Saturday, April 23, 2011

அவதாரக் கதைகள் பாகம்----1

அவதாரக் கதைகள்......பாகம்---1--
---------------------------------------------- 
      திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், 
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
     அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
     எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
     யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.


      முதல் மூன்று அவதாரங்களும்  தாத்தா பாட்டி
      கதைகளில் அதிகம் காண்பதில்லை , கதைகளில்
      குழந்தைகள் அதிகம்  ஒன்றாததும்  ஒரு காரணமோ. ?
      அதிகம் கூறப்படாததென்றாலும்அவதாரக் கதைகள்
      அறிந்தே இருக்க வேண்டும் அல்லவா.?

நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்.

         ஓர்  ஊழிக்காலம் முடிவடைந்த வேளையில்
         பாம்பணையில் படுத்திருந்த பரந்தாமன்,
         மீண்டும்  உலகை படைக்க  எண்ணி
         முதலில் தன்  நாபிக்கமலத்தில் இருந்து,
         நான்முகனை  படைததெடுத்து நான்மறைகளையும்
         கொடுத்து ,படைக்கும்  தொழிலையும் கற்பித்தார்.

படைக்கும்  தொழிலைப் பாங்குடனே கற்ற  நான்முகனுக்கு,
தான் படைத்து முடித்த உலகையும் உயிரினங்களையும்
கண்டு ,அவனுள்ளே எழுந்ததோர் ஆணவம் ,அதனை
அடக்க அவனையே படைத்த பரந்தாமனும்
காலம் கனியக் காத்திருந்தார்.

         பரிமுகன்  என்ற பேர்கொண்ட அரக்கன், 
         வரம் பல பெற்றவன், வலிமை மிக்கவன்,
         படைக்கும்  தொழிலையும் நான்மறைகளையும் 
          பிரம்மனிடமிருந்து பறிக்கப் பார்த்திருந்தான்  நேரம். 

நான்முகன்  விழித்திருக்கையில் பெற முடியாத 
மறைகளை ,அவன் உறங்கும் ஊழிக்காலத்தில் 
கவர எண்ணிக் காத்திருந்தான்..

            சத்தியவிரதன்  என்றோர் அரசன், 
            நெறி பிறழாது அரசோச்சி வந்தவன், 
            வைகுண்ட வாசனின்  பரம பக்தன் 
            பரந்தாமனின் ஊழிக்கால் திருவிளையாடல் 
            காண விருப்பம் கொண்டே வேண்ட ,அவன் 
            ஆசையை நிறைவேற்றவும், பிரம்மனின் 
            ஆணவம் அடக்கவும் நேரம்  குறித்தான் மகா விஷ்ணு..


ஒருநாள்  காலைக்கடன் கழித்துப்பின், 
ஆற்றுக்கு சென்று நீராடி நீர்க்கடன் ஆற்ற 
கைகளில் அள்ளிய ஆற்று நீரில்  ஒரு மீன் 
இருக்க, அதனை ஆற்றில் விட்டு மீண்டும் 
நீரெடுக்க மீனும் வர வருந்திய அரசனிடம் 
மீனும், " வேண்டாம், நீரில் விட வேண்டாம், 
மீறி விட்டால் பெரிய மீனுக்கு இறையாவேன் , 
என்னை நீர் காத்தருள்வீர்," என வேண்டியது கண்டு 
வியப்படைந்த சத்தியவிரதன் கருணையால் 
கைகள் அள்ளிய நீருடன் மீனையும்  சேர்த்து 
தன கமண்டலத்தில் விட்டான், அதன் பின் 
அவன்  அவனது நீர்க்கடனையும் ஆற்றினான்.

         அரண்மனை மீண்ட அரசன், கமண்டலம் அளவு 
         மீனும் வளர்ந்திருக்கக் கண்டு வியந்து ஒரு 
         தொட்டியில் நீரேற்றி அதனுள் மீனையும் விட்டான். 
         மறுநாள தொட்டியளவு மீன் வளர்ந்தது கண்ட 
         அரசன்  அதனை ஓர் ஏரியில் விட ஏரியளவு 
         வளர்ந்த மீனைக்கண்டு  வியப்பொழிந்து 
          ஐயமும்  அச்சமும் கொண்டான் பின் 
         எழுந்த ஆழ்ந்த சிந்தனை முடிவில் அது, 
         மாலின் திருவிளையாடல் என்று உணர்ந்தான்.

மீனை வணங்கிய  மன்னன் மீனுருவின் 
காரணம் கேட்க, பரந்தாமன் " என் ஊழிக்கால 
திருவிளையாடல் காண விழையும் உன் 
விருப்பத்துடன் மேலும் ஒரு செயல் மீதமுள்ளது..
நான் சொல்வது நன்கு கவனி. இன்றிலிருந்து 
ஏழாம் நாள் கடல் பொங்கி உலகழியும் ; ஏழாம் 
நாள்  படகொன்று அனுப்புகிறேன். மருந்துச் 
செடிகளுடன், விதைகளையும்  எடுத்துப் படகினில் 
ஏற்றிக்கொள். உடன் வர ஏழு முனிவர்களும் இருப்பர்
அவர்தம் ஞான ஒளி வழி காட்டும்.. திமிங்கில வடிவில் 
நான் என் செதில்களில் வாசுகிப் பாம்பினைக் கட்டி, 
உன் படகுடன் பிணைத்துக் கொள்வேன். ஊழிக்காலமாகிய 
நான்முகனின் இரவு முடியும்வரை, படகினை இழுத்துத் 
திரிவேன். என் ஊழிக்காலத் திருவிளையாடல் நீ காணலாம்,"
என்று கூறி மறைந்தார்.

         பரந்தாமன் சொன்னபடி படகுவர, 
         கடல் பொங்கி ஊழிக்காலம் வர 
         நான்முகனும் உறங்கத் துவங்க, வானம் 
         கருத்து, மழை பெய்து உலகைக் கடல் கொண்டது. 

காலம் பார்த்திருந்த பரிமுகன் 
நான்முகன் வாயிலிருந்து  உறக்கத்தில் 
வெளிப்பட்ட நான்மறைகளை கவர்ந்து 
சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். 

         விழித்தெழுந்த நான்முகன் படைப்புத் 
         தொழிலை துவங்க இயலாது திகைத்து,
        ஆணவம் அடங்கித் திருமாலிடம் 
         மன்னித்து அருள வேண்டினான். 

திருமாலும் மீன் வடிவம் தாங்கி, 
கடலடியில் மறைந்திருந்த பரிமுகனைக் 
கொன்று, நான்கு மறைகளை, நான்கு 
குழந்தைகளாக்கி நான்முகனிடம் சேர்த்தருளினார்.

         நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார். 

   ( மீன் அவதாரம்  முற்றிற்று.)
-------------------------------------------
 
( அவதாரக் கதைகளை தொடர்வதா என்பது  இந்தப்பதிவுக்குக் கிடைக்கும் 
வரவேற்பைப் பொறுத்தது. )





 







 







  . 








. .
 
 


     

 ,





 








 

 

7 comments:

  1. மச்சாவதாரத்தில் துவங்கியுள்ள அவதாரக் கதைகளின் பாகம்-1 அலுக்காத இதிகாசக் கதைகளின் சுவாரஸ்யத்தை விதைத்தது.

    நீர்வாழ் உயிரினத்தில் துவங்கி மெல்லப் பரிணாமம் பெற்று மனிதனான ராமனிலும் க்ருஷணனிலும் தொடர்ந்து பரிமேல் விரையும் கல்கிக்காகக் காத்திருக்கிறது யுகங்களாய்.

    கதைகளின் உலகம் நமக்குக் கற்றுக்கொடுப்பவை ஏராளம்.

    அடுத்த பாகத்துக்கு நான் காத்திருக்கிறேன் பாலு சார்.

    ReplyDelete
  2. திருமாலின் விளையாட்டுக்களை தொடருங்கள் பெரியவரே வாசிக்க காத்திருக்கிரேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  4. மச்சாவதாரம் படித்து மகிழ்ந்தேன்.
    நல்ல பதிவு.நன்றி.தொடருங்கள்.

    ReplyDelete
  5. தசா அவதாரங்களின் சுருக்கமும்
    முதல் அவதார விளக்கமும் மிக அருமை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  6. தொடர் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete
  7. அன்புள்ள தாத்தா நான் பரதநாட்டியும் பயின்று வருகிறேன். நீங்கள் பத்து அவதாரக் கதைகளைத் தொடர்ந்து எழுதினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!

    ReplyDelete