Tuesday, September 23, 2014

என் கேள்விக்கு என்னபதில்....


                 என் கேள்விக்கு என்ன பதில்.. ?
                 -----------------------------------------                                
.
நண்பர் ஒருவர் பதிவினில் வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்

வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 

தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே

ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு  
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி

பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

கேள்வி இதோ. எந்தப் பதிவரின் வரிகள் என்னை எழுத வைத்தது? ஒரு க்ளூ தருகிறேன் . என் அந்தப் பதிவுக்கு இந்த வரிகளுக்கு உரியவர் வருகை தரவில்லை. தந்திருந்தாலும் பின்னூட்டமெதுவும் இடவில்லை.ஒரு வேளை அவர் இப்பதிவுக்கு வருகை தந்தாலும் இது அவரது வரிகள் என்று கூறாமல் கருத்திட வேண்டுகிறேன் பதிவுகளில் எழுதுவதை எத்தனை பேர் ஊன்றிப் படிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசின்ன டெஸ்ட்.
(நான்கைந்து நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் வலைப்பக்கமே வர முடியவில்லை. வந்ததும் கனமான கீதைிப் பதிவுக்குப்பதில் சற்று மாற்றத்துக்காக இது )
.

48 comments:

  1. யாருனு புரியலை ஐயா. என்றாலும் உங்கள் கவிதை அருமை. :))))

    ReplyDelete
  2. உங்கள் எண்ணங்கள் அருமை.கேள்விக்கு விடை பிறகு.

    ReplyDelete
  3. கவிதையும் கருத்தும் அருமை ஐயா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. யாரென்று புரியவில்லையே...

    ReplyDelete
  5. உணர்வு என்பது ஒப்பற்ற ஒன்று.
    சொந்தத்தில் உணர்வது தான் அவரவரின் முழுமையான உணர்வு என்றாலும் அந்த முழுமைக்கு சில உப உணர்வுகள் தேவைப்படுகின்றன.

    இந்த உப உணர்வுகளின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க அவை நம்மை முழுமைக்கு அழைத்துச் செல்வதை கண்கூடாகக் காணலாம்.

    அத்தனையும் அறியாமையின் வழிமுறை என்று முடிவுக்கு வருவதற்கு எந்த அறிவு ஒருவருக்கு வழிகாட்டியிருக்கிறதோ, அதே மாதிரியான இன்னொருவரின் அறிவு தான் அவரின் முழுமையான உணர்வுக்கான படிக்கட்டுகளாக இந்த உப உணர்வுகளைக் கொள்ள வைத்திருக்கலாம் என்று கொள்ளலாம்.

    மனதிற்குப் புரிந்த மந்திரங்களை உச்சாடனம் பண்ணுவது இறை உணர்வுக்கு இட்டுச் செல்வது போல.
    இந்த இடத்தில் மந்திர உச்சாடனம் உப உணர்வு. இறை உணர்வு முழுமையான உணர்வு.

    இநன்னொன்று. புரிதல் ஒன்றினாலேயே அந்த உப உணர்வுகளை அனுபவித்தலும் சாத்தியமாகும். அந்த புரிதல் தான் மின்சார சக்தியாய் நம் உணர்வுகளீல் பதிந்து
    முழுமைக்கு அழைத்துச் செல்கிறது.
    அதனால் தான் ஒருவரின் உணர்வில் பற்ற வைக்க சாத்தியப்படும் அவருக்குத் தெரிந்த
    மொழியில் வழியில் உப உணர்வுகளும் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பது.

    அர்த்தம் தெரியாமல் மந்திரம் ஓதுவதை விட சிரைக்கப் போகலாம் என்று பாரதியார் கடுமையாகச் சொன்னது இதனால் தான்.

    கொஞ்சமே யோசித்துப் பார்த்தாலும்
    நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முழுமையான அனுபவிப்பு உணர்விற்கும் இப்படியான உப உணர்வுகள் தேவைப்படுவதைப் பார்க்கலாம்.

    அடுத்து உப உணர்வுகளின் உதவி இல்லாமலேயே முழுமை சாத்தியப் படலாம் என்கிற நிலையும் சிலருக்கு உண்டு. பலவகையான முழுமைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பதால் இந்த சாத்தியப்பாடு- களும் அவரவருக்கு வேறு படும்.
    ஒருவருக்கு கைவரப் பெற்ற முழுமை இன்னொருவருக்கு கைவரப் பெறாமல் போகலாம்.

    நமது பேராசான் திருவள்ளுவரும்
    ஒவ்வொன்றிற்கான முழுமையையும்
    உள்ளடக்கியதான முப்பாலியலில்
    திருக்குறளைப் படைத்திருப்பது
    எண்ணி மகிழத்தக்கது.

    ReplyDelete
  6. யாரென்று தெரியவில்லை. ஆனால் கவிதை அழகு .

    ReplyDelete
  7. இறைவனே இல்லை என்று சிலர்.

    இந்த 'இல்லை' அடுத்து உருபெற்றது இப்படி:

    நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்னும் ஐம்பெரும் சக்திகள் தாம் இறைவன் என்று 'இல்லை'
    என்றான இறைவன், இப்படியானவற்றில் உறைந்து இருக்கிறான் என்றான நிலைக்கு சிலரில் மாற்றம்.

    நீங்கள் அடிக்கடி சொல்கின்ற 'உருவம் இல்லாத இறைவனுக்கு உருவம் கொடுத்து'என்கிற மாதிரி
    சிலருக்கு இறைவனுக்கு உருவம் கொடுத்ததில் தான் கருத்து வேறுபாடே தவிர இறைவன் இருக்கிறான் என்பதில் அல்ல.

    அடுத்து, இந்த ஐந்து பெரும் இயற்கை சக்திகள் தாம் இறைவன் என்று ஆனபின் இயற்கையில் (இறைவனில்) விளைந்த பொருட்களை அந்த இறைவனுக்கே படைப்பதில் திருப்தி சிலருக்கு.

    அன்பு, தான் நினைப்பதையெல்லாம் செய்யச் சொல்லும். பெற்ற மக்களின் உணவுக்காக உழைத்து திருப்தி படுவது போல. காப்பாற்றினாலும் சரி, காக்காவிட்டாலும் சரி என்கிற உணர்வு இது.

    அவரவர் திருப்தி கொடுக்கும் மகிழ்ச்சி அலை மின்சாரமாய் மனசில் ஊடுருவி வாழ்க்கையில்
    பேருவகையைக் காண்பது தான் முக்கியமாகிப் போகிறது.

    வகைவகையாய் சாப்பிடுவதே வேஸ்ட் என்று நினைக்கும் ஒருவருக்கு இந்த பேருவகை ஆரோக்கியதிற்கான சக்தியை அளிக்கலாம்.

    எப்படித்தான் பார்த்தாலும் மனிதனின் திருப்தியும், அதனால் அவனில் விளையும் சந்தோஷமும்,
    அந்த சந்தோஷம் இட்டுச் செல்லும் ஆரோக்கியமுமே முக்கியமாகத் தெரிகிறது.

    ReplyDelete
  8. 'காக்கை சிறகினிலே நந்தலாலா' என்று பார்க்கும் பொருள்களிலெல்லாம் இறைவனைக் கண்ட பாரதி பெரும் பேறு பெற்றவன். மிக உயர்ந்த நிலை இது. அவனுக்கு கைவரப் பெற்றது நமக்கு காணாப் பொருளாய் இருக்கிறது என்பது தான் உண்மை.

    'வேறெதுவும் வேண்டுவதோ' என்று ஆரம்பித்த ஆரம்ப வரி, என்னவெல்லாம் வேண்ட வைத்து விட்டது, பாருங்கள்!

    ஆசையே அலைபோல-- நாமெலாம் அதன் மேலே
    ஓடம் போல ஆடிடுவோமே
    வாழ்நாளிலே!...

    ReplyDelete
  9. கோமதி அம்மாவுக்கு நல்ல நினைவாற்றல்.. 'இனி'யும் தாமதமேன், விடை பகற?..

    ReplyDelete
  10. // வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ!//

    உங்கள் கவிதை அருமை..

    ReplyDelete
  11. // வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ!//

    உங்கள் கவிதை அருமை..//

    துரை செல்வராஜு சார்! நியாயமா சார் இது? சிவப்புக் கலர் அடித்த முதல் வரியைப் படிக்கவில்லயா சார்!

    ReplyDelete
  12. கருத்துடன் கூடிய கவிதை அருமை. சகோதரி திருமதி ‘தென்றல்’ சசிகலா அவர்களின் வீசு தென்றல் என்ற பெயரோடு கூடிய பதிவின் முகவரி தானே உங்களை கவிதை எழுத தூண்டியது.

    ReplyDelete
  13. வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ”என்னும் சொற்றொடர்
    பூ வனமாய் ஜீவிக்கும் அந்த தொடர் .

    அதன் தொடர்பான கவிதையும் ரசிக்கவைத்தது..பாராட்டுக்கள்.

    ReplyDelete

  14. @ கீதா சாம்பசிவம்
    /யாருனு புரியலை/ அப்படி என்றால்... அந்த வரி உங்களை ஈர்க்கவில்லையா? கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  15. @ கோமதி அரசு
    என் எண்ண்ங்களைப் பாராட்டியதற்கு நன்றி. விடை தெரிந்தால் சொல்ல ஏன் தாமதம்?

    ReplyDelete

  16. @ தளிர் சுரேஷ்
    கவிதையையும் கருத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    உங்களுக்கும் புரியலையா.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  18. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    கவிதை அழகை ரசித்ததற்கு நன்றி டீச்சர்.

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    அந்த வரியை ரசித்தீர்களா அல்லது கவிதையை ரசித்தீர்களா.? ஜீவியின் கருத்தைப் படித்ததால் வந்த சந்தேகம். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்.
    கவிதையை ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ வே. நடன சபாபதி.
    பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறேன். ஒரு நண்பரின் பதிவில் வந்த கவர்ந்த வரி என்று. கவிதையை பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete

  22. @ இராஜ ராஜேஸ்வரி.
    மீண்டும் நிருபிக்கிறீர்கள் நான் உங்களுக்குக் கொடுத்த பட்டம் சரி என்று. பின்னூட்டங்களிலிருந்து அடையாளம் காண முயற்சிக்கிறீர்கள் ரசனைக்குப் பாராட்டுக்கள் ஜீனியஸ் மேடம்.

    ReplyDelete

  23. @ ஜீவி
    ஒரு சிறு திருத்தம். நண்பரின் பதிவில் ‘வீசுகின்ற காற்றிருக்க’ என்றிருந்ததை ‘வீசு தென்றல் காற்றிருக்க ‘என்று கையாண்டேன் முன்பு எழுதி இருந்த பதிவை ’மனம் போன போக்கில்’என்று தலைப்பிட்டிருந்தேன். பதிவின் கருத்துக்கள் எல்லோருடைய கருத்துக்கும் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை.உங்கள் கருத்துக்களை சில நீண்ட பின்னூட்டங்களாக எழுதி இருக்கிறீர்கள். இதே பதிவுக்கு முன்பு வந்த சில பின்னூட்டங்களை இடுகிறேன்
    Ramani S said...

    சரட்டில் பூ கோர்க்கிறார்ப் போல
    சிந்தனை மிகச் சரியாக
    நேர்கோட்டில்தானே பயணிக்கிறது
    நீங்கள் மனம் போன போக்கில் எனச்
    சொல்லிப்போனாலும்....
    துரை செல்வராஜூ said...

    அன்பே சிவம் எனச் சொல்வதோடு நில்லாமல் அனைவரையும் நேசி!.. சிந்தனைக்கு உரிய சிறப்பான வரிகள்..
    தி.தமிழ் இளங்கோ said...

    மனம்போன போக்கில் நீங்கள் எழுதினாலும், உங்கள் மனது பண்பட்ட மனது என்பதால் பாதை தவறிவிடவில்லை. மனதிற்கு பிடித்தமானதாகவே இருக்கின்றது.
    சொ.ஞானசம்பந்தன் said...

    மிகச் சிறந்த கவிதை . கருதானெ முக்கியம் ? யாப்பு எல்லாம் அப்புறந்தான் . பெரும்பாலோர் சொல்ல அஞ்சும் முற்போக்கான கருத்துகள் நிறைந்துள்ளன . பாராட்டுகிறேன் .
    கோமதி அரசு said...

    அன்பே சிவம் எனச்
    சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
    அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி//
    நன்றாக சொன்னீர்கள்.

    உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
    வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம் //
    உண்மை. எல்லாம் அவன் செயல்.
    கவிதை நன்றாக இருக்கிறது.
    அப்பாதுரை said...

    அட நம்ம கேசு.. எதையோ எழுதத் தொடங்கி எங்கேயோ போய் கடைசியில் கல்லையும் மண்ணையும் ரெண்டு தட்டு தட்டி.. வெரி குட். வெரி குட்.

    அந்தப் பதிவில் உங்கள் பின்னூட்டம் காணப்படவில்லை.
    விமரிசனங்களின் நடுவராக இருந்ததன் பாதிப்பு பின்னூட்டங்களில் தெரிகிறது. உங்களுக்குத் தெரியும் மனசில் பட்டதைச் சொல்பவன் நான். தவறு என்றால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  24. //விடை தெரிந்தால் சொல்ல ஏன் தாமதம்?//

    விடை தெரிந்தும் சொல்லக் கூடாது என்று கோமதிம்மா அதை தனக்கு எடுத்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கு.

    இராஜராஜேஸ்வரி மேடம் கூட பாருங்கள், பூடகமாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்!

    ReplyDelete
  25. என் இளம் வயதில் நண்பர் ஒருவர்.

    அய்யாசாமி என்று பெயர். அவர் 'அறிவன்' என்கிற பெயரில் கவிதைகள் எழுதுவார். ஆம்! அவர் பெருமிதத்தோடு சொல்லக் கூடிய ஒரு கவிஞரும் கூட. அவர் எழுதும் கவிதைகளில் புரட்சிக் கவிஞர்
    பாரதிதாசனாரின் தெறிப்பு இருக்கும்.

    அவர் எழுதிய கவிதை ஒன்று, இப்படி ஆரம்பிக்கும்.

    "பாலின்றி தவிக்குதடா
    பல கோடி பிள்ளை
    பாலூற்றிக் கழுவுகிறார் கல்லை.."

    இளம் பருவத்தில் மனசில் படிந்த கவிதை இது. இன்னும் மறக்கவில்லை.

    சில கவிதைகளை வாசிக்கும் போதே மனசில் தேங்கிவிடும் அது. கவிதை சொல்லும் கருத்திற்குக் கூட போகாது அது. செடியில் ஒரு ரோஜா மலர்ந்திருப்பதைப் பார்த்ததும் மனசை அது ஈர்க்குமே அப்படியான ஒரு ஈர்ப்பில் மனசும் கவிதையும் கட்டிப் புரண்டு தத்தளிக்கும்.

    அந்த ஈர்ப்புக்குக் காரணம் அந்த கவிதை சொல்லும் பொருளைத் தாண்டி முதலில் மொழியைக் கையாண்ட அழகு நம்மை வசப்படுத்தும். இது முற்றாலும் தம் தாய் மொழியின் வசப்படுத்தல். மொழியைத் தாண்டி எதுவும் இல்லை என்கிற மனக்கிறக்கம்.

    ஏதாவது கருத்தை விளக்கி எடுத்துச் சொல்ல வேண்டுமானால், அதற்கு கட்டுரை தான் லாயக்கே தவிர கவிதை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. கவிதையில் சொல்ல வேண்டும் என்றால் மொழியின் ஆளுகை அதில் சிறப்பாக மிளிர வேண்டும்.

    கவிதை என்பது வெட்டிவிட்டுப் போகும் மின்னல் மாதிரி இருக்க வேண்டும். சுருக்கென்று உள்ளத்தில் தைக்க வேண்டும். வெற்று வார்த்தை கோர்வைகளாய் இருந்தால் அதன் அழகைக் குலைத்தவர்கள் ஆவோம்.

    எதுகை, மோனை இருந்தாலே தன்னாலே கவிதைக்கு ஒரு அழகு வந்து விடும். அளவு தெரிந்த மொழி ஆளுகை இன்னும் அழகு கூட்டும்.

    ReplyDelete
  26. //பதிவின் கருத்துக்கள் எல்லோருடைய கருத்துக்கும் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை.//

    ஒத்துப் போக வேண்டும் என்று நானும் சொல்ல வில்லை.

    நீங்கள் ஒரு பதிவு போடுகிறீர்கள்.
    அது கதை,கவிதை,ஆன்மீகம் என்று பலவிஷயங்களைத் தொட்டுச் செல்லும் பொழுது, அந்த பதிவைப் படிக்கும் நான் அது விஷயத்தில் எனக்குத் தெரிந்த கருத்துக்களை சொல்கிறேன். நான் சொல்வது பல நேரங்களில் உங்கள் பதிவை விட
    நீளமாக அமைந்து விடுவது அது விஷயத்தில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டைச் சொல்கிறதே தவிர
    வேறெந்த விசேஷ அர்த்தமும் அதற்கு இல்லை.

    இந்த மாதிரியான பின்னூட்டங்கள் ஒருவழிப் பாதையாக அமைந்து விடுவது தான் சோகம்.

    ReplyDelete
  27. மிகவும் ரஸித்தவை: [1]

    // இராஜராஜேஸ்வரி said...
    வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ”என்னும் சொற்றொடர்

    ’பூ வனம்’[மாய்] ’ஜீவி’க்கும் அந்த தொடர்.

    ReplyDelete
  28. மிகவும் ரஸித்தவை: [2]

    ஜீவி said...

    //கவிதை என்பது வெட்டிவிட்டுப் போகும் மின்னல் மாதிரி இருக்க வேண்டும். சுருக்கென்று உள்ளத்தில் தைக்க வேண்டும். வெற்று வார்த்தை கோர்வைகளாய் இருந்தால் அதன் அழகைக் குலைத்தவர்கள் ஆவோம்//

    இது இவ்வாறு இருக்க யார் யாரோ எதையெதையோ எப்படி எப்படியோ உரைநடையாக எழுதிவிட்டு, அதைக் கவிதை என்றும் தான் கவிஞர் என்று சொல்லித் திரிகிறார்களே !

    ReplyDelete
  29. //கவிதை என்பது வெட்டிவிட்டுப் போகும் மின்னல் மாதிரி இருக்க வேண்டும். சுருக்கென்று உள்ளத்தில் தைக்க வேண்டும்.//

    நான் ஒரு கவிதை படித்தேன் ....
    எழுதியவர் பெயர் நினைவில் இல்லை.

    வெட்டிவிட்டுப்போகும் கொடிமின்னல் போலவே இருந்தது. சுருக்கென்று என் உள்ளத்தில் தைத்தது. இன்றும் என்னால் அந்த வரிகளை மறக்க இயலாமல் உள்ளது.

    இதோ அது:

    ”அவள் குனிந்து கூட்டினாள் .....
    என் மனம் குப்பையானது !”

    ReplyDelete
  30. ஓஹோ, இங்கேயும் "ஜீவி"சார் தானா? மரமண்டைக்கு இப்போத் தான் புரியுது. :)

    ReplyDelete
  31. ஏதாவது கருத்தை விளக்கி எடுத்துச் சொல்ல, கவிதையைவிட கட்டுரைதான் லாயக்கு, ஏனென்றால் கவிதையில் சொல்ல மொழியில் ஆளுமை வேண்டும் என்கிற ஜீவி ஸாரின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    மொழி ஆளுமை மிகுந்தவர்கள் கவிதையில் சொல்லி நம் மனதிலும் பதிந்திருக்கின்ற வரிகள் ஏராளம்.
    சிறுவயதில் படித்த நண்பரின் கவிதை அவர் மனதில் நின்றதுபோல எனக்கும் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    புகழேந்தி என்ற என் நண்பன் ஒருவன் தனது நோட்டில் 'பிடி இழந்த அரிவாள் போலே பிறை நிலவு தோன்றுதம்மா' என்று எழுதி வைத்திருந்தான். அது அவன் எழுதியதா, (ஒன்பதாவது அல்லது பத்தாவது படிக்கும் காலம்) அல்லது வேறு யாரோ எழுதி இருந்ததை அவன் எழுதி வைத்திருந்தானா என்று தெரியவில்லை. அவன் எழுதியதாகத்தான் சொல்லிக் கொண்டான். எப்படியோ அந்த வரிகள் இன்றுவரை எனக்கு மறக்கவில்லை!

    ஒரு கருத்தை ஒட்டி பல கருத்துகள் உருவாவது இயற்கை. படிக்கப்படும் ஒருவரியின் தாக்கம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதைப் பகிரும்போது அதிலிருந்து பற்றிக் கொண்டு வேறு பொருள்களிலும் உரையாடுவது பொழுதுபோக்குள்ள/பயனுள்ள வெட்டி அரட்டை! :)))

    ReplyDelete

  32. @ ஜீவி
    விடை தெரிந்தும் சொல்லக் கூடாது என்று இருக்காது கோமதி மேடத்துக்கு. ஒருவேளை தவறாய் இருந்து விட்டால் என்னும் அச்சமும் காரணமாய் இருக்கலாம்.

    ReplyDelete

  33. @ ஜீவி
    முதலில் நான் எழுதுவதை நானே கவிதை என்று நினைப்பதில்லை. மனசில் தோன்றுவதைச் சுருக்கமாக சொல்ல நான் கையாளும் ஒரு முறை என்றே நினைக்கிறேன் திரு ஞான சம்பந்தம் அவர்களின் பின்னூட்டம் அதற்கு வலு சேர்க்கிறது. எனக்கு மொழி ஆளுமை இருக்கிறதென்று என்றுமே நினைத்ததில்லை. முன்பு ‘தகப்பன் சாமி அல்ல தாத்தா சாமி என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் நேரம் இருந்தால்படித்துப் பார்க்கவும் . வருகை தந்து கருத்திடுவதற்கு நன்றி ஜீவி சார்.

    ReplyDelete

  34. @ கோபு சார்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. வெட்டி விட்டுப் போகும் மின்னல் மாதிரியான சில கவிதைகளை உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்த ஜீவி சாருக்கும் நன்றி
    நான் பிரத்தியேகமாக என் பதிவின் ஆரம்பவரிகளுக்குச் சொந்தக் காரர் யார் என்று சொல்லும் அவசியமே இல்லை.பின்னூட்டங்களில் நன்றாகவே கோடி காட்டப் பட்டிருக்கிறது வரிகளின் சொந்தக்காரருக்கு என் நன்றிகள்.

    ReplyDelete

  35. @ கீதா சாம்பசிவம்
    பின்னூட்டங்களை எல்லாம் படித்தும் புரிந்திருக்க வில்லை என்று நான் நினைக்கவில்லை....!

    ReplyDelete

  36. @ ஸ்ரீராம்
    முன்பு ஒரு பதிவில் எது கவிதை என்று எழுதி இருந்தேன் பலவிதமான கருத்துக்கள் வந்தன.தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு மூத்த பதிவர் சொன்னார். ‘ நீங்கள் எழுதுவது கவிதையே. நான் சொல்கிறேன்’ இன்னொரு பதிவின் பின்னூட்டமொன்றில் ஒருவர் “கவிஞர்கள் கவிதாயினிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட நன்றாகவே எழுதுகிறீர்கள்’ என்று எழுதி இருந்தார் திரு ஜீவிக்கு கொடுத்துள்ள மறுமொழியில் ‘தகப்பன் சாமி அல்ல தாத்தா சாமி ‘ என்னும் பதிவைக் குறித்திருக்கிறேன் சுட்டி கொடுக்க மறந்து விட்டேன் இங்கே தருகிறேன் படித்துப் பாருங்களேன். ஸ்ரீ இங்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஆங்கில சொல் வழக்கின் தமிழாக்கம் “ நீ தர்க்கத்தில் வெல்லலாம் . ஆனால் அதே சமயம் ஒரு நண்பனையும் இழக்கலாம்”பதிவுகளும் பின்னூட்டங்களும் ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் நீ சொல்வது தவறு நான் சொல்வது சரி என்னும் தர்க்க மேடை ஆகக் கூடாது. நாம் எழுதுவதை defend செய்ய வேண்டும் என்றகட்டாயத்துக்கு ஆளாகக் கூடாது. வருகைக்கு நன்றி.
    gmbat1649.blogspot.in/2010/12/blog-post_25.html

    ReplyDelete
  37. // ஸ்ரீ இங்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஆங்கில சொல் வழக்கின் தமிழாக்கம் “ நீ தர்க்கத்தில் வெல்லலாம் . ஆனால் அதே சமயம் ஒரு நண்பனையும் இழக்கலாம்”//

    ஜீவி ஸார் எழுதி இருந்த பின்னூட்டம் படித்ததும் மனதில் தோன்றியவற்றை எழுதினேனே தவிர, உங்களைக் காயப்படுத்தும் நோக்கம் சிறிதும் எனக்கில்லை. நான் எழுதிய வரிகள் அந்தப் பொருளைக் கொடுத்திருக்குமாயின் மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  38. அப்போ நான் எழுதுவதெல்லாம் வெறும் தர்க்கத்திற்காகத் தானா?
    அது தான் தங்கள் புரிதலா?

    ReplyDelete
  39. // 'பிடி இழந்த அரிவாள் போலே பிறை நிலவு தோன்றுதம்மா'//

    ஸ்ரீராம்! நீங்கள் சொன்ன இந்த குறுங்கவிதையில் 'அம்மா'என்ற அசைச் சொல் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது, பாருங்கள்'
    என்று ரசித்து எழுதிக் கொண்டிருந்தேன். ஜிஎம்பீ சாரின் தர்க்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் சோர்ந்து உடனே நீக்கி விட்டேன். அந்த ரசனையையே நேராகவே தங்களிடம் பகிர்ந்து கொண்டால்
    போச்சு!

    ReplyDelete

  40. @ ஸ்ரீராம்
    இந்தமறு மொழியே தேவைதானா என்னும் எண்ணம் எழுந்தாலும் to make records straight எழுதுகிறேன். நான் நண்பர் ஜீவியின் பதிவில் இருந்த சில வரிகளால் ஈர்க்கப்பட்டு என் எண்ணங்களை பதிவில் வடித்தேன். அதில் கூறப்பட்டுள்ள வரிகளை ஒட்டியோ வெட்டியோ கருத்திடலாம்.ஆனால் அதைவிட்டு நீங்கள் கூறுவது போல் அதிலிருந்து பற்றிக் கொண்டு வேறு பொருளில் கருத்திடுவதோ உரையாடுவதோ ஒரு ”பயனுள்ள” பொழுது போக்காயிருக்கலாம் இருந்தாலும் அது வெவ்வேறு புரிதல்களைக் கொடுக்கும் “வெட்டி” அரட்டையாகவும் இருக்கலாம்.வெட்டி விட்டுப் போகும் சில மின்னல் வரிகளைநினைவு படுத்தலாம். ஏன், அந்த மாதிரியான சில வரிகளின் தாக்கம்தானே என் பதிவு...!அதை விட்டு கவிதைகள் பற்றியும் அவைகளில் கருத்துக் கூற மொழி ஆளுமை பற்றியும் எழுதுவது இந்தப் பதிவில் அது இல்லை என்று குறிப்பிடுவதுபோலவும் தோன்றிகிறதல்லவா. அதற்குத்தான் பிற வாசகர்களின் கருத்துகளை வெளியிட்டிருந்தேன் என் புரிதலில் தவறு இல்லை என்றே எண்ணுகிறேன் எதையும் கண்டு கொள்ளாமல் போக என் சுபாவம் இடம் கொடுக்கவில்லை. இந்தக் கருத்துகளும் ஒரு தெளிவை ஏற்படுத்தவே அல்லாமல் யாரையும் நோகடிக்க அல்ல. என் நன்றிகளுடன்

    ReplyDelete

  41. @ ஜீவி,
    /ஜீவி said...

    // 'பிடி இழந்த அரிவாள் போலே பிறை நிலவு தோன்றுதம்மா'//

    ஸ்ரீராம்! நீங்கள் சொன்ன இந்த குறுங்கவிதையில் 'அம்மா'என்ற அசைச் சொல் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது, பாருங்கள்'
    என்று ரசித்து எழுதிக் கொண்டிருந்தேன். ஜிஎம்பீ சாரின் தர்க்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் சோர்ந்து உடனே நீக்கி விட்டேன். அந்த ரசனையையே நேராகவே தங்களிடம் பகிர்ந்து கொண்டால்
    போச்சு!/ உங்கள் சரியான முடிவுக்குப் பாராட்டுக்கள். வருகைக்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  42. 'தாமதம் பேரிழப்பு' என்றவருக்கு பதிவுகள் பின்னூட்டங்கள் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.

    ReplyDelete

  43. @ A.Durai
    அன்பின் துரைஅவர்களுக்கு, ஏ.துரை என் மதிப்பிற்குரிய அப்பாதுரைதான் என்று அண்மையில் அறிந்தேன். சில பின்னூட்டங்கள் பூடகமாக எதையோ தெரிவிக்கதெளிவில்லாமல் மண்டை காய்வது என்னவோ உண்மை. அதேபோல்தான் இருக்கிறது இந்தப் பின்னூட்டமும். பின்னூட்டத்தில் தெளிவிக்க விரும்பாவிடில் மெயிலில் தெரிவிக்கலாமே. என்னையே குறை கூறுவதாயிருந்தாலும் பரவாயில்லை. முன்பே எறிகின்ற சாயம் என்று எழுதி இருந்தீர்கள். தாமதமாக வந்தாலும் நன்றி

    ReplyDelete
  44. ஹிஹி மண்டை காயுதா? ஒரு காலத்தில் அடிக்கடி பயன்படுத்திய தொடர். மறந்தேன்.

    'தாமதமாக வருபவர்கள் நிறைய இழப்பவர்கள்' என்ற பொருளில் ஒரு ஆங்கில சொலவடை உண்டு (come late, lose big). இந்தப் பதிவுக்கு நான் தாமதமாக வந்து எதையும் இழக்கவில்லை, மாறாக பெற்றிருக்கிறேன் என்பதே என் பின்னூட்டம்.

    ReplyDelete

  45. @ அப்பாதுரை
    மேலே கண்டுள்ள பின்னூட்டங்களைக் குறி வைத்து எழுதப் பட்ட பின்னூட்டம் என்று எண்ணி இருந்தேன். /தாமத மாக வந்து எதுவும் இழக்கவில்லை. மாறாகப் பெற்றிருக்கிறேன்/என்கிறீர்கள் நன்றி.

    ReplyDelete