சுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2013

என்னென்னவோ நினைவுகள்....


                            என்னென்னவோ நினைவுகள்.
                            ------------------------------------------



எனக்கு என்னாயிற்று.?எதிலும் மனம் செலுத்த முடிவதில்லை. நினைவுகளில் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு நேற்றைய நினைவுகள் சுகமாயிருப்பது போல் அல்லாமல் நாளைய நினைவுகள் சுமையாய் தெரிகிறதே. நாளை தினம் பற்றி நான் பொதுவாகக் கவலைப் படுவதில்லை. உடல் சோர்ந்து இருந்த போதும் மனம் சோர்ந்து இருந்ததில்லை

உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!

செய்யாத குற்றம் என்னும் பதிவுக்கு ஜீவி அவர்கள் பின்னூட்டத்தில் இவ்வாறு எழுதி இருந்தார் நினைவுக்கு வருகிறது. இருந்தாற்போல் இருந்து இரண்டு வினாடிகள் நான் எங்கோ இழுத்துச் செல்லப் படுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று திமிறிக் கொண்டு சுய நினைவுக்கு வந்தபோது உடல் மிகவும் சோர்வுற்றிருந்தது. ஒரு வேளை என்னால் அப்படித் திமிறி வர முடியாமல் போயிருந்தால்....................!.

நானென்ன நசிகேதனா.? அதற்குப் பின்னால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள.?அவனை முன் வைத்து இப்புவியில் நாமெப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்த நம் முன்னோர்கள் சொல்லிப் போன உபனிஷத் கதை அல்லவா அது.? நான் மறைந்தபின் என்னாவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியும். .முன்பே எழுதி இருக்கிறேன். பேரினை நீக்கி பிணமென்று சொல்லி பாடையில் ஏற்றி புதைக்கவோ எரிக்கவோ செய்வார்கள். நானும் என் அப்பன் அவனுக்கப்பன் போல நினைவாக மாறி விடுவேன். இப்போது எனக்கு அது பற்றி சிந்தையில்லை. இருக்கும்போதுயாருக்கும் பாரமில்லாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?. என் உடல் நலம் பேணுவதும் நலமாய் இருப்பதும் முற்றிலும் என் கையிலா இருக்கிறது.?என்னென்னவோ எழுதத் தூண்டுகிறது. ஆனால் எண்ணங்கள்தான் கோர்வையாக வருவதில்லை. ஆகவே அன்று ஒரு முறை எழுதியதை மீள் பதிவாக்குகிறேன்.

எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

       அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

         அந்த நாள் அக்குயவன் கை
     
  ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன் தானே நீ.?

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
    என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
        
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.

         மூ டிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் நீ  என்னில் எண்ணச் சிறகடிப்பாயே