ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..! --------------------
![]() |
| பிறந்த நாள் கேக்...! |
கடந்து வந்த நாட்களை அசை போடுவது எனக்கு மட்டுமல்ல,
எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுதான். சிறு வயதில்
ஓடியாடிய இடங்கள், இருந்து வளர்ந்த வீடு சென்று வந்த பள்ளிக்கூடம் எல்லாமே
நினைவில் ஆடும். என் நினைவுகளை அவ்வப்போது வலையில் பகிர்ந்து வந்திருக்கிறேன் .
என் மனைவிக்கும் அம்மாதிரி நினைவுகள் வருவதில் வியப்பேதுமில்லையே. நான் படித்த
பள்ளி இருந்த இடம் இவற்றுக்கெல்லாம் அவளையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன்.
விருப்பம் இருந்ததோ இல்லையோ என் உடன் வந்திருக்கிறாள். என் உணர்வுகளை முதலில்
அவளுடன்தான் பகிர்வது வழக்கம் ஆகவே அவளுக்கும் அவள் படித்த பள்ளிக்கும் அதைச்
சுற்றிலும் இருக்கும் இடங்களைப் பார்க்கவும் விருப்பம் தெரிவித்தபோது நான் ரெடி
என்றேன். ஆனால் நான் கூட வருவதில் அவளுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று
தெரிந்தது. எனக்குப் பதில் அவளது மூத்த சகோதரியுடன் போகவே விரும்பினாள். மூத்த
சகோதரிதான் என்றாலும் எதோ காரணத்த்தால் ஒன்றாகவே ஒரே வகுப்பில் படித்து ஏறத்தாழ
நண்பிகளாகவே வளர்ந்திருந்தனர்.
ஜூலை இரண்டாம் நாள் அவளது சகோதரியின் பிறந்த நாள். ஜூலை
மூன்றாம் நாள் என் மனைவியின் பிறந்த நாள். எனக்கு இந்த ஒரு நாள் வித்தியாசம் சற்றே
வியப்பளிக்கிறது. பிறந்த நாள் என்று அவர்கள் சர்டிஃபிகேட்களில் உள்ளதுதானே
செல்லுபடியாகும். இந்தமாதத்தில் ஜூலை
இரண்டாம்நாள் அக்கா தங்கையைப் பார்க்க ஒரு திட்டத்தோடு வந்திருந்தாள். என்னைத்
தவிர்த்துவிட்டு அவர்கள் கடந்த கால வாழ்க்கையை அசை போட விரும்பி வந்திருந்தாள். எனக்கு
எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை குறைக்க நான்
விரும்பவில்லை. இரண்டாம் தேதி அக்காள் வருகிறாள் என்றவுடன் தங்கைக்கு கையும்
ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று
விரும்பினாள். முன்பே தன் ஆசையைத் தெரிவித்திருந்தால் நானே ஒரு கேக்
செய்திருப்பேனே என்றேன். இருப்பது நாங்கள் இருவர். வருவது அக்காவும் அவரது மகளும்
என்று தெரிந்தது.என் மனைவியே கடைக்குப் போய் ஒரு சிறிய கேக் வாங்கி வந்தாள். பின்
என்ன. விளக்கேற்றி HAPPY BIRTH
DAY பாட கேக் வெட்டப்பட்டது. சகோதரிகள்
இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறந்த நாள் பரிசாக சென்ற முறை சிதம்பரம் சென்றிருந்தபோது
வாங்கி இருந்த ஒரு கண்ணாடி மணியும் ( பூஜை மணி) ஒரு சிறிய பிள்ளையார் சிலையும்
கொடுத்தாள். அப்போது எடுத்த புகைப் படத்தில் அவர்கள் மகிழ்ச்சி வெளிப்படுவது
நன்றாகவே தெரிகிறது. இதுவரை நடந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அதன் பின்
அவர்கள் சிறுவயதில் படித்த பள்ளிக்குச் சென்று வந்தது புகைப்படக் காட்சியாகவே.
என்னென்ன நினைவுகள் பகிர்ந்து கொள்ளப் பட்டனவோ தெரியாது. நிச்சயமாக
மகிழ்ச்சியானதாகத்தான் இருக்க வேண்டும் இந்த வயதிலும் குழந்தைகள்போல் மகிழ்ச்சியாக
ஒரு நாள் அமைந்ததில் எனக்கும் சந்தோஷமே.
![]() |
| சகோதரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் |

