ஏன்.....? ஏன்.....?
---------------
அப்போது இவனுக்கு வயது ஆறிலிருந்து பத்துக்குள் இருக்கும் அரக்கோண வாசம். வீட்டிற்கு
இரவு படுக்க வருவது மட்டும் தவிர்க்க முடியாதது எந்த தடப வெப்ப நிலைக்கும்
அஞ்சியதில்லை. சுட்டெரிக்கும் சூரியனும் வீசிக் கொடுக்கும் காற்றும். மாரியின் மழை
பொழிவும் எல்லாமே மகிழ்ச்சி தந்தவை.
அதன் பிறகு அங்கும் இங்கும் இருந்து மலையரசியின் மடியில்
நான்காண்டுகள் ஜீவிதம். வாட்டி எடுக்கும் குளிரிலும் காலுக்கு அணி ஏதுமிருக்காது.
இதமளிக்கும் கம்பளி ஆடைகள் கிடையாது.குளிர்ந்த நீரில் குளித்து அரை நிஜாரில் பவனி
வந்த நாட்களின் மகிழ்ச்சி இன்றும் நினைவில்.
அதன் பின் ஓய்வு பெற்றோரின் சொர்க்கம் எனப்படும் பெங்களூர்
வாசம் சில வருஷம். அப்போதெல்லாம் உஷ்ணமானி டிகிரி 34—35—செல்ஷியஸ்
தொட்டால் வானம் இருண்டு மழை நிச்சயம்.வியர்வை சிந்த உழைத்தாலும் வியர்க்காது.
அதுவும் ஒரு காலம்.
நின்றால் சுடும் , சுவரைத் தொட்டால் சுடும், சீதோஷ்ணம் அதிக
வெப்பம் மிக அதிக வெப்பம் என்று வந்தபோது பயமுறுத்திய திருச்சியில் பலவருஷ வாசம்.
அதன் நடுவில் BLAZEWADA என்று வெள்ளையர்களால் செல்லமாக அழைக்கப்
பட்ட விஜயவாடா வாசம் நான்காண்டுகள். கோடையில் வெகு சாதாரணமாக 115 டிகிரி F. கொளுத்தும். சுற்றிலும் கருங்கல் மலைப் பிரதேசம்
.பகலை விட அதிக வெப்பம் இரவில் தாக்கும். வெட்ட வெளியில் அத்தனை வெப்பத்தையும்
தலையில் இறக்கி பணி புரிந்ததும். நினைவலைகளில் மோதும். அவ்வப்போது நடு நடுவே நாக்பூர், டெல்லி
என்றெல்லாம் பயணித்திருந்த அனுபவங்களும் நினைவில் வருகிறது. அணிந்திருந்த உடைகளை
துவைத்து காயப் போட்டால், குளித்து வருவதற்குள் காய்ந்திருக்கும்.
இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் தாக்க வேண்டும்..?
அன்றைக்கிருந்த உடல்தான் இன்றும். மன
நிலையும் ஏறத்தாழ அதேதான். இருந்தாலும் இப்போதெல்லாம் சீதோஷ்ண நிலைகள் சமாளிப்பதே
என்பாடு உன் பாடு என்றாகிறது. மனம் என்ன நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பதில்லையே. மனம் விழைவதைச் செய்ய உடல் மறுக்கிறதே மனதை இளமையாய் வைக்க முடிகிறது.உடலின் மேல் control இல்லையே.. இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது
ஏன்....? ஏன்...?
-------------------------------------------------------