    சிறப்பான சிந்தனைப்பகிர்வுகள் ஐயா.

    ReplyDelete
  3. ‘’எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    ---------------------------------------------------------------------------‘’

    இந்த வரிகள் பகவத் கீதையில் இடைச்செருகலாக இருக்கும் என்ற தங்களின் ஐயம் சரியே. நமது இலக்கியங்களில் இதிகாசங்களில் இது போன்று பிற்காலங்களில் இடைச்செருகல்கள் அநேகம் உண்டு என படித்திருக்கிறேன். தங்கள் பதிவு மூலம் இதை அறியவைத்தமைக்கு நன்றி!

    ‘’எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    ---------------------------------------------------------------------------‘’

    இந்த வரிகள் பகவத் கீதையில் இடைச்செருகலாக இருக்கும் என்ற தங்களின் ஐயம் சரியே. நமது இலக்கியங்களில் இதிகாசங்களில் இது போன்று பிற்காலங்களில் இடைச்செருகல்கள் அநேகம் உண்டு என படித்திருக்கிறேன். தங்கள் பதிவு மூலம் இதை அறியவைத்தமைக்கு நன்றி!

    ‘’எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    ---------------------------------------------------------------------------‘’

    இந்த வரிகள் பகவத் கீதையில் இடைச்செருகலாக இருக்கும் என்ற தங்களின் ஐயம் சரியே. நமது இலக்கியங்களில் இதிகாசங்களில் இது போன்று பிற்காலங்களில் இடைச்செருகல்கள் அநேகம் உண்டு என படித்திருக்கிறேன். தங்கள் பதிவு மூலம் இதை அறியவைத்தமைக்கு நன்றி!

    அடுத்து பகவகீதை மகாபாரதத்தில் ஏற்றப்பட்ட ஒரு இடைச் செருகல் என்றே தோன்றுகிறது என்ற உங்களின் ஐயம் சரியாக இருக்கக்கூடும்.

    //மனதளவில் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து அடிமையாய் இருக்கிறோம்.//

    உண்மைதான் ஐயா. நம்மில் பலர்‘அப்பன் வெட்டிய கிணரென்று மூடர்கள் உப்புத் தண்ணீரை குடிக்கிறார்கள்.’ என்பதை நம்மில் பலர் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

    பகவத் கீதையை எங்களுக்கு புரியும் வகையில் மொழி மாற்றம் செய்து பதவுரை தந்தமைக்கு நன்றி. ஆனால் சில இடங்கள் புரியவில்லை என்பதையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். அது உங்கள் குற்றமல்ல. எங்கள் குற்றமே.

    ReplyDelete
  4. //சுவாமி அறையில் மாட்டப்படும் மேற்படி வாசகம் கீதையில் எங்குமே காணவில்லை. விரிவுரை கூறியவர்களின் எழுத்துக்களை ஸ்ரீபகவான் கூறியதென்று சொல்லி பரப்பவேண்டிய கட்டாயம் ஏதோ.?. புரியாத ஒன்று. அதேபோல் ‘கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்றும் கீதையில் இல்லை. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறது”//

    அவை கீதையில் இல்லை. கீதையின் சாரம் எனச் சிலர் சொல்கின்றனர். அதுவும் சரியல்ல என்பது என் கருத்து. அதர்வண வேதம் பின்னால் வந்தது.

    மஹாபாரதத்தின் இடைச்செருகலோ இல்லையோ அது தெரியாது. ஆனால் வேத வியாசரும் விஷ்ணு அம்சம் நிறைந்தவரே. கிருஷ்ணர் சொன்னதாகத் தான் எழுதி இருக்கிறாரே தவிர வியாசராக இவற்றை எழுதவில்லை. இதிஹாசம் என்பதே நடந்ததை நடந்தபடி சொல்வது தானே! அப்படியே வியாசர் சொல்லி இருக்கிறார். இதை அனைவரும் நம்பவேண்டும் என்பதும் இல்லை.


    //இருந்தாலும் படித்து முடிதபின் ஏதோ மனம் நிறைவு பெறாத ஒரு எண்ணம்.தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தில் தெய்வ அசுர குணங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. படித்தபின் தெய்வ குணங்கள் உள்ள மானிடரைக் காண்பதே அரிதோ என்று தோன்றுகிறது.//

    மனித மனங்களின் அசுர எண்ணங்களுக்கு பகவானைப் பொறுப்பாக்குவது எப்படிச் சரியாகும்?

    ReplyDelete
  5. முடிஞ்சால் மறுபடி வரேன். :)

    ReplyDelete

  6. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றோருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்

    வணக்கம் ஐயா இந்த கீதாசாரத்தில் வாழ்வின் தத்துவத்தை பாமரனுக்கும் விளங்கும் வகையில் சுலபமாக சொன்ன கிருஷ்ணரின் வார்த்தையில் மயங்கியவன் நான். அதன்பால் இதனை உலக அளவிலான சுமார் 25 மொழிகளை தேர்ந்தெடுத்து மொழி மாற்றம் செய்ய எண்ணி கடந்த இரண்டு வருடமாக தயார் செய்து சேகரித்துக் கொண்டு வருகிறேன் அதற்க்கு தங்களின் வாழ்த்துகளை வழங்குவீராக... எப்படியும் இன்னும் ஒரு வருடத்துக்குள் வெளியிட்டு விடுவேன் இந்த விபரத்தை தங்களிடம் மதுரை விழாவில் சொல்ல முயற்சித்து கடைசியில் மறந்தும் விட்டேன்.

    குறிப்பு – ஐயா நான் மதவாதியோ, மதபோதகனோ அல்ல ! என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

    பணிவுடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா ! ராமாவதாரத்திற்கு பிறகுதன் கிருஷ்ணாவதாரம் ! வால்மிகியின் ராமாயணம் எழுதப்படுவத்ற்கு முன்பே மகாபாரதம் வியசனால் எழுதப்பட்டது ! ரமாயணம் வால்மிகியால் சொம்மொழியான சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது ! வியாசனின் எழுத்தில் அத்தகைய சொம்மொழி தன்மை குறைவு ! அதனால் காலத்தால் அது முன்னால் எழுதப்பட்டது ! கீதையின் பதப் பிரயோகங்கள் சொம்மொழி சார்ந்தவை என்பதுமொழியியலார் கூற்று! அதனால் அது இடைசொருகல் என்பது அறிவு பூர்வமானது ! இருந்தாலும் இதிகாசம் என்ற வகையில் படிக்க படிக்க அதன் கதை சொல்லும் பாங்கு சிறப்பானதாகும் ! நண்பர் அப்பாதுரை பற்றி குறிப்பிட்டுள்ளது மிகச்சரியே ! அடிமைத்தனம் பற்றிய அவரது வரையரைகள் பிரமிப்பூட்டுபவை ! உங்கள் பின்னுரை மிகவும் உயர்ந்த தளத்தில் உள்ளது !வாழ்த்துக்கள் ---காஸ்யபன்.

    ReplyDelete
  8. "எது நடந்ததோ...' கீதையில் வரவில்லை என்று நானும் படித்திருக்கிறேன். கீதா மேடம் சொல்வது சரி என்று படுகிறது.நீங்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கிறேன். காஷ்யபன் ஸார் சொல்லி இருப்பது போல //உங்கள் பின்னுரை மிகவும் உயர்ந்த தளத்தில் உள்ளது// ஆமோதிக்கிறேன். புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  9. ***மனிதன் உடலில் இந்திரியங்களால் வாழ்பவன் அவனிடம் உடலுக்கு உணர்வு உண்டு ஆத்மாவுக்கு இல்லை என்று கூறி இல்லாத , அல்லது தெரியாத ஒன்றை நோக்கி வழி நடத்திச் செல்ல முயற்சியே. இந்த போதனைகள் என்று தோன்றுகிறது. கதைக்கு வேண்டுமானால் இது சுவை சேர்க்கலாம். ஆனால் இக வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத கோட்பாடுகளே***

    நடைமுறைப் படுத்த முடியாது என்பதற்காக கோட்பாடுகள் இல்லாமல் வாழலாம் என்பதும் பிரச்சினைக்குரிய ஒன்றே.

    மதமும், மத நூல்களும், மத போதனைகளும் உருவானது மனிதனைப் பண்படுத்த. எந்த மனிதனும் எம்மத கோட்பாடுகளையும் முற்றிலும் பின்பற்ற இயலாது என்பது உண்மை. காலத்திகேற்றார்போல் கோட்பாடுகள் ஓரளவுக்கு மாற்றியமைக்கப் படுகின்றன. அப்படி மாற்றியமைக்கப் படவில்லையென்றால் அம்மதம் வெகுஜன மக்களால் ஏற்கப்படவோ, போற்றப்படவோ முடியாமல் அழிகிறது என்று நம்புகிறேன். :)

    ReplyDelete
  10. ***பகவகீதை மகாபாரதத்தில் ஏற்றப்பட்ட ஒரு இடைச் செருகல் என்றே தோன்றுகிறது. மகாவியாசர் எழுதியதாயிருந்தால் – “விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் நான் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன்” என்று தன்னை குறித்தே எழுதி இருப்பாரா.?***

    இதுபோல் "ராஷனலைஷேசன்" செய்வது உங்கள் திறந்த மனதைக் காட்டுகிறது. கட்வுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உள்ள பலரிடம் இதைப் பார்ப்பது அரிது. இந்த வகையில் நீங்க யுனீக் தான், ஜி எம் பி சார்! :)

    ஒரு மதநூல், அல்லது கோட்பாடுகள் ஒரு சராசரி மனிதனால் எழுதப் பட்டவையே என்தையே பலர் மறந்துவிடுவார்கள். கடவுளே வந்து ஒவ்வொரு வாக்கியத்தையும் சொன்னதாக எடுத்துக்கொள்ளும் சிலர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் வருகிறது. :)

    ReplyDelete
  11. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது....என்ற தொடரை என் வாழ்வில் மிகவும் முக்கியமான சொற்றொடராகக் கொண்டுள்ளேன். பல முக்கியமான நேரங்களில் அது என்னை வழிப்படுத்துகிறது. சில நேரங்களில் கைகொடுக்கிறது. இக்கட்டான சூழலில் ஆறுதல் தருகிறது. இவ்வாறே தங்களின் பதிவும் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  12. சார், எது நடந்ததோ.........இது கீதையில் இல்லை என்பது தெரியும். ஆனால் மிக உயர்ந்த வாழ்வியல் தத்துவங்கள். யார் சொன்னால் என்ன?

    நாங்கள் இது வரை தங்கள் கீதை வியாக்கினங்களைப் படிக்க வில்லை. ஏனென்றால் அவற்றை எங்களுக்கு உள் வாங்கும் திறன் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால் தானோ என்னவோ அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாமல் போனது. ஏன்? அது ஒரு பாமரனால் படித்து அறிந்து கொள்ளும் வகையில் இல்லை என்பதே. அதை நீங்களும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அதை விட நீங்கள் முதலில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் (இப்போது எங்கும் அதைக் காணலாம்) மிகவும் பிடிக்கும். அது பல பெரியோர்களால் சொல்லப்பட்டதே.

    கீதை சொல்கிறது, கீதை சொல்கிறது என்று சொல்வதை விட, நம் அனுபவம் என்ன சொல்கின்றது? நம்மைச் சுற்றி நடப்பவை என்னவெல்லாம் கற்பிக்கின்றது? அதிலிருந்து எத்தனையோ பாடங்களைக் கற்கின்றோம்.

    நீங்கள் சொல்லி இருக்கும் "சுயமாகச் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் என்பது சரியே. உங்கள் எண்ண வெளிப்பாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றது.

    // When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
    நான் இவ்வாறு எழுதுவதன் நோக்கமே நம்மில் பெரும்பாலோர் மனதளவில் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து அடிமையாய் இருக்கிறோம் அல்லது சிந்திக்க மறுக்கிறோம் என்று நினைப்பதால்தான். // மிக மிகச் சரியே! சார்...அருமையான கருத்து!

    ஒரு முறை மட்டுமே வாசித்திருக்கின்றோம். உங்கள் பகுதியை காப்பி பேஸ்ட் செய்துகொண்டுள்ள்ளோம். இன்னும் ஆழ்ந்து வாசிப்பதற்கு. மறுமுறை படிக்க வேண்டும்.

    கீதையைப் பற்றி நீங்கள் சொல்லியிருபதைத் தவிர (அது எங்களுக்குப் புரியாததால்) மற்ற கருத்துக்கள் அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டோம்.

    ReplyDelete
  13. அருமையான அலசல்.

    இதற்குத்தான் அன்றே 'தாடி' இப்படிச் சொல்லி வச்சுட்டுப்போனார்.

    "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

    இப்பவும் சொல்கிறேன், ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கத்தான் போறேன்.

    எதுக்கு? கீதையின் 18 அத்தியாயங்களையும் மொழிபெயர்த்து நீங்க எழுதுன பதவுரைகளை புரிகிறதோ இல்லையோ அப்படிக்கப்படியே படித்துப் புரிந்து கொள்ளும் முயற்சிக்காக.
    சமஸ்க்ரதத்தில் எழுதியவைகளை, இஸ்கான் போட்டுருக்கும் புத்தகத்தில் (ஆங்கிலத்தில் உள்ளது) படித்துப்புரிந்து கொள்ள முயற்சித்ததைப் போலவேதான்.

    எதற்கு பூஜை சமயம் என்று சொன்னேன் என்றால்..... மனசு அடங்கிக் கொஞ்சநேரம் உட்கார முடிஞ்ச நேரம் அதுதான் என்பதால். அதுவுமல்லாமல் தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வைக்க இப்படித்தான் முடியும்.டிஸிப்ளின் வேணுமே:-)

    ReplyDelete
  14. எண்ணப் பகிர்வுகள் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  15. இந்தப் பதிவு உங்கள் பிற கீதைப் பதிவுகளை விட மிக மிக சுவாரசியம். மொத்த உழைப்பு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    இடைச்செருகல், கருத்துக் கலப்பு மற்றும் படைப்புத் திருட்டு இந்தக் காலத்திலும் பொருந்தும்.

    எது நடக்கிறதோ.... பொருள் விளங்கியதே இல்லை.

    மனு ஸ்மரிதியில் இரண்டு வேதங்கள் பற்றி மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ குறிப்புகளில் ரிக் வேதம் பற்றி அதுவும் இந்திரனை மையமாக வைத்து குறிப்புகள் உள்ளன. india-Indus valley civilization-kingdom of Indra என்ற ரீதியில் மெய்யியல் வாதம் சாத்தியமே. தத்தம் விருப்பம் மற்றும் பட்சம் பார்த்து எழுதினார்கள் என்றே நினைக்கிறேன். சைவ புராணங்கள் இலக்கியங்களில் சிவன் தான் டாப்பு விஷ்ணுவெல்லாம் டூப்பு என்பது போல் எழுதியிருக்கிறார்கள். நான் படித்த உபநிஷத்களில் 'எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல' விராட் புருஷன் விஷ்ணு என்கிறது - சிவன் எல்லாம் 'மருந்துக்கு' கூட குறிப்பிடவில்லை. ஆக கீதையில் குறிக்கப்படவில்லை என்றால் அது இல்லை என்றோ பிறகு வந்தது என்றோ சொல்ல முடியாது என்று நம்புகிறேன். வியாசர் அல்லது இடைச்செருகரின்(?) விஷமமாகவும் இருக்கலாம். அதர்வணம் எல்லாவற்றிலும் மூத்தது பண்டிதர்களால் எழுதப்படாதது நிறைய அழிந்து போனது போன்ற கருத்துக்களும் உள்ளன.

    வியாசர் அருமையான கதாசிரியர். அவர் சொன்னது காலத்தை வென்ற கதை. அதில் செய்தி இருப்பதாக நாம் நினைக்கிறோம், அவ்வளவே.

    ReplyDelete
  16. arumaiya soneenga....we have to unlearn what we learnt. Else things would overflow and wont be grasped well. nalla sindhanai pagirvu. உங்கள் அயராத உழைப்பு தெரிகிறது

    ReplyDelete

  17. @ ஊமைக்கனவுகள்,
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா. சில புரிதல்கள் தவறாகலாம் என்று எண்ணிதான் We have to unlearn what we have already learnt என்று சொன்னேன். கீதை 4-ம் அத்தியாயம் சுலோகம் 13-ல் கிருஷ்ணர் தானே நான்கு வருணங்களையும் படைத்தவர் என்கிறார்with a rider.நடு நிலையில் எழுதி இருக்கிறேன் என்ற உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  18. @ இராஜராஜேஸ்வரி
    திரு அப்பாதுரையின் சிந்தனையில் உதித்த வரிகளை நான் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  19. @ வே நடனசபாபதி
    முன்பே ஒரு பதிவில் வியாசர் எழுதியதாகச் சொல்லப்பட்ட மகாபாரதத்தில் இருந்த சுலோகங்கள் மூன்று நான்கு மடங்கு அதிகமாய் இருப்பதாகப் படித்ததைக் குறிப்பிட்டு இருக்கிறேன் வியாசர் சொல்லி விநாயகர் எழுதியதாகக் கதை உண்டு. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாமே வாய்வழியேதான் ஓதப்பட்டு வந்திருக்கும்.இடைச் செருகல்கள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் வருகை தந்து கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்.
    கிருஷ்ணர் சொல்லி வியாசர் பாரதம் எழுதியதாகவும் கதை இருக்கலாம். மகாபாரதத்தில் வியாசரும் ஒரு பாத்திரம் என்பதை நாம் மறக்கக் கூடாது./
    மனித மனங்களின் அசுர எண்ணங்களுக்கு பகவானைப் பொறுப்பாக்குவது எப்படிச் சரியாகும்?/மனிதனால் சாதாரணமாக பயில முடியாத குணங்களை தெய்வாசுர குணங்கள் என்று பிரித்துக்காட்டுகிறார் என்பதே நான் சொல்ல வந்தது.

    ReplyDelete

  21. @ கீதா சாம்பசிவம்
    /முடிஞ்சால் மறுபடியும் வரேன்/ அவசியம் வாருங்கள். வரும்போது எந்த bias-ம் இல்லாமல் திறந்த மனத்துடன் வாருங்கள். நன்றி.

    ReplyDelete

  22. @ கில்லர்ஜி
    அவசியம் மொழி மாற்றம் செய்யுங்கள். ஆனால்... கீதையின் வாசகம் என்று மட்டும் வேண்டாம்
    வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  23. @ காஸ்யபன்
    ஐயா வணக்கம். நான் எது முன்பு எழுதப் பட்டது எது பின்னால் எழுதப் பட்டது என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை. நான் குறிப்பிட்டுள்ள அந்த சுலோகமே என்னை கீதை இடைச் செருகலாக இருக்குமோ என்று நினைக்கத் தூண்டியது. முடிந்தவரை யார் மனமும் புண்படக் கூடாது என்ற நினைப்பிலேயே எழுதினேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ ஸ்ரீராம்
    /கீதா மேடம் சொல்வது சரி என்று படுகிறது/ எது என்று சொல்லவில்லையே ஸ்ரீ எனக்கென்று சில அபிப்பிராயங்கள் இருந்தாலும் கீதை பற்றிய என் எண்ணப் பகிர்வில் நடுநிலை காக்கவே முயற்சித்துள்ளேன் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  25. @ வருண்
    /நடைமுறைப் படுத்த முடியாது என்பதற்காக கோட்பாடுகள் இல்லாமல் வாழலாம் என்பதும் பிரச்சினைக்குரிய ஒன்றே/நான் சொல்ல வந்தது சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்றே தோன்றுகிறது இந்திரியங்களால் வாழ்பவனிடம் இல்லாத அல்லது தெரியாத ஆத்மாவின்பால் மனசை வை என்பதையே நடைமுறைப்படுத்த முடியாத அறிவுரை என்றேன் கீதையில் கூறப்பட்டுள்ள விருப்பு வெறுப்பற்ற அணுகல் பற்றியும் மனதை ஒருமுகப் படுத்திச் செயல் புரிவது பற்றியதுமான விஷயங்களை நான் மறுதளிக்கவில்லையே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி வருண்.

    ReplyDelete

  26. @ வருண்
    /
    ஒரு மதநூல், அல்லது கோட்பாடுகள் ஒரு சராசரி மனிதனால் எழுதப் பட்டவையே என்தையே பலர் மறந்துவிடுவார்கள். கடவுளே வந்து ஒவ்வொரு வாக்கியத்தையும் சொன்னதாக எடுத்துக்கொள்ளும் சிலர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் வருகிறது. :)/ அதற்காகத்தான் மனதை ஒரு clean slate-போல் வைத்துக் கொண்டு படிக்க வேண்டி இருந்தேன். நன்றி வருண்.

    ReplyDelete
  27. கிருஷ்ணர் சொல்லி எல்லாம் பாரதம் வியாசரால் எழுதப்படவில்லை. இதிஹாசங்களே அதை எழுதுபவரும் அதில் ஒரு பாத்திரமாக இருந்து நடந்ததை நடந்தபடியே எழுதியதைத் தான் குறிப்பிடுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் வால்மீகியும் ஒரு பாத்திரமாக இருந்தது போல் பாரதத்திலும் வியாசரும் ஒரு பாத்திரம். அவரால் நடந்ததை நடந்தபடியே எழுத முடிந்தது அதனால் தான்.

    ReplyDelete
  28. தான் கண்டது, கேட்டது, அறிந்தது என அனைத்தும் வியாசர் வாயால் சொல்லப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

  29. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஆறுதல் ஏற்படுத்தும் சொற்றொடர் இல்லைஎன்று நான் சொல்லவில்லை. அது கீதையில் இல்லை என்றுதான் எழுதினேன்வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  30. எனக்கு எவ்விதமான சார்பு நிலையும் இல்லை. எப்போதும் ஒரே கொள்கைதான். அதிலிருந்து மாறுவதும் இல்லை. யாரையும் வற்புறுத்தியதும் இல்லை. அவரவர் கருத்து அவரவருக்கு!

    ReplyDelete

  31. @ துளசிதரன் தில்லையகத்து
    /ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால் தானோ என்னவோ அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாமல் போனது. ஏன்? அது ஒரு பாமரனால் படித்து அறிந்து கொள்ளும் வகையில் இல்லை/அதனால்தான் சுமார் 20 பதிவுகளாக எழுதினேன். இப்போதே படிக்க முடியவில்லை என்றால் காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டா படிக்கப் போகிறீர்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  32. @ துளசி கோபால்நம்பிக்கையின் பால் செய்யப் போகும் செயல் உங்கள் domain. நான் என்ன சொல்ல.?வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  33. @ கரந்தை ஜெயக்குமார்
    பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  34. @ A.Durai
    /இந்தப் பதிவு உங்கள் பிற கீதைப் பதிவுகளை விட மிக மிக சுவாரசியம். மொத்த உழைப்பு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்./அந்தப் பதிவுகள் கீதையின் சுலோகங்களின் தமிழ் வடிவம் இந்தப் பதிவு என் எண்ணப் பகிர்வு. ஒரு கதையாக எனக்கும் மகாபாரதம் வெகுவாகப் பிடிக்கும்.எத்தனை பாத்திரங்கள் . எத்தனை முடிச்சுகள்.....1

    ReplyDelete

  35. @ ஷக்திப்பிரபா
    புரிந்து கொண்டு படித்ததற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  36. @ கீதா சாம்பசிவம்
    நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்...1 நான் ஏதும் கூறுவதற்கில்லை. ”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே” நீங்களும் படித்திருப்பீர்கள். எனக்கு மஹாபாரதமும் அதில் கதை சொன்ன நயமும் மிகவும் பிடிக்கும் மீள்வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  37. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete
  38. அன்பின் ஐயா..
    கீதைப் பதிவினை நிறைவு செய்து - அதனை சீர்தூக்கி சிறப்புரை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த வணக்கம்...

    ReplyDelete
  39. தங்களுடைய கீதை பதிவு – தொடர்கள் அனைத்தையும், என்னால் தொடர்ந்து முழுவதையும் படிக்க இயலாமல் போய்விட்டது. என்றேனும் ஒருநாள் பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும்.

    // பெரும்பாலோரால் மேற்கோள் காட்டப்பட்டு, சுவாமி அறையில் மாட்டப்படும் மேற்படி வாசகம் கீதையில் எங்குமே காணவில்லை. //

    நானும் இந்த மொழிபெயர்ப்பை செய்தது யார் என்று தேடிப் பார்த்து விட்டேன். தெரியவில்லை. பெரும்பாலும் ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தினர் செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதேபோலத்தான் “கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே” என்ற வாசகமும்.

    கீதையை முழுதுமாக பதிவினில் எழுதிவிட்ட உங்களது மனதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இந்த பதிவினை, கீதையைப் பற்றிய உங்களது ஒட்டு மொத்த பார்வை எனலாம். மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். அப்போது தோன்றும் புதுப்புது அர்த்தங்கள் வேறாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  40. One of the many things that obstructs our free and unbiased thinking is fear of all sorts. Fear of profanity is one. It is understood even in your way of expressing doubts about the Gita. When people are totally free of the fear of profanity, they become like Periyar. All your doubts would have been expressed by them bluntly which we call "'rashly.''

    Ok. I liked your post. The Gita was, as someone has already said, a historic necessity for those who wanted to propagate Hindusim forcefully against hostile forces. Otherwise, i.e. if there were no such forces and every thing was favourable, the Gita would not have come to be written at all. Necessity knows no law. Hence, the writer or writers of Gita imagined the unimaginable, i.e. of dividing people and attributing evil to births.

    The varnashrama was needed to be concocted to make a point. It was smoothly accepted in a society of frightened masses. Some sections of people should be enslaved and, to do that in the name of God, would be powerful and unquestioned. It was a clever trick. When people became independent somewhat, the ahsram was questioned.

    The whole of Gita is a fabrication by some for some ulterior motives. It has nothing to do with God. This is my view. It somewhat comes out in your post too. The God we worship transcends the power of those motivated writers. Hence we call Him Almighty or Omnipotent.

    ReplyDelete

  41. @ யாதவன் நம்பி
    உங்கள் பதிவின் சுட்டியைக் கொடுத்து வாசிக்கச் சொல்லும் முன், இந்தப் பதிவை நீங்கள் வாசித்திருக்க வேண்டும் என்று கூறுகிறேன். நீங்கள் பின்பற்ற வேண்டியது என்றும் கூறுகிறேன்

    ReplyDelete

  42. @ துரை செல்வராஜு
    தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  43. @ தி.தமிழ் இளங்கோ
    கீதைய நான் பிரபலப்படுத்தப் பட்ட ஒரு நூலாகவே அணுகினேன். அது பற்றி அதில் கூறி இருக்கும் விஷயங்கள் பலவற்றையும் ஒருபிரமிப்போடு படிக்காமலேயே காணும் நாம் பலரும் எளிதில்படிக்கும் இணையத்தின் மூலமாக குறைந்தது என் பதிவுகளைப் படிப்பவர்களுக்காவது ஒரு வாய்ப்பு என்று கருதியே வெளியிட்டேன் அதில் திருப்தியும் உண்டு. எந்த பிரமிப்பும் இல்லாமல் ஒரு நூலினை அணுகினால் எந்த எண்ணங்கள் வருமோ அதையே என் எண்ணப் பகிர்வுகளாக எழுதி வெளியிட்டேன் எப்பொழுது படித்தாலும் ஒரே அர்த்தம்தான் தொனிக்கும் என்றே எண்ணுகிறேன். ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன் There is nothing religious about it. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  44. @ குலசேகரன்
    ஐயா என் பதிவுகளுக்கு இது முதல் வருகை என்று நினைக்கிறேன்.உங்களைப் பற்றிய செய்தி ஏதும் profileல் கிடைக்கவில்லை. That is besides the point. I want to tell you that I have no fear of profanity. If my language shows it other way. it is only because I feel rash pronouncements do not help in any way. My readers know me through my writings and they know that I do not mince words. I have been writing my views on varnaashrama and reading githa only endorses my view that this is an evil existing for a long time and had been given god's sanctity.I feel that I have given expression to my views. Thank you for your comments.

    ReplyDelete
  45. "கடவுள் அருளியது" என்ற முட்டுக்கொடுப்பை தள்ளி வைத்து, அறிவியல் மனப்பாங்கில் ஆய்ந்து தெழிந்து எழுதியுள்ளீர்கள். உங்கள் உழைப்பும், நேர்மைத்திறமும் மரியாதைக்குரியது.

    ஊருக்குத்தான் உபதேசம் என்பது கீதைக்கு மிகப்பொருத்தம். திருநங்கைகள், பெண்கள், எளியவர்களை வன்மத்தோடு அணுகுகிறது. மாற்றுக்கருத்து உடையவர்களை காமுகர்கள் என்று கட்டம் கட்டுகிறது. ஆனால் எல்லோருக்கும் தானே கடவுள் என்று மிரட்டி தன்னை துதிபாடுவது ஒன்றே கதி என்று கூட்டம் சேர்க்கப்பார்க்கிறது.

    இந்தத்தொடர் மேற்கோள் காட்ட உகந்தது. அணுகுவதற்கு எளிதாக உள்ளதால் வேண்டுபவர்கள் படித்துவிட்டு தன் பிழைப்பைப் (பத்திரமாக) பார்பார்கள்.

    ReplyDelete
  46. கீதையின் தமிழ்ப் பதவுரை முழுவதையும் மூன்றே மாதங்களுக்குள் ஒரு தவம் போல் தொடர்ச்சியாய் இயற்றி முழுமையாக வெளியிட்டு முடித்தமைக்கு முதலில் என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

    உடலும் மனமும் சூழலும் ஒத்துழைத்தாலன்றி இதுபோன்ற மாபெரும் முயற்சிகளில் ஈடுபடுவதும் இலக்கை எட்டுவதும் அசாத்தியம். அந்த வகையில் தாங்கள் ஒரு மகத்தான பணியை சிறப்பாக நிறைவேற்றியதோடு அதற்கான பின்னுரையும் மிகத்தெளிவாக வழங்கி வாசகர்களை வாசிப்பதற்கு தயார்ப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

    எழுதுவதற்கு நிகரான நிதானமும் பொறுமையும் இருந்தால்தான் கீதை போன்ற சாரம் நிறைந்த உரைகளை வாசித்துப் புரிந்துகொள்வதும் சாத்தியம். இத்தனை நாட்களாய் ஒத்திப்போடப்பட்ட அச்சூழல் இப்போது சாதகமாக, கீதையை வாசிக்கும் மனநிலை எனக்கு வாய்க்கப்பெற்றதாக உணர்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக தங்கள் கீதோபதேச பதவுரையின் முதல் பகுதியிலிருந்து பதினெட்டு அத்தியாயங்களையும் பின்னூட்ட விளக்கங்களையும் வாசித்து முடித்துள்ளேன். இப்போது பின்னுரையையும் வாசித்தேன்.

    ஆரம்ப அத்தியாயங்களில் சற்று விலகியே இருந்த எழுத்துநடை போகப்போக எளிதாக மாறி மனத்துக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. முதலிரண்டு அத்தியாயங்களின் பின்னூட்டங்களின் பாதிப்பால் மாறிவிட்டதா தங்கள் எழுத்துநடை? அல்லது தொடர்ந்து வாசிக்க வாசிக்க மொழி எனக்குப் பழகிவிட்டதா? தெரியவில்லை.

    பழந்துளைக்கும் வண்டாக மிக எளிதாக மனந்துளைத்துப் போவதோடு மறந்துபோகாதபடிக்கு பல உரைகள் மிக அற்புதமாக உள்ளன. சில ஒருமுறைக்கு இருமுறை ஆழ்ந்து படித்து பொருளுணரவேண்டியவையாக உள்ளன. பொருள் புரியும்போது ரசிக்க முடிகிறது. சில பதிவுகளின் நீளம் குறித்து பலரும் எழுதியிருந்தார்கள். ஆனால் எனக்கு பதிவுகளின் நீளம் ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை. வாசிக்க ஆரம்பித்தால் நீளம் பற்றிய பிரக்ஞையே எழவில்லை. ஒருவேளை மற்ற பணிகளுக்கிடையில் வாசிக்க நேர்கையில் சிறு ஆயாசம் எழநேரிடலாம்.

    தமிழுக்கு தாங்கள் ஆற்றியிருக்கும் மகத்தான பணி இது. பகவத் கீதை பற்றிய எந்தவித ஞானமும் இல்லாமல் ஆங்காங்கு கீதாசாரம் என்ற பெயரில் தொங்கும் அட்டை வாசகங்களை மட்டுமே கொண்டு கீதை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உள்ளுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் என் போன்ற பலரையும் தெளிவிக்க உதவும் அருமையான பதிவு இது. உளவியல் மற்றும் உலக வாழ்வியல் சார்ந்த பதிவுகள் பலவற்றுக்கும் மேற்கோள் காட்ட உதவும்.

    தாங்கள் முன்னுரையிலும் பின்னுரையிலும் குறிப்பிட்டுள்ளது போல் சுய விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு கீதையைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டுமே இப்போது எனக்குள். இப்படியொரு வாய்ப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

  47. @ கீத மஞ்சரி
    ஒரு சில பதிவுகள் எழுதும் போது இன்னின்னார் வந்து படிப்பார்கள் என்னும் எண்ணமும் கூடவே வரும். ஆனால் கீதைப் பதிவுகளில் பதிவாகும் போது உங்களைக் காணாதது சற்று ஏமாற்றமளித்த்து என்றால் மிகையாகாது. கடந்த சில நாட்கள் கீதைப் பதிவுகள் முதலிலிருந்து வாசிக்கப் படுவது தெரிந்தது. அது நீங்களாயிருந்தது மிக்க மகிழ்ச்சி தருகிறது. எழுதுவதை உள்வாங்கி எந்த bias- உம் இல்லாமல் நீங்கள் எழுதிய பின்னூட்டம் மேலும் உற்சாகமளிக்கிறது. வருகைக்கு நன்றி மேடம் ( உங்கள் மாமனார் ஏதாவது கருத்து தெரிவித்தார்களா.?)

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள் ஸ்வாரஸ்யமாக இருந்தன. கீதை இடைச்செருகலாக இருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் போது வ்யாசர் தன்னைப் பற்றியே கூறியிருப்பாரா என்று கேட்ட கேள்விக்குப் அடியேன் கருத்து:
      வ்யாசர் என்பது ஒரு பதவி, ப்ரம்மா போல். மஹாப்ரளயம் முடிவில் தோன்றும் யுகங்கள் தோறும் வ்யாச பதவி புதிய ஒருவருக்குக் கிட்டும் என்று கேட்ட ஞாபகம். அடுத்த வ்யாசர் அஸ்வத்தாமா என்று ஓர் உபன்யாசத்தில் கேட்ட ஞாபகம் 🙏🙏

      Delete
  48. இதில் கண்டிருப்பது எங்கோ கேட்டது அல்ல என் எண்ணப்பகிர்வுகளே
    கூடியவரை விருப்பு வெறுப்பின்றி எழுதியதுகீதையை படித்தீர்கள் என்று தெரிகிறது நன்றி உங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் என்ன தயக்கமோ தெரியவில்லை

    ReplyDelete
  49. வண்டு வாசிப்பது மகிழ்ச்சி

    ReplyDelete