Wednesday, September 10, 2014

பாரதியின் நினைவுகளில்.....


                                     பாரதியின் நினைவுகளில்........
                                     -----------------------------------


“ஆசை முகம் மறந்து போச்சே- இதை யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகம் மறக்கலாமோ
“வெண்ணிலவு நீ எனக்கு, மேவுகடல் நானுனக்கு
பண்ணின் சுதி நீஎனக்கு, பாட்டினிமை நானுனக்கு
என் காதலியும் நானும் பாடிக்கொண்டிருந்தோம் (கனவில்தான்) ஒரு புகை மண்டலம் எழுந்தது. அதில் நிழல் போல் ஒரு உருவத்தின் பிரதி பலிப்பு தெரிந்தது. பாரதி போல் தெரிகிறதே.
“ வாரும் ஐயா, முண்டாசுக் கவிஞரே. . இன்று உன் நினைவு நாள். எங்களை அறியாமல் உம் பாட்டை முணு முணுத்துக் கொண்டிருந்தோம், உம்மிடம் சற்று உரையாட வேண்டும் . சௌகரியப்படுமா.?
என் பாட்டைப் பாடியே என்னை வரவழைத்து விட்டு சௌகரியப் படுமா என்று கேட்பதே சரியில்லையே.
உம் பாட்டைப் பாடினால் நீர் வந்து விடுவீரோ.?
“ ஸ்ரீராமனின் நாம ஜெபம் நடக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் வந்திருப்பானாம். அது போல் என் பாட்டை ரசித்துப் பாடும் இடத்தில் நான் பிரத்தியட்சமாகி விடுவேன். இதை எல்லோரிடமும் கூறி விடாதே. பிறகு அவனவன் பாடத்துவங்கி விட்டால் என்னால் எல்லா இடத்துக்கும் போக முடியாது
கவிஞரே, உம்மிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் பதில் சொல்வீர்களா.?
“அது நீ கேட்கும் கேள்வியைப் பொறுத்தது
“ஐயா நீர் மறைந்தது 1921-ஆம் ஆண்டு. நாம அரசியல் சுதந்திரம் அடைந்தது 1947-ல். ஆனால் அதற்கும் முன்பே உன் வாழ் நாளிலேயே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடினீர்களே அது எப்படி.
“நான் மனசளவில் அப்போதே சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதினேன்
மன்னிக்க வேண்டும் ஐயா. நீர் பெற்ற சுதந்திரத்தில் ‘பார்ப்பானை ஐயரென்ற காலம் போயிருக்கலாம் . வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போயிருக்கலாம் ஆனால் பிற கருத்துக்கள் எல்லாமே வெறும் கருத்தாகவே கனவாகவே இருக்கிறதே.காலத்தை வென்றவன் கவிதை கதையாகிப் போய்விட்டதே. உம் நெஞ்சு பொறுக்கவில்லையா
“ஏன் .. சுதந்திர நாளில் எங்கும் சுதந்திரம் என்று பேசவில்லையா.? எல்லோரும் சமம் என்று சொல்லவில்லையா.? நாமிருக்கும் நாடு நமதென்று அறிய வில்லையா? அது நமக்கே உரிமை என்று கூறவில்லையா?
“கவிஞரே உணர்ச்சி வசப்படாமல் கேளுங்கள். மேலோட்டமாக சரிபோல் தோன்றினாலும் உண்மை நிலை வேறு என்று உங்களுக்கே தெரியும். எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததா, எல்லோரும் சமம் என்னும் நினைப்பு வந்ததா.?நல்லோர் பெரியோர் எனும் காலம் வந்ததா, , நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததா.? பாரதியே உம்மை சங்கடப் படுத்த அல்ல இந்தக் கேள்விகள். உமது எண்ணங்களின் வெளிப்பாடே அக்கவிதைகள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் சொல்வது என் ஆற்றாமையின் வெளிப்பாடு என்று உங்களுக்கும் தெரிய வேண்டும்.

விடுதலைப் பாட்டு பாடினீர்கள் பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை என்றீர்கள். திறமை கொண்ட தீமை அற்ற  தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே. எவ்வளவு அருமையான  சிந்தனையின் வெளிப்பாடு. கவிஞரே இதெல்லாமே இன்னும் வெறும் கனவாகத்தானே இருக்கிறது.பெயரளவில் நடந்து விட்டது போலும் நடந்து கொண்டிருப்பது போலும் தோன்றும் கானல் அல்லவா உண்மை நிலை.
“நல்ல எழுச்சி மிக்க வரிகள் மக்களை உசுப்பேற்றி நல்ல வழிவகைக்கு அடிகோலும் என்று கண்ட கனவு வரிகள் அல்லவா அவை
முற்றிலும் உண்மை ஐயா..இருந்தாலும் நீங்கள் பாடிய பல வரிகள் பலவற்றில் நான் மிகவும் ரசித்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
“நீ ரசித்ததென்றால் ஏதேனும் சாரம் இருக்குமே. சொல். தெரிந்து கொள்ள விழைகிறேன்
“ மரணத்தை வெல்லும் வழி என்னும் பாடலில் ‘முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுளென்றார். முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்;அன்னோர்க
ளுரைத்த தன்றிச் செய்கையில்லை.அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?

முன்னோர்களுரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.
பொந்திலேயுள்ளாராம், வனத்திலெங்கோ புதர்களிலே இருப்பாராம், பொதியை மீதே சந்திலே, சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே யங்கங்கே தென் படுகின்றாராம்.. நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை..நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்  சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார் மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “
“ஆம், ஆம், நான் எழுதியது தான்

” ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குணாதிசயங்களை அழித்தவரா நீங்கள் , இந்த கால கட்டத்தில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் . நாங்கள் பாடலைத் தொடர விரும்புகிறோம்
 கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை, நண்ணுமுக வடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்.....   
(பாரதியின் நினைவுகள் அலை மோதுகின்றன. எழுதிக் கொண்டே போகலாம்.பதிவின் நீளம் கருதி  சிலவற்றையே பகிர்ந்திருக்கிறேன்)                





 
 
 

32 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    பாரதி பற்றிய விரிவான தகவலை தங்களின் பதிவு வழிஅறியக்கிடைத்துள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வரிகள் உணர்ச்சி கொப்பளிக்க இருந்தன. படைப்புகளில் வாழும் மஹாகவியை நினைவு கூர்ந்ததும் அற்புதம்.

    ReplyDelete
  3. உணர்வு பூர்வமான வரிகள்....

    அவரது எழுத்து மூலம் நிரந்தரமாக இருப்பார் என்பது தெள்ளத் தெளிவு.

    ReplyDelete
  4. அற்புதமான ஓர் பதிவு ஐயா
    பாரதியை மீண்டும் அழைத்து வந்ததற்காகவே தனியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும் தங்களுக்கு.
    பாரதி பற்றி நானும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி பற்றி அருமையான சிந்தனைகள்..

    ReplyDelete
  6. //நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம் சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார் மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், //

    பாரதி எப்படிச் சாகாமல் அவன் படைப்புக்களில் உயிர் வாழ்கிறானோ அவ்வாறே புத்தர், சங்கரர், ராமாநுஜர், மற்ற சித்தர்கள் அனைவருமே அவரவர் படைப்புக்களிலேயே உயிர் வாழ்கின்றனர். இதில் மானுடனாகவே வாழ்ந்து மறைந்த ராமனும், மானுடனாகப் பிறந்தாலும் அவ்வப்போது தன் அவதார சொரூபத்தைக் காட்டிய கண்ணனும் விலக்கல்ல. :)))))

    இல்லை எனில் இன்றும் நாம் அவர்களைக் குறித்துப் பேச முடியுமா?

    ReplyDelete
  7. ஆக்கபூர்வமான கனவைக் கண்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  8. மிக அழுத்தமான, உணர்வுகள் கொப்பளிக்க, அவரைப் போன்றே....அவருடன் பேசுவது போன்று எழுதப்பட்ட அழகான பதிவு....மஹாகவி ஆயிற்றே! அவரை மறப்பார் யார்? அவரது எழுத்துக்களே அவரை இன்னும் வாழ வைக்கும்.....நம் தமிழ் பாடத் திட்டத்தில் அவரைப் பற்றி இருந்தால், இல்லை எதிர்கால குழந்தைகள் தமிழ் ஆர்வமுடன் பாரதியைப் படிக்க முனைந்தால், பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் அறிவு வேண்டும் என்று நினைத்தால்....

    ReplyDelete
  9. நல்ல உணர்வின் வெளிப்பாடு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. நல்ல உணர்வின் வெளிப்பாடு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  11. @ ரூபன்
    அவனது வரிகள் மூலம் அவனை அறிய ஒரு முயற்சி. வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

  12. @ ஜீவி
    உங்கள் பாராட்டு மகிழ்வளிக்கிறது. நன்றி சார்.

    ReplyDelete

  13. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    நான் எங்கே அழைத்துவந்தேன். அவன் பாட்டுப் பாடினோம் வந்து விட்டான்..! வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் கருத்துக்கும்நன்றி மேடம்.

    ReplyDelete

  16. @ கீதா சாம்பசிவம்
    பாரதி சாவை வென்று விட்டதாகக் கருதக் காரணம் அவன் சொல்லும் சில குணாதிசயங்களே. ஆனால் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாததால் அவன் எழுத்தின் மூலம் நிலைக்கிறான் என்றேன். மேலும் புத்தன் யேசு கண்ணன் இராமன் எல்லோரும் இறந்து விட்டதாகக் கூறுவது பாரதி. அவனைப் பொறுத்தவரைஅவர்கள் இறந்து விட்டனர். May be அவர்களிடம் அவன் குறிப்பிட்ட குணங்களை அவன் காணவில்லையோ என்னவோ. பாரதியின் வரிகளால் அவன் வாழ்கிறான் என்பது என் கணிப்பு மட்டுமல்ல பொதுவாக எண்ணப்படுவதும் ஆகும் அவன் குறிபிட்டவர் வாழ்கின்றனரா இல்லை மடிந்து விட்டனரா என்பதும் அவரவர் கணிப்பேயாகும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    நல்ல வேளை என் அஞ்ச்லி ஆக்கபூர்வமானது என்று ஏற்றுக்கொள்ளப் பட்டது. எனக்கு ஒரு சந்தேகம் சில கருத்துக்களைப் படிக்கும்போது உங்களுக்குக் கோபம் வருமோ. மீள் கருத்தூட்டத்துக்கு நன்றி.

    ReplyDelete

  18. @ துளசிதரன் தில்லையகத்து
    பாடதிட்டங்களில் பாரதி பற்றி ஏதும் இல்லையா.?இல்லாவிட்டால் என்ன திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு சில பாடல்களையாவது வெளிச்சத்துக்குக் கொண்டு வருவார்கள். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  20. என்றும் நெஞ்சில் இருக்கும் மகாகவிக்கு சிறப்பான நினைவஞ்சலி..
    வாழ்க மகாகவி பாரதியின் புகழ்!..

    ReplyDelete
  21. நிஜமாக இதற்கெல்லாம் பாரதி எப்படி பதில் சொல்லி இருப்பார்? கவிஞர் கவிதைகள் ஜீவனுடன் இருக்கும்போது அவருக்கு மரணமேது?

    ReplyDelete

  22. @ துரை செல்வராஜு
    பாரதி புகழ் ஓங்குக. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ ஸ்ரீராம்
    /நிஜமாக இதற்கெல்லாம் பாரதி எப்படி பதில் சொல்லி இருப்பார்.?/ எதற்கெல்லாம்.? வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  24. விளக்கமான பதிவு!நன்று!

    ReplyDelete
  25. நாங்கள் பாரதியை அவர் இருக்கும் இடத்திலேயே வைத்து அஞ்சலி செலுத்தினோம். நீங்களோ அவரை ஜாலஹள்ளிக்கே வரவழைத்து- நிற்கவைத்து- சூடாக நாலு கேள்வி கேட்டு விட்டீர்கள்! வயதானாலும் உங்கள் குறும்புத்தனம் போகவில்லையே ஐயா!வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  26. @ புலவர் இராமாநுசம்
    வெகு நாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம் காண மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.நன்றி.

    ReplyDelete

  27. @ செல்லப்பா யக்ஞசாமி
    குறும்புத்தனம் இல்லை ஐயா. நான் சற்று வித்தியாசமானவன். அது பதிவுகளிலும் வெளிப்பட்டு விடுகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  28. தேசியக் கவியை கேள்விகளால் திணறடித்துவிட்டீர்கள்.ஆனாலும் உங்கள் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. பாரதி அவர் கவிதைகளில் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.
    நல்ல கனவு உங்களுக்கு .

    ReplyDelete

  30. @ வே. நடன சபாபதி
    பாரதியை கேள்விகளால் திணற அடிக்கும் நோக்கம் இல்லை. என் கேள்விகளை மானசீகமாக அவரிடம் கேட்டுத் தெளிவு படுத்த விரும்பினேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete

  31. @ கோமதி அரசு.
    பாரதியின் சிந்தனைகள் பெரும்பாலும் கனவுகளாகவே போய் விட்டது. அதுதான் கனவிலேயே கேள்விகள். பாரதி வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. உணர்வு பூர்வமான நினைவுகளின் பதிவு. கனவுதான் எத்தனை சௌகரியம்? நல்லு யுக்தி. என் பாட்டனை நினைவு கூர்ந்தமைக்கு என் நன்றி

    ReplyDelete