பாரதியின் நினைவுகளில்........
-----------------------------------
“ஆசை முகம் மறந்து போச்சே- இதை யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகம் மறக்கலாமோ”
“வெண்ணிலவு நீ எனக்கு, மேவுகடல் நானுனக்கு
பண்ணின் சுதி நீஎனக்கு, பாட்டினிமை நானுனக்கு”
என் காதலியும் நானும் பாடிக்கொண்டிருந்தோம் (கனவில்தான்) ஒரு
புகை மண்டலம் எழுந்தது. அதில் நிழல் போல் ஒரு உருவத்தின் பிரதி பலிப்பு தெரிந்தது.
பாரதி போல் தெரிகிறதே.
“ வாரும் ஐயா, முண்டாசுக் கவிஞரே. . இன்று உன் நினைவு நாள். எங்களை
அறியாமல் உம் பாட்டை முணு முணுத்துக் கொண்டிருந்தோம், உம்மிடம் சற்று உரையாட
வேண்டும் . சௌகரியப்படுமா.?”
”என்
பாட்டைப் பாடியே என்னை வரவழைத்து விட்டு சௌகரியப் படுமா என்று கேட்பதே
சரியில்லையே.”
”உம்
பாட்டைப் பாடினால் நீர் வந்து விடுவீரோ.?”
“ ஸ்ரீராமனின் நாம ஜெபம் நடக்கும் இடத்தில் எல்லாம் அனுமன்
வந்திருப்பானாம். அது போல் என் பாட்டை ரசித்துப் பாடும் இடத்தில் நான்
பிரத்தியட்சமாகி விடுவேன். இதை எல்லோரிடமும் கூறி விடாதே. பிறகு அவனவன்
பாடத்துவங்கி விட்டால் என்னால் எல்லா இடத்துக்கும் போக முடியாது”
”கவிஞரே,
உம்மிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் பதில் சொல்வீர்களா.?”
“அது நீ கேட்கும் கேள்வியைப் பொறுத்தது”
“ஐயா நீர் மறைந்தது 1921-ஆம் ஆண்டு. நாம அரசியல் சுதந்திரம்
அடைந்தது 1947-ல். ஆனால் அதற்கும் முன்பே உன் வாழ் நாளிலேயே ’ஆடுவோமே பள்ளுப்
பாடுவோமே’ என்று
பாடினீர்களே அது எப்படி.”
“நான் மனசளவில் அப்போதே சுதந்திரம் பெற்று விட்டதாகக்
கருதினேன்”
”மன்னிக்க
வேண்டும் ஐயா. நீர் பெற்ற சுதந்திரத்தில் ‘பார்ப்பானை ஐயரென்ற காலம் போயிருக்கலாம்
. வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போயிருக்கலாம் ஆனால் பிற கருத்துக்கள்
எல்லாமே வெறும் கருத்தாகவே கனவாகவே இருக்கிறதே.காலத்தை வென்றவன் கவிதை கதையாகிப்
போய்விட்டதே. உம் நெஞ்சு பொறுக்கவில்லையா”
“ஏன் .. சுதந்திர நாளில் எங்கும் சுதந்திரம் என்று
பேசவில்லையா.? எல்லோரும் சமம் என்று சொல்லவில்லையா.? நாமிருக்கும் நாடு நமதென்று
அறிய வில்லையா? அது நமக்கே உரிமை என்று கூறவில்லையா?”
“கவிஞரே உணர்ச்சி வசப்படாமல் கேளுங்கள். மேலோட்டமாக சரிபோல்
தோன்றினாலும் உண்மை நிலை வேறு என்று உங்களுக்கே தெரியும். எல்லோரும் ஒன்றென்னுங்
காலம் வந்ததா, எல்லோரும் சமம் என்னும் நினைப்பு வந்ததா.?நல்லோர் பெரியோர் எனும்
காலம் வந்ததா, , நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததா.? பாரதியே உம்மை சங்கடப் படுத்த
அல்ல இந்தக் கேள்விகள். உமது எண்ணங்களின் வெளிப்பாடே அக்கவிதைகள் என்று எனக்குத்
தெரியும். இருந்தாலும் நான் சொல்வது என் ஆற்றாமையின் வெளிப்பாடு என்று உங்களுக்கும்
தெரிய வேண்டும்.
விடுதலைப் பாட்டு பாடினீர்கள் பறையருக்கும் இங்கு தீய
புலையருக்கும் விடுதலை என்றீர்கள். திறமை கொண்ட தீமை அற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி
ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே. எவ்வளவு அருமையான சிந்தனையின் வெளிப்பாடு. கவிஞரே இதெல்லாமே
இன்னும் வெறும் கனவாகத்தானே இருக்கிறது.பெயரளவில் நடந்து விட்டது போலும் நடந்து
கொண்டிருப்பது போலும் தோன்றும் கானல் அல்லவா உண்மை நிலை.”
“நல்ல எழுச்சி மிக்க வரிகள் மக்களை உசுப்பேற்றி நல்ல
வழிவகைக்கு அடிகோலும் என்று கண்ட கனவு வரிகள் அல்லவா அவை”
”முற்றிலும்
உண்மை ஐயா..இருந்தாலும் நீங்கள் பாடிய பல வரிகள் பலவற்றில் நான் மிகவும் ரசித்தை
இங்கு குறிப்பிட விரும்புகிறேன்”
“நீ ரசித்ததென்றால் ஏதேனும் சாரம் இருக்குமே. சொல். தெரிந்து
கொள்ள விழைகிறேன்”
“ மரணத்தை வெல்லும் வழி என்னும் பாடலில் ‘முன்னோர்கள்
எவ்வுயிரும் கடவுளென்றார். முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்;அன்னோர்க
ளுரைத்த தன்றிச் செய்கையில்லை.அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?
முன்னோர்களுரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார்,
மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.
பொந்திலேயுள்ளாராம், வனத்திலெங்கோ புதர்களிலே இருப்பாராம், பொதியை
மீதே சந்திலே, சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே யங்கங்கே தென் படுகின்றாராம்..
நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை..நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர்
அந்தணனாம் சங்கராச்சாரியன்
மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில்
வீழ்ந்தான்;பார் மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை,
பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன்
மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப்
பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “
“ஆம், ஆம், நான் எழுதியது தான்”
” ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குணாதிசயங்களை
அழித்தவரா நீங்கள் , இந்த கால கட்டத்தில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேடிக்கை
மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும்
உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம்
வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும்
இருக்கிறீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் . நாங்கள் பாடலைத் தொடர விரும்புகிறோம்
’கண்ணில்
தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை, நண்ணுமுக வடிவு காணில் அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்’..... “
(பாரதியின் நினைவுகள் அலை மோதுகின்றன. எழுதிக் கொண்டே போகலாம்.பதிவின் நீளம் கருதி சிலவற்றையே பகிர்ந்திருக்கிறேன்)