விமடிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமடிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஒரு பின்னூட்டமே பதிவாய்



                           ஒரு பின்னூட்டமே பதிவாய்
                             --------------------------------


சிறுகதைகளை ஆழ்ந்து ஊன்றிப் படிக்கும்நண்பர் ஒருவரிடம் என்  சிறுகதையைவிமரிசிக்கக் கேட்டிருந்தேன் குறை நிறைகளைக் கூறிவிமரிசனம் செய்திருந்தார் அதுவே இப்போதுபதிவாகிறது எழுதுபவன் கொள்வாரில்லையோ என்று நினைக்கும்போது  இம்மாதிரியான கருத்துரைகள் உற்சாக பானம் ஆகும் என்ன கதை யார் விமர்சகர் என்பது யூகிக்க எளிது  சிறுகதைகள் சில விஷயங்களின் பாதிப்பால் எழுதப்படுபவைசில பின்னூட்டங்களுக்கு விளக்கம் கூற முற்படும்போது நாம்  எழுதியதை ஸ்தாபிக்க விரும்புவதுபோல் இருக்கும் பின்னூட்டங்கள் வாசகரின் எண்ணப் பிரதிபலிப்பு  அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் முறை சிலநிகழ்வுகள் வெவ்வேறான பாதிப்புகளை  உண்டாக்கலாம் எதையும் ஜஸ்டிஃபை செய்ய அவசியமில்லை 

சாவின் விளிம்பில், நினைவு திரும்பும் பொழுதெல்லாம் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளில் சிக்குண்டு தவிக்கும் ரங்கசாமியின் 'கதை'யை முன்னிலைப் படுத்திக் காட்டி, அதன் பின்புலமாய் வாழ்க்கையின் போற்றுதலுக்குரிய சில நெறிகளை ஆசிரியர் சொல்லிச் செல்வது தான் இந்தக் கதையின் குறிப்பிடத்தக்க அம்சம். எனக்குப் பிடித்த அம்சமும் கூட. எந்த எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இதற்காகத் தான் இந்தக் கதையை எழுதினேன் என்று எழுதியவர் சொல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன?.. நல்ல சிந்தனை உள்ளவர் உள்ளத்திலிருந்து அவர் அறியாமலேயே இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் வெளிப்படுவது இயல்பான ஒன்று தான். சேகரம் பண்ணி தன் வாழ்க்கைக்கு மூலதனமாய் மூட்டை கட்டிக் கொள்வது தேர்ந்த வாசகரின் வேலையாகிப் போகிறது.

சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

நாம் எதிர்பார்க்காதவாறு இந்தக் கதையில் முன்னிலைப் படுத்துகிற பாத்திரமான ரங்கசாமிக்கு, அந்த நேரத்தில் குற்ற உணர்வு நெஞ்சத்தில் குடிபுகுந்து வாட்டியது தான் வினோதம். அந்த வினோதம், ஒருவிதத்தில் தன்னை சுயவிமர்சனப் படுத்திக் கொண்ட அவனது நேர்மையையே காட்டுகிறது. தன் தந்தை சாகக்கிடந்த நேரத்தில் அவரை பொறுப்பாக கவனித்துக் கொள்ளாதது, இந்த நேரத்தில் அவன் நினைவில் நர்த்தனமாடி குற்ற உணர்வில் குன்றிப்போக வைக்கிறது.. அதை வேறு எண்ணங்களைக் கொண்டு விரட்டப் பார்த்தாலும், மேலே மேலே வந்து அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. இவன் செய்யத் தவறியதையே, இவனின் இந்த நிலைமையில் இவன் மனைவி மக்களிடம் இவன் எதிர்பார்க்காது இருந்ததே இவன் செய்யத்தவறிய அந்த ஒரு தவறுக்கும் கழுவாயாகப் போய்விடுகிறது.

தான் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இருக்கிறது ரங்கசாமிக்கு. அந்த திருப்தியை தன் தந்தையின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அங்கங்கே குமுறுவது, பாத்திரப்படைப்பின் மேன்மையைக் குலைக்கிறது. 'ஒரு சொட்டு தண்ணீர் தன் தந்தை கையால் கிடைக்காதா' என்று தவிக்கிற நேரத்தில், இவன் யார் எனத்தெரியாது தந்தை அமுதமென நீர் கொடுத்த மாதிரியும், யார் என்று தெரிந்த பொழுது, 'என்னைக் கொன்றவனல்லவா நீ?.. நீ எனத் தெரிந்திருந்தால் தந்திருக்கமாட்டேன்' என்று தந்தை சொல்கிற மாதிரி இவனுக்குத் தோன்றுவதும், ஏனோ செத்த பிறகும் தந்தையும், சாகும் நிலையில் தனயனும் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டுகிறார்கள். இரண்டு பாத்திரங்களையும் உயர்த்தி, ரங்கசாமியை திருப்திபடுத்தி, அவனது குற்ற உணர்வை சாக அடித்திருக்கலாம்.
யதார்த்தமாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியர் கதையை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வரும் இந்த அரிய வாய்ப்பை தெரிந்தே தவிர்த்து விட்டார் போலும்!

'
தந்தை செய்த பிழையைத் தனயன் செய்திருக்க வில்லை' போன்ற-- பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக வரும் செய்திகளைத் தவிர்திருந்தால் கதையின் நேர்த்தியைக் கூட்டி, சரியாகப் பொருந்துகிற மாதிரி ஒரு சட்டத்திற்குள் அடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.

குறிப்பாக இந்தக் கதையைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னதினால் என் கருத்துக்களைக் குறிப்பிட்டேன். என் பார்வையில் பார்த்ததே தவிர, கதையின் சிறப்பிற்கு இவையெல்லாம் எந்த விதத்திலும் குறுக்கே நிற்பவையல்ல. இரண்டு முறை தாங்கள் நினைவு படுத்தியும் இன்னும் செய்ய வில்லையே என்கிற அவசர உணர்வில் எழுதியது.

இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஐயா!


கதை எதுவென்று யூகிக்க முடிகிறதா  பின்னூட்டமும்  யாருடையது தெரிகிறதா