அநுபவம் கற்றது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநுபவம் கற்றது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 செப்டம்பர், 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ. ?

வீழ்வேனென்று நினைத்தாயோ.?
----------------------------------------------

பதினாறாம் தேதி மதியம் உணவருந்திக் கொண்டிருந்தேன்.
தொலைக் காட்சிப் பெட்டி எதிரே சோபாவில் அமர்ந்து
இருந்தேன். இடுப்பு வேதனையால் எழுந்து நடமாட முடியாமல்
இருந்ததால் மனைவியே சாதம் பிசைந்து கொடுப்பாள். குழம்பு
சாதம் சாப்பிட்டு தயிர் சாதத்துக்காக சாப்பாட்டுத் தட்டை
மனைவியிடம் கொடுத்தேன்.திடீரென்று தலைக் குப்புற
வீழ்ந்து இருக்கிறேன். ஏதும் புரியாத மனைவி அழுது அலறத்
துவங்கி இருக்கிறாள். கண்களில் கண்ணீர் கரகரவென வழிய,
"ஐயோ ,என்ன ஆயிற்று" என்று கதறிக் கொண்டிருந்தாள்.சில
வினாடிகளில் எழுந்திருந்த நான் “என்னம்மா அழுகிறாய்;
என்ன ஆயிற்று.?”என்று விசாரிக்கவும், அழுது கொண்டே
நடந்ததை விவரித்தாள். அப்போதுதான் நான் சோபாவின் கீழே
இருப்பதும், என் கண்ணாடி கீழே விழுந்து கிடந்ததும்,பார்த்தேன்
அந்த அவசரத்திலும் நான் இடுப்புக்கு அணிந்திருந்த பெல்ட்
பேடை என் மனைவி அவிழ்த்திருந்தாள். என் இடது கண்ணின்
மேல் புருவ பாகம் நேராகத் தரையில் மோதியதும் என் மூக்குக்
கண்ணாடி என் இடக்கண்ணின் பக்க வாட்டில் குத்தி மெட்டல்
ஃப்ரேம் கோணலாகிப் போனதும் தெரிந்தது என் மனதில்
தோன்றியதை உடனே என் மனைவியிடம் கூறினேன். “நீ
அழாதே. நான் தான் அவனை எட்டி உதைத்துவிட்டேனே. I HAVE
JUST KICKED HIM " என்றேன்.

உடனே என் மக்களுக்கு செய்தி பறந்தது. பெரியவன் வெளியூரில்
இருந்தான். சின்னவன் அடுத்த நாள் டெல்லி செல்ல திட்டமிட்டு
இருந்தான். அதை கேன்சல் செய்து உடனே ஓடி வந்தான். என்னை
அவன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

எந்தஒருமுன் அறிவிப்புமின்றிதிடீரென்று நான் குப்புறவீழ்ந்திருக்
கிறேன். எனக்கு இடுப்பு வலி தவிரவேறு உபாதைகள் இருக்க
வில்லை. ரத்த அழுத்தம் சர்க்கரை, கொழுப்புஎன்று எதுவும்
கிடையாது. தலைசுற்றல் மயக்கம் எதுவும் இருக்கவில்லை.
சுருங்கச் சொல்லப்போனாலெந்த மாதிரி முடிவு எனக்கு வர
வேண்டுமென்று நான் வேண்டிக் கொண்டிருந்தேனோஅது அடுத்து
வந்து எகிறி விட்டது. நான் “ காலா, என்னருகே வாடா, ;உன்னை
சற்றேமிதிக்கிறேன் என் காலால்” என்று அடிக்கடி நினைப்பதும்
கூறுவதும் எழுதுவதும் உண்டு. எனக்கே தெரியாமல் என்னை
அழைக்க வந்தவனை நிஜமாகவே நான் உதைத்து விட்டேனா.?
என் மனைவியைப் பார்த்தபோது நான் உணர்ந்தது இதுதான்.
நான் போய்விட்டேன் என்றே நினைத்துக் கதறி இருக்கிறாள்.
நான் உண்மையில் போனால் எப்படிக் கதறுவாள் என்றும்
கண்டு கொண்டேன்.

முண்டாசுக் கவிஞனின் கவிதை வரிகளில் உள்ளதுபோல்தேடிச்
சோறு நிதம் தின்று,கவலைகளில் உழன்று, ( ஆனால் நான்
அறிந்து யாரையும் கவலையில் உழலச் செய்ய வில்லை )நரை
கூடிக் கிழப் பருவமெய்தி வேடிக்கை மனிதர் போல் வீழ்வே
னென்றுநினைத் தாயோஎ ன்று கேள்வி கேட்பது அபத்தம் போல் தோன்றுகிறது.

நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
 கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.
மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி  இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை. இருப்பவர்
களுக்கே எல்லா கஷ்டங்களும் நஷ்டங்களும். அதுவும் சிறிது காலத்துக்குத்தான் பிறகு எல்லாம் மறந்து விடும். என்னைப்போல்
இருப்பவர் போவதால் எந்த பாதகமும் யாருக்கும் இருக்கப்
போவதில்லை. நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை
முடித்துவிட்டேனே.!இனி நான் இருப்பதால் எந்த பலனும் இல்லை.
போவதால் எந்த நஷ்டமும் இல்லை.

இன்று நான் என் இல்லத்துக்கு போவதாக இருக்கிறேன். என்னை
மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். தலையில் எம்.ஆர். ஐ.
எடுத்தார்கள். எந்த பாதிப்போ பிரச்சனையோ இல்லை.கண்கள்
மட்டும் பாக்சிங்கில் குத்து வாங்கியவன் கண்கள் போல ப்ளாக்
ஐயுடன் இரத்த சிவப்பாக இருந்தது. இப்போது அதுவும் தேவலை.

என் இடுப்பும் நிதானமாகத் தேறி வருகிறது. ஆங்கிலத்தில் சொல்
வது போல ALL IS WELL THAT ENDS WELL. உட்காரவும் எழுந்து
நிற்கும்போதும் சிறிது சிரமமாக இருக்கிறது. மற்றபடி 90%
நலமாகி விட்டேன்.

ஒரு கொசுறு செய்தி. -என் மனைவி பாத் ரூம் சென்றிருந்தபோது
யாரோ அழைப்பு மணியை விடாது அழுத்த நிதானமாக எழுந்து
நான் கதவைத் திறக்கச் சென்றிருந்தேன். பாத்ரூமிலிருந்து
வந்த என் மனைவி என்னைக் கட்டிலில் காணாமல் கீழே
தேடியிருக்கிறாள்.!

ஒரு கற்பனை.- நான் மட்டும் நானாக இல்லாமல் என் நினைவாக
மாறியிருந்தால் என்ன மாதிரி சம்பாஷ்ணைகளும் பேச்சுகளும்
நடந்து கொண்டிருக்கும். !

விடாமல் தொடர்ந்து நான் வலைக்கு வர இன்னும் சிறிது காலம்
பிடிக்கலாம். வித்தியாசமான பதிவுகள் இட எண்ணிக் கொண்டு
இருக்கிறேன். என் முந்தைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்
பெரும்பாலும் என் உடல் நலம் வேண்டியே இருந்தன. எல்லோ
ருக்கும் என் மனமார்ந்த நன்றி.
--------------------------------------------------------------------------



.






செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஜப்பானில் நான்...

 

       
என்னுடைய ஜப்பான் பயணத்தை இருபத்தைந்து வருடத்துக்குப்
பிறகு நினைவு கூர்ந்து பதிவில் எழுதுவேன் என்று எண்ணி
யிருந்தால் அப்போதே நிறையக் குறிப்புகள் எடுத்து வைத்து
இருப்பேன்.நான் திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்
சாலை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாளனாக
இருந்த சமயம் அது.கொதிகலன் தொழிற்சாலையிலேயே தனிப்
பட்டு இயங்கக்கூடிய சாத்தியக் கூறுகள் வால்வ் டிவிஷனுக்கு
இருந்தது. அதாவது அது மற்ற உற்பத்திகளிலிருந்து வேறுபட்டு
இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் கூறுவதல்ல இப்பதிவின்
நோக்கம் BHELதன் உற்பத்திப் பொருட்களுக்கு நிறைய வெளிநாட்டு
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. வால்வ்
டிவிஷனுக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இருந்தது. அதில் ஒனறு ஜப்பானில் இருந்த TOA VALVE கம்பனி.
அவர்களுடைய உற்பத்தியின் நெளிவு சுளிவுகளை அறியவும்
நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் BHEL சிலரை
ஜப்பானுக்கு அனுப்பியது.

வாழ்க்கையில் முதன் முறையாக ஆகாய விமானத்தில் பறக்கும்
அனுபவம். அதுவும் வெளிநாட்டுக்குச் செல்லும் அனுபவம்
அடியேனுக்கு வாய்த்தது சென்னை வரை ரயிலில் சென்று,அங்கு
பயண ஏற்பாடுகள் செய்து, விமானத்தில் டெல்லி சென்று,
அங்கிருந்து, ஒசாகா செல்ல வேண்டும். நாங்கள் செல்ல
வேண்டிய விமானம் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட
வேண்டும். ஆனால் பதினொரு மணியாகியும் புறப்படத் தாமத
மானது. விமான நிலையத்திலோ, விமானத்திலோ BOMB இருப்
பதாக செய்தி வந்ததாகவும்,அதனால் தாமதமானதாகவும் பிற்பாடு
அறிந்தோம்.ஏகப்பட்ட ஆர்வத்துடனும், பயத்துடனும் விமானம்
ஏறினேன்.இவனுக்கு எதுவும் தெரியாது, உடன் வந்தவர் வழி
 நடத்திச் செல்லவேண்டும் என்று வந்திருந்த உறவினர்கள்
ஒருவரை ஒருவர் வேண்டிக் கொண்டனர். என்னை வழியனுப்ப
யாரும் வர முடியவில்லை. மற்றவர்கள் செய்வது கண்டு அதே
போல் நானும் சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு, விமானப் பணிப்பெண்
சொல்லும் விதிமுறைகளையும் ஆபத்து காலத்திய வழிமுறை
 களையும் பயத்துடன் கேட்டுக் கொண்டேன் தலை சுற்றலாம்
 வாந்தி வரலாம் என்று ஏகத்துக்கு பயமுறுத்தி இருந்தார்கள்.
எதுவுமே நிகழவில்லை வானத்திலிருந்து இரவில்சென்னையைக்
கண்ட போது,கீழே கண்ட விளக்குகள், வைரங்களை வாரி
இரைத்தது போல் காட்சியளித்தது.இரவு நேரமானதால் சென்னையை   பார்க்கமுடிய வில்லை.

டெல்லி சென்றதும் விமான நிலையத்தருகில் ஐந்து நட்சத்திர
ஓட்டலான HOTEL CENTAUR-ல் தங்க வைக்கப் பட்டோம்.பின்
ஜப்பான் செல்லும் விமானம் ஏறினோம். BHEL-நிறுவன அதிகாரி
என்ற முறையில் எங்களுக்கு CLUB என்ற BUSINESS CLASS ஏற்பா
டாகியிருந்தது. டெல்லியிலிருந்து பாங்காக் வழியாக ஒசாகா
செல்லவேண்டும்..முதலில் எங்களுக்கு எகனாமி வகுப்பில் இடம்
கொடுத்து பாங்காக் சென்று மாற்றுவதாக உறுதியளித்தனர்.
பாங்காக் வரையிலான பயணம் எனக்கு, திருச்சியிலிருந்து
துவாக்குடி செல்லும் பஸ் பயணத்தையே நினைவு படுத்தியது.
பயணிகள் பெரும்பாலோர் நம் நாட்டு கிராம வாசிகளைப்போல்
தோற்றமளித்தனர். நிறைய பேர் இஸ்லாமிய சமூகத்தினர்போல்
இருந்தனர். பாங்காக்கில் பிசினெஸ் வகுப்புக்கு இடம் மாற்றிக்
கொடுத்தனர் வசதியான இருக்கை Slumberette like Hot drink இலவச
விநியோகம்.சாப்பாடுதான் பெரிய பிரச்சினையாய் இருந்தது.

மறுநாள் என் வாட்சில் காலை பதினொரு மணியென்று காட்ட
நாங்கள் ஒசாகாவி ல் இறங்கினோம் எங்களை வரவேற்க
வந்திருந்த டோவா பிரதிநிதி கொடி பிடித்து அடையாளம்
காட்டினார். அப்போது அங்கே மதியம் இரண்டு மணி என்று
இருந்ததாக நினைவு. எங்களை நாங்கள் தங்கும் இடத்துக்கு
அழைத்துச் சென்றார். பல மாடிக் கட்டிடம்,அது ஒரு ஓட்டல்
போல் இருக்கவில்லை. ஹாஸ்டல் போல இருந்தது. அதை
பராமரிப்பவர் முதலில் எங்களுக்கு ஒரு பாடமே எடுத்தார்.
அந்த இடத்தின் விதி முறைகளை விளக்கிக் கூறினார் என்று
பிற்பாடு புரிந்து கொண்டோம். வசதியான தனி அறை. ஒரு
நாளைக்கு 40- டாலர் வாடகை என்று நினைவு. அவர்கள்
கொடுக்கும் உணவு எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.நானோ
முட்டைகூட சாப்பிடாத 100% சைவம். எதையும் கேட்டுத்
தெரிந்து கொள்ள முடியாதபடி மொழிப் பிரச்சனை. அங்கிருந்த
வெண்டிங் மெஷினில் க்ரீன் டீ எப்போதும் கிடைக்கும்.
சாப்பிடுவது என்ன என்று தெரியாமல் சாப்பிட முடியாததால்
பெரும்பாலும் காலையில் ப்ரெட் சாப்பிடுவேன். அங்கிருந்தவரை
உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது. ஜப்பானியர்கள்
அரிசி சாப்பிடுவர்ர்கள் என்று கேட்டறிந்து வீட்டிலிருந்து பருப்புப்
பொடிவகைகள் எடுத்துச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில்
அவை ஏதேனும் போதைப் பொருள்வகையைச் சேர்ந்ததா என்று
சந்தேகப்பட்டுக் கேட்டனர். அவர்கள் கொடுக்கும் சாதம் குழைந்து
இருக்கும். பருப்புப் பொடிகளும் அதிகம் உதவ வில்லை. இதனால்
நான் புகைத்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக்கூடியது
மாலைநேரங்களில் இந்திய ரெஸ்டாரண்ட் தேடி அலைந்து
உண்ண ஆரம்பித்தோம். எதிர்பார்க்காத அளவுக்கு செலவு எகிர
ஆரம்பித்தது.

அங்கிருந்தபோது இந்த ஜப்பானியப் பெண்கள் குறித்து எப்போதும்
ஒரு சந்தேகம் வரும். அவர்களுடைய வயதைக் கணிப்பதே மிகக்
கஷ்டம். எல்லோரும் மெழுகு பொம்மைகள் போல் தோற்றம்
கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு விதமாகக் குதித்துக் குதித்து
நடப்பார்கள். சாதாரணமாக நடக்கும்போது அவர்களது முடி பின்
பக்கம் மேலும் கீழும் பறந்து அடங்கும்.

ஒரு முறை ஒரு உயரமானக் கட்டிடத்திலிருந்து ஒசாகா நகரைக்
காண்பிக்க டோவா பிரதிநிதி அழைத்துச் சென்றார். நாங்கள் லிஃப்ட்
அருகே சென்றதும் அதை இயக்கும் ஒரு பெண் ஏதோ கூறி
எங்களை ஏற்றவில்லை.சற்றுப் பொறுத்து வந்து ஏதோசொல்ல
நாங்கள் லிஃப்டில் நுழைந்தோம். நாங்கள் வெளியேறும்போதும்
ஏதோ கூறினார். எதைச் சொல்லும்போதும் சிரித்துக்கொண்டே
கூறினார்.எங்களுடன் வந்தவரிடம் இது பற்றிக் கேட்டோம்.
முதலில் நாங்கள் ஏறமுற்பட்டபோது லிஃப்டில் இடமில்லாததால்
எங்களை ஏற்றமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தும் , மறுபடி
வந்தபோது எங்களை வரவேற்றும், நாங்கள்இறங்கும்போது
நாங்கள் லிஃப்ட் பயணம் ரசித்ததாக நம்புவதாகவும் தெரிவித்த
தாகவும் விளக்கம் கூறினார். இது மாதிரி லிஃப்டில் ஏறி இறங்கும்
அத்தனை வாடிக்கையாளர்களிடமும் இன்முகமாக பேசிப் பணி
புரியும் அந்தப் பெண்ணின் நினைவு எனக்கு வெகு நாட்களுக்கு
இருந்தது. அந்தப் பெண்ணையும் நம்மிடையே பணியாற்றும்
பலரையும் ஒப்பிட்டு நோக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களை TOA-வின் மேலதிகாரி அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார்
ஒரு ஜப்பானிய குடும்பத்துடன் ஒரு நாள் கழித்ததும் ஒரு
அனுபவம் அவருடைய தாயார் அவருடைய மண நாள் உடுப்பான
KIMONO-வைக் காட்டி மகிந்தார்.எல்லா நாட்டிலும் முதியோர்
குணம் ஒரேபோல் இருக்கிறது.எங்கள் தேவைகளைக் கவனித்துக்
கொள்ள நியமிக்கப் பட்டிருந்த அந்த இளம் அதிகாரி எங்களை ஒரு
ஓட்டலுக்குக் கூட்டிப்போய் ட்ரிட் கொடுக்க விரும்புவதாகக்
கூறினார்,நாங்கள் சரியென்றதும் அவருடைய மனைவியையும்
குழந்தையையும் கூட்டிவரலாமா என்று எங்களிடம் ஒப்புதல்
கேட்டது எங்களுக்கு எங்கோ நெருடியது. எல்லாம் முடிந்து
போகும்போது இது பற்றி அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது அவர் எதோ தவறு செய்
கிறார் என்று எங்களுக்கு உணர்த்தியது.

நாங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பி அவரால் எங்களுடன் கூட வர
இயலாத நிலையில் அவர் ஒரு உபாயம் சொன்னார்.ஜப்பானில்
பெரும்பாலோருக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. ஆங்கிலத்தில்
ஏதாவது கேட்டால் அரண்டு ஓடுகிறார்கள். இதைத் தவிர்க்க. சில
பொதுவான கேள்விகளை ஆங்கிலத்தில் நாம் கேட்க அதை எழுதி
அதன் கீழே அதையே ஜப்பானிய மொழியில் எழுதிகொடுத்தது
ஓரளவுக்கு உதவியாக இருந்தது கடைகளில் நாம் ஒரு பொருளை
கையில் எடுத்து பேரம் பேச முற்பட்டால் , முதலில் அந்தப்
பொருளை நம் கையிலிருந்து வாங்கி வைத்துக் கொண்ட பிறகே
பேச ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு
ஓடிவிடுவோமோ என்ற பயமாயிருக்கும்.

வால்வ் ஷாப்பில் ஒரு மெஷின் வாங்குவதற்கு ஏதோ திட்டம்
இருந்திருக்கும் போலிருக்கிறது அந்த மாதிரி மெஷின் தயாரிக்கும்
ஒரு கம்பனியிலிருந்து ஒருவர் எங்களை சந்தித்து உரையாடிக்
கொண்டிருந்தார். எங்களுக்கும் அந்த மெஷினுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்று அறிந்திருந்தும் அவர் எங்களை
உபசரிக்க ஒரு ஓட்டலுக்குக் கூட்டிப் போனார். அதில் உணவு
பரிமாறியவர்கள் எல்லோரும் பெண்கள். அரைகுறை ஆடைகள்
அணிந்து முயல் வேஷத்துடன் இருந்தனர். அது ஒரு வித்தியாச
மான அனுபவம்.

ஒசாகாவில் ஒரு துணி கடை வைத்திருந்த ஒரு சர்தார்ஜி
எங்களிடம் நல்ல சாரிகள் சிலவற்றை விற்றார். இன்னும்
அந்த சாரிகள் என் மனைவியிடம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒசாகாவில் இருக்கும்வரை அநேகமாக மெட்ரோ ரயிலில்தான்
பயணம். அங்கு எல்லோரும் ரயிலில்தான் பயணம் செய்கிறார்
கள். ரயிலில் நல்ல கூட்டமிருந்தாலும் எல்லோரும் ஒரு
ஒழுங்கை கடைபிடிப்பதால் நெரிசலிருந்தாலும் தெரிவதில்லை.
ரயில்பெட்டியின் கதவு வரும் இடங்களில் அடையாளம்
இட்டிருக்கிறார்கள். சரியாக அங்கே மக்கள் நிற்க ரயில் வருவதும்
மக்கள் ஏறி இறங்குவதும் எந்தக் களேபரமும் இல்லாமல்
நிகழ்கிறது. ரயில் வருவதும் போவதும் துல்லியமாக சரியான
நேரத்தில் நிகழ்கிறது. ரயிலின் வரவை வைத்து கடிகார நேரம்
செட் செய்து கொள்ளலாம்.  ஒரு இடத்தின் தூரத்தைக் குறிப்பிட
அவர்கள் ரயிலில் பத்து நிமிஷம் ரயிலில் இருபது நிமிஷம்
 என்றே கூறுகிறார்கள்.

ஒசாகாவிலிருந்து டோக்கியோவுக்கு JAL  ( ஜப்பான் ஏர்லைன்ஸ்)
-ல் பிரயாணம் செய்தோம். விமானத்தின் உள்ளிருந்தே விமானம்
டேக் ஆஃப் செய்வதையும் லாண்ட் ஆவதையும் ஓடு பாதை
தெரியுமாறு இருக்கையில் இருந்தே காணுமாறு CCTV அமைத்து
ஒளிபரப்புகிறார்கள். டோக்கியோவில் டிஸ்னி லாண்ட் கண்டு
களித்தோம். அமெரிக்காவில் இருப்பதன் டிட்டோ பிரதியாம்.


                      ஒசாகாவில் ஒரு சிற்றுண்டி சாலையில்

                              டோக்கியோ நகர வீதி ஒன்றில்

நாங்கள் டிஸ்னி லேண்ட் அவசியம் பார்க்க வேண்டும் என்று
அதற்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து தந்தனர். HATO BUS
என்னும் டோக்கியோவின் சுற்றுலா பேரூந்தில் எங்களை ஏற்றி
அனுப்பி வைத்தனர் டிஸ்னி லேண்ட் முக்கியமாக ஐந்து பிரிவுகள்
கொண்டது Adventure land Western land Fantasy land Tomorrow land
 World  Bazaarஎன்பவற்றில் நாம் எல்லாவற்றையும் ஒரு நாளில்
 காண இயலாதுஅதுவும் எங்களைப் போல் மொழி தெரியாமல்  
ருப்பவர்கள் எங்கு போவது எதை விடுவது என்று குழப்பமடைவது சகஜம்தானே ஒவ்வொரு பகுதியிலும் எதாவது ஒன்றிரண்டு
இடங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். முதலில்  
 அட்வென்சர் லெண்டில் Western river rail road என்று கூறப்பட்ட
ரயிலில் ஏறினோம்.அதில் பயணப்பட்டபோது ஆதிகால அமெரிக்க
காடுகளை சுற்றிப் பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென
ஆதிவாசிகள் தோன்றுவதும் நம்மை பயமுறுத்துவதும்
நம்மைக் கண்டு பயந்து ஓடுவதும் எல்லாம் எதிர்பாரா
அனுபவங்கள்.வெஸ்டெர்ன் லேண்டில் மார்க் ட்வேய்ன் ரிவர்
போட் பயணமும், ஃபண்டசி லேண்டில் சிண்டெரெல்லா காசிலும்
கண்டோம். ஆனால் மறக்க முடியாத அனுபவம் என்றால் அது,
டுமாரோ லேண்டில் ஸ்பேஸ் மௌண்டன் பயணம்தான். இதய
பாதிப்பு உள்ளவர், ஸ்பாண்டிலிடிஸ் மற்றும் பேக் பிரச்சினை
உள்ளவர் அதில் பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பு
இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விட எங்க்ளுக்கு மனசில்லை. ஏறிவிட்டோம். அது
எங்களை இருண்ட அண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதி
வேகபயணம். எதிரில் நட்சத்திரங்களும் கிரகங்களும் வேகமாக
எங்களை நோக்கி வருவது போல் பக்கத்தில் பறக்கும் இருட்டில்
அந்த பயணம் ஐந்து நிமிடத்துக்குள் இருக்கும். அதை விட்டு
நாங்கள் இறங்கும் போது எங்கள் கால்கள் தரையில் பாவாமல்
நாங்கள் மிதப்பது போல் உணர்ந்தோம். என் உடன் வந்த நண்பன்
நடக்க முடியாமல் தலை சுற்றல் வந்து அங்கேயே உட்கார்ந்து
விட்டான். அவன் சகஜ நிலைக்கு வர ஒரு மணி நேரத்துக்கும்
மேலாயிற்று. ஊர்பேர் தெரியாத வெளிநாட்டில் மிகவும் பயந்து
விட்டேன்.

இந்த பயணத்தின் கடைசி கட்டமாக இந்தியா திரும்பினோம்.
சென்னை விமானத்துக்கு நிறைய நேரம் இருந்ததால் டெல்லி
சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தோம். செண்டார் ஓட்டலில்
இருந்து வெளியே வரும்போது என் நண்பன் எதிரே கண்ணாடி
சுவர் போல் இருப்பது கவனிக்காமல் அதன் ஊடே நடக்க அவன்
மேல் அந்தக் கண்ணாடிச் சுவர் தப தப வென விழ, தலையில்
இருந்து ரத்தம் ஆறாகக் கொட்ட யார்யார் உதவியையோ நாடி,
அவனை மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் சிகிச்சைஅளித்து
தலையில் ஏகப்பட்ட தையல்களுடன் ஓட்டலுக்கு வந்தது ஒரு
மறக்க முடியாத அனுபவம்.

ஏதுமே அறிந்திராத நான் எப்படியெல்லாமோ அனுபவப்பட்டு என்
நண்பனை அவன் வீட்டில் சேர்ப்பித்தபோது நன்றியுடன் அவன்
பெற்றோர் என்னிடம் பேசியதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம்
மற்ந்து ஏதோ சாதித்தது போல் உணர்ந்தேன்.
-------------------------------------------------------------
 (பழைய புகைப் படங்களை மொபைல் கேமராவில் படம் பிடித்து 
    கணினியில் ஏற்றியது.)
                                                                                     



புதன், 25 மே, 2011

பரிகாரம்

பரிகாரம்.
------------
                 சில நேரங்களில்  ஆர்வக்கோளாரால் எதை எதையோ
எழுதி விடுகிறோம்(றேன்) பிறகு ஆர அமர ஆலோசித்தால்
அதை எழுதி இருக்கவேண்டாமோ என்று தோன்றுகிறது.
“இப்படியுமா” என்ற பதிவைத்தான் கூறுகிறேன். இதனால்
யாருக்கு என்ன லாபம். வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக்
காட்டியதால் என்ன பிரயோசனம்.? எழுதும் முன்பே என்
மனம் அலைக்கழிந்தது என் பதிவைப் பார்த்தாலேயே தெரியும்.
மேலும் டாக்டர் கந்தசாமியின் பதிவு படித்த பிறகு  என் தவறு
மிகவும் உறைக்க ஆரம்பித்தது. அந்த பதிவினைப் படித்தவர்கள்
அதிகம். கருத்து பகிர்ந்தவர் வெகு குறைவு. இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது  இனிமேல் இந்த மாதிரியான சென்சேஷனல்
பதிவுகள் எனக்கு உகந்ததல்ல என்பதுதான். அவசரப்பட்டு பதிவு
போட்டதற்கு வருந்துகிறேன். அதற்கு பரிகாரம் இந்தப் பதிவு.