முருகன் சீரீஸ்-2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் சீரீஸ்-2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 அக்டோபர், 2016

முருகா உன்னைக் கேட்கிறேன்


                                               முருகா உன்னைக் கேட்கிறேன்
                                                --------------------------------------------

முருகன்




         நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா,  உன்னைப் பிடிக்கும் எனக்கொரு ஐயம்— நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ ?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே-நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்றவருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே- நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    கந்தா.! உன் புராணம் பாட வந்த
    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு
    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி
   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே-நான் கேட்கிறேன் ,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டா -நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ .?

   முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த
   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்
   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை
   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் என் மனையாளுக்கு  அருளினாய்-நான் கேட்கிறேன்
   எனக்கென்ன செய்தாய் நீ..?

(ஐயோ என்பது யமனின் மனைவிக்குப் பெயர் சுட்டியைச் சொடுக்கினால் நான் வீழ்ந்து எழுந்த அனுபவம் படிக்கலாம் )
 
-----