பயணம் அனுபவம் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் அனுபவம் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3



 பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3
----------------------------------------------------------------
( இந்த பதிவுத் தொடரின் முந்தைய பதிவுகளில் வெளியிட்ட புகைப் படங்கள் திறக்க வில்லை என்று பின்னூட்டங்களில் பலரும் எழுதி இருந்தனர். அவற்றை சரி செய்துவிட்டேன். இப்போது எந்த பிரச்சனையுமிருக்காது என்று நம்புகிறேன் சரி செய்ய உதவிய திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள். இப்போது படங்களைக் காண வாரீர்.)


சென்னைக்கு வந்தால் என் மனைவிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அவசியம் செல்ல வேண்டும் சுவாமி தரிசனம் முடிந்து அருகில் இருக்கும் கிரி ட்ரேடிங் கடைக்குப் போனோம். கைக்கு அடக்கமான சிறு சுலோக புத்தகங்கள் அவளுக்கும்  பிறருக்குக் கொடுக்கவும் வேண்டும். அவள் புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் வில்லிபுத்தூராரின் பாரதம் கிடைக்குமா என்று கேட்டேன். இருக்கிறது என்று கூறி தலையணை சைசில் நான்கு புத்தகங்கள் காண்பித்தார்கள். அவற்றின் விலையைக் கேட்டதும் எனக்கு தலையை சுற்றாத குறைதான் அந்த விலை கொடுத்துப் புத்தகம் வாங்கும் நிலையில் நான் இல்லை. தேவை என்றும் படவில்லை.

நாங்கள் மயிலையில் இருக்கும்போது திரு. இராய.செல்லப்பா அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் மதியம் மூன்று மணி அளவில் வீட்டில் இருப்போமா என்றுகேட்டார். அவரும் அவரது துணைவியாரும் எங்களை சந்திக்க வந்தனர். சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 40-கி.மீ. தூரத்தில் இருப்பதாக என் பதிவின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அவ்வளவு தூரத்திலிருந்து வருவது சிரமம் என்று எனக்குத் தோன்றியதால் , அவர் சந்திக்க வருவதாகக் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது பதிவுகளைப் படித்தபோது எனக்கிருந்த எண்ணங்களுக்கு மாறாக எளிமையாய் இருந்தார். அவர் எழுதி இருந்த ஒரு கவிதைத் தொகுப்பினை எனக்குக் கொடுத்தார். “இனிமைக்கவிஞர் என்று அறியப்பட்டவர் என்று தெரிந்தது. அவர் புது டெல்லியில் இருந்தபோது பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் விழா எடுத்தபோது எழுதிய கவிதைகளின் தொகுப்பை எட்டைய புரத்து மீசைக்காரன் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருந்ததைக் கொடுத்தார். கவிதை எழுதி வாசித்தால் கவிஞனுக்கு என்ன கிடைக்கும்  என்று கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார்
n       வந்துபோக வாகனம் இருந்தால் கொண்டு போகதுண்டுகிடைக்கலாம் (எதற்கும் அந்தஸ்து வேண்டாமா?)
n       மணிவிழா நடத்தி மலர் வெளியிட்டால்,மாலை கிடைக்கலாம். அதுவும் மாலையில் நடந்தால் மட்டுமே கிடைக்கும் ( மாலை, மாலையிலன்றோ மலிவு)
n       அரங்கம் அமைத்து அழைப்பிதழ் அச்சிட்டுவிழா நடத்தும் பெரியோர்தம்மை உரிய சொற்களால் ஓங்கிப்புகழ்ந்தால் அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்கலாம். மற்றபடி கவிஞனுக்கு என்ன கிடைக்கும்.?
திருமதி செல்லப்பா கருவேலி V.கிருஷ்ணமூர்த்திக்கு உறவு என்று தெரிந்தது.. அப்படியானால் ஒருவேளை திருச்சி பதிவர் திருமதி. கீதா சாம்பசிவத்துக்கும் உறவாயிருக்கலாமோ.?
நாங்களே என் மகன் வீட்டில் தங்கி இருந்தோம். என் மகன் டூரில் இருந்தான். அந்த நிலையில் அவர்களுக்கு சரியாக விருந்தோம்பி உபசரிக்க முடியவில்லை.  என் காமிராவிலும் சார்ஜ் தீர்ந்து போனதால் படம் எடுக்க முடியவில்லை. அவரது காமிராவில் எடுத்த சில படங்களை அனுப்பிக் கொடுத்தார் அவற்றில் சிலகீழே. “ வாழ்வின் விளிம்பில்” கதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவர்களுக்குக் கொடுத்தேன்.

நானும் திரு.செல்லப்பாவும்
திருமதி&திரு.செல்லப்பா எங்களுடன்



அவர்கள் சென்ற பிறகு என்னைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்த நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்.யாரும் வரவில்லை.முகப்பேரிலிருந்து என் தம்பி வந்தான்.அவனுக்கு நாங்கள் அவன் வீட்டுக்கு வரவில்லை என்று வருத்தம் பதிவுலக நண்பர்களை சந்திக்க வேளச்சேரிசௌகரியமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம் 
 அடுத்த நாள் (15-ம் தேதி) நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத இளைய பெண் பதிவர் மைத்துளிகள் மாதங்கி அவரது தந்தையார் திரு மகாலிங்கத்துடன் வந்தார். இன்னும் சில நண்பர்கள் சந்திக்க வருகிறார்கள் என்று கூறினேன். செல்வி மாதங்கி என் பதிவுகளுக்கு அடிக்கடி வருபவர். அவரது தந்தை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர் என்று தெரியும் கோவிலில் கடவுளின் உருவத்தை சரியாக தரிசிக்க முடியவில்லையே என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதற்கு பின்னூட்டம் எழுதி இருந்த மாதங்கியிடம் எனக்கு ஒரு மதிப்பே ஏற்பட்டு விட்டது. பல கலைகளில் ( விசேஷமாக சங்கீதத்தில்) ஆர்வம் கொண்டவர். புத்திசாலி அவர் எங்களைத் தேடி வந்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திரு .மகாலிங்கம் அவர்கள். ஒரு தேர்ந்த வாசகர்(avid reader). என்னுடைய பல பதிவுகளை நினைவில் வைத்துக் கொண்டு பேசினார் அண்மையில் நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவை சிலாகித்துப் பேசினார். மாதங்கி எடுத்து அனுப்பி இருந்த புகைப்படம் கீழே. 

 அவர்களுக்கும் “ வாழ்வின் விளிம்பில்ஒரு பிரதியைக் கொடுத்தேன்.ஐடி கம்பனி வேலையில் இருந்தவர், தற்போது ஒரு பாங்கில் அதிகாரியாக இருக்கிறார்.திரு. மகாலிங்கம் தஞ்சை கவிராயருக்கு அறிமுகமானவர் என்று தெரிந்தது. அவர் தான் ஒரு பதிவராக இல்லாவிட்டாலும் பலருடைய பதிவுகளைப் படிக்கிறார். திரு.நடன சபாபதி அவர்களுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் அவரது வலைக்குச் செல்ல வேண்டும்


.  
வருவதாகக் கூறியிருந்த நண்பர்கள் வராததால் சிறிது நேரத்துக்குப் பிறகு மாதங்கியும் அவரது தந்தையும் இரு சக்கர வாகனத்தில் மாதங்கி ஓட்ட மேற்கு மாம்பலம் சென்றனர்.வருவதாகச் சொன்ன பதிவர்கள் அடுத்த நாள் நான் ஊருக்குப் போகுமுன் வந்து பார்ப்பதாகச் செய்தி வரவே, அடுத்த நாளுக்காகக் காத்திருந்தோம். 
ஆனால் அடுத்த நாள் (16-ம்தேதி) என் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நட்பாயும் தொடர்பிலும் இருக்கும் நண்பர் ஒருவர் வந்திருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் என் பதிப்புகளைப் புத்தகமாக்கத் தூண்டியவரே இவர்தான். முதலில் என் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து கூறினார். என் புத்தகங்களை அவரது தமிழ் அறிந்த நட்புகளுக்கு அறிமுகப் படுத்துவதாகக் கூறி பத்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டபோது சில பொது நண்பர்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்படி ஒரு நண்பரைப் பார்க்க எங்களை அவரது காரில் கூட்டிக்கொண்டு போனார். அவர்களுக்கும் என் புத்தகம் பற்றி அறிந்தபோது மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பு முடிந்து எங்களை வீட்டில் சேர்த்துவிட்டு அவர் திரும்பினார். வருவதாகச் சொன்ன நண்பர்கள் கடைசிவரை வரவே இல்லை. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ வர முடியவில்லை. 
இப்போது மீண்டும் இப்பதிவுத் தொகுப்பு எழுதும் முன் எழுதி இருந்ததை நினைவு கூறுகிறேன். நான் சரியாகத் திட்ட மிடாததால் காஞ்சியில் எல்லாக் கோயில்களுக்கும் போக முடியவில்லை. சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவில் எழுதியதோடு அல்லாமல் நான் யார் யாரை சந்திக்க முடியும் என்பதை சிந்திக்கவில்லை. யார் யார் சென்னை வாசிகள் அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சரியாகத் திட்ட மிடாததால் சந்திப்பு என்னும் அறுவடை திருப்தியாக இருக்கவில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொல் கேட்டிருக்கிறேன்
“ IT IS SAID THAT GOOD JUDGEMENT COMES FROM EXPERIENCE AND EXPERIENCE YOU GET FROM BAD JUDGEMENTS"           

புதன், 20 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்-1


 பயண அனுபவங்களும்  சில சந்திப்புகளும்--1
-----------------------------------------------------------------



திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நான் கற்றபாடம். எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் கூறும் அறிவுரை.சில நேரங்களில் திட்டமிடும்போது சிலவிஷயங்கள் சரியாக கணிக்கப் படாததால் திட்டமிட்டுச் செய்த வேலைகளும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதில்லை சென்னைக்கு நான் சென்று வருவதே அரிதாகிக் கொண்டிருக்கும்போது திட்டங்களில் சில குறைபாடுகள் (?) இருந்ததால் விளைவுகள் சரியாக அறுவடையாகவில்லை
.
12-ம் தேதி  பெங்களூரில் இருந்து டபிள் டெக்கர் தொடர்வண்டியில் பயணப் பட்டு இரவு எட்டே முக்கால் மணிக்கு சென்னை வந்தடைந்தோம். குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத்தின் அனுபவங்கள் பலவற்றை இழக்க நேரிடுகிறது. தொடர் வண்டியின் ‘கட, கடாசப்தமும் பிரயாணிகளின் பேச்சுச் சப்தமும் கேட்க வழியின்றி ஏதோ கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு. நாங்கள் நலமாகப் பயணப்பட வேண்டும் என்ற அதீத அன்பின் விளைவாக குளிரூட்டப்பட்ட வண்டிப் பயணம். சென்னையில் என் மைத்துனன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றான்.
அடுத்த நாள் 13-ம் தேதி ஊரப்பாக்கத்தில் வசிக்கும் தஞ்சாவூர்க் கவிராயரைப் பார்த்து பிறகு காஞ்சீவரம் கோவில்களுக்குச் செல்ல முதலில் திட்டமிட்டபடி வாடகைக் காரை என் மகன் ஏற்பாடு செய்திருந்தான். காலை ஒன்பது மணி சுமாருக்குப் புறப்படலாமென்று திட்டம் அதன்படி.முதலில் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து கவிராயரைச் சந்தித்துவிட்டுக் கோவில்களுக்குச் செல்லலாம் என்றால் , நாங்கள் காஞ்சீவரம் செல்வதற்குள் கோவில்கள் நடை சாத்திவிடுவார்கள் என்னும் ஞானோதயம் அப்போது ஏற்பட்டு முதலில் கோவில் தரிசனம் பிறகு கவிராயர் சந்திப்பு என்று நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப் பட்டுகாலை ஒன்பது மணி அளவில் காஞ்சீவரம் பயணப் பட்டோம்.இந்த ஞானோதயம் முன்பே ஏற்பட்டிருந்தால் இன்னும் முன்பே கிளம்பி, எல்லாக் கோவில்களுக்கும் சென்று இருக்க முடியும்

சென்னையில் இருந்து செல்லும்போது முதலில் எதிர்படும் ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவிலுக்குச் சென்றோம். சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் கோவிலை அடைந்தோம். முதலில் பெருந்தேவியார்  பிறகு ஸ்வாமி தரிசனம் அதன் பிறகு வெளியில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தில் இருக்கும் சிற்ப தரிசனம் என்று திட்டப்படி போனோம். நாங்கள் இதற்கு முன்பே காஞ்சீவரம் மூன்று நான்கு முறை போயிருக்கிறோம் என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது என்பது இயலாததாகி விடுகிறது. கோவிலில் அநேக ஓவியங்கள் உருக்குலைந்து போய் இருப்பதைப் பார்க்கும் போது மனம் கனமாகிறது மக்களுக்கு சிரத்தை இல்லையா, பராமரிப்பு போதாதா என்னும் கேள்விகள் மனசைக் குடைகிறது. ஸ்வாமியைத் தரிசிக்கப் போகும் படிகளில் உலோகப் பதிப்பு கால்களுக்கு அக்யுப்ரெஷர் தரும் வகையில் இருக்கிறது. இப்போதெல்லாம் கைப் பிடிப்பு இல்லாமல் படிகள் ஏறுவது சிரமமாயிருக்கிறது. நல்ல வேளை அங்கு ரெயிலிங் இருந்தது. ஆண்டவன் தரிசனம் கட்டணம் கொடுக்காமல் கிடைத்தாலும் தங்கப் பல்லி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பல்லியை ஏற்கனவே கண்டிருப்பதால் நாங்கள் போக வில்லை. எனக்குப் பழைய கோவில்களைக் காணும்போது என்னை அறியாமல் காலச் சக்கரம் ஏறி பின்னோக்கிப் பயணித்து அந்தக் கால சூழ் நிலையை கற்பனை செய்வது பழக்கமாகப் போய் விட்டது. மின்சாரம் இல்லாத அந்தக் காலங்களில் இம்மாதிரிக் கோவில்களில் வெளிச்சம் ஏற்படுத்த தீபங்கள் ஏற்ற வேண்டி அதற்காக பொது மக்கள் எண்ணை 


கொடுக்கும் முறை இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கும் பல கோவில்களில் ஆண்டவன் கருவறையை இருட்டில் வைத்திருக்கும் நிலையை சீரணிக்க முடியவில்லை. தீப ஆராதனையின் போது அந்த சிறு ஒளியில் தரிசனம் செய்வது சிலாக்கியமாகக் கருதப் படுகிறது.ஆனால் இந்தக் கோவில்கள் பண்டையக் கலாச்சாரத்தின் மிச்சங்களை பறை சாற்றுகிறது என்பது மறுக்க முடியாதது.

கோவிலில் பிரசாதம் என்று விற்பனையாகும்  புளியோதரை , பொங்கல் என்று வாங்கி உண்டு பசியை அடைத்தோம்

வெளியில் இருக்கும் நூற்றுக் கால் மண்டபம் அழகான சிற்ப கூடமாக இருக்கிறது.முன்பு வந்தபோதும் கூட வந்தவர்களுக்கு அதில் நாட்டமில்லாததால் கவனம் செலுத்த முடியவில்லை.இந்த முறை ஓரளவு நிதானமாக ( still running against time) பார்வையிட்டேன். சில புகைப் படங்களும் எடுத்தோம்.
DSC02083.JPG
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் கோபுரம் விஷ்ணு காஞ்சி
  
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் நூற்றுக்கால் மண்டபம்

நூற்றுக்கால் மண்டபத்துள்


நூற்றுக்கால் மண்டபத்துள்

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் முன்

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்

ஸ்ரீஏகாமபரேஸ்வரர் கோவிலில் ஓவியம்

கைலாசநாதர் கோவில் சுற்றில்
கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர்கோவில் சுற்றில் கிளி ( தபஸ்/.?)






அங்கிருந்து ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.நேரம் பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே போனால் அன்னைக்குப் பூஜை நடந்து கொண்டிருக்க பெரிய வரிசையின் பின்னால் நின்று கொண்டோம்.அப்போது பார்த்து ஏன்தான் சில தவிர்க்க வேண்டிய நினைவுகள் வந்ததோ? தினசரியில் 27-ம் தேதி காஞ்சி ஸ்ரீஜெயேந்திரர் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என்று படித்தது என்னென்னவோ எண்ணங்களைக் கிளறிவிட்டது .மஹாப் பெரியவர் இருந்த இடத்தில் இருப்பவர் சந்தேகங்களுக்கு அப்பால் அல்லவா இருக்க வேண்டும். “ஹூம்”என்று பெருமூச்சுதான் வந்தது.

முன்பே இங்கு வந்து போனபோது அம்மன் சந்நதிக்கு நேர் எதிரே இருந்த மண்டபத்தில் நின்று தரிசிக்க முடியும் என்று தெரிந்ததால் அங்கு போய் காத்திருந்தோம். என் மனைவிக்கு இந்த நேரம் சுலோகங்கள் சொல்ல ஏதுவாயிருந்தது. அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த என் கண்ணில் சன்னதி வாசலின் மேலே எழுதி இருந்த பாடல் கவனத்தை ஈர்த்தது. சும்மா இருந்த வேளையில் அந்தப் பாடலை எழுதி எடுத்துக் கொண்டேன் அதனைக் கீழே காணலாம்.

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம்
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! 

அன்னையின்  தரிசனம் முடிந்து வெளியில் வரும்போது மணி ஒன்றைத் தாண்டி இருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் மூடியிருக்க  எல்லாக் கோவில்களும் திறக்க நான்கு மணிக்கு மேலாகும் என்று தெரிந்ததும் நேராகக் கைலாச நாதர் கோவில் சென்றோம். எனக்கு கோவிலில் இருந்த சிற்பங்களைக் காணக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு அது. முன்பு கோவிலுக்குச் சென்றபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வர அதனை என் மைத்துனனிடம் பகிர்ந்துகொண்டேன்.

கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியிம் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம். சென்றமுறை நாங்கள் போனபோது நான் முதலில் கால்களை துவாரத்தில் இறக்கி பின் அங்கிருந்து மூன்றடி கீழே தரையில் கால் வைத்து அந்தக் குறுக்குப் பாதையைச் சுற்றி வலப் புறமாக வந்து எனக்கு மறு பிறவி இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களுடன் வந்திருந்த என் சகலை முதலில் காலை விட்டு  கீழே இறங்கத் தெரியாமல் துவாரத்தில் இறங்கவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் தவித்தது , பிறகு எல்லோரையும் சாடியது எல்லாம் நினைவிலாடியது கோவில் சந்நதி மூடி இருந்ததால்  என் மைத்துனனுக்கு அதைக் காட்ட முடியாமல் போயிற்று.

கைலாச நாதர் கோவிலைக் காணும்போது எனக்கு பூசலார் அடிகள் இறைவனுக்கு தன் உள்ளத்தில் அஸ்திவாரம் முதல் ஒவ்வொரு கல்லாக எழுப்பிக் கோவில் கட்டி கும்பாபிஷேகத்துக்கு ஒரு நாளும் குறித்து இறைவனைக் குடியேற வேண்டியதும் , அதே நேரத்தில் பல்லவ அரசன் கலை நுணுக்கங்களுடன் ஒரு கற்கோவில் எழுப்பி கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்ததும் , இறைவன் அரசன் கனவில் வந்து தான் பூசலாரின் கோவிலுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியதும் , அரசன் திருநின்றவூர் வந்து பூசலாரைக் கண்டு அவர் எழுப்பிய கோவில் பற்றிக் கேட்டதும் . பூசலார் தம் மனக் கோவில் பற்றிக் கூறியதும் அரசன் அவர் கால்களில் விழுந்த வணங்கியதாகவும் கூறப் படும் கதை நினைவுக்கு வந்தது. அந்த அரசன் கட்டிய கோவில் இந்தக் கைலாச நாதர் கோவிலா என்பது சரியா என்று தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் ஒரு இறைக்கதை பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது.

இந்தக் கோவில் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் பராமரிக்கப் படுகிறது. கைலாச நாதர் கோவிலைச் சுற்றிலும் நிறைய சிறிய கோவில்கள் காணப் படுகின்றன. இவை எல்லாம் ஸாண்ட் ஸ்டோன் எனும் மணல் கல்லால் ஆனது. காஞ்சிவரத்திலேயே இதுதான் மிகவும் தொன்மையான கோவில் என்கிறார்கள்.
கைலாச நாதர் கோவிலைப் பார்த்துவிட்டு நாங்கள் கிளம்பும்போது மணி மூன்றரை ஆகியிருந்தது. அங்கே மதிய உணவு முடித்துவிட்டு ஊரப் பாக்கம் செல்லத் துவங்கினோம் தஞ்சைக் கவிராயரை தொலை பேசியில் அழைத்து எங்கள் வருகையைத் தெரிவித்தோம். அவர் வீட்டைச் சென்றடைந்தபோது மாலை நான்கு மணிக்கும் மேலாகி இருந்தது. அவரைச் சந்தித்தது பற்றி அடுத்த பதிவில்.
                       ==========================
       


.......