Thursday, April 26, 2012

ஹாஸ்டல் வாழ்க்கை. ......


                                              ஹாஸ்டல் வாழ்க்கை.
                                           ------------------------------------


விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின் விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை, எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும் உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்

நினைவுகள் 55 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர் குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள் உரிமை இழக்கின்றன.

அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில் இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப் பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம் மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும், எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும்  இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது. இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான இவர்களுக்கு  தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத் தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம் உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை.நாங்கள் ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும்என்று கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம் என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.

பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது. பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு மதியம் போல் உணவு.

சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.

இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?

சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.

எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.

ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் “என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.

இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !

சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம் வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.

அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு

ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது

ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!

விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.

விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA  என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!
---------------------------------------------------------------------------                          :      .               .                                  .                                    





  

20 comments:

  1. ஹாஸ்டல் வாழ்க்கை ஒருசிலருக்கு நல்ல பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும், பொறுப்புணர்ச்சியையும் கற்றுத்தரும்.

    அதே ஹாஸ்டல் வாழ்க்கை சிலரை கெட்ட வழிகளில் போக தூண்டுகோலாக அமைந்து விடுவதும் உணடு.

    உடன் தங்குபவர்கள் நல்ல பழக்க வழக்கம் உள்ளவர்களாக அமைய வேண்டும். அது மிகவும் முக்கியம்.

    அதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அம்பர்நாத் உல்லாஸ்நகர் என்றதும் என் மனம் பின்னோக்கிப் போனது. ஸ்வஸ்திக் கம்பெனியில் வேலை பார்த்த நாட்கள்.. கல்யாணில் தங்கிய நினைவுகள்

    ReplyDelete
  3. எண்ணங்களின் தொகுப்பு நன்றாக இருக்கிறது.


    // லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!//

    மூட்டைப்பூச்சி ஒழிப்பு முறை நல்ல நகைச்சுவை. எப்படி எல்லாம் மனிதர்கள் ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

    ReplyDelete
  4. //மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்//

    //பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம்.//

    //பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?//

    //அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும்.//

    //சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம் வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.//

    //அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு//

    //ஏதாவது பொருளில் MADE IN USA என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.//

    நவரசமும் தெளிக்கப்பட்ட மெருகேறிய இடுகை. சபாஷ் பாலு சர்ர்.

    ReplyDelete
  5. "விடுதி வாழ்க்கை" ம‌ட்டுமே ஒருவ‌ர் வாழ்வின் 'விடுத‌லை வாழ்க்கை'.
    ஆகா என்னே சுக‌ம்...ம்..ம் ஏக்க‌ப் பெருமூச்சுத் தான் விட‌முடிலிற‌து அதை நின‌த்து இப்போது..ஹும்.

    ReplyDelete
  6. @ கோபு சார்,உடன் தங்குபவர்கள் இரண்டு மூன்று என்றால் அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் இவன் சொன்ன டார்மிடரிகளில் 12- பேருக்குக் குறையாமல் தங்கினர். கெட்டுப் போவதோ நல்லவனாயிருப்பதோ அவரவர் கையில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

    ReplyDelete
  7. @ ரிஷபன், பழைய நினைவுகள் நிறைவு தந்தவைதானே.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. @ இராஜராஜேஸ்வரி , வந்து கருத்திட்டமைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  9. @ கோமதி அரசு, எல்லாவித மனிதர்களையும் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்த இடம். வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. @ சுந்தர்ஜி. பல பதிவுகளுக்கு உங்கள் கருத்துக்களை “ மிஸ் “ செய்து விட்டேன். ஊன்றிப் படித்துப் பின்னூட்டமிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  11. @ வாசன்வெகு நாட்களுக்குப் பிறகு வருகை தந்ததற்கு நன்றி. இந்த அனுபவங்கள் மிகப் பழையது. இப்போது என் மகனும் என் பேரனும் விவரிக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை.

    ReplyDelete
  12. நானும் கடந்த 20- வருடங்களாக அம்பர்னாத் வாசிதான் ஆர்டினன்ஸ்ஃபேக்டரியில் என் கணவர் வேலை பார்த்தார். அந்த பழைய நினைவுகளைத்தூண்டி விட்ட பதிவு,

    ReplyDelete
  13. அந்தக் காலத்து ஹாஸ்டல் அனுபவம்
    இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது
    கண்ணதாசன் வனவாசம் பாணியில்
    எழுதி இருந்தது ரசிக்கும் படியாக இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  14. //மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி //

    மூட்டைப் பூச்சிகளோடு வாழ்ந்த ஒரு காலமும் இருந்தது. 'ரெஜினா' என்று மூ.பூ. கொல்லி பெளடர் அந்தக் காலத்தில் பிரச்சித்தம். 'லட்சுமணக் கோடு' போல, பாயைச் சுற்றி கோலமிட்டு படுத்துறங்கிய காலம் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  15. @ லக்ஷ்மி, இதந்தரும் நினைவுகள்தானே.? வருகைக்கும்வாசிப்புக்கும் நன்றி,

    ReplyDelete
  16. @ ரமணி “ கண்ணதாசன் வனவாசம் பாணியில் எழுதி இருந்தது” உண்மையை சொல்லப் போனால் நான் கண்ணதாசனின் வனவாசம் படித்ததில்லை.படித்து ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @ ஜீவி சார், அங்கிருந்த மூட்டைப் பூச்சிகள் கயிற்றுக் கட்டில்லிலேயே குடித்தனம் நடத்தின. எங்கிருந்தும் வரத் தேவை இருக்கவில்லை ! வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. சுவாரசியம்.
    IAF OTSல் பயிற்சிக்குப் போன போது "பண்பட்டவர்களும்" இப்படி முழ உயரம் பூரியடுக்கிப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன். மூட்டைப்பூச்சி விவரம் கொடுமை. நிறைய நினைவுகளைக் கிண்டியது.

    ReplyDelete
  19. உல்லாஸ் நகர் எங்களுக்குப் பக்கத்தூருதான்,. USA-ஐப் பத்திக் கரெக்டா சொன்னீங்க :-))

    ReplyDelete