வாழ்வியல்-- செல்லம் --கட்டுரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல்-- செல்லம் --கட்டுரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2011

செல்லி....எங்கள் செல்லம்.

செல்லி.....எங்கள் செல்லம்
--------------------------------------
              என் மனைவியின் பாட்டியின் காரியத்துக்கு 
திருச்சியிலிருந்து பெங்களூர் வந்து திரும்பிய என் மனைவியும் 
என் மூத்த மகனும்,எனக்கு ஒரு எதிர்பாராத பரிசு என்று ஒரு 
கூடையைக் கொடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது, உண்மை
யிலேயே,நான் எதிர்பார்க்காததுதான்.ஒரு கறுப்பு நாய்க் குட்டி.
பிறந்து நான்கு வாரங்களாம். வால் இல்லை. காக்கர் ஸ்பானியல் 
ஜாதியின் கலப்பு நாய். பெண் குட்டி. என்னைவிட என் இளைய 
மகன் அதிக சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தான். எப்படி என் 
மனைவி  இதற்கு சம்மதித்து கொண்டு வந்தாளோ என்பதே ஒரு
புதிர். 

              வீட்டிற்கு வந்ததும் அது (அவள் )வீட்டின் சுவரோரமாக 
எல்லா இடங்களையும் சுற்றி வந்து, முகர்ந்து பார்த்துப் பின் ,முன் 
கால்கள்முன்னேயும், பின் கால்கள் பின்னேயுமாக நீட்ட்ட்ட்ட்டிப்
படுத்தது. பெண்கள் இல்லாத வீட்டுக்கு வந்த பெண் குட்டிக்குப்
பெயர் என்ன வைக்கலாமென்று ஒரு பெரிய சர்ச்சையே நடந்தது
என் பிள்ளைகளுக்குத் தங்கை என்ற பொருளில் செல்லி என்று 
( தெலுங்கில் தங்கை ) பெயர் வைத்தோம். என் பிள்ளைகள் அதை 
ஸ்டைலாக  ஷெல்லி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். முதல் சில 
நாட்கள் என் மனைவிக்கு அதை கவனிப்பதே ஒரு பெரிய வேலை
ஆகிவிட்டது. முதலில் அது அசுத்தம் செய்யும் இடங்களை சுத்தம்
செய்வது தொடங்கி, அதற்கு உணவு கொடுத்துப் பார்த்துப் பார்த்து
வளர்ப்பதே முக்கிய அலுவலாகிவிட்டது. எல்லா வேலைகளை
யும்  அதைப் பற்றிய பயத்திலேயே செய்து வந்தாள். எங்கள் 
வீட்டில் நாங்கள் சைவம். நாயையும் சைவமாகவே வளர்த்தோம்.
செல்லிக்கு காரட் ,பீன்ஸ் , காபேஜ், என்றால் மிகவும் பிடிக்கும்.
காய்கறி நறுக்கும்போது அருகில் வந்து வாயில் எச்சில் ஊறக் 
காத்திருக்கும். காய்கறிகளில் முதல் பங்கு அதற்கே.காரட் என்ற 
பெயர் கேட்டாலேயே, சொன்னவரைப் பிடித்திழுத்து,  ஃபிரிட்ஜ்
பக்கம் நிறுத்தி எடுத்துக் கொடுக்கக் கேட்கும். ஆகவே நாங்கள் 
காரட் என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் ஆகத்தான் சொல்வோம்.
           நான் அதை மாடிக்குக் கூட்டிச் சென்று, சொன்ன பேச்சைக் 
கேட்கப் பழக்கினேன். நில், உட்கார், நட , ஷேக் ஹாண்ட், என்று 
சொன்னதைச் செய்யும். ஏதாவது ஆகாரப் பொருளைத் தின்னாதே
என்றால் சாப்பிடாது. பர்மிஷனுக்காகக் காத்திருக்கும். அதற்கு 
வீட்டில் எஜமானன் நான் என்று நன்றாகத் தெரியும்..ஒருசமயம் 
எங்கள் வீட்டு ரேஷன் கார்டை கடித்துக் கிழித்திருந்தது. இதை 
யார் கிழித்தது என்று நான் கேட்டவுடன் ,அடங்கி ஒடுங்கி சோஃபா
அடியில் போய்ப் படுத்துக் கொண்டது. அது ஏதாவது தவறு 
செய்தாலோ, அதற்கு விருப்பமில்லாததை செய்யச் சொன்னாலோ
( உதாரணத்துக்கு-குளிர் கலத்தில் குளிக்க )சோஃபாவின் அடியில் 
போய்விடும். கட்டாயப் படுத்தினால் உறுமித் தன் எதிர்ப்பைத் 
தெரிவிக்கும். 

           என் பிள்ளைகள்  எங்காவது வெளியே போகும்போது, அவர்
களுடன்  கூடப் போக முயற்சிக்கும். அவர்கள் அதை அதட்டிக்
கதவைச் சாத்திக் கொண்டு வெளியே போய் விட்டால், யார் 
போனார்களோ அவர்களது  ஏதாவது  உடையை ( ஜட்டி, பனியன்)
தேடி எடுத்து, அதை அங்கும் இங்கும் போட்டுப் புரட்டித் தன் 
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும். ஆடைகளை கிழிக்காது. 
வீட்டிற்கு வரும் பாத் ரூம் சுத்த்ம் செய்ய வருபவரை அதற்கு 
பிடிக்கவே பிடிக்காது. அவர் வருவது கண்டு குரைக்க ஆரம்பிக்கும்.
நாங்கள் அதை ஒரு அறையில் விட்டு கதவை சாத்துவோம். 
பாத்ரூம் சுத்தம் செய்பவர் போன பின் கதவைத் திறப்போம்.
இருக்கும் ஆத்திரத்தோடு கதவைத் திறந்ததும் வெகு வேகமாகப் 
பாய்ந்து  வந்து வெளியே பார்த்துக் குரைக்கும்.

            நான் அலுவலகத்திலிருந்து மாலை திரும்பும்போது, என் 
காரின் சத்தத்தை தூரத்தில் வரும்போதே அறிந்து என்னை 
வரவேற்கத் தயாராகிவிடும். நான் வந்த உடனே, என் மேல் 
தாவி , என் கையை நக்கித் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்கும். 
நான் குளித்து உடை மாற்றி ஈஸி சேரில் உட்கார்ந்து அன்றைய 
பத்திரிகையை வாசிக்கத் தொடங்குவேன். சற்று நேரம் பொறுமை
யாய்க் காத்திருக்கும். பின் என்னைப் பிறாண்ட ஆரம்பிக்கும். 
மாலை அதை வாக்கிங் கூட்டிச் செல்லவேண்டும். கழுத்தில் 
செயினை மாட்டி வாக் போக படி இறங்க போனால் அது வராது. 
திரும்பி திரும்பி வீட்டைப் பார்க்கும். என் மனைவியும் வந்தால்
தான் படியிறங்கும். வாக்கிங் போகும்போது அதன் காலில் 
ஏதாவது கல்லோ, முள்ளோ குத்திவிட்டால் அந்தக் காலை 
தூக்கிக்கொண்டு அப்படியே நின்றுவிடும். நாம் அதனை எடுத்து
எறிய வேண்டும். அதேபோல அது சைவ நாயாதலால்  பீன்ஸ்
போன்ற காய்களைத் தின்று  அது மலம் கழிக்கும் போது அதன் 
ஆசன வாயில் ஏதாவது நார்  போன்றிருந்தால் அது நகராது. 
அதை சுத்தம்செய்து எடுத்தால்தான் மேலே நகரும். அதற்காக 
நாங்கள் நடக்கும்போது கையில் கொஞ்சம் வேஸ்ட் பேப்பர் 
எடுத்துச் செல்வோம்.

           அதன் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அதற்கு
வேண்டிய ஊசிகளைப் போடவும், ஒரு மிருக வைத்தியரை
நாடுவோம். அவரை வீட்டிற்கு அழைத்து வந்து, பிறகு கொண்டு
விடவேண்டும். ஒரு வருகைக்கு ரூபாய் ஐம்பது கொடுப்போம். .
அவருக்கு செல்லியைப் பார்த்து பயம். செல்லிக்கு அவரைப்
பார்த்து பயம். ஊசி போட அதை சன்னலின் ஒரு பக்கம் சேர்த்து
அழுத்திப் பிடிப்போம். மறுபக்கம் இருந்து டாக்டர் ஊசி போடுவார்.
ஊசி வேண்டாத நாட்களில், அவர் தூர நின்று பார்த்து நாய் நல
மாக இருப்பதாகக்  கூறி பீஸ் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.

            அசைவ நாய்க்கு சைவ உணவு கொடுத்து வருகிறோமே,
பாவம், என்று ஒரு முறை மட்டன் வாங்கி வந்து, வேக வைத்துக்
கொடுத்தோம். பழக்க மில்லாமல் சாப்பிட்ட அதற்கு, எலும்பு
ஒன்று அதன் மேலண்ணம் கீழண்ணமாக நேராக மாட்டிக்
கொண்டது. அது எவ்வளவோ முயன்றும் எடுக்க முடிய வில்லை.
என் மகன் அதன் வாயுக்குள் கை விட்டு அதை எடுக்க முயற்சி
செய்தான். நாய் எதிர்பாராமல் அவன் கையைக் கடித்து விட்டது.
பிறகு அது அவனையே , மன்னிப்பு கேட்பதுபோல் சுற்றி சுற்றி
வந்தது. அதை மிருக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, எலும்பை
எடுக்க வேண்டினோம்.அதை ஒரு கேட்டில் நகர முடியாமல்
கட்டி, ஒரு நீள கம்பியை வளைத்து, வாயில் இட்டு இழுத்து
எலும்பை எடுத்தனர். அது சரியாகி வர என் மனைவி, வேளாங
கண்ணி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய , அங்கு சென்று
நிறைவேற்றி வந்தோம்.

            எல். டி சி. மூலம், ஒரு டாக்சி ஏற்பாடு செய்து, திருச்சி,
கோவை, ஊட்டி, முதுமலை, மைசூர், பேளுர்ஹலேபேட் ,
சரவண பெலகுளா, பெங்களூர், என்று டூர் போனோம். முதுமலை
பண்டிபூர் வழியே மைசூர் செல்லும்போது, ஒற்றை காட்டு யானை
ஒன்று குறுக்காக பாதையில் நிற்க, நாங்கள் மிகவும் பயந்து
விட்டோம். செல்லி எங்கள் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது.

              ஒரு முறை செல்லியின் மூக்கில் ஒரு தேனி கொட்டிவிட,
அது மயங்கி விழ, நாங்கள் முதலில் மிகவும் பயந்து போனோம்.
சற்று நேரத்தில் தட்டுத் தடுமாறி  எழுந்து நின்று, மாடிக்கு ஓடியது,

             ஏழே வருடங்கள் எங்களுடன் இருந்த செல்லி, பாத்ரூம்
சுத்தம் செய்பவர் வந்து போக, ஒரு முறை பாய்ந்து வெளியே
வர, எங்கோ மூலையில் இடித்து, அதற்கு கண் பார்வை குறையத்
தொடங்கியது. என் மனைவி அடிக்கடி கூறுவாள், பக்கத்தில்
மாமியார் இல்லாத குறையை செல்லி போக்குகிறது என்று.
அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வாள். செல்லி இறந்த
இரண்டு நாட்களுக்கு என் இளைய மகன் உண்ணவே இல்லை.

             செல்லிக்குப் பிறகு நாங்கள் வேறு செல்ல நாய் வாங்கவே
இல்லை. நாய்களுக்கு வளர்ப்போரிடமும், பூனைக்கு வளரும்
இடத்திலும் விசுவாசம் அதிகம். செல்லி கதை கேட்க என் பேர
குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது.
-------------------------------------------------------------------------------.

 









.