கீதை- பதிவுக்கு ஒரு முன்னுரை....
----------------------------------------------
முன்பு நான் ஒரு ஹிந்து என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் கிருஸ்துவர்களுக்கு ஒரு பைபிள், இஸ்லாமியருக்கு ஒரு குரான், என்பது போல்
ஹிந்துக்களுக்கான மத நூல் எது எனும் கேள்விக்கு மதநூல் என்று தனியாக ஏதுமில்லை
என்றும் ஸ்ருதிக்களும் ஸ்மிருதிக்களும் ,
வேதங்களும் உபனிஷத்துக்களும் கீதையும் ஹிந்துக்களின்
நூல்களாகக் கொள்ளலாம் என்றும் எழுதி இருந்தேன்.ஆனால் இவற்றில் எதையாவது நீ
கற்றிருக்கிறாயா என்னும் கேள்வி அவ்வப்போது மனதுக்குள் எழும். திருக்குறள் பற்றிப்
பலரும் பேசுகிறோம். கம்பராமாயணம் பற்றிப் பலரும் எடுத்துக்காட்டிப் பேசுகிறோம்.
இதேபோல் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறோம். இவற்றில்
எதையாவது நாம் முழுவதும் கற்றிருக்கிறோமா என்னும் கேள்விக்கு நெஞ்சில் கை வைத்து
உண்மையாக பதில் பேச பலருக்கும் இயலாதது. குறைந்த பட்சம் நாம் மேற்கோள் காட்டும்
பகுதிகளையாவது நாம் ஓரளவாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா.?
பல நூல்களை நாம் கற்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்று
அவற்றில் சொல்லி இருக்கும் விஷயங்கள் பலவும் நம்மால் கிரகிக்க முடிவதில்லை இரண்டு
நம் மொழி அறிவு. ( தமிழானால் பொருள் விளங்கா நடை, சம்ஸ்கிருதமானால் அது வழக்கில்
இல்லாததால் நம்மால் படிக்க முடியாமல் இருப்பது) மூன்று அவற்றை விளக்கி உரை
கூறுபவர்களின் வியாக்கியானங்கள் ஒருவருக்கொருவர் மாறு படுவது. இருந்தாலும் ஒரு
முறையாவது பொருள் புரிந்து படித்துக் கிரகிப்பது நலமாக இருக்கும் . இந்த
முயற்சியின் விளைவாக பகவத் கீதையை தமிழில் படிக்கத் துவங்கி இருக்கிறேன் நான்
படிக்கத் துவங்கி இருப்பது ஸ்வாமி சித்பவாநந்தரின் விரிவுரை.பல ஆண்டுகளாக என்னிடம்
இருக்கும் இந்த நூலை முதலில் எடுக்கவே தயக்கமாய் இருந்தது நான் சுவாமி
சின்மயாநந்தாவின் கீதையின் 18-நாள்
விளக்கச் சொற்பொழிவை 1960-களில் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறேன் கேட்கும்போது
விளங்குவது போல் இருந்தது நினைவு படுத்தும் போது தெளிவாகத் தெரிவதில்லை என்
வலையில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் தொடராக எழுத உத்தேசம். அது எப்படி
வரப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலில் நான் படித்துக்
கிரகிக்க வேண்டும் பின் அதை வலையில் பகிர வேண்டும். என் உள்மனது இது மீண்டும் உன்
ஏரியா அல்லவே என்கிறது. முதலில் முகவுரையாகச் சில கருத்துக்கள். கூடியவரை
எளிதாகவும் சுருக்கமாகவும் எழுத உத்தேசம் ( இந்தப் பதிவில் நான் என் கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை.படித்துக் கிரகித்ததை எழுதுகிறேன் சில வார்த்தைகளின் பொருள் முழுவதும் விளங்குவதில்லை. . ஒரு கனமான விஷயம் எழுதலாமா என்று தோன்றினாலும் துவங்கி விட்டேன்.)
வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டாலும் அவற்றிலிருந்து
தெள்ளி எடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெப்பொருள்
ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம்.
இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது இன்னொரு பெயர். உபநிஷதங்களில் உள்ள
கருத்துக்களையெல்லாம் தெளிவு பட வைக்கிறது பகவத் கீதை. பிரம்ம சூத்திரம்
உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகிய இம்மூன்று நூல்களும் பிரஸ்தானதிரயம் என்னும் பெயர்
பெறுகிறது. இந்து மத நூல்கள் எனும் கேள்வி எழும் இடத்தில் அவை பிரஸ்தானதிரயம்
என்று கூறலாம்.
பகவத் கீதை ஒரு கொலை நூல். அதைப் படிக்கலாகாது என்று
கூறுவோரும் உண்டு, எப்படியாவது எதையாவது பேசி அர்ஜுனனைப் போரில் புகுத்திவிட
வேண்டும் என்னும் நெருக்கடி நேரத்தில் கூறப் பட்டது கீதை. கொலை புரிதல்
பாதகர்களின் செயல். கொலை மறுத்தல் சமயக் கோட்பாடு. கொலை செய்வதும் கொலை மறுத்தலும்
ஒவ்வா. சமய நெறியினைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையாலும் தொடக்கூடாது என்பது
ஒரு வாதம். கீதை இக்கோட்பாட்டின் மூலத்தையே ஆராய்கிறது. இயற்கை முழுவதும் ஒரு
முடிவில்லாக் கொலைக் களம் என்கிறது கீதை. அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள்
நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும்
உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர்
உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை
அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர்
இறக்கிறது. உடலை உண்டுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள் படுகிறது.
சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப் படுகிறது..ஆக
படைத்தல் காத்தல் மறைத்தல் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. மரணத்தை உணர்ந்து
கொண்டால் மற்ற இரண்டும் எளிதாக விளங்கும்.
”இயற்கையைக் கொலைக் களன் என்றால் கீதையை கற்றுக் கொண்டே
ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்புவோர் கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள்
வந்தான பிறகு நீ கொலை செய்யாதிருக்க முடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி
நிற்காதே. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு எனும் போராட்டத்தை வெற்றிகரமாக
நிகழ்த்து.ஆயினும் அதனிடத்துப்பற்று வைக்காதே”. இயற்கை எனும் கொலைக்களத்தில் வாழ்வு
எனும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுவதற்கு பகவத் கீதை எனும் கொலை நூலை ஒவ்வொருவரும்
கற்க வேண்டியது அவசியம்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது கெட்டவர்கள் தோன்றி பெரிய
குழப்பத்தை கிளப்புவதற்கு கீதை ஆதரவு தருவது போல் தோன்றும் வெடிகுண்டு போட
முயலுபவருக்கு அது வெடி மருந்து போன்றது.கொல்லுபவன் கொலை
பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது.கருமம் மனிதனை பந்தப் படுத்தாது என்றும் அது
போதிக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்துவிட்டால்
என்னாவது என்பது கேள்வி.இவ்வாறு கீதையின் மீது ஆக்ஷேபம் கொண்டு வருவோர் உளர்.
(இதை எழுதும்போது என் நண்பன் ஒருவன் கூறியது நினைவுக்கு
வருகிறது. மனிதன் எந்தச் செயலைச் செய்தாலும் அது கீதையின்படி சரியே என்று justification செய்து தப்பித்துக் கொள்ள வழி இருக்கிறது என்பான்.)
கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கிறதா என்று வாசிப்பவர்கள்
தெரிந்து கொள்வது அவசியம். மதாச்சாரியர்களும் ,சமூகத்துக்கு நல்வாழ்வு
வழங்கியவர்களும் கீதா சாஸ்திரத்தைப் பின் பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான
போதனை உடையதாய் இருக்க முடியாது. அறிவிலிகள் ஒரு நூலை முழுவதுமாக அறிந்து கொள்ள
வில்லையானால் அது நூலின் குற்றமன்று. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக
சாஸ்திரத்தை கீழ் மக்கள் பொருள் படுத்துவார்களேயானால் அது அந்த சாஸ்திரத்தின்
குற்றமாகாது. பல்லாயிரம் மக்களுக்கு பரமார்த்திக வாழ்வுக்கு அது வழி
காட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதை செய்யவல்லது. புலனடக்கமும்
பக்தியும்தன்னலத் தியாகமும். தபசும் தொண்டும் புரிதலும் இல்லாத கீழ் மக்களுக்கு
கீதை உதவாது என்பது கோட்பாடு.
நல்ல கல்வி பெறல், நல்ல பயிற்சி பெறல் ராஜ்ஜியம் நிறுவுதல்,
திரவியம் தேடுதல்,போன்ற இம்மையில் இன்பமூட்டும் யாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர்.
நெருக்கடி நிலையில் செயலாற்ற அர்ஜுனன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படவில்லை.அவன்
அச்சுதனிடம் சிரேயஸ் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பிக்கிறான் அவனது மனநிலை
சிரேயஸைப் பெறுவதற்கு பண்பட்டிருந்தபோது கிருஷ்ணன் உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப்
புகட்டுகிறான் யோகமும் பக்தியும் ஞானமும் அடங்கப் பெற்றது சிரேயஸ்.. அது முக்தி
மார்க்கம்
பகவத் கீதையில் முதல் அத்தியாயத்தில் பகவானின் பேச்சு
ஒன்றுமில்லை.
இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களில் அவர் திருவாய்
மலர்ந்தருளுகிறார். வலிவு படைத்தவனே
வாழ்வுக்குரியவனென்பது கீதையின் கோட்பாடு.
மனிதனின் அறிவு எல்லாத் துறைகளிலும் வளர வளர வேறொரு
பேருண்மையும் உணரப் படுகிறது பரந்த அறிவு வளர வளர மேலும் அறிய வேண்டியது
அகண்டகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எதை அறிந்தால் அறிவு
பூர்த்தியாகும் அனைத்துக்கும் மூல காரணம் எது என்பதை சான்றோர்கள் அனுபூதியில்
உணர்ந்தனர். மூலதத்துவத்தை அறிந்த பின் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கிறது. மூலப்
பொருளைப் பற்றிய அறிவு பிரம்ம வித்தை என்று பெயர் பெறுகிறது. இந்த பிரம்ம
வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும் அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா பின்
வாங்குவதா என்று. இவ்ற்றில் ஒன்றைக் கூறுவதற்குப் பதில் பிரம்ம வித்தையை
எடுத்தியம்பினார். புது சந்தேகங்கள் பிறக்க இடமில்லாது அறவே அகற்றிவைப்பது சாலச்
சிறந்ததாகிறது.ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து
அளிக்கிறார்.
கீதையில் 18 அத்தியாயங்களில் உள்ள 18 யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடைத்து
வைக்கலாம்.கர்ம யோகம், ராஜயோகம், பக்தி யோகம்,மற்றும் ஞான யோகம் என்பவையே அவை.
ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகம் என்றும்,பிறகு ராஜயோகமாகப் பரிணமிக்கிறது என்றும்
அதிலிருந்து பக்தி யோகம் என்று ஓங்கி. இறுதியில் ஞான யோகமாக முற்றுப் பெறுகிறது
என்று பொருள் கொள்வது ஐதிகமாக வந்துள்ளது. இந்த நான்கினுள் வேற்றுமையோ தாரதம்யமோ
பாராட்டுகிற அறிகுறிகளைக் காண முடியாது.ஒரு யோகம் மற்றொன்றுக்கு முந்தியதுமல்ல
பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல. வாழ்க்கை எனும் ரதத்துக்கு அவர் நான்கு
யோகங்கள் எனும் குதிரைகளைப் பூட்டுகிறார். அவை வெண்குதிரைகளாக இருப்பது அவற்றின்
சாத்துவிக இயல்பையும் தூய்மைத் தன்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து
செலுத்துவதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும் நான்கு யோகங்களும் ஏக
காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப் படும்போது வாழ்க்கையின் ல்ட்சியம் இனிது
நிறைவேறுகிறது.
பகவத் கீதை மஹா வாக்கிய விளக்கமாக அமைந்திருக்கிறது மஹா
வாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்துமாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச்
சொல்கிறது. மஹாவாக்கியங்களுள் ஒன்று தத்
த்வம் அஸி
அதில் த்வம் –நீ, தத்-அதுவாக, அஸி-
இருக்கிறாய். என்று பொருள் படும்
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களும் த்ரிஷட்கம் அல்லது 3x6 என்று அறியப்படுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும் த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை,
அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம்
அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான
அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா
ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று
பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான
வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்.
பகவத் கீதைக்கு விளக்கங்கள் அல்லது பாஷ்யங்கள் எழுதியவர் பலர்.
அவற்றில் சில முரண்பாடுகள் இருக்கலாம் பாஷ்யக்காரர்களில் பெரும்பாலோர் அத்வைதம்
துவைதம் விசிஷ்டாத்துவைதம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருப்பர்.
கீதையின் தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவது அவர்கள் மனப்பான்மைக்கு ஏற்றபடி
மாறி வருகிறது. பகவத் கீதையை ஒரு கண்ணாடி என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷ்யமும்
அதில் தோன்றும் பிம்பம்போன்றது அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும்
தென்படுகிறது.கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது.அங்ஙனம்
ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக் கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்கியானம்
ஒன்றுக்கும் உதவாது. ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம்
எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய
பேச்செல்லாம்வெறும் பெயரளவில் என்றும்
கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது
புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை
பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப்
பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை
நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில்
அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும்
இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப்
பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன் உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள்
இருக்கின்றன. அவற்றை will, emotion,
cognition என்று
நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி
ஸ்வரூபிணியாக அன்னை பராசக்தியே எழுந்தருளி உள்ளார் என்பது கோட்பாடு. மனதில் இந்த
மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிர்தல் வேண்டும் அப்போதுதான் பண்பாடு
பூர்த்தியாகிறது. கீதா சாஸ்திரம் இவற்றை முறையாக இயம்புவதால் அது எல்லோருக்கும்
பொது நூலாகும்
. .
. இனி வரும் தொடர்களில் கீதையின் சுலோகங்களுக்கு தமிழில் பதவுரை போல் எழுத உள்ளேன். முதலில் தமிழில் transliterate செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் அதை என்னால் சரியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வித்தியாசமான பதிவு ஒரு வித்தியாசமான பதிவரிடமிருந்து.... பார்ப்போம் வரவேற்பு எப்படி என்று.
….
.
.
,