Monday, April 30, 2012

விஜயவாடா...தொடரும் நினைவுகள்.


                                 விஜயவாடா ....தொடரும் நினைவுகள்.
                                -----------------------------------------------------

( கற்பனை செய்து கதைகள் எழுதுவது ஒருவிதம். ஆனால் நிஜ வாழ்வில் சில சம்பவங்கள் 
கற்பனையை விட சுவையாய் இருக்கின்றன. இதுவே என் பதிவுகளில்அனுபவங்களின் 
வெளிப்பாடாக இருக்கிறது.)


                                                                                      நண்பேன்டா...
                                          --------------------
விஜயவாடா நினைவுகள் குறித்து முன்பொருமுறை எழுதி இருந்தேன். கீழ்காணும் செய்திகள் இல்லாமல் விஜயவாடா வாழ்க்கை முற்றிலும் சொல்லப்பட்டதாகாது. திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை கொதிகலன்களுக்கான பாகங்களை தயார் செய்து அவை அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். விஜயவாடா அனல் மின் நிலையத்துக்கு , கொண்டபள்ளி என்னும் ரயில் நிலையத்துக்கு தளவாடங்கள் வந்து சேரும். அங்கிருந்து அவை மூன்று நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இப்ராஹிம்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.மிகவும் கனமான பொருட்களை அனல் மின் நிலையத்தருகிலேயே இறக்க வசதியாக ரயில்வே லைன் போட்டிருந்தார்கள்.


தளவாடங்கள் வந்து சேர்ந்ததும் அவற்றை இறக்கி ( unload ) ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரயில்வேக்கு டெமரேஜ் என்று அபராதம் கட்ட வேண்டும். ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாலேயே அவர்களுக்கு “ கப்பம்
கட்ட வேண்டும் என்பது எழுதப் படாத விதி..வரும் ரயில் வாகன்களின் சக்கர எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுக்க வேண்டும்

அனல் மின் நிலையத்துக்கான கொதிகலனின் பாய்லர் ட்ரம் எனப் படும் பாகம் மிக முக்கியமானது. 210 மெகாவாட் அனல் மின் நிலையத்துக்கான பாய்லர் ட்ரம், சுமார் 140 மெட்ரிக் டன் எடையிருக்கும். அதை வாகனிலிருந்து இறக்குவது முக்கிய பணி. இதற்காக TATA  P&H CRANE-கள் உபயோகப் படுத்தப் படும். ஒரு க்ரேனின் தூக்கும் சக்தி அதிக பட்சமாக 75-டன் ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு க்ரேன்களும் சரியாக இயக்கப் பட்டால் வேகனிலிருந்து இறக்கலாம். SYNCHRONISE ஆக இயக்காவிட்டால் விபரீதமாகிவிடும். ட்ரம் கீழே விழுந்து சேதப்பட வாய்ப்புண்டு.

அன்றைக்கு எனக்கு உடல் நலம் சற்றுக் குறைவாக இருந்ததால் ,அன்று பாய்லர் ட்ரம் வராது என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு ஓய்வெடுக்க வீடு நோக்கிப் பயணப் பட்டேன். போகும் வழியில் பாய்லர் ட்ரம் வேகன் கொண்டபள்ளி நோக்கி வருவதை கண்டு மீண்டும் பணியிடத்துக்கு வந்து விட்டேன். எல்லாம் சரியாகத் திட்டமிட்டு அதன் படி நடந்தால் இர்ண்டு மூன்று மணி நேரத்தில் ட்ரம்மை இறக்கி விடலாம். மீண்டு வந்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டேன். ட்ரம்மை இறக்கி வைக்க மர ஸ்லீப்பர்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தேன். அந்த நாள் என் கட்டுமான பணி அனுபவத்தில் மறக்க முடியாதது.


முதன் முதலாக அந்த எடையுள்ள முக்கிய பாகம்  பார்ப்பதற்கும் ,அதை எப்படி இறக்குகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் ஒரு கும்பலே கூடி விட்டது. கட்டுமானப் பணி நடந்த இடம் BLACK COTTON SOIL எனப் படும் நிலம். பளு ஏற்றப் பட்டால் க்ரேன் மண்ணில் புதைய வாய்ப்புண்டு என்று கணித்திருந்தோம். அதற்கேற்றாற்போல் க்ரேன் நிற்க வேண்டிய இடத்தில் சில சிறிய போல்டர்கள் மற்றும் ஸ்லீப்பர்கள் அடுக்கி அதன் மேல் க்ரேனை நிற்க வைத்தோம். வேகன் வந்ததும் ட்ரம்மின் இரண்டு பக்கங்களிலும் ஸ்லிங்கை மாட்டி ட்ரம்மை மேலே தூக்கி வேகனை ரிலீஸ் செய்வது , பிறகு அந்த இடத்தில் ஸ்லீப்பர்கள் மேல் ட்ரம்மை இறக்குவது என்று ப்ளான்.

வேகனில் ட்ரம்முக்கு சப்போர்டாக க்ளாம்ப் எனப்படும் பொருள் வெல்ட் செய்யப் பட்டிருந்தது. அதை முதலில் எடுக்க வேண்டும் . பிறகே ட்ரம்மைத் தூக்க வேண்டும். அதற்கு வேண்டிய காஸ் கட்டர் எடுத்துவர நான் ஸ்டோருக்குச் சென்றவுடன், அதையறியாத ,இதில் சம்பந்தப் படாத அதிகாரி ஒருவர்ட்ரம்மில் ஸ்லிங்கை மாட்டி க்ரேனை இயக்க உத்தரவு கொடுத்து விட்டார். க்ரேன் ஆப்பரேட்டர்கள் அவர் சொல் கேட்டு இயக்க நடக்கக் கூடாதது நடந்து விட்டது. க்ரேன் இரண்டும் முன் பக்கம் சாய்ந்து மண்ணில் கொஞ்சம் புதைந்து இயக்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. நடந்த தவறு உணர்ந்ததும் உத்தரவு கொடுத்தவர் ஓடிவிட்டார். அருகில் இருந்தால் நமக்கும் வம்பு என்று ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு அகன்றனர். ட்ரம் ஒரு ப்ரிகாரியஸ் பொசிஷனில்.வேகன் நகர முடியாது. க்ரேன் இயக்க முடியாது. அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாந்தான் பொறுப்பு. மாலை ஆறு மணிக்கு மேலாயிற்று. என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தலைமேல் கை வைத்து அமர்ந்து விட்டேன்.

அப்போதுதான் “ பட்டாளத்தார் “ என்று நான் அழைக்கும் என் நண்பர் எனக்கு ஆறுதல் கூறி நடக்க வேண்டியதைச் செய்ய திட்ட மிடச் சொன்னார். என்ன செய்தோம் ஏது செய்தோம் என்று விவரிக்கப் போனால் புரிந்து கொள்வதோ உணர்ந்து கொள்வதோ கஷ்டம் மொத்தத்தில் அந்த இக்கட்டான நிலையிலிருந்து எனக்கு ( கூடவே இருந்த நண்பருக்கும் )இரண்டு இரவுகளும் ஒரு பகலும் முடிந்து, அடுத்த நாள் காலையில்தான் மீண்டு வர முடிந்தது. இந்தக் காலத்தில் குறிப்பிடப்படும் “ நண்பேண்டா) என்ற பட்டம் அவருக்கு முழுவதும் பொருந்தும்.அருகிலிருந்தவர்களை அடையாளம் காட்டிய அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் மாற்றி விட்டது.
                          ----------------
                                THE BIGGEST WASHING MACHINE
                                      ----------------------------

கட்டுமான பணியில் நான் இருந்த போது, விஜயவாடாவுக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். ஜெர்மன் கூட்டுறவில் தயாராயிருந்த பொருட்கள் சரியாகப் பொருத்தப் படுகிறதா என்று பார்க்க வந்திருந்தார். விஜயவாடாவில் ஒரு வார காலமே இருந்த அவருக்கு, எங்களைவிட விஜயவாடா பற்றிய சேதிகளும் வசதிகளும் ( இரவு வாழ்க்கை உட்பட )தெரிந்திருந்தது. அவர் அனல் மின் நிலையத்துக்கு வந்து போவதற்கு மட்டும் நாங்கள் அனுப்பும் காரை உபயோகிப்பார். மற்ற நேரங்களில் விஜயவாடாவுக்கே உரித்தான சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் சுற்றுவார். எந்த இடத்தில் எந்த மாதிரியான மக்கள் ,இரவு கேளிக்கைத் தலங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. கிருஷ்ணா நதிக்கரையில் சலவை செய்யப் பட்டுக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து “THE BIGGEST WASHING MACHINE “ என்று சொல்லி சிரிப்பார். வேலை நேரத்தில் அதைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்.ஒரு மறக்க முடியாத கேரக்டர்.
---------------------------------------------------    





.





Saturday, April 28, 2012

காட்சிப் பிழையும் கருத்துப் பிழையும்


                     காட்சிப் பிழையும் கருத்துப் பிழையும்
                   ---------------------------------------------------


தாயைக் காட்டுகிறேன், தந்தையைக் காட்டுகிறேன்,
தட்டானே கல்லைத்தூக்கு என்றே வாலில் நூல்கட்டிய
தும்பியும் பிடிமானம் கிடைக்கக் கல்தூக்க தன் சொல் கேட்டு
அது பணிவதாக எண்ணும் பாலகன் அறிவானா
அது ஒரு கருத்துப் பிழை என்று.?

நீண்டிருக்கும் தார்ச் சாலையில் வழுக்கி ஓடும்
பேரூந்தில் ஒரு மதிய நேரம் பயணிக்கும்போது,
சற்றுத் தொலைவில் சாலையில் தேங்கி நிற்பது நீரோ
அல்லது மழையின் சுவடோ என எண்ணி அருகில்
காணும்போது நீரேதுமின்றி கண்டது கானலெ
அன்றி காட்சிப் பிழை என்றும் அறிவோமன்றோ.?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று
ஆன்றோர் கூறினர் அன்று;அகத்தின் அழுக்குப்
பற்றிக் கூற மறந்தனரோ, இல்லை கூற இயலாது
என்றே விட்டனரோ.? அழகான முகங்கள் எல்லாம்
அகத்தில் அழகானதா, புற அழகற்ற  முகங்கள்
அகத்தில் அழகாய் இருக்கக் கூடாதா.?

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவோர்
உறவு கலவாமை வேண்டும் என்று எளிதே கூறினர்.
முன் பல்லெல்லாம் தெரியக் காட்டி,
முகமெல்லாம் மகிழ்ச்சி கூட்டி
கடைவாய்ப் பல்லால் கடித்துக் குதறி
வன்மம் காட்டும் மனிதரும்  காட்சிப் பிழையில்
கண்டறியாது போதல் சாத்தியமன்றோ.?

கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,
காதால் கேட்பதும் பொய்யாகலாம்
காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்
பிழையாகவே என்றும் இருக்கட்டும்..
ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!
-------------------------------






   

Thursday, April 26, 2012

ஹாஸ்டல் வாழ்க்கை. ......


                                              ஹாஸ்டல் வாழ்க்கை.
                                           ------------------------------------


விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின் விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை, எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும் உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்

நினைவுகள் 55 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர் குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள் உரிமை இழக்கின்றன.

அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில் இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப் பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம் மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும், எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும்  இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது. இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான இவர்களுக்கு  தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத் தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம் உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை.நாங்கள் ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும்என்று கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம் என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.

பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது. பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு மதியம் போல் உணவு.

சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.

இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?

சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.

எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.

ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் “என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.

இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !

சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம் வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.

அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு

ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது

ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!

விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.

விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA  என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!
---------------------------------------------------------------------------                          :      .               .                                  .                                    





  

Tuesday, April 24, 2012

பெண்கள்....




                            பெண்கள்.
                         ---------

பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம், கணவர்கள் விற்பனைக்கு, மறுபக்கம் இருபக்கம், பெண் எழுத்து, என்று பல தலைப்புகளில் நான் எழுதி இருந்தாலும்,பெண்களைப் பற்றிய என் புரிதலில் எனக்கு நம்பிக்கை போதாது .பெண்களைப் பற்றிய தகவல்கள் பலதும் கேட்டறிந்ததும், படித்தறிந்ததும்தான். பெண்களுடன் குடும்பத்தில் பழகும் வாய்ப்போ, அவர்களைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளும் சூழ்நிலையோ கிடைத்தது சொற்பமே. நான் அடுத்திருந்து பழகிய பெண்மணிகள் இருவர். ஒருவர் என் மனைவி; மற்றவர் என் தந்தைக்கு மறுதாரமாய் எனக்கு சிற்றன்னையாய் இருந்தவர். இவர்களுடைய குணாதிசயங்களை அடிப்படையாய் வைத்து ஒட்டு மொத்தமாக பெண்களைக் கணிப்பது, சரியாக இருக்காது. இருந்தாலும் சரியோ தவறோ, பெண்களைப் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறு இருக்கும் என்று எனக்குத் தோன்ற வில்லை

சாதாரணமாய்ப் பெண்களின் மன ஆழங்களை அறிவது கடினம் என்று படித்திருக்கிறேன். பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டு, ஆணாதிக்கத்திற்குப் பலி ஆகிறார்கள் என்பதும் பரவலாகப் பேசப் படும் விஷயம். என் அபிப்பிராயங்கள் நான் பார்த்து ( பழகிய என்பது தவறாயிருக்கும்.) உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில் எழுந்ததே. ஒவ்வொருவர் முன்பும், ஆண்டவன் நேரில் காட்சியளிக்க முடியாது; அந்தக் குறையைத் தீர்க்கவே தாயைப் ( பெண்ணைப்)
படைத்தான் எனக் கூறக் கேட்டிருக்கிறேன். என் எண்ணங்கள் சிலவற்றை “உறவுகள் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.இந்திய இதிகாசங்களிலும் கதைகளிலும் பெண்கள் பெரும்பாலும் கஷ்டங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் போல் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அதை ஆதாரமாய் வைத்து மேலும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராயப் போனால், பெண்களே எல்லா நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தாக்கள் என்பது போலவும், அவர்கள் அளவிட முடியாத சக்தி மிகுந்தவர்கள் போலவும் கூடவே விவரிக்கப் பட்டிருக்கும். இத்தகைய COMPLEX PERSONAALITY –களை எந்த எண்ணோட்டத்தோடு அணுகினால் சரியாக இருக்கும் என்றும் புரிவதில்லை. உடல் வாகில் வேண்டுமானால் பெண்களை  WEAKER SECTION என்று கூறலாம். மனோபலத்திலும் திடத்திலும் ,திட்ட மிடுவதிலும் திட்டங்களை நிறை வேற்றுவதிலும் அவர்கள் ஆண்களை மிஞ்சி விடுகிறார்கள்

பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் கருதுவது மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையாகத் தெரியலாம். அப்படி இருப்பதை அவர்களும் விரும்புகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த மாதிரிக் கருத்துக்களை, நேரத்துக்குத் தகுந்தபடி அவர்களது பலமகவோ, பலவீனமாகவோ எடுத்துக் கொள்கிறார்கள், இல்லை மாற்றிக் கொள்கிறார்கள்.

இருபாலரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும்போது, யார் மேலானவர் யார் கீழானவர் என்று நினைப்பதே சரியில்லை.என்றே தோன்றுகிறது. சக்தியில்லாமல் சிவனில்லை என்றும் ஆண்டவனையே அர்த்த நாரீஸ்வரன் எனும் நம் சமுதாயத்தில், முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்னும் அனுபவ வாக்குடன் எனக்கு உடன்பாடே. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.
இந்த மாதிரிக் கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் அவற்றைத் தெரியப் படுத்தினால் புரிதல் இன்னும் இலகுவாகும்.
----------------------------------------------------------------.          ..
 .

Sunday, April 22, 2012

இலக்கியம் இன்பமே....!.


                                                 இலக்கியம் இன்பமே.!
                                                 --------------------------------

நட்பும் உறவுமான ஒருவரை அவர் உயிருடன் இருக்கும்போதே
சந்திக்க வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்.. நினைத்தபடி
நானும் செல்ல அனுமதி இல்லை, என் வயசே காரணம்.
வரிசையில் காத்திருக்கிறோம் யார் எங்கு என்றே அறியாமல்.

என்னை முந்தியவனைப் பிரிந்தவற்கு ஆறுதல் கூறல்
அவசியம் என்ற என்னோடு உற்ற உறவினர் தொடரச்
சென்றிருந்தேன். சென்ற இடத்தில் சேதி ஒன்று வந்தது
அடுத்த வீட்டு அம்மணி உறக்கம் எழாமல் உயிர் நீத்தார் என்று.

அடுத்தடுத்த இழவுச் செய்திகள் அலைக்கழிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் மூச்சிருக்கிறதா என
எனக்கு நானே சோதிக்கும் அறியாப்பேதைமை. !
உறக்கத்தில் உயிர் விட்ட சேதி கேட்டு,
உறங்காமல் பரிதவிக்கும் பாமரத்தனம். !
உண்ணும்போது உயிர் விட்டான் தந்தை என
உண்ணாமலேயே உயிர் வாழ நினைத்த தனயன்.!
அடுத்துறங்கும் மனைவியை அர்த்த ராத்திரியில்
அசைத்துப் பார்க்கும் அவலத்திலும்,
பாரதிதாசன் பாட்டொன்று இதழ்களில் முறுவல் சேர்க்கிறது.

” கிளையினில் பாம்பு தொங்க ,
விழுதென்று குரங்கு தொட்டு,
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்,
கிளை தோறும் குதித்துத் தாவி,
கீழுள்ள விழுதையெல்லாம்,
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி,
உச்சி போய் தன் வால் பார்க்கும்.”
-------------------------------------------

                                         
       -

Monday, April 16, 2012

இப்படியும் கதைக்கலாம்......

                                             இப்படியும் கதைக்கலாம்..
                                            -----------------------------------



ஒரு கையில் நீண்ட கத்தியுடனும், மறுகையில் உடலிலிருந்து வெட்டி எடுத்த தலையுடனும்,அந்த வீதிவழியே அவன் சென்று கொண்டிருந்ததை அந்தத் தெருவே திடுக்கிட்டு, துணுக்குற்று, என்னவெல்லாமோ மன உணர்வுகளுடன் பார்த்துக் கொண்டிருந்தது..தார்ப் பாய்ச்சி கட்டிய வேட்டி, மேலாடை இல்லாத உடம்பு, இடமிருந்து வலமாக முப்புரி நூல். இவனுக்கு இது எப்படி சாத்தியம்.? அதே தெருவின் முடிவில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வரும் வேதங்களுடன்பட்டமும் படித்துப் பெற்றவனல்லவா இவன்.? கையில் ஏந்திச் செல்வது அவனது மனைவியின் தலை போல் தெரிகிறதே. பாவி...அவனைப் பின் தொடர்ந்து பார்ப்போமா...மனைவியைக் கொன்றதுடன் தலையையும் தெருவில் காட்டிச் செல்லும் அவன் நேராக ஊர்க் கோடியில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைகிறான். கட்டிய மனைவியையே வெட்டிக்கொல்லத் துணிந்தவனின் கதை கேட்போமா.?

“ SIR,  THIS HEAD BELONGS TO MY WIFE.   I HAVE KILLED HER.  RIGHT IN FRONT OF MY EYES, I SAW HER  IN A VERY COMPROMISING AND CONJUGATE POSITION WITH A MALE, I DO NOT KNOW WHO.”

“ HEY..! STOP IT. கதை எழுதுகிறேன் பேர்வழி என்று காப்பி அடிக்கிறாயா? கிர்ர்ர்ர்ர்ர்ர்
இதேபோல் எழுத உனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.கடல் கடந்து அக்கரையில் அமெரிக்கச் சீமையிலிருந்து இணையத்தில் எழுதி வருபவர் இதைப் படிக்க நேர்ந்தால் காப்புரிமைச் சட்டதின் கீழ் நடவடிக்கை எடுப்பார்.

கனவொன்று கண்டு விழித்தவன் கனவினைக் கதையாக்க நினைத்தால் என்னவெல்லாமோ சொல்லி பயமுறுத்துகிறீர்களே. கனவில் கதை துல்லியமாக விரிந்தது,அப்போதே எழுந்து அதை எழுத்தில் வடித்திருக்க வேண்டும்.விழித்தெழுந்து எழுத முனைந்தால் தலையும் வாலும் தெரியாதபடி குழப்பமாக இருக்கிறது. நினைவு படுத்தி எழுதலாம் என்றால் எதையோ சார்ந்திருக்கிறது என்று குற்றச் சாட்டு.. WHAT NOW.?”

கதை எழுத கற்பனையும் மொழியறிவும் மட்டும் போதாது. சரளமாக எழுதத் தெரிய வேண்டும். ஏதோ தமிழ்த் தேர்வுக்கு எழுதுவது போல் வார்த்தைகளைக் கையாண்டால் யாருக்குப் படிக்கத் தோன்றும்.?

அம்மா, வா..உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்லேன்.

I DO NOT KNOW WHETHER I AM COMPETENT TO SAY ANYTHING. BUT STILL I WANT TO SHARE MY OPINION WITH YOU SIR. INFEDILITY CAN NOT BE LEFT UNPUNISHED.”

இன்னும் கதையேஎழுதத் துவங்க வில்லை. கருத்துக்களை எதிர் நோக்கும் நிலையிலா நான் இருக்கிறேன் “

ஜியெம்பி சார்,கதை எழுதத் துவங்கும் போதே அதில் மனம் லயிக்க வேண்டும். அப்படி எழுதுவது என்பது தன்னிலைப் படுத்தி எழுதினால் சுலபமாக இருக்கும். படிப்பவர்களை ஈர்க்கும். உரையாடல்கள் மூலம் எண்ணுவதைச் சொன்னால் ரசிக்கும்படி இருக்கும். இதற்கெல்லாம் எழுத்துப் பட்டறையில் பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.

இதைத் தான் அன்றைக்கே அவரிடம் சொன்னேன். அனுபவப் பட்டவர்களின் ஆலோசனைகள் கேட்டு எழுதுங்கள் என்று.

ஐயா, நீங்கள் எழுதுவதைக் கவனித்துக் கொண்டும் படித்துக் கொண்டும் வருகிறேன். உங்கள் தளமே வேறு. உங்கள் பன்முகத்தன்மை வெளியாகும் வரையில் எழுதிக் கொண்டே இருங்கள்.மின் வெட்டெல்லாம் நீங்கி,கணினியும் என் கைக்கு வந்ததும் படித்துக் கருத்து சொல்கிறேன்,

ஏதோ பொழுது போக வில்லையா, எழுதினோமா என்றில்லாமல் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “

என்னென்னவோ நினைத்து, என்னென்னவோ எழுத வேண்டும் என்றிருந்தவனை, எழுதுவதற்கு முன்பே இது தேவையா என்று எண்ண வைத்து விட்டீர்கள்.

எண்ண வைத்ததை செயல் படுத்தும் திறமை உங்களிடம் தாராளமாகவே இருக்கிறது, பாலு சார்.

( திரு. அப்பாதுரையின் பதிவொன்றுக்கு பின்னூட்டம் எழுதும்போது, பேய்களுடன் ஒரு பேட்டி எடுக்க வேண்டுமே என்று எழுதி இருந்தேன். அதை எப்படியாவது கதை உருவில் கொண்டு வர வேண்டும் என்று எழுத உட்கார்ந்ததும் தோன்றிய சிந்தனைகளே மேற்கூறியவை..ALL IN LIGHTER VEIN  )
------------------------------------------------------------






Thursday, April 12, 2012

பூவே பூவே.......


                                                  பூவே பூவே..........

                                                -------------------


சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.!
----------------------------------------------------------------               

 .




Tuesday, April 10, 2012

நினைவில் நீ..(சில சிந்தனைப் பகிர்வுகள்.)


நினைவில் நீ ( சில சிந்தனைப் பகிர்வுகள்.)
              ----------------------------

”நினைவில் நீ” நாவலைத் தொடராக வெளியிடும் முன்பே அது எந்த சூழலில், காலத்தில் எழுதப் பட்டது என்பதைக் கூறி இருந்தேன். நெடுங்கதைகளை ஊன்றி வாசித்து ரசிப்பதோ, விமரிசிப்பதோ பதிவுலகில் அருகி விட்டது தெரிந்தும், பதிவுலகில் நான் மதிக்கும் சிலரது ஊக்க வார்த்தைகளே தொடராக வெளியிடத் தூண்டியது. கலைமகளில் ஒரு போட்டிக்காக எழுதியது என்றும்,அறுபதுகளின் பின் புலத்தில், ஒரு கீழ் நடுத்தர வர்க்க இளைஞனின் அபிலாக்ஷைகளைக் கூறவும் எழுதப் பட்டது அது. அந்தக் காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் மத்தியில் இது ஏற்கப் படுமா என்றெல்லாம் நான் சிந்தித்ததில்லை. என் எழுத்திலும் வடிவமைப்பிலும் இருந்த நம்பிக்கையே என்னை எழுதத் தூண்டியது .இவன் என்னதான் எழுதிக் கிழித்து விடப் போகிறான் என்று எண்ணாமல், கதையை FOR WHAT IT IS WORTH  படித்தால்தான் நேர்மையான கருத்தோ விமரிசனமோ வரும்.


இந்த ஒரு நாவல்தான் பத்திரிகைக்காக நான் எழுதியது. ஆனால் என் துரதிருஷ்டம், நான் முன்பே கூறி இருந்தபடி பத்திரிகை அலுவலகத்தையே எட்டிப் பார்க்காமல் எங்கோ தொலைந்து விட்டது. (COURTESY;POSTAL DEPT.)

கதாசிரியர்கள் எழுதும்போது, ஏதோ ஒரு வரைமுறைக்கு உட்பட்டு கற்பனை செய்கிறார்கள்-.நிகழ்வுகளை நினைவில் பதித்து, அதற்காக பாத்திரங்களை சிருஷ்டிப்பது, இல்லை பாத்திரங்களை மனதில் இருத்தி, அதற்கேற்ப நிகழ்வுகளை நிர்ணயிப்பது.-. கற்பனைக் கதாபாத்திரத்தில் எல்லா குணங்களும் நல்லதாகவே காட்டுவது இயல்புக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் எந்த ஒரு கதாபாத்திரமும் நூறு சதவீதம் நல்லவர்களாகவோ அல்லது நூறு சதவீதம் கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. நல்ல குணம் ,கெட்ட குணம்,நல்ல செய்கை தீய செய்கை எல்லாம் கதாபாத்திரத்தை அணுகும் முறையில்தான் இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவரவர் செய்கை சரியானதாகவே இருக்கும். செய்யும்போது எதுவும் தீது என்று நினைத்துச் செய்யப் படுவதில்லை. நல்லது கெட்டது என்பதற்கு UNIVERSALLY ACCEPTED YARD STICK எதுவும் கிடையாது. இதையேதான் நான் மனசாட்சி என்பதற்கு வெவ்வேறு அளவு கோல்கள் உண்டென்று முன்பே எழுதி இருக்கிறேன்.யாரும் அவரவர் மனசாட்சிக்கு எதிராகச் செயல் படுவதில்லை. செய்யும் செயல்கள் எல்லாம் மனசாட்சியின் பெயரால் நியாயப் படுத்தப் படும்

”நினைவில் நீ” நெடுங்கதையில் வாழ்க்கையில் நாம் அனுதினம் காணும் மனிதர்களையே சித்திரப் படுத்தி இருக்கிறேன்.

பாட்டி, கண்ணன் கல்யாணி அம்மா, பாபு மாலதி, சியாமளா, கமலம், சிவராமன், போன்றோர் எல்லோரும் நம் கண் முன்னே நடமாடும் பாத்திரங்களே. அவரவர் குணாதிசயத்துக்கு ஏற்றபடி சித்தரிக்கப் பட்ட வெகுஜன மக்கள். இவர்கள் மூலமாக சொல்லப்பட்ட கருத்துகளின் மறு பக்கமும் விவரமாக விஸ்தரிக்கப் பட்டிருக்கும். படிப்பவர் விருப்பு வெறுப்பின்றி கவனித்தால் நன்கு விளங்கும்

பதிவுகளைப் படித்துக் கருத்திடுபவர்களுக்கும் , ஜீவியின் அண்மைய நாவலின் ஒரு பதிவில் கூறி இருக்கும் எழுத்துப் பட்டறை ( WORKSHOP) போன்ற அமைப்பு அவசியமோ என்று எண்ணத் தூண்டுகிறது.நாம் எந்தக் கருத்தைக் கூற முனைகிறோமோ, எதை சிந்தித்து ரசித்து எழுதுகிறோமோ அது சிறிதும் உணரப் படாமலேயே ,பின்னூட்டம் என்ற பெயரில் பெரும்பாலும் பதிவின் கடைசி வரிகளையே எடுத்தாண்டு கருத்தாக வரும். என் பதிவுகள் சிலவற்றுக்கு ஒருவர் எழுதிய கருத்துரையே காப்பி பேஸ்ட் செய்தது போல் அடுத்து வருவது கண்டிருக்கிறேன். மறுபடியும் ஜீவி அவர்களையே மேற்கோள் காட்டுகிறேன். எண்ணங்களைக் கடத்துவதற்கு எழுதுகிறோம் என்று அவர் கூறி இருந்தார்.கடத்தப் படும் எண்ணங்கள் எல்லோருக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம்.அவர்கள் அதை தாராளமாகப் பதிவிடலாம். என் பதிவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மாற்றுக் கருத்துக்கள் எழுதுபவரைக் காயப் படுத்தாமல் இருந்தால் சரி. கருத்துகளில் வேறுபட்டு இருக்கலாம்.


சில நிகழ்வுகள் கதையில் வரும்போது அதை எழுதும் முன் எவ்வளவு சிந்தனை தோன்றி இருக்க வேண்டும் என்று யாராவது சிந்திக்கிறார்களா தெரியவில்லை. என் எழுத்துக்கள் பொழுது போக்குக்காக எழுதப் படுவது அல்ல. என் வலையின் முகப்பில் காணும் வரிகளுக்கு வடிவம் கொடுத்து உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க எழுதுவது..

”நினைவில் நீ” தொடரில் வரும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எங்கும் நடக்கக் கூடியதே. பாபுவின் மரணம் உட்பட. எந்த மாற்றமும் ஒரே நாளில் (OVERNIGHT) நடை பெறுவதில்லை. ஒரே மனிதனால் நடத்தப் படுவதும் இல்லை.எண்ணங்களை விதையாக்கி, செயல்களை உரமாக்கி, விருட்சம் வளர்ந்து பலன் கொடுக்கக் காலமாகும். சில நேரங்களில் ஒரு வாழ்வும் போதாது. பாபு உயிருடன் இருந்து எல்லாப் பலன்களையும் கண்ணாரக் காண்கிறான் என்று முடித்திருந்தால் அது முரணாக இருக்கும். அதே சமயம்
அவனது மரணமும், அவனுக்கு ஒரு PREMONITION ஆகத் தெரிந்து நடப்பதுபோல் இருந்தால் நாவலின் சுவை கூடலாம்.,நிகழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கலாம் என்று சிந்தித்தே எழுதப் பட்டது.

பத்தொன்பது அத்தியாயங்களைத் தாங்கி தொடராக வந்த நாவல் ”நினைவில் நீ”; பதிவுலகில் கதைகளைப் படிப்பவர்கள் படிக்காமல் இருந்தால் நஷ்டம் எனக்கில்லை. படிக்க கொடுத்து வைக்காதவர்களுக்குத்தான்.  ஏனென்றால் நான் தான் எழுதி முடித்ததாயிற்றே...!.
--------------------------------------------------------      .   
                



.





.
  

Sunday, April 8, 2012

நினைவில் நீ.(அத்தியாயம் பத்தொன்பது)


                                    நினைவில் நீ. ( நாவல் தொடராக )
                                  -------------------------------------------------

                                                   -------  19  --------
                                                ( நிறைவுப் பகுதி )

                                      அமர கவி பாரதிக்கு சமர்ப்பணம்
                      -------------------------------

(அன்றிரவு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். உறக்கம் வருவது போல் இருந்தாலும் உள்ளுணர்வு மட்டும் விழித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று மாலை  நடந்த பாரதி விழா நிகழ்ச்சிகளை எண்ணிக்கொண்டே இருந்தவன் எப்போது உறங்கினேன் என்றே தெரிய வில்லை.

உடல் உறங்கிய நிலையில் உள்ளம் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழித்த நிலையில் நான் இந்தக் வையமே ஒரு கோள வடிவில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன். மாறி மாறி இருளிலும் ஒளியிலும் இயங்கும் கோளத்தில் அந்தந்த தன்மைக் கேற்ப நிகழ்ச்சிகளும் நடக்கக் கண்டேன். இருளில் பொறாமை, குரோதம், அறியாமை இன்னது போன்ற பேய்களின் கூக்குரலும் ,ஒளியில் அன்பு ,நல்லெண்ணம்,அறிவாளியின் சந்துஷ்டி போன்ற மெய்ஞானப் பொலிவும் மாறி மாறிக் காட்சியளித்தது. இது மாறிவரும் உலக இயல்புகளைத் தெளிவுறத் தெரிவிப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருந்த கோளம் மெல்ல தன்னிலைக்கு வந்து நின்றபோது கோளத்தில் ஒரு பகுதி இருளிலும் ஒரு பாதி ஒளியிலும் இருக்கக் கண்டதும் நிகழ் கால நிகழ்ச்சிகள்தான் என் நினைவுக்கு வந்தது..விழித்துப்பார்த்ததும் கண்ட கனவுக்கு விளக்கம் காண முயன்றதன் விளைவே இந்த சிறிய எளிய என் முதல் நாவல்.

கண்ட விளக்கம் சரியா இல்லையா என்பதை இதைப் படித்துப் பார்த்த வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன். ) 


      எங்கு பார்த்தாலும் உன் பேச்சு. எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்.எங்கு பார்த்தாலும் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி இருக்கிறாய். பாபு.! மக்கள் மன்றத்தின் இந்த ஆண்டு விழா.மக்கள் உள்ளங்களில் களிப்பு விழாவாக இருந்திருக்கும் நீ நீயாக எங்கள் மத்தியில் இருந்திருந்தால்.....!

     சிந்திப்பவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், சிந்திக்காதவன் சிந்திக்கத் துவங்க வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் கூறி வந்த நீ சிந்தித்தே மறைந்து விட்டாயே..! அதனால் தானே உன் பேச்சும் செயலும் புரியாத புதிராக இருந்தது.

    ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் கூட்டங்களிலெல்லாம் தனி மனிதன் என்ன நினைக்கிறான் எப்படி வாழ்கிறான் என்றெல்லாம் எண்ணிக் குழம்பும் நீ குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான் எல்லோருடைய நினைவிலும் கலந்து விட்டாயா,? பாபு.! இந்தியா பெற்ற சுதந்திரம் ஒருவரால் கிடைக்கப் பெறாதது. அதுபோல் இந்த சமுதாய மாற்றமும் ஒருவரால் ஆகாது என்று எண்ணித்தான் உன்னையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டாயா.? புகழ் பெற்று வளர்ந்திருந்த நம் மக்கள் அரித்தெடுக்கப் பட்ட ஓலைச் சுவடிகளாக மாறி வருவது காணப் பொறுக்காமல் புதிய நகல் எடுத்துப் புதுப்பிக்க முயன்றாயே. உன் முயற்சி வெற்றி அடைந்து வருவதை நீ காண்கிறாயா.? உனக்கு அது முடியும் ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி எங்கும் இருக்கிறாயே. !

     கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எரு போட்டுக் கமழ் நீர்ப் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியதனை விதைத்தாலும் அதன் குணத்தையே பொருந்தக் காட்டும் என்று உணர்ந்தவன் நீ, உன் தொண்டெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலாகுமோ என்று கலங்கித்தான் காலனிடம் சென்று விட்டாயா.?

     தூங்கிக் கனாக் காண்பவர்களுக்கு வாழ்க்கை இன்ப வெள்ளமாகத் தோன்றும். விழித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை ஒரு கடமைக் கடலாகத் தோன்றும் என்பாயே.! அந்தக் கடமைக் கடலிலேயே மூழ்கி விட்டாயே.! பாபு. ! நியாயத்தின் மாறி வரும் மதிப்புகளை வாழ்வில் புரிந்து கொள்ளாவிட்டால்.அது துன்ப மயமாகவே விளங்கும் என்று அறிவுறுத்துவாயே, புரிந்து கொண்ட உன் வாழ்க்கை இன்பமய மானதாகத்தான் இருந்ததா.?

    பசித்திருப்பவன் முன்பு ஆண்டவன் சோற்று உருவில்தான் வர முடியும் என்ற காந்தியின் வாக்கை நினைவுறுத்துவாயே ,உன்னால் அவர்கள் முன் உன் உருவில் வர முடியாது என்றுதான் நீ  நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா. ?

    பாபு எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.மனத்தை இருள் சூழ்கிறது. இருண்ட வாழ்வின் விடி வெள்ளியாகத்தான் உன்னை நீயாக இல்லாமல் உன் நினைவாகக் காண்கிறோமா.!

   பாபு,! அஞ்சா நெஞ்சம் படைத்தவன் நீ உன் சொந்த வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு அஞ்சி விட்டாயா.? உன் மறைவாவது அந்தத் தோல்வியை வெற்றிப் பாதையில் திருப்பும் என்றுதான் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா.?

   பாபு, ! நீயாக இல்லாமல் நினைவாக எங்கள் உள்ளங்களில் நந்தா விளக்காக எரியும் உனக்கு, நீ நினைத்த வற்றை முடிப்பதே நாங்கள் செய்ய வேண்டிய கடமை. ! நடத்தி முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம். அதுவே எங்கள் நினைவில் என்றைக்கும் இருக்கப் போகும் உனக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி.! “
------------------------------------------------------------------------

                         நிறைவடைந்தது
                        -----------------

                  
  

Friday, April 6, 2012

எண்ணிப் பார்க்கிறேன்......

                                      எண்ணிப் பார்க்கிறேன்.
                                     --------------------------------
                                  ( இது என்னுடைய இருநூறாவது பதிவு.)
                                                           ---------------------------------------------------------

அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
“காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால் “ என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
“உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
-----------------------------------


Wednesday, April 4, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் பதினெட்டு )


                                நினைவில் நீ ( நாவல் தொடராக )
                               ---------------------------------------------
                                   ( அடுத்த இதழுடன் முடியும் )
                                                ------  18  --------

      புது முறையில் துவக்கப்பட்ட பள்ளியில் சேர வந்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ள இடமிருக்கவில்லை. தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே விஸ்தரிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. சாதாரண முறையில் அமைக்கப் படாததால், அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இருந்தாலும் படித்துத் தேறுவதை வாழ்க்கை வியாபாரத்துக்கான முதலீடு என்று எண்ணாதவர்கள்,,சாதாரணன பள்ளிக்கு தம் குழந்தைகளைக் காலையில் அனுப்பினாலும் மாலையில் இந்தப் பள்ளிக்கும் அவர்களையே அனுப்பினார்கள். பிள்ளைகளுக்கும் சிறை வாசம் என்றில்லாத முறையில் நல்ல கருத்துக்கள் விளையாட்டாகவே போதிக்கப் பட்டன. அவர்களும் விரும்பிக் கற்றனர்.

    கூட்டுறவு முறையில் தொடங்கப் பட்ட பண்டக சாலைகளும் எதிர் பார்த்ததைவிட பலன் அளிப்பதாக இருந்ததால் ,எதிர் பார்க்காத முறையில் வளர்ச்சி அடைந்தது.

    பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மக்கள் மன்றத்தில் நடத்தப் பட்ட , நடத்தப்பட வேண்டிய காரியங்கள் செயல் முறைகள் எல்லாம் நன்றாக விவாதிக்கப்பட்டு ,திட்டமிடப் பட்டு நடத்தப் பட்டன. வேலையில்லாத இளைஞர்களுக்கு இதுவே ஒரு வேலையாய்ப் போய் பலனளிப்பதாயும் இருந்தது.

         பாபுவுக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே இந்தப் பணிகளையும் கவனிப்பது இயலாமல் போயிற்று .தொழிற்சாலையில் ராஜினாமா கொடுத்து வீடு வந்தவன் செய்தியைச் சொன்னதும் கல்யாணி அம்மா விக்கித்துப் போனாள்.

   இருக்கிற வேலையை இப்படி விட்டுட்டு வந்தால் குடும்பம் எப்படிடா நடக்கும் பாபு.?வேலையோட இருக்கிற வரைக்கும் தானே உனக்கும் மதிப்பு. ராஜுவுக்கும் விசுவுக்கும் இன்னும் படிப்பு முடியலை. நீ செஞ்சது கொஞ்சங்கூட நல்லா இல்லை.என்று பொரிந்து தள்ளினாள்.

   பாபுவுக்கும் கல்யாணி அம்மாவின் எண்ணங்கள் புரிந்தது. இருந்தும் சாதாரணமானவர்கள் நடத்தும் வாழ்க்கையைத் தன்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்று அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?அன்றாடங் காய்ச்ச வழியில்லாம போய்விடுமே என்னும் பயம் அவர்களுக்கு. ஒருவரை நம்பியா ஒருவர் வாழ்கிறார்கள் இந்த உலகில்.? தான் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பம் நடக்காதா.? இந்த நிலையில் உள்ளவர்கள் மேலும் உயர வேண்டும் என்றுதானே எண்ணுகிறார்கள். அல்லாமல் இதே நிலையில் எல்லோரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்று மட்டும் ஏன் சிந்திப்பதில்லை.?

    இவற்றையெல்லாம் அவர்களுக்கு எடுத்துரைப்பது இயலாத காரியம். தான் செய்ய வேண்டிய காரியங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ஆனால் இவர்களோ. பாரதி சொன்னது போல 


                    தேடிச் சோறு நிதம் தின்று-பல
                    சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
                    வாடித் துன்பம் மிகவுழன்று-பிறர்
                    வாடப் பல செயல்கள் செய்து-நரை
                    கூடிக் கிழப் பருவம் எய்தி-கொடுங்
                    கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல                                                                                                              
                    வேடிக்கை மனிதரைப் போல “   வாழ்ந்து வீழ வேண்டும் என்று நினைக்கிறார்களே, இது முறையா ,முடியுமா என்றெல்லாம் நினைத்துக் குழப்பத்தைக் குறைத்துக் கொள்ள முயன்றான்.

     முடிவெடுத்து செயலாற்றத் தொடங்கிய பிறகு அந்த முடிவைக் குறித்து சிந்தனை செய்தால் அது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்யும். பாபுவால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியவில்லை. தாயாரை சமாதானப் படுத்தித்தான் தீரவேண்டும் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்கச் செய்வது தன் பொறுப்பு என்பதை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

  “ அம்மா, உங்களுக்கு என்னைத் தெரிந்ததுபோல வேறு யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் உங்களுக்கே என்னை சரியாகப் புரியவில்லை என்றால் எல்லோருக்குமே நான் ஒரு புதிராய் இருப்பது ஆச்சரியமில்லை. நான் ஒன்று கேட்கிறேன். நீங்களே சொல்லுங்கள் அப்பா இற்ந்த பிறகு அவர் இருந்த காலத்தில் நீங்கள் இருந்த நிலையைவிட குறைந்த நிலையில் உங்களை விட்டிருக்கிறேனா.? இனிமேல் அப்படி ஆகிவிடுவோமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதால்தான் வீணாக வருத்தப் படுகிறீர்கள். இதுவரைக்கும் நான் யாரிடமும் சொல்லாததை சொல்லுகிறேன். நான் அதிக நாள் இருப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இருக்கும் காலத்துக்குள் என்னால் இயன்றதை செய்யத் துடிக்கிறேன். அதற்கு தொழிற்சாலை வேலை தடங்கலாயிருந்ததால் ராஜினாமா செய்து விட்டேன். இதனால் நம் குடும்பம் கஷ்டப் படாத வகையில் நடத்துவது என் பொறுப்பு.என்று என்னவெல்லாமோ கூறி, தாயாரை சமாதானப் படுத்த வேண்டும் என்று எண்ணினவனுக்கு எண்ணியதை சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை யாகலாம்.

   எல்லாவற்றையும் யோசித்துத்தான் அம்மா இந்த முடிவுக்கு வந்தேன்.தயவு செய்து என்னை கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுங்கள்என்று சிடுசிடுக்கத்தான் முடிந்தது. கல்யாணி அம்மாவுக்கு இன்னும் ஒரு சோதனைக் காலத்தைக் கடக்க வேண்டும் என்ற விரக்தி மனப் பான்மையே மேலோங்கி நின்றது

    எண்ணற்ற கவலைகள் எண்ணத்தில் உதயமாகும் போதெல்லாம் உள்ளத்தின் ஒரு கோடியில் முணுக் முணுக் கென்று ஒரு சிறு ஒளி தோன்றி மறைவதுபோல பாபுவுக்குத் தோன்றும். அந்த ஒளியை நன்றாக ஆராயும்போதெல்லாம் நிழல் போல் ஒரு உருவம் அதில் மங்கலாகத் தெரிவது மேலும் தெரியும். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாபுவுக்கு கலங்கரை விளக்குத்தான் நினைவுக்கு வரும். கரையின் அண்மையைச் சுட்டிக் காட்டும் கலங்கரை விளக்கம் தானோ உள்ளத்தில் உணரும் அந்த சிறிய ஒளி.?

   ஒளியைப் பெரிதாகவும் அதில் தெரியும் உருவத்தை சியாமளா வாகவும் கற்பனை பண்ணிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடையும் பாபு, அதுவே உண்மையாகவும் இருக்கக் கூடாதா என்றும் ஏங்குவான். ஆனால் மறுகணமே வாழ்க்கைக் கரையின் ஒளியில் சியாமளாவைக் காணவே அவன் உள்ளம் நடுங்கியது.

   இருந்தாலும் சியாமளாவைக் காண வேண்டும் என்ற உத்வேகம் அப்போது அதிகமாகும். அன்றும் அதே நிலையில் இருந்த பாபு மனதில் எழுந்த அந்த உருவத்துக்கு ஏற்கெனவே வரிவடிவம் கொடுத்திருந்தாலும் மறுபடியும் அதை நினைவுபடுத்தி எழுதத் துவங்கினான்.
    
      நிலவைப் பழிக்கும் முகம்
     நினைவைப் பதிக்கும் கண்கள்
     நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
     சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
     கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
     படர்கொடிவெல்லும் துடியிடை- என்
     இடர் சேர்க்க இடையிடையாட மென்னடை
     நடந்தென் முன் நின்றாள்-இன்பக்
     கனவினை நனவாக்க எண்ணி-வந்த
     கற்பனைக் கண் கண்ட கன்னி.


எழுதி முடித்து ஒருமுறைப் படித்துப் பார்த்துக் கொண்டு திருப்தியடைந்து எழுந்தவனை எழவொட்டாமல் தோள்களை அமுக்கியது இரு கரங்கள்.

     ” யாரப்பா அந்த கற்பனைக் கண் கண்ட கன்னி.?நான் தெரிந்து கொள்ளலாமா.?கானின் குரல் கேட்டதும் பாபுவுக்கு புதுத் தெம்பு வந்தது போல் இருந்தது.

     “ கான், அப்பாடா... யாரோன்னு நெனச்சிட்டேன். என்ன சமாசாரம் ?ஏதாவது முக்கிய விஷயமில்லாமல் வீட்டுக்கு நீ வர மாட்டியே.

       “என் நண்பன் என்னடா ஒரு மாதிரியாக இருக்கிறானே ,என்ன காரணம் என்றெல்லாம் நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.எனக்கு மூக்கில் வியர்த்து வந்து பார்த்தால் அல்லவா தெரிகிறது உனக்கு காதல் நோய் பிடித்திருக்கிற விஷயம். இன்னும் யாரந்த பாக்கியவதி என்று சொல்ல வில்லையே.

     “அதெல்லாம் காலம் வரும்போது தெரியும்  இப்போ வந்த விஷயத்தை உடை.பாபுவின் பிடிவாதம் கானுக்குத் தெரிந்ததுதான்.வந்த காரணத்தை விளக்கினான்.

    எந்த நேரத்தில் தமிழ் மன்றம் மக்கள் மன்றமாக மாறியதோ அந்த நேரத்தில் நாம் நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும். பல லட்ச ரூபாய்கள் மூலதனமாகக் கொண்ட ஒரு ஆலையின் அதிபதி நம்மைத் தேடி வந்திருக்கிறார். மன்றத்தின் தோற்றம் வளர்ச்சி இவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டு என்னைத் திணற அடித்து விட்டார். அவர் கேட்ட கேள்விகளின் தோரணையை ஆராய்ந்து பார்த்தால் அவரால் மன்றத்துக்கு மிகவும் சாதகமான காரியங்கள் பல ஆகலாம். என்றே தோன்றுகிறது. வரவேற்பறையில் விட்டு வந்திருக்கிறேன்.சகோதரி சியாமளாவால் அவரை நன்றாக சமாளிக்க முடியும். கூட நீயும் இருந்தால்தான் முறையாக இருக்கும். மன்றத்துத் தலைவரை ஆலை அதிபதி சந்திக்கவும் விரும்புகிறார். உன்னைக் கையோடு கூட்டிக் கொண்டு போவதுதான் நான் வந்த நோக்கம்.”

     ” கான், நானும் உன்னையும் சியாமளாவையும் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கென்று அவரை அனுப்பியவுடன் சொல்கிறேன். “

       பாபுவும் கானும் மன்றத்துக்குள் நுழைந்தனர்.வந்திருந்த மனிதரைக் கண்டதும் பாபுவுக்கு அவரை எங்கோ பார்த்தது போலிருந்தது.வந்திருந்தவரும் பாபுவை உற்றுப் பார்த்துக் கொண்டேஉங்களை எங்கோ...... “என்று இழுக்கவும், பாபுவும் “எனக்கும் உங்களை எங்கோ பார்த்ததுபோல் நினைவிருக்கிறது.என்று சற்று யோசித்தவன், “உங்கள் பெயர் சுப்பிரமணியம், கோயமுத்தூரில் ஆலை அதிபர் அல்லவா நீங்கள் ?
என்று கேட்டான். “ ஆமாம் , நீங்கள் யாரென்று......
“பனிரெண்டு வருஷங்களுக்கு முன் உங்களிடம் வேலை தேடிக் கொண்டு வந்த ஒரு சிறுவனை கையில் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தீர்களே.அந்தச் சிறுவன் பாபு நான்தான்.

     ”ஆமாம் ,ஆமாம், இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அப்போதே உன்மேல் எனக்கு ஒரு அலாதியான பாசம் தோன்றியது. உண்மையிலேயே வேலை ஏதும் காலி இருக்கவில்லை. மேலும் அப்போது நீ ஒரு குழந்தை போல் இருந்தாய்.ஹூம்.! அன்றைக்கு நான் செய்ததும் சரிதான்  இல்லையென்றால் இந்த பெங்களூரில் இந்த நிலையில் உன்னைக் காண இவ்வூர் மக்கள் கொடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.பாபு உன் மன்றம் என் மனசை தொட்டு விட்டது. “

     “உன் மன்றம் என்று தவறாகச் சொல்கிறீர்கள் சார்.உங்கள் மன்றம் என்றால்தான் சரியாயிருக்கும். “

     “சரியாகச் சொன்னாய் பாபு. ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற நான் உன் மன்றத்தை, சாரி, உங்கள் மன்றத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். வாரிசில்லாத சொத்துக்கள் உங்கள் மன்றத்துக்கு உபயோகம் ஆகும் என்றால் என்னையும் ஒரு அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்’”

      பாபுவுக்கும் கானுக்கும் சியாமளாவுக்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. கான் தான் முதலில் சமாளித்துக் கேட்டான்.

      “ நீங்கள் நன்றாக யோசித்து வந்த முடிவுதானே இது.? இளைஞர்கள் நாங்கள் போகும் வழி புரட்சிப் பாதை. நீங்கள் விரும்பாததும் எதிர்பார்க்காததும் இங்கே நடக்கலாம்”

    “  நான் இங்கு வந்து நேரில் கண்டதும் கேட்டதும்தான் என்னுடைய இந்த முடிவுக்குக் காரணம். அதுவும் பாபுவைப் பார்த்ததும் தீர்மானம் ஆனதாகப் போய்விட்டது. குழந்தை சியாமளா எனக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னாள். கோயமுத்தூரிலிருக்கும் ஆலையை விற்றுவிட்டுப் பணத்துடன் வருகிறேன்என்றவரை பாபு இடைமறித்து “ அதை விற்க வேண்டிய அவசியமே இல்லை சார். சீரான முறையில் நடத்தப் படும் ஆலையில் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சீரான முறையில் வாழவும் வகை செய்யுங்கள்.. இந்த மன்றம் பெங்களுரில் உள்ளது போல வேறு இடங்களிலும் செயல்பட வழி செய்யலாமே.என்றதும் சுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டார். மேலும் அவரே மன்றத்துக்கான எந்த உதவியையும் செய்வதாக வாக்களிக்கவும் செய்தார்.
 
    பாபுவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் கண்களில் நீர் துளித்தது. சுப்பிரமணியத்தின் உருவில் தன் தந்தையை மானசீகமாக வணங்கினான்..தன்னைப் போலவே கானும் ,சியாமளாவும் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைக் கண்டான். சுப்பிரமணியத்துக்கும் தன் மனசில் இருந்து ஒரு பெரிய பளு இறங்கின மாதிரி இருந்தது. பள்ளிக்கூடம் பண்டகசாலை,படிப்பகம் எல்லாவற்றையும் அவருக்குக் காண்பித்தனர். ஒவ்வொன்றைப் பற்றியும் அவை வளர்ந்த விதம் பற்றியும் விரிவாக விவரித்தனர். சிறிது நேரத்தில் தினமும் வருவதாகக் கூறித் தன் விலாசத்தையும் கொடுத்துவிட்டு சென்றார் சுப்பிரமணியம்.

     “கான்,நல்ல காரியங்களுக்கு ஆண்டவனின் அருள் என்றைக்கும் உண்டு என்று நன்றாகத் தெரிகிறதல்லவா.? இளைஞர்கள் நம்மோடு வயது முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் சேருகிறார்.. அவர் அன்றைக்கு என்னிடம் காட்டிய பரிவை என்னால் மறக்க முடியாது. ஆயிரக் கணக்கான முகங்களை கண்டாலும் ஒரு சிலருடைய உருவம் சில நிமிஷ நேரமே சந்திப்பு என்றாலும் அழியாது பதிந்து விடுகிறது. ஏனென்றே விளங்கவில்லை. அது அந்த மனிதரின் தனித்தன்மையை விசேஷ முறையில் வெளிப் படுத்தும் விதத்தில் தான் இருக்கிறதுஎன்றாள் சியாமளா.

    அதுவரை சியாமளா அருகில் இருந்தும் அவளைக் காணாது காண்பது போல் திடீரெனப் பாபுவுக்குப் பட்டது. மனதில் பட்டதைக் கூறவும் செய்தான்..

     “ காண்பது, பார்ப்பது என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருள் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் மாறுபட்ட பொருளையே குறிக்கும். காண்பது கண்ணின் செயல். பார்ப்பது கண்ணின் செயலோடு உள்ளமும் செயல்படும் தன்மையைக் காட்டுவது. ஆங்கிலத்தில் to see,  to look  என்பதுபோல. இதுவரை உன்னைக் கண்டு கொண்டிருந்தேன். Now I am looking at you. என்று விளக்கம் கூறி பாபு சியாமளாவைப் பார்த்த போது, பாபுவின் கற்பனைக் கண் கண்ட கன்னி யார் என்று கானுக்குப் புரிந்து விட்டது. புரிந்ததும் மெல்ல நழுவத் தொடங்கியவனை கவனித்த பாபு, “ கான் எங்கே போகிறாய் ?என்று கேட்டான். “ எனக்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய வேலை ஒன்றிருக்கிறது. முடித்துவிட்டு உன்னைத் தனியாகக் கவனிக்கிறேன் “ என்று, தனியாக என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்துவிட்டு கான் சென்றான்.

    சியாமளா.....
   ”  .....................”

    சியாமளா “

    “ ஹூம்......

    உன்னைப் பார்த்துப் பேச வேண்டும் என்று முயன்ற போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. இப்போதிருந்த தடங்கலும் தானாக விலகி விட்டது.பேச ஆரம்பித்தவனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் அல்ல. சொல்ல வேண்டியவற்றை முதலிலேயே நன்றாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்று பாபுவுக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்ததால் தெரிவிக்க விரும்பிய ஆசை அன்பு மொழிகள் தெரிவிக்கப் படாமலேயே தொக்கி நின்றன. சியாமளாவுக்கு எதுவும் சரியாகப் புரியா விட்டாலும் ,பாபு எதையோ எண்ணி மனதில் புழுங்குகிறான் என்பது மட்டும் விளங்கிற்று. அவன் தன்னிடம் எதையோ சொல்லத் துடிக்கிறான்,ஆனால் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கவும் செய்கிறான் என்று உணர்ந்தபோது, பாபுவிடம் அவளுக்குப் பரிவு மேலோங்கியது.

   ”பாபு, நீங்கள் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்.உங்கள் போக்கு ,பேச்சு எல்லாமே புதிராக இருக்கிறது.என்னைக் கண்டு பேச முயலும் போதெல்லாம் எதையோ பறி கொடுத்தது போல் தோன்றுகிறீர்கள். என்னால் உங்கள் சஞ்சலத்தைப் போக்க முடியுமென்றால் நான் எதற்கும் தயார். சொல்லுங்கள் பாபு.

     “இதுவரை நான் எதையும் பறி கொடுக்கவில்லை சியாமளா. ஆனால் நாளாக ஆக, என் உயிரைவிட மேலாக நான் விரும்பும் உன்னை,யே பறி கொடுத்து விடுவேனோ என்ற மன உளைச்சல்தான் என்னைப் பைத்தியமாய் அடிக்கிறது.

     “உங்களுக்கு வாழ்க்கையின் உறு துணையாக நான் இருக்கப் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கொடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற சாதி, சமுதாயம், அந்தஸ்து ஆகிய எல்லா எதிர்ப்புகளையும் தாங்க வேண்டி இருக்குமே என்றுதான் நினைத்து நான் என்னையே கட்டுப் படுத்திக் கொள்கிறேன்.

    ” சியாமளா, துன்பங்களையும் எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சுகிறவன் நானல்ல. அவற்றை எதிர்த்துப் போராடுகின்ற முயற்சிக்குப் பெய்ர்தானே வாழ்க்கை. என் சஞ்சலமும் சங்கடமும் அதல்ல.நான் எண்ணியவற்றை செயலாற்ற வாய்ப்பே தராமல் ஆண்டவன் என்னை ஏமாற்றிவிடுவான் என்று என் உள்ளத்தின் ஒரு பகுதி அடிக்கடி எச்சரிக்கிறது..சியாமளா ஒன்று மட்டும் நிச்சயம்..என் வாழ்க்கையில் மணவினை என்றுஒன்று இருந்தால், அந்த சடங்கில் என்னுடைய மறு பாதியாக நீதான் வீற்றிருப்பாய். அது நிறைவேற மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் கிருபைதான் வேண்டும். ஒருக்கால் அது அப்படியில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் சித்தம் என்றால் நீ என்னை மறந்து விட வேண்டும். உனக்குப் பிடித்த ஒருவனோடு நீ இல்லறம் நடத்த வேண்டும். இதைச் சொல்லத்தான் நான் காத்திருந்தேன்..கற்பனை எண்ணங்களில் உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ள மாட்டாய் என்று எனக்கு உறுதி கொடு, சியாமளா.

    “ பாபு உங்களை நான் அடையத்தான் போகிறேன்.அதுதான் ஆண்டவனின் சித்தமும். நீங்கள்தான் ஏதேதோ கற்பனை எண்ணங்களில் உங்களையே ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்கள். இனி உங்களை ஒரு உல்லாச புருஷ்னாகச் செய்வது என் பொறுப்பு. என்ற சியாமளா,கான் வருவதைக் கண்டதும் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.

     “ கங்கிராஜுலேஷன்ஸ் ,பாபு,! பிடித்தாலும் புளியங்கொம்பாய்த்தான் பிடித்திருக்கிறாய். என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. வாழ்க உங்கள் காதல்.! வளர்க அதன் அடிப்படையில் எழும் உங்கள் இல்லறம்.

       கானுக்கு உண்மையிலேயே,பாபுவையும் சியாமளாவையும் இணைந்து காண்பதில் சந்தோஷம்தான். அதுவே உண்மையான நிலை என்று அறிந்ததும் அது பதின்மடங்காயிற்று.

      கான். என் உயிர் நண்பன் நீ. உன்னிடம் மறைப்பதில் எனக்கேதும் லாபமில்லை.. ஆனால் ஒரு சமயம் அப்படி நடக்காமல் போனால், அனாவசியமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாய்ப் போகும். இந்த விஷயம் உன்னோடு இருக்கட்டும்.இன்னொன்று நாம் எண்ணுவதுபோல் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்க வில்லை என்றால்,சியாமளா அவளுக்குப் பிடித்த ஒருவனோடு வாழ்க்கை நடத்த வேண்டும். அவளை உன் சகோதரியாக பாவித்து அதை நீ செய்வது உன் கடமை.

    “ என்னய்யா உளர்றே நீ.! சியாமளாவுக்கும் உனக்கும் திருமணம் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்காதா.? ஆண்டவனே எதிர்த்தாலும் அது நடந்தே தீரும்.அபயம் அளிக்கிறேன் பக்தா.....கலங்காதே.!

    “ விளையாடும் நேரமல்ல கான். இது நான் உனக்குச் சொல்வது, நீ கேட்க வேண்டியது. அவ்வளவுதான்.

      வீட்டுக்கு வந்த பாபுவுக்குத் தன் மனப்பளு சற்றே குறைந்த மாதிரி இருந்தது. வேலையை ராஜினாமா செய்தது பற்றி அவன் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை. கல்யாணி அம்மாவிடமும் சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.

       கண்ணனைக் காண வேண்டும் போலிருந்தது பாபுவுக்கு. உடற்சோர்வையும் பொருட்படுத்தாமல் போனான்.கண்ணன் வழக்கம்போல் பூஜையறையில் அமர்ந்திருந்தான். மாலதி பயபக்தியுடன் நின்றிருந்தாள். ஓசைப் படுத்தாமல் ஷூவைக் கழற்றி வெளியில் வைத்து உள்ளே நுழைந்த பாபுவை கண்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..அப்போது பூஜையை முடிக்க இருந்தவன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினான்.பாபு எதையும் பொருட்படுத்தவில்லை. சற்று நேரம் தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,பிறகு எழுந்து போகப் புறப்பட்டான்.

      “பூஜை முடியும் வரைக்கும் காத்திருக்க நேரமில்லை உனக்கு..இரு வரேன்.ஆண்டவனை வேண்டிக் கொண்டிருந்தவன் பாரவை பாபுவின் பொறுமை எந்த அளவுக்குச் சோதிக்கப் படுகிறது என்று அளந்து கொண்டு இருந்ததால், அவன் புறப் பட்ட போது காத்திருக்கச் சொன்னான்.

    “ நேரமில்லை அண்ணா. உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலிருந்தது .வந்தேன். பார்த்தேன். போகிறேன்.வேறு விசேஷமாக எதுவுமில்லை. வருகிறேன்”.

     பாபுவின் வரவைக் கண்ணனும் மாலதியும் எதிர் பார்த்திருக்க வில்லை என்றால்,வந்தவன் இப்படி நடந்து கொள்வான் என்று கனவிலும் கருத வில்லை. பாபுவை அவமானப்படுத்தக் கண்ணன் கொண்ட முயற்சிகளிலெல்லாம்  அவனுக்குத் தோல்வியே கிடைத்தது. மேலும் சில சமயங்களில் அவனே அவமானப் படவும் வேண்டி இருந்தது.

      வருகிறேன் என்று சொல்லித் திரும்பிய பாபுவுக்கு எப்போது என்று மட்டும் நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது. வருவோமா, வரமுடியுமா என்ற கேள்வியே அவனைத் திணற அடித்தது.அவனுக்கே அவனது எண்ணங்களின் போக்குக்குப் பொருள் விளங்க முடியவில்லை. அவன் நடந்து கொண்டு வந்த விதமும் செய்து வந்த செயல்களும் ,அவனுள்ளிருந்து அவனுக்கே புரியாமல் அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தியின் கட்டுப் பாட்டுக்கு அடங்கியதாக இருந்தது.

      வீடு வந்து சேர்ந்தவன் கல்யாணி அம்மா சற்றும் எதிர்பார்க்காத முறையில் இரவு சாப்பிட்டான்.சாதாரணமாக சாப்பிட உட்காருபவன் சாப்பிட்டு எழுவது கூடத் தெரியாது. ஆனால் அன்று தம்பிகளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டவன் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் விளங்க வேண்டு மென்று அறிவுறுத்தினான்..குறிப்பாக ராஜுவும் விசுவும் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகளை எல்லாம் விளக்கினான்.

     கல்யாணி அம்மாவும் தம்பிகளும் பாபு சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அறிந்த போதே மகிழ்ச்சியுற்றனர். எல்லாமே இருந்தும் ஒன்றுமே இல்லாதவன் போல் பாபு வாழ்கிறான் என்று மற்றவர்கள் தவறாக நினைத்தாலும் இருப்பதையும் சரியாக அனுபவிக்காமல் மனம் வாடுகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு பாபுவின் மனமாற்றம் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.

    பாபுவுக்கு பொது வாழ்வில் கிடைத்தவை பெரும்பாலும் வெற்றிதான் என்றாலும் அவன் குடும்பத்தைப் பொறுத்தவரை பெரும் தோல்விதானென்று அவன் கருதினான். நான்கு சுவர்களுக்கிடையே நடத்தும் ஆட்சியில் சுவருக்கொரு கட்சியாக குடும்பத்தவர் பிரிந்திருந்ததைத் தவிர்க்க முடியாத அவனது கொள்கைகளிலேயே சில சமயம் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்..தவிர்க்க முடியாதவைகள் அனுபவித்தே தீரப் படவேண்டும் என்ற விரக்தி மனப்பான்மையில்தான் அவனால் வாழ்க்கை நடத்த முடிந்தது..

    கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளில் எல்லாம் மனம் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு அற்ப ஆசை ஏற்பட்டது.

      “அம்மா,இப்போதிருக்கும் இந்த நிலை காட்சி மாறி,நான் ஒரு குழந்தையாகத் தவழ வேண்டும்போல் இருக்கிறது.அப்படி நடக்குமானால் துன்பங்களே நிறைந்த இந்த வாழ்க்கை இருப்பதே அறியாத, நல்லது பொல்லாதது என்ற உணர்வே இல்லாத,பயம் கோபம் என்ற உணர்ச்சிகளே இல்லாத ,அன்பே தெய்வம் எனத் துலங்கும் எண்ணம் ஒன்றே உடையதான,கள்ளங்கபடம் இல்லாத பக்குவமான மனம் கொண்டவனாக மாறலாம் அல்லவா..அந்த நடக்க முடியாத காட்சியை மானசீகமாகவேனும் உணர வேண்டும் போல் இருக்கிறது..நான் ஒரு குழந்தையாம். உங்கள் மடியில் படுத்துக் கொள்கிறேனாம்என்று கூறிக் கொண்டே, கல்யாணி அம்மாவின்மடியில் தலை வைத்துப் படுத்தான். கண்களை சற்றே மூ.டிக் கொண்டான்.பாபுவுக்கு ஏற்பட்ட இந்த ஆசையில் மனம் நெகிழ்ந்த கல்யாணி அம்மாவும் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.

    கண்களை மூடியபடி படுத்திருந்தவன் புற உலகக் காட்சிகளைக் காணவில்லை. ஒளிமயமான உல்லாசபுரியின் அரியணையில், லட்சோப லட்சம் மக்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டான்.ஒரே அரியணை என்றாலும் எல்லோரும் இடம் பெறக் கூடியதான புதுமையுடையதாக இருந்தது.அங்கு கண்டவர்கள் எல்லோரும் குழந்தைகள்.அன்பின் அரவணைப்பில் கட்டுப் பட்டவர்கள். மெல்லத் தவ்ழ்ந்து சேருகிறது இன்னொரு குழந்தை. அது பாபுவின் சாயலையே கொண்டிருக்கிறது.

      இன்பமான கற்பனையில் கிடந்தவன் உதடுகள் சற்றே விரிகின்றன. கல்யாணி அம்மா, ராஜு, விசு, சந்துரு ,ரவி, அனைவரும் பாபுவின் இந்தப் புதுமையான ஆசை நிறைவேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தவர்கள் அந்தப் புன்னகையையும் கண்டனர்.

    அண்ணாவுக்குக் குஷி. குழ்ந்தை சிரிக்கிறது “-ரவியின் குரல் கேட்டதும் பாபு கண்களைத் திறந்து கொண்டு,பார்க்கிறான். தன்னைச் சுற்றிலும் அனைவரும் இருப்பதைப் பார்த்ததும் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது.
  
     ”அம்மா, குழந்தை அழுகிறேனாம்.! நீ பால் புகட்டுவாயாம் ! அம்மா...ஆ ஆ  ஊ ஊ

    “ என்ன பாபு விளையாட்டு இது. “

    “ நீ பால் தரலைன்னா நான் அழுவேன்.அம்ம்ம்மாஆ ஆ
 
விளையாட்டின் பூரண சுவையை அனுபவித்துக் கொண்டிருந்த ரவி, ஓடிப் போய் பாலாடையும் பாலும் கொண்டு வந்தான்..

     கல்யாணி அம்மாவும் பாலைப் புகட்டினாள் பாபுவுக்கு. இரண்டு மிடறு விழுங்கியவன் போதும் என்று சைகை காட்டினான். சுற்றும் ஒரு முறை எல்லோரையும் பார்த்துக் கொண்டான்.சற்றே கண்களை திருப்தியுடன் மூடினான். மறுபடியும் அதே காட்சி.! புதிய குழந்தை....பாபு....மெல்லத் தவழ்ந்து குழந்தைகள் உலகிற்குச் செல்கிறான்.முகத்தில் மீண்டும் புன்னகை.!

    இந்தப் புன்னகை என்றுமே அழியாத புன்னகை.! உலகின் குரோத, விரோத கட்டுப் பாடுகளிலிருந்து விடுதலை தேடித் தந்த புன்னகை. !

    ஆடவேண்டிய விளையாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டுக் களைப்பே இல்லாமல் படுத்துக் கிடந்த பாபுவை கண்ட கல்யாணி அம்மாவுக்கு உலகமே இருண்டு விட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ஆயிரமாயிரம் சம்மட்டிகள் கொண்டு ஆயிரமாயிரம் பேர் இடிப்பதைப் போன்ற ஒரு வேதனை. அலறி விடுகிறாள்.

    “ பாபு... பாபு...... “

    “ அண்ணா.... அண்ணா.... “

சுந்தரபுரி போல் இருந்த இடம் மயானபுரியாகி விட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                         ( அடுத்த இதழில் முடியு.ம் )
      
  .