வாழ்வின் விளிம்பில் ஒரு விமரிசனக் கோர்வை
-----------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------
நான்
வாழ்வின் விளிம்பில் என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பை 2013-ம் ஆண்டு இறுதி வாக்கில்
வெளியிட்டேன் அத்தொகுப்பிற்கு திரு தஞ்சாவூர் கவிராயர் அணிந்துரையும் , ஹரணி என்று
அறியப்படும் முனைவர் க. அன்பழகன்
பேராசிரியர் , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் வாழ்த்துரையும் எழுதி இருந்தார்கள்.
ஒரு கதாசிரியனுக்கு தான் எழுதியது
பரவலாகப் படிக்கப் பட்டு வருகிறது,
இருக்கிறது என்னும் செய்தியே மகிழ்ச்சிதரும்
என்னுடைய இந்தக்கதை தொகுப்பு பலராலும் படிக்கப் பட்டு
விமரிசனமும் செய்யப் பட்டிருக்கிறது திரு
கரந்தை ஜெயக்குமார், திரு தி.தமிழ் இளங்கோ,
முனைவர் ஜம்புலிங்கம், திரு பரிவை குமார். திரு கில்லர்ஜி. திருமதி பானுமதி
வெங்கடேஸ்வரன் , திருமதி கீதா மதிவாணன் திரு மோகன் குருமூர்த்தி,போன்றோர்
குறிப்பிடத்தக்கவர் இதில் திரு மோகன் ஜி விமரிசனத்தைத் தன் தளத்தில்
வெளியிடுவதாகக் கூறி இருக்கிறார் சில விமரிசனப் பகுதிகளை உங்களுடன் பகிர்கிறேன்
திரு தமிழ் இளங்கோ
சமுதாயத்தில் வெளிப்படையாக சொல்ல முடியாத ஆனால் உள்ளுக்குள்
நடக்கும் சில உறவுச் சிக்கல்களை நூலிழை போல் தொட்டுச் செல்வார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். (உதாரணத்திற்கு அவர் எழுதிய
“அம்மா வந்தாள்” ) எழுத்தாளர் சாவியும் இதுபோல் (உதாரணம் “ வேத வித்து ”) எழுதி இருக்கிறார். ஆனால் கவிஞர் கண்ணதாசன்
இது போன்ற சமச்சாரங்களை “அரங்கமும் அந்தரங்கமும்” என்ற நாவலில் படாரென்று போட்டு உடைப்பார். திரைப்படங்களில் இயக்குநர்
கோபாலகிருஷ்ணனின் “சாரதா” மற்றும் இயக்குநர் பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” படங்களைச் சொல்லலாம்.
நமது G.M.B அவர்களுக்கும் உள்ளுக்குள் போட்டு உடைப்பது பிடிக்கவில்லை
போலிருக்கிறது. அவரும் இது மாதிரியான உறவுச் சிக்கல்களை கவிஞர் கண்ணதாசன் போல்
போட்டு உடைக்கிறார் நூல் முழுக்கதான் பட்டறிந்தஅனுபவங்களைக் கதையாகவும்
அல்லாமல்கட்டுரையாகவும் இல்லாமல்புதுமையான வெளிப்பாடாகச் சொல்லி இருக்கிறார் சில
மேற்கோள்கள்
குழந்தை பெறுவதோ, முடியாமல்
போவதோ, உடல்
சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் எதுவும் செய்ய முடியாது. (பக்கம் 23)
நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்து விட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்த பலனும்
இல்லை. (பக்கம் – 33)
எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக
என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார விரதம், காரடையான் நோன்பு, ரக்ஷ
பந்தன், இத்தியாதி
இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்ட ஏதாவது செய்கிறார்களா என்ன.?
(பக்கம் – 93)
திரு கரந்தை ஜெயக்குமார்
இவற்றில் எழுதியவை எல்லாம்கதைகள் அல்ல வாழ்வின்
யதார்த்தங்கள்
மனித வாழ்க்கையே விசித்திரமானது. அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல், வியாதியால் நலிவுற்று, யாரும் உதவ இல்லாமல், அனாதையாய் ஆறுதலற்றுக் கிடக்கும் ஜீவன்களும் வாழத்தான் ஆசைப்படுகின்றன.... இல்லை.... சாவைக் கண்டு பயப்படுகின்றன.
ஆலய வழிபாடுகளும், ஆண்டவன் தரிசனமும் மகப்பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால், அந்த பாக்கியம் இல்லாதவர்களே இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை எது என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையும், திருத்த முடியாத குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும் இருப்பதில்லை.
பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க
உன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
எனப்பாடும் பாவேந்தரின் வழி நின்று, பொதுமக்கள் நலம் நாடி, புதுக் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லவும், எழுதவும் ஜி.எம்.பி.,ஐயா அவர்களை வாழ்த்துவோமா நண்பர்களே?
டாக்டர்
ஜம்புலிங்கம்
பகுத்தறிவு
என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை....."
(ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன. அன்றாடம்
நாம் எதிர்கொள்வன.
கதை கதையாக இருந்துவிட்டால் அதில் விறுவிறுப்பு ஏது? அவ்வாறே வாழ்க்கை வாழ்க்கையாக அமைந்துவிட்டாலும்தான். ஏற்றஇறக்கங்கள், இன்ப துன்பங்கள் என்ற நிலைகளில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்பது எண்ணிலடங்கா. சில நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கும். சில நிகழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது. என்ற நிலையில் அவருடைய சிறுகதைகள் உள்ளன.
"ரங்கசாமிக்கு சாவைக் கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன...? நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும்? செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?.... " (ப.7) என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொள்ள உள்ளவர் கொள்ளும் மன நிலையை நம் முன் கொணர்கிறார்.
திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்
உங்களுடைய 'வாழ்வின் விளிம்பில்' சிறுகதை தொகுப்பினை படித்தேன். அதற்கு அணிந்துரை அளித்திருக்கும் திரு. தஞ்சாவூர் கவிராயனின் கருத்துக்களோடு என் கருத்தும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. இருந்தாலும் என்னுடைய கருத்துகளையும் எழுதுகிறேன்.
உங்களுக்கென்று ஒரு பாணி வகுத்துக் கொள்ளததாலோ என்னோவோ சில கதைகள் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் நடையோடும், சில கதைகள் அமைச்சூர் தனமாகவும் இருக்கின்றன. இறுதிப் படுக்கையில் இருக்கும் ஒருவனின் என்ன ஓட்டமாக இருக்கும் வாழ்வின் விளிம்பில் கதையின் சொல்லாடல் வியக்க வைக்கிறது. 'வாழ்கை ஒரு சக்கரமும்' 'லக்ஷ்மி கல்யாண வைபோகமும்' இன்னும் சிறப்பாக எழுதப் பட்டிருக்கலாம். இரண்டிலுமே ஒரு சிறு கதைக்கான அத்தனையும்(ஒரு தொடக்கம், ஒருசிக்கல், ஒரு முடிவு) இருந்தாலும் அவை சரியாக பயன் படுத்தப் படாமல் வெறும் கமெண்டரி போல எழுதப் பட்டிருப்பது ஒரு குறை
இப்படியும் ஒரு கதையில் தீர்வில்லாத ஒரு தீர்வினை சொல்லி இருக்கிறீர்கள். இருந்தாலும் அப்போதைய சமூக அவலத்தின் மீது உங்களுக்கிருக்கும் கோபம் புரிகிறது
கில்லர்ஜி
எம்மை
ஈர்த்த ஐயாவின் பொன் வரிகள்
”எந்த
எண்ணம் வரக்கூடாதோ அந்த எண்ணம்தானே வரும்
அதுதான் மனித மனம் “
“அறிவுக்கும்
உணர்வுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு
தோற்று உணர்வுதான் வெல்லும் இது எப்போதைக்கும் பொருந்தும்”
“நிலையான
வருமானம் இல்லாதவனுக்கு பணம் கொடுப்பதைவிட நிலையான வருமானத்துக்கு வழி செய்வதே சிறந்தது”
“வாழ்க்கையில்
முன்னேறத் துடிப்பு உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் தடைக்கற்கள் அல்ல படிக்கட்டுகளே’
‘எப்பவுமே
ஆண்களைச் சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ
செய்கிறார்கள் சோமவார விரதம் காரடையான் நோன்பு, ரக்ஷ பந்தன் இத்தியாதி
இத்தியாதி.ஆனால் இந்த ஆண்கள் பெண்கள் நலம் வேண்டி ஏதாவது செய்கிறார்களா.?”
“
குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப்
பஞ்சமா?”
“
வாழ்க்கையில் வேறு பெண்ணை நினைத்திருக்கிறீர்களா?
”என்
மனம் ஒரு ஃபில்ம் நெகடிவ் போன்றது. ஒரு முறைதான்
எக்ஸ்போஸ் ஆகும் நீதான் எக்ஸ்போசான அந்தப் படம்”
“
என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு விளையாடுகிறார்கள் என்று
சொன்னால் அது நிதரிசனத்தை உணர்த்துவது போலாகும்”
பரிவை
சே குமார்
மொத்தம் 16 கதைகள், ஊரில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்று வாழ்த்துவார்களே அப்படி முத்தான பெருவாழ்வை அளிக்கும் அழகிய கதைகள் பதினாறை வாழ்வின் விளிம்பில் என்ற தலைப்பின் கீழ் கொடுத்திருக்கிறார்கள். இனி கதைகள் பேசும் வாழ்க்கையில் இருந்து சில வரிகள் நீங்க வாசிக்க.
சாக பயமாக இருக்கிறதா?"
"பயமா... நிச்சயமாகத் தெரியவில்லை. இறந்து போனால் மறுபடியும் என் மனைவி மக்கள் உற்றார் சுற்றார் இவர்களை எல்லாம் பார்க்க முடியாதே. அவர்கள் அன்பினைக் கொடுத்து அன்பினைப் பெற முடியாதே.... அட... நீ இருந்தால் அல்லவா கொடுக்கவோ பெறவோ முடியும்... நீயே இல்லாவிட்டால் என்னாகும்... இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்...?" தொடர்ந்து வாசிக்கும் போது அவன் இறப்பைக் கண்டு பயந்தானா இல்லை இறந்தானா என்பதை அறியலாம்.
"கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ முடியாமல் போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் ஏதுவும் செய்ய முடியாது." என குழந்தைப் வேண்டி போலிச் சாமிகளின் அடியொற்றிப் போகும் மூடர்களைப் பற்றி கேள்விகளே பதிலாய் என்னும் கதை பேசிக் கொண்டு போகிறது.
கீத
மஞ்சரி
திருமதி
கீதா மதிவாணன் இந்தநூலை விமரிசனம் செய்து எழுதி இருக்கிறார் விமரிசன வித்தகி என்று
புகழப்படும் இவர் எழுதியவற்றில் மிகச்
சிலவற்றையே பகிர்கிறேன் முழு விமரிசனமும்
காண இங்கே சொடுக்கவும்
சம்பவங்களைப் பின்னிக் கதையாக்கி வாசகரை ஈர்ப்பது ஒரு யுக்தி.இது
பெரும்பாலான கதைகளில் பின் பற்றப் படும் யுக்தி. சம்பவங்களைப் பிரதானப் படுத்தாமல்
அதன் பின்னணியில் இருக்கும் உணர்வுகளைப்
பதிவு செய்வதன் மூலம் வாசகரை தன் உணர்வோட்டத்துக்கு இணையாக அழைத்துச் செல்வது
இன்னொரு யுக்தி ஜீஎம்பி ஐயாவின் கதைகளில் பெரும்பாலும் இந்த இரண்டாவது யுக்தியே
கையாளப் பட்டிருப்பது சிறப்பு.
இத்தொகுப்பில்
இடம் பெற்றுள்ளவற்றை சிறுகதைகள் என்பதை விடவும் வாழ்க்கை அனுபவஞ்சார்ந்த புனைவுகள்
உள்ளத்தின் உள்ளாடும் எண்ணங்களின்
பகிர்வுகள்அவர் அறிந்து சந்தித்த பழகிய மனங்களின் வினோத
வெளிப்பாடுகள்கற்பனைகளின் கலந்துருவாக்கம்
இப்படிப் பலவும் சொல்லலாம்
(நிகழ இருக்கும் புதுகை வலைப்பதிவர் விழாவில் பதிவர்கள் எழுதிய நூல்களை அங்கு நிறுவப்படும் புத்தக ஸ்டால்களில் விற்பனைக்கு வைக்கலாம் என்று அறிகிறேன் என் இந்தப் புத்தகத்தொகுப்பைப் படிக்க விருப்புபவர்கள் பலர் இருப்பதைப் பின்னூட்டங்கள் மூலம் அறிகிறேன் அவர்களுக்கு இந்த நூலைப் பெற ஒரு வாய்ப்பாக நான் சில புத்தகங்களைக் கொண்டுவர இருக்கிறேன்)