Tuesday, April 24, 2012

பெண்கள்....




                            பெண்கள்.
                         ---------

பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம், கணவர்கள் விற்பனைக்கு, மறுபக்கம் இருபக்கம், பெண் எழுத்து, என்று பல தலைப்புகளில் நான் எழுதி இருந்தாலும்,பெண்களைப் பற்றிய என் புரிதலில் எனக்கு நம்பிக்கை போதாது .பெண்களைப் பற்றிய தகவல்கள் பலதும் கேட்டறிந்ததும், படித்தறிந்ததும்தான். பெண்களுடன் குடும்பத்தில் பழகும் வாய்ப்போ, அவர்களைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளும் சூழ்நிலையோ கிடைத்தது சொற்பமே. நான் அடுத்திருந்து பழகிய பெண்மணிகள் இருவர். ஒருவர் என் மனைவி; மற்றவர் என் தந்தைக்கு மறுதாரமாய் எனக்கு சிற்றன்னையாய் இருந்தவர். இவர்களுடைய குணாதிசயங்களை அடிப்படையாய் வைத்து ஒட்டு மொத்தமாக பெண்களைக் கணிப்பது, சரியாக இருக்காது. இருந்தாலும் சரியோ தவறோ, பெண்களைப் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறு இருக்கும் என்று எனக்குத் தோன்ற வில்லை

சாதாரணமாய்ப் பெண்களின் மன ஆழங்களை அறிவது கடினம் என்று படித்திருக்கிறேன். பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டு, ஆணாதிக்கத்திற்குப் பலி ஆகிறார்கள் என்பதும் பரவலாகப் பேசப் படும் விஷயம். என் அபிப்பிராயங்கள் நான் பார்த்து ( பழகிய என்பது தவறாயிருக்கும்.) உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில் எழுந்ததே. ஒவ்வொருவர் முன்பும், ஆண்டவன் நேரில் காட்சியளிக்க முடியாது; அந்தக் குறையைத் தீர்க்கவே தாயைப் ( பெண்ணைப்)
படைத்தான் எனக் கூறக் கேட்டிருக்கிறேன். என் எண்ணங்கள் சிலவற்றை “உறவுகள் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.இந்திய இதிகாசங்களிலும் கதைகளிலும் பெண்கள் பெரும்பாலும் கஷ்டங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் போல் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அதை ஆதாரமாய் வைத்து மேலும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராயப் போனால், பெண்களே எல்லா நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தாக்கள் என்பது போலவும், அவர்கள் அளவிட முடியாத சக்தி மிகுந்தவர்கள் போலவும் கூடவே விவரிக்கப் பட்டிருக்கும். இத்தகைய COMPLEX PERSONAALITY –களை எந்த எண்ணோட்டத்தோடு அணுகினால் சரியாக இருக்கும் என்றும் புரிவதில்லை. உடல் வாகில் வேண்டுமானால் பெண்களை  WEAKER SECTION என்று கூறலாம். மனோபலத்திலும் திடத்திலும் ,திட்ட மிடுவதிலும் திட்டங்களை நிறை வேற்றுவதிலும் அவர்கள் ஆண்களை மிஞ்சி விடுகிறார்கள்

பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் கருதுவது மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையாகத் தெரியலாம். அப்படி இருப்பதை அவர்களும் விரும்புகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த மாதிரிக் கருத்துக்களை, நேரத்துக்குத் தகுந்தபடி அவர்களது பலமகவோ, பலவீனமாகவோ எடுத்துக் கொள்கிறார்கள், இல்லை மாற்றிக் கொள்கிறார்கள்.

இருபாலரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும்போது, யார் மேலானவர் யார் கீழானவர் என்று நினைப்பதே சரியில்லை.என்றே தோன்றுகிறது. சக்தியில்லாமல் சிவனில்லை என்றும் ஆண்டவனையே அர்த்த நாரீஸ்வரன் எனும் நம் சமுதாயத்தில், முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்னும் அனுபவ வாக்குடன் எனக்கு உடன்பாடே. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.
இந்த மாதிரிக் கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் அவற்றைத் தெரியப் படுத்தினால் புரிதல் இன்னும் இலகுவாகும்.
----------------------------------------------------------------.          ..
 .

11 comments:

  1. அருமையான கட்டுரை.

    // ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது.// எல்லா நேரங்களுக்கும் இது ஒத்துவராது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    ReplyDelete
  2. //ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது. //

    வசதி வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும், குடும்பத்தினரின் அனைவரின் ஒத்துழைப்பும், ஒருவர் மேல் மற்றவருக்கு உள்ள அன்பும் பாசமும் எல்லாம் சரியாக அமையும் பக்ஷத்தில் இது சரியே!

    ReplyDelete
  3. பெண்களைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான்.

    ReplyDelete
  4. தாங்கள் சொல்லிப் போவது சரியே
    பெண்ணைப் புரிந்து கொண்டவன்
    வாழ்வில் வெற்றி கொள்வது சாத்தியம்
    ஆயினும் புரிந்து கொள்வதுதான் சாத்தியமில்லை
    தங்கள் பதிவு முன்னுரை என நினைக்கிறேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஐயா..

    வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் உங்கள் பதிவு மனதுக்கு இதமாக உள்ளது. உங்களின் வயதும் அனுபவமும் பதிவுகளின் தரத்தையும் கௌரவத்தையும் தக்க வைத்திருக்கிறது. உங்களுடைய பெண்கள் குறித்த இந்தப் பதிவு உண்மையானது. எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு. தாய்..பெரியம்மா..சின்னம்மா..அத்தைகள்..அம்மாச்சி..அப்பாயி..அக்காக்கள்.. அண்ணிகள்..மனைவி எனப் பெரியதளத்தில் இந்தப்பெண்கள் எனக்கு மரியாதைக்குரியவ்ர்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளது உங்களின் அனுபவப் பதிவுகளை.

    ஆவதும் அழிவதும் என்பதற்கு நான் கல்லுர்ரியில் படித்தபோது ஒரு பேராசிரியர் சொன்ன விளக்கம் நினைவுக்கு வருகிறது.

    எப்போதும் ஆக்கம் என்பது பெண்மையால் மட்டுமே இயலும். ஆக்கம் என்பது எப்போதும் நன்மை தருவது. அப்படி நன்மைதராத ஒன்று அழிந்துவிடும். ஆக்கியது பெண் என்பதால் அதன் அழிவு பெண்ணால் ஆக்கப்பட்டது அழிந்தது என்பதுதான் சுருங்கி ஆவதும் அழிவதும்பெண்ணாலே என்று பொருள் சொன்னார்.

    பின்னாளில் நல்லனவற்றை ஆக்கும் பெண்ணே அது சரியாக இல்லாத சூழலில் அழித்துவிடுவாள் என்றும் பொருள் சொன்னார்கள்.

    எனவே எதனையும் நலமுறும் பக்கம் நோக்கியே எண்ணுவோம்.

    நன்றி.

    ReplyDelete
  7. // ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது.//

    மாறுபட்ட அனுபவங்களும் உண்டு..

    ReplyDelete
  8. @ ஸாதிகா,
    @ கோபுசார்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ ரமணி,
    @ ஹரணி,
    @இராஜராஜேஸ்வரி,
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி அவர்களுக்கு, ஒரு முறை .எழுதுவதே சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்று பலமுறை எழுதுகிறேன்.இன்னும் ஒரு முறையா.?
    திரு ஹரணி அவர்களுக்கு உங்களுக்கு உங்கள் பேராசிரியர் சொன்ன விளக்கம் நான் கெள்விப் படாதது. அப்படி நினைப்பது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.என் பதிவு உறவுகளில் பெண்களின் சில குணாதிசயங்கள் எப்படி குடும்ப சூழலை உருவாக்குகிறது என்று எழுதி இருந்தேன். அந்த குணாதிசயம் சரியா தவறா என்பது எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது.
    இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு, மாறுபட்ட அனுபவங்கள் ? புரியவில்லை. நல்லது அல்லாதது எல்லாவற்றுக்கும் பெண்கள் காரணம் இல்லையா.?

    ReplyDelete
  9. ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் மூல காரணம் பெண்களே என்று என் அனுபவம் கூறுகிறது.//

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் துணையாக இருக்கிறாள் என்பார்கள்.
    அன்புக்கு அடிமை அவள்.
    குடும்பத்தில் பெண்ணை மகிழ்ச்சியாய், மதிப்பாய் வைத்து இருந்தால் நீங்கள் சொல்வது போல்

    ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியோ துக்கமோ, மேம்பாடோ, எல்லாவற்றுக்கும் பெண் ஆதார சுருதியாக இருப்பாள்.

    ReplyDelete
  10. பெண்களைப் பற்றிய இப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் என் நன்றி. நீங்கள் அவசியம் என் பதிவு “ உறவுகள் “ படிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete