Wednesday, January 26, 2011

அநுமானங்கள்........

அநுமானங்கள்........
------------------------------
        என்  தமக்கையின்  வீட்டிற்கு  ஒரு  நாள்  சென்றிருந்தேன். உணவருந்தி  இளைப்பாறிக்  கொண்டிருக்கையில் குறி  சொல்லும்  கிழவி  ஒருத்தி  வந்தாள். விளையாட்டாக  ஆரம்பித்தது  கை  பார்க்கும்  படலம்.அவள்  சொன்னதெல்லாம்  சரியாகப்  பட்டது என் தமக்கைக்கு. நானும்  என் கை  நீட்டினேன்.கிழவி  என் கையையும்  என் முகத்தையும்  மாறி மாறிப்  பார்த்தாள் ஏதும் சொல்ல  விரும்பவில்லை  என்று  விட்டு விட்டாள் அப்போது .என்  ஆவல்  அதிகரிக்க  கை பார்த்து  குறி  சொல்ல  வற்புறுத்தினோம்.பெரும் தயக்கத்துக்குப்  பிறகு அவள்  கூறிய செய்தியால்  எங்கள்  யார்  முகத்திலும்  ஈயாடவில்லை. என் உயிருக்குக் காலம்  கணித்து நான்  அதிக  பட்சம்  இன்னும்  ஆறு  மாதங்கள்தான்  உயிர்  வாழ்வேன் என்று சொன்னாள்.  ஒரு  கணம்  ஸ்தம்பித்து  விட்டேன். நான் இல்லாத  என்  வீட்டின்  நிலை நிழற்படம்போல்  வெகு வேகமாக என்  மனதில்  ஓடியது.என்  ஒருவனின்  வருமானத்தை  நம்பி  தாயார்  தம்பிகள்  என என்  பின்னே  ஐந்து  பேர் நின்றனர்.(கலம், மரக்கால், படி, ஆழாக்கு, உழக்கு என்று) நான் இல்லாத  நிலையில்  அவர்கள்  ஜீவனம்  எப்படி இருக்கும்  என்று என்னால்  எண்ணிப்  பார்க்க  முடிய வில்லை.  நான்  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  அவர்கள்  ஜீவிக்க  வேண்டுமே. மரம்  வைத்தவன்  தண்ணீர்  விடுவதற்கு  என்னையல்லவா  நியமித்திருந்தான். நான்  கடமை  தவறலாமா.? யோசித்தபோது  ஒரு பொறி  தட்டியது. நான்  இல்லாவிட்டாலும்  அவர்கள்  வாழ  நான் ஆயுள்  காப்பீடு செய்து கொள்ளவேண்டும். அவர்கள்  எப்படியாவது  பிழைத்துக்கொள்ள  வேண்டும். நினைத்ததை  உடனே  செயல்படுத்தினேன். பாலிசி  எடுத்துக்கொள்ள  பலகாலம்  வற்புறுத்தி  வந்தவரை  அணுகினேன். ஒரு பெரிய  தொகைக்கு  காப்பீடு  செய்துகொள்ள  திட்டம். பத்தாயிரம்  ரூபாயிக்கு  காப்பீடு  செய்ய (1960-ல் ,அது ஒரு பெரிய  தொகைதான் , என் போன்றோருக்கு ) மாதம் ரூ.25/- நான் ப்ரீமியம்  கட்ட  வேண்டும். நானும்  கணக்கிட்டு  எப்படியாவது ஆறு  மாதங்கள்தானே, பல்லைக்கடித்து  கட்டிவிட்டால்  என் காலம்  முடிந்து  விடும். அவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம்  கிடைக்கும், பிழைத்துக்கொள்வார்கள்  என்று  துணிந்து  விட்டேன்.

            மாதம் ரூபாய் இருபத்தைந்து  நான் கட்டி ...கட்டி...கட்டிக் கொண்டே  வந்தேன். நான்  சாகிற  வழியைக்  காணவில்லை. பதினாறு  மாதங்கள்  கடனோ  உடனோ  வாங்கி  கட்டிப் பின் முடியாமல்  விட்டு விட்டேன். எல்.ஐ.சி.க்கு  என் பூர்வ ஜன்ம  கடன். காப்பீடு  காலாவதியாகி  விட்டது. கை  பார்த்தவள்  குறி  சொல்வதில்  எங்கோ  தவறு  செய்து விட்டாள். அதனால்  எனக்குத்தான்  நஷ்டம். நமக்கு  கை  பார்க்கத்  தெரிந்தால்  அவளுடைய  தவறை நாம்  தெரிந்து கொள்ளலாம், என்று கைரேகை  சாஸ்திரம்  கற்கத்  துவங்கினேன். CHEEROS  PALMISTRY -யை மாய்ந்து  மாய்ந்து  படிக்கலானேன். நானே  என் கை  பார்த்துக்  கற்றுக் கொண்டது  என்னவென்றால், இம்மாதிரி  சாஸ்திரங்களில் பொதுவான  சில விஷயங்கள்  பலருக்கும்  பொருந்தும். சொல்லும்  விதத்தில்  சொன்னால்  கேட்பவர்கள்  நம்புவதற்கு  வாய்ப்புகள்  அதிகம் என்று நான் அறிந்து  கொண்டேன். நான் கை ரேகை பார்த்துப பலன் கேட்டவர்கள்  நான் சொல்வது  சரியென்று  சான்றிதழ்  கொடுக்காத  குறையாகப்  புகழ்ந்தார்கள்.

            மேற்கூறிய  சம்பவங்கள்  எனக்கு  மனிதர்களைப்  படிப்பதில்  ஒரு ஆர்வத்தை  ஏற்படுத்தியது. நாம் காண்பவர்கள் , பேசுபவர்கள்,  பழகுபவர்கள்  என்று  பலரது  குணாதிசயங்களை  ஆராயும்போது  இன்னின்ன  பேர்  இப்படியிப்படி  இருநதால்  இன்னின்ன  குணங்களைக்  கொண்டிருப்பார்கள்  என்று ஓரளவு  சரியாகக்  கணிக்க  முடிந்தது  கண்டு எனக்கு என் மேலேயே  கொஞ்சம்  பெருமிதம்  தோன்றுவதுண்டு. முகம்  பார்த்து  மனிதர்களைப்  படிப்பதில் ஏற்பட்ட  நம்பிக்கை  முகம்  காணாதவர்களை  ஏதாவது  முறையில்  கணித்துப்  பார்க்க  வேண்டும் என்ற ஆவல்  உந்தியதன்  விளைவே  இந்தப்  பதிவு. வலையுலக  நண்பர்களை, அவர்களின்  எழுத்தின்  மூலம்  கணிக்க  முயற்சிக்கிறேன். பெயர்  கூறாமல் அவர்களைப்  பற்றிய  என் அநுமானங்கள், படிப்பவர்களுக்குப்  புரிந்து, சரியாக  இருப்பதாகத் தோன்றினால் நான் ஓரளவு  வெற்றி  பெற்றவனாவேன். ஆனால்  அறிந்து  கொள்வதுதான்  எப்படி.? எப்படியானாலும்  ஒரு பதிவுக்கு  விஷயம்  கிடைத்து  விட்டது. இவர்களின்  எழுத்தின்  மூலம், நான்  இவர்களைப்  பற்றி  கொண்டுள்ள  அனுமானங்களைப்  படியுங்களேன்.
           1)  இவர்  எப்படியோ.. .. ஆனால்  தான்  மிகவும்  முக்கியத்துவம்  வாய்ந்தவர் என்று  எண்ணுபவர். இவர்  செய்வதற்கும்  சொல்வதற்கும், எதிர்ப்பு  இருநதால்  விரும்பாதவர். தனக்குத்  தெரியாத விஷயங்கள்  மிகவும்  குறைந்ததே  என்ற  எண்ணம்  கொண்டவர். ஒருவரை  முன்னிலைப்  படுத்தவோ  கீழிறக்கவோ தன்னால்  முடியும் என்று நம்புபவர். கஷ்ட  நஷ்டங்கள்  அதிகம்  அறியாதவர்.முகஸ்துதிக்கு  மயங்குபவர் (மயங்காதவர்  அநேகமாக  யாருமில்லை.)மொத்தத்தில்  வாழ்க்கையை  அனுபவிக்கத்  தெரிந்தவர். இப்போதும்  அனுபவித்துக்கொண்டிருக்க  வேண்டும்.

            2)  இவர்  குழந்தை  உள்ளம்  கொண்டவர். மிக  எளிதில்  உணர்ச்சி  வசப்படக்  கூட்டியவர். வெளுத்ததெல்லாம்  பால்  என்று  நம்பக்கூடியவர். எல்லோருடைய  குணத்திலும்  நல்லதையே  காண்பவர். யார்  மனமும்  புண்படாமல்  இருக்க பிரத்தியேக  முயற்சிகள்  எடுக்கக்கூடியவர். நிறையத்  தெரிந்தவர். இருந்தாலும்  கொஞ்சம்  தாழ்வு  மனப்பான்மை  கொண்டவராயிருப்பாரோ  என்ற  சந்தேகம்  எனக்குண்டு. நான்  தவறாக  இருக்கலாம்.  தவறாக  இருக்க வேண்டும்.

          3) இவர்  சாதிக்கத்  துடிப்பவர். சாதிப்பதற்கான  திறமையும்  கொண்டவர். தன மீதே  அசாத்திய  நம்பிக்கை  கொண்டவர். காண்பவர்களைத்  தன்  பக்கம் ஈர்க்கும்  வசீகரம்  பெற்றவர். எப்போதும்  எதையாவது  வித்தியாசமாக  செய்ய  விரும்புபவர். தன்னைச்  சுற்றிலும்  தன்னைப்  போல் எல்லோரும் இருக்க  எண்ணுபவர். மற்றவர்களை  அறிந்து கொள்ளும்  முயற்சி  மேற்கொண்டாலும்  தொடர்ந்து  ஈடுபடுவதைத்  தடுக்கும்  ஈகோ  உண்டோ  என்று எனக்கு சந்தேகம்  உண்டு. இவருடைய  வேகத்துக்கு  இவரே  வேகத்தடை  போட்டுக்கொள்பவர். இவரும் முகஸ்துதிக்கு மயங்குபவர்  என்று  எண்ணுகிறேன்.

            4)  தான்  உண்டு  தன்  பணி  உண்டு ,தன்  உலகுண்டு  என்று ஒரு  வட்டத்துக்குள்  இருப்பவர்  இவர். இவருக்கு  யாரையாவது  பிடித்துப்  போனால்  அவர்களுக்காக  ஏதாவது  செய்ய வேண்டும்  என்று  எண்ணுபவர். செய்கிறாரோ  இல்லையோ  என்பது  வேறு  விஷயம். சின்னச்சின்ன  விஷயங்கள்  கூட  இவருக்குப்  பிரமாதமாகத் தெரியலாம். மொத்தத்தில் ஒரு  QUIET AND GOOD MAN. இவரால் யாருக்கும்  எந்தத்  தொந்தரவும்  இருக்காது.

            5)  இவருக்குத்  தெரிந்த விஷயங்களில்  ஈடுபாடு  அதிகம்  கொண்டவர். தெரிந்ததை  நன்றாக  அறிந்தவர். தெரியாததை  சில  சமயம்  தெரிந்ததுபோல்  காட்டிக்  கொள்ளத்துடிக்கும்  குணம் ,மற்றவரிடம்  அதைக்  காணும்போது  அடிபணியும்  தன்மையும்  கொண்டவராக  இருப்பாரோ  என்ற சந்தேகம்  எனக்குள்ளது. குடத்திலிட்ட  விளக்குபோல்  பிரகாசிக்கும்  இவர்  குன்றின்  மேல்  வைத்தால்  அணைந்து  விடக்  கூடாதே  என்ற  பரிதவிப்பு  எனக்குண்டு. தன்  திறன்  தானறிந்து  பிறரை அறியும்  குணத்தையும்  இவர்  வளர்த்துக்கொண்டால்  இவர் வெகு  தூரம்  செல்ல  வாய்ப்புள்ளது.

            6) வாழ்க்கையில்  கிடைக்க  நினைப்பதெல்லாம்  கிடைத்தாலும் அனுபவிக்கும்போது  யாருக்கும்  தீங்கு  எண்ணாதவர். நிறையத்  தெரிந்தவர் ,தெரிந்து  கொள்ளத்  துடிப்பவர். கொஞ்சம்  கர்வம் உண்டோ  என்று சந்தேகம்  உண்டு. தன்னைப்  பற்றி  மற்றவர்  அபிப்பிராயம்  அறியத்  துடிக்கும்  இவர், மற்றவர்  பற்றிய  தன்  எண்ணங்களை எளிதில்  பகிர்ந்து  கொள்ள  மாட்டார். இவருடைய  ஷார்ட்  கமிங்க்சை  யாரும் எடுத்துக்  கூறுவதை  இவர்  விரும்ப  மாட்டார்.(யார்தான்  விரும்புவார்கள் )ஒரு  PAMPERED PERSON  எப்படி இருப்பாரோ அப்படி  இருப்பவராகத்  தோன்றுகிறது.

           7)  கிடைக்க  வேண்டியதெல்லாம்  வேண்டிய  மட்டும்  கிடைத்தாலும்  மனதின்  அடித்தளத்தில்  எங்கோ  எதற்கோ  ஏங்குவதுபோல்  தோன்றுகிறது. எல்லோரும்  இன்புற்றிருக்க  எண்ணும் இவர் மற்றவர்களால்  ஏமாற்றப்  படுவதற்கு   வாய்ப்பு  இருப்பதாகத்  தோன்றுகிறது. அலட்சியம்  குறைத்து  அலர்ட்டாக  இருக்க வேண்டும். குறைஎன்று  கண்டால்  திருத்திக்கொள்ளும்  நற்பண்பு  உண்டு. எல்லோரும்  நம்மைப்  போல் இருக்கிறார்கள்  என்பதைவிட  இருக்கிறார்களா  என்பதில் அதிக  அக்கறை  காட்டினால்  இவர் மிகச்  சிறந்தவராகத்  திகழ்வார்.

           8)  இவரைப்  பற்றிக்  கூறாமல்  இருக்க  முடியவில்லை. மிருதுவான  குணமுள்ளவர். சில  சமயம்  வரட்டுப்  பிடிவாதம்  கொண்டவரோ  என்ற  சந்தேகம்  எழுகிறது. கொஞ்சம்  தொட்டால்  வாடி  போல  குணமும் இருக்கும் போல்  தோன்றுகிறது. யாரும்  இவரைக்  குறை  கூறுவதை  விரும்பாதவர். ( யார்தான்  விரும்புவார்கள்.?) குறை  கண்டு விட்டால் கொஞ்சம்  சீரியஸாக  எடுத்துக்கொள்வார்   என்றே  தோன்றுகிறது.  

             மேலே  இருப்பவர்களைப்  பற்றிய  என் கணிப்புகள்  சாதாரணமாக  எல்லோரிடமும்  உள்ள  குணங்களே. இருப்பினும்  சற்றுத்  தூக்கலாகத்   தோன்றுவதை  பிரத்தியேகப்  படுத்திக்  கூறியுள்ளேன். யாரையும்  புண்படுத்தும்  எண்ணம்  லவலேசமும்   இல்லை. நீ  நல்லவனாக  இருநதால்  எல்லோரும்  நல்லவரே  என்ற  குணம்  கொண்டவன் நான்.  இன்னும்  நிறையபேர்  பற்றிய  அநுமானங்கள்  உண்டு.  எழுதியதே  சரியான  வரவேற்பை  பெறுமா  என்றிருக்கையில்   மேலும்  எழுத  தயக்கத்தால்  இத்துடன்  நிறுத்திக்  கொள்கிறேன்.
===============================================





















         















 







   




 






   



21 comments:

  1. நல்ல அனுமானங்கள். எல்லா ஜோசியர்களும் இப்படித்தான் பிழைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. சரிதான்..... !!!
    good write-up!

    ReplyDelete
  3. இந்த எட்டிலும் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன் பாலு சார்.எட்டிலும் நான் இருக்கிறேன்.

    சுவாரஸ்யமான கோணம் பார்த்த பதிவு.உங்களுக்கு வயதில்லை.

    ReplyDelete
  4. டாக்டர் ஐயா சொல்வதைக் கேட்டால் நானும் பிழைக்க ஒரு வழி தெரிகிறதே. நன்றி ஐயா.

    ReplyDelete
  5. சித்ரா, நீங்கள் எட்டில் எதிலாவது தெரிகிறீர்களா.?நன்றி.

    ReplyDelete
  6. நான் எதிர்பாராத ஒன்று இது சுந்தர்ஜி. பொதுவாகக் கூறுதல் பலருக்கும் பொருந்தும் என்ற என் எழுத்தே உங்கள் கருத்துக்கு உரம் ஏற்றுகிறது. மற்றவர்கள் வருகிறார்களா எனப் பார்ப்போம். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  7. gmb sir,

    அற்புதமான பதிவு. நகைச்சுவை உணர்வு ததும் எழுதியிருக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் என் கைரேகை பார்த்த ஒருவர், நான் மிக அதிக ஆயுள் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 60 வயது தொடலாம் என்பது போல் கூறினார். சில நேரம் அது பலிக்குமோ எனத் நினைப்பேன். பலித்தால் தான் என்ன! அந்த வயதுக்குள் எனக்கென இட்ட கடமைகளை முடித்து விடுவேன் என சமாதானமும் படுத்திக்கொள்வேன். உங்கள் பதிவு படித்த பிறகு, ஒருவேளை அதிகம் வாழ்ந்தாலும் வாழ்வேன் என்று தோன்றுகிறது :)))))))))

    ஒரு வேளை அந்த கிழவி could have been sent by some LIC agent?? :)))) quite possible.

    இப்பதிவில் தாங்களும் குத்து மதிப்பாக குணாதிசயங்கள் கூறியது சுவாரஸ்யம் :)) ஏறக்குறைய பொதுவான குணங்கள். இப்படித் தான் ஜோசியர்கள் "சிலர்" பிழைக்கிறார்கள் போலும்.

    பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
  8. ஷக்திப்ப்ரபாவுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்ததற்கு நன்றி. குத்துமதிப்பான குணாதிசயங்கள் அல்ல. அவர்களை நான் ஆழப்படித்ததன் விளைவே இது. இந்த எட்டில் நீங்கள் இல்லை. அடிக்கடி வாருங்கள். மகிழ்வேன்.

    ReplyDelete
  9. ஒவ்வொரு பிரிவிலும் அவர்களைப் பற்றிய தங்களுடைய எதிர்மறை அனுமானங்களைக் கூட (அவர்கள் அப்படி இருக்கக் கூடாது என வேண்டுகிறேன் ) நேர்மறையாக கூறி இருப்பது அருமை!

    ReplyDelete
  10. குறிஞ்சிக்கும், நாகசுப்பிரமணியத்துக்கும் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. //எப்படியானாலும் ஒரு பதிவுக்கு விஷயம் கிடைத்து விட்டது.//

    வித்தியாசமான ஒரு முயற்சி செய்திருப்பதையும் அதை ஒரு கதை போலச் சொல்லியிருப்பதையும் பாராட்ட வேண்டும்.

    சில குணநலன்கள் பெரும்பாலும் இது இருந்தால் அது இருக்காது என்பதான தன்மை கொண்டவை. அப்படியானவற்றைக் கலந்து கட்டி 'ஒரே' எண்ணில் நீங்கள் கொண்டு வந்தது தான் சாமர்த்தியம். அதே நேரத்தில் ஒன்றில் வந்த குறிப்பு இன்னொன்றில் வந்து விடாதபடி யோசித்திருக்கிறீர்கள். அப்படி விதவிதமான குணங்கள் கொண்டவர்களைக் கொண்டதாக அமைத்திருப்பது தான் விசேஷம்.

    ஒரு காலத்தில் எண் சோதிடம் கற்க எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் 'எண்கள்' என்று ஒரு பத்திரிகை 'பாலசோதிடர்' என்று அழைக்கப்பட்ட வித்துவான் வே.இலட்சுமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அந்தப் பத்திரிகையை படித்ததினால் அந்த வயதில் வந்த ஆர்வம். ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஓர் எண் உண்டு. பெயரின் ஆங்கில எழுத்துக்களை அந்தந்த எழுத்துக்களுக்குரிய எண்களைக் கொண்டு கூட்டி, இரட்டைப்படையாக எண் வந்தால் ஒன்றைப்படைக்கு கூட்டிக் கொண்டு வந்து சொல்லும் சோதிடக் குறிப்புகள். இன்ஷியலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில வழிவந்த இந்த சோதிடம் பொதுவாகப் பலருக்கு தெரிந்த ஒன்று தான்.

    இதுவும் பதிவு என்று பார்க்கையில் நன்றாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  12. எட்டு எட்டா மனிதவாழ்வைப் பிரிச்சிக்கோ என
    வைரமுத்து சொன்ன மாதிரி
    மிக அழகாக பிரித்துள்ளீர்கள்
    அனைவரும் இதற்குள் அடங்கித்தான் ஆகவேண்டும்
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ரமணிக்கும் ஜீவிக்கும் வருகைக்கு நன்றி.என் கணிப்புக்கு வலையுலக நண்பர்கள் எட்டு பேரின் எழுத்துக்கள் மூலம் அவர்களை தேர்ந்தெடுத்து அனுமானிக்க முயன்றிருக்கிறேன்பின்னூட்டங்களில் பலர் வந்து விட்டனர். இன்னும் ஒரு சிலர் பாக்கி. படிக்கிறார்களா பார்ப்போம்.

    ReplyDelete
  14. அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே. நீங்க சைக்கலாஜி தெரிஞ்சவரா ? கொஞ்சம் உங்ககிட்ட அடக்கி வாசிச்ச்ருப்பேனே . அந்த எட்டில நான் யாருன்னு தெரிஞ்சு போச்சு.அந்த .......வது நம்பர் தானே. ஐயோ மண்டையை பிச்சுக்க வச்சிட்டீங்களே.

    ReplyDelete
  15. அப்பாடா, இந்த‌ க‌ணிப்பில், நானில்லை.
    சுந்த‌ர்ஜி எட்டுல‌யும் எட்டு வ‌ச்சுத் தாண்டிட்டார்.
    வைகோ, ஆரஆர்ஆர். வேர் ஆர் தே?

    ReplyDelete
  16. சிவகுமாரனை காணவில்லையே என்றிருந்தேன். அப்பாடா.. வந்துவிட்டீர்கள் . வாசன் எட்டிலும் இல்லை என்று மகிழ்கிறார். இன்னும் சிலர் வரவேண்டும். எப்படியாயினும் எட்டில் ஏதாவதொன்றில் அல்லது எல்லாவற்றிலும் எல்லோரும் பொருந்துவர் என்று கருத்துகள் நிலவுகின்றது.

    ReplyDelete
  17. நானும் இந்த நபர்களில் ஏதாவது ஒரு குணம் கொண்டவளாகத்தான் இருக்கிறேன்.:)
    ஈகோ இல்லாத மனிதர் ஏது.!!
    முதலில் உங்கள் பதிவுக்கும் உங்களுக்கும் என் வணக்கத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.

    இனித் தொடர்ந்து படிக்க ஆசை.

    ReplyDelete
  18. ஆஹா பிரமாதம் ஐயா. தொடர்ந்து பதிவுகளை எழுத சொல்லிய போது சில நேரங்களில் எழுத இயலாமல் போனது உண்டு.

    தாங்கள் முதன் முதலில் வலைப்பூவை ஆரம்பித்தபோது 'அட' என மனதில் தோன்றியது. அது உங்கள் எழுத்துகளில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம.

    நிதானமாக படிக்க வேண்டும் என நினைத்தது உண்டு.

    தாங்கள் கைரேகை நிபுணர். வாழ்த்துகள்.

    எனக்கு நான்கும், ஏழும் பொருந்துகிறது.

    உங்கள் உதவியுடனே கைரேகை காவியம் எழுதலாம் போலிருக்கிறதே. :)

    ReplyDelete
  19. முற்றிலும் புதியதொரு கோணம். யார் எந்த குணம் கொண்டவர்கள் என்பது பற்றி எனக்குப் புரியலை. ஆகவே ரொம்ப யோசிக்கலை. இங்கே இருக்கிறவங்களிலே ஓரிருவர் தவிர மற்றவங்க பழக்கமும் இல்லை. அதோடு பதிவின் மூலம் குணங்களைக் கண்டு பிடித்தல் கஷ்டம்னு எனக்குத் தோணும். எழுதறது சிரிப்பா இருந்தாலும் அவங்க வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்கிறவங்களா இருந்திருக்காங்க. இது என்னோட அனுபவம் மட்டுமே. :)))

    ReplyDelete

  20. @ வல்லி சிம்ஹன்
    @ வி. ராதாகிருஷ்ணன்
    @ கீதா சாம்பசிவம்
    2011 ஆரம்பத்தில் எழுதிய பதிவு இது. அப்போது என் வலைப்பூவிற்கு வருபவர்களையும் நான் செல்லும் பதிவாளர்களிலும் சிலரைஉள் வாங்கிக் கொண்டு எட்டு பேரைப் பற்றி அனுமானங்கள் எழுதினேன். யார் யாரென்று நானே இப்போது கூற இயலாது. பழைய குறிப்புகளைப் பார்க்க வேண்டும்பதிவில் எழுதி உள்ளது போல் அனைவரும் ஏதாவது எட்டில் பொருந்துவர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete