பக்தி ..கதை ..கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி ..கதை ..கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூன், 2011

சாதாரணன் இராமாயணம்

சாதாரணன்   இராமாயணம்.
---------------------------------------

                        பால   காண்டம்.
                        ----------------------
      பூதேவி ஸ்ரீதேவி  இருபுறம் இருக்க,
      அனைத்துலகாளும்  ஆபத்பாந்தவன், 
      அனாதரட்சகன், பாம்பணையில் துயிலும்
      பரந்தாமன , அமரர் ம்ற்றேனையோர் துயர் 
      துடைக்க, தீவிலங்கை அரக்கர்கோனை
      வேருடன் அழிக்க, தயரதன்தன் வேள்விக்குப் 
      பலனாய், ரவிகுலத் திலகமாய் கோசலை மகனாய்
      பரத இலக்குவன் சத்துருகனன் எனும் 
      மூவருக்கும்  மூத்தவனாய் இராமனாய்
      அயோத்தியில் அவதாரம் செய்து 
       சகலகலாவல்லவனாய்த் தேறி வரும் வேளை,
       காட்டில் செய்யும் வேள்விக்கு 
        ஊறு விளைக்கும் அரக்கரை அழிக்க
        இராமனைத் தன்னுடன் அனுப்பப் பணித்த 
       விசுவாமித்திரன்  சொல் தடுக்க இயலாது, 
        வசிட்டனும் கூற , இளவல் இலக்குமனன் 
        கூடச்செல்ல தயரதன் வழியனுப்பக் காடேகி
         வேள்விக்கிடையூறு  ஈந்த சுபாகு உயிரெடுத்து, 
        அவன் தம்பி மாரீசனைத்  தன் அம்பால் கடலில் வீசி
         தாய் அரக்கி  தாடகையை வதம் செய்து, 
         மறைமுனியின்  வேள்வி காத்து ,அவன் 
         பின் செல்லக்  கானகத்தில் கால் இடர
         கல்லும் பெண்ணாக மாற,  பின் மிதிலை
         மாட வீதியில் அண்ணலும் நோக்க அவன் 
         மணக்க இருந்த அவளும் நோக்க
         சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து
         மைதிலியை மணம் புரிந்து, அயோத்தி 
         மீள்கையில் மூவேழு தலைமுறை  மன்னரை 
         அழிக்கச் சூளுரைத்த அந்தணன் பரசுராமன் 
         வில் இறுத்து , அவன் தவம் முற்றும் பெற்று
         அரசாள அயோத்தியில் அவன் தந்தை நாள் குறிக்க, 

                       அயோத்தியா    காண்டம்
                        ----------------------------------

           தாதி கூனி சொல்கேட்டுத் தரணி தன்னைத்
          தன் மகன் பரதன் ஆளக் குலக் குமரன் காடேக
           முன் பெற்ற வரம் கொண்டு கைகேயி வேண்டக்  
          கேட்ட தயரதன் மனம் மயங்கிச் சாய,
          கோசலை மைந்தன் இளவல் இலக்குவன் கூடவர
          வைதேகி பின் தொடர அனைத்தும் துறந்து
           மரவடி அணிந்து கானகம் சென்று, குகன் உதவிட
          கங்கைகடந்து, சித்திர கூடத்தில் இருக்க,
           அயோத்தியில் மயங்கி சாய்ந்த மன்னனும் வானேற
          தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி நீத்து
           குவலயமாள  பணிந்து  வேண்டிய  பரதனும்
           மன்னன் மரவடி பணயம் பெற்றுத் தானும் மீள,
          வனவாசம் துவங்க தண்டகாருண்யம்  புகுந்து,

                               ஆரணிய  காண்டம்.
                               ---------------------------

           ஆரணியத்தில்  அனைவருக்கும் அஞ்சேலென
           அருள் கொடுத்து, அகத்தியன் கை வில் பெற்றவன்
            பால், சீதைக்குத் தான் நிகரென்று காமத்தால் 
            முன் வந்த சூர்ப்பனையின் காதிரண்டும் கொடி மூக்கும்
            இலக்குவன் வாளால் அறுபட, அவள் துணை வந்த
            கரனொடு தூடணன் உயிரெடுக்க அவள் கதறி
            இலங்கையர் கோன் இராவணனிடம் முறையிட
             சீதையை அகல்விக்க மாயமான் உருக்கொண்ட
            மாரீசனால் அலைக்கழிக்கப்பட தவமுனிவேடம் பூண்ட
            அரக்கர்கோன் வஞ்சனையால் சீதையைக் 
            கடத்திக் கடல் சூழ்  இலங்கையில்  கடிகாவில் 
            சிறை வைக்க, மாயமானைச் செற்று வந்தவன் ,
            காதல் மனையாளைக் காணாது வருந்திக் கானகத்தில் 
            தேடியலைய, கோமகளைக் காக்க இயலாத 
            சடாயுவுக்குக் கிரியை செய்து மோட்சமளித்து
            கணையொன்றினால்  கவந்தனை மடித்து,
            சபரி ஈந்த கனி உவந்து உண்டு, 

                           கிஷ்கிந்தா  காண்டம்.
                            ------------------------------

             வைதேகிதனைத்தேட கானகக்  கவியரசன் 
             நட்பு நாட, மராமரம் ஏழு எய்து, தன் திறன் காட்டி
             அவனண்ணன் வாலியைக் கணையொன்றால்   
              முடித்து,தம்பிக்கு முடி சூட்ட,அவன் அமைச்சன்
             திறன் விளங்கு மாருதியும்  மாயோன் தூதுரைத்தல் செப்ப,

                            சுந்தர  காண்டம். 
                            ----------------------

             கடலேறி மும்மதில் சூழ்  இலங்கை புகுந்து,
             கடிகாவில் சிறையிருந்த சீதைதனைக் கண்டு 
             அண்ணல் இராமன் அனுப்பிய தூதன் ,அவன் 
             சொல் கேட்க, அன்னையிடம் விண்ணப்பித்து ,
             அடையாளம் தெளிவிக்க, கைகேசி வரம் கேட்க
             தந்தை சொல் தட்டாது இலக்குவன் சீதையோடு
             இராகவன் கானகம் சென்றதும் ,நால்வரோடு
             ஐவராகிய குகன் கங்கை கடத்தியதும், சித்திர 
             கூடத்தில் பரத நம்பிக்கு மரவடி பணயம் வைத்ததும்
             ஒரு நாள் அண்ணல் மடியில் தலை வைத்திருக்க, 
             ஒரு காக்கை துயர் கொடுக்க அதனை அத்திரம் 
              துரத்த வானெங்கும் பறந்தோடி, அபயம் தேடிக்
             கண் இழந்ததும், பெம்மான் பொன்மானைத்தேடி 
             சிலைபிடித்தேக, ஆங்கே இலக்குவனைப் பிரிந்ததும் 
              கூறி, அயோத்தியர்கோன் அடையாளம்  என அவன்
              கை மோதிரம் காட்ட, அடையாளம் ஒக்கும் 
              என்று உச்சி மேல் வைத்து  உகக்க,மாருதியும் 
             அரக்கர்கோன் மாக்கடிகாவை அழித்து, 
             ஆங்கிருந்த அனைவரையும் கொன்று இலங்கைதனை
             தீக்கிரையாக்கி, அரக்கர்கோன் சினமெழுப்பி, மீண்டு
              அன்பினால் அயோத்தியர்கோன் அடியினைப் பணிய,

                            யுத்த  காண்டம்
                            ----------------------

               அண்ணலும் இளவலும் வானரக் கோனுடன்
               அனுமன் மற்றனைவரோடும் இலங்கை புகல் வேண்டி, 
                கடற்கரையில் வீற்றிருக்க, இராவணன் தம்பி 
                வீடணன் அடைக்கலம் நாட,நல்லாசி புரிந்து
                நுரைகடலைத் தன் அம்பால்  விலக வைத்து
                விலங்குகள்  பணி செய்ய,  கல்லால் அணை கட்டி, 
                மறுகரை ஏறி, இலங்கைப்  பொடியாக்க 
                செஞ்சரங்கள் பல எய்யக் கும்பனொடு நிகும்பனும்
                மாள, இந்திரஜித்தும் அழிய ,கும்பகர்ணன் பட, 
                அரக்கர் அனைவரும் புறங்காட்டி  ஓட
                இலங்கை மன்னன் அத்திரமும் சத்திரமும் அழிந்து
                நிற்க,அன்று சென்று மறுநாள் வர அண்ணலும் கூற,
                பின் வந்தவன் தலை ஒரு பத்தும்,தோள் இருபதும்
                இராமன் விடுத்த சரம் உதிர்க்க,
                வெற்றி கண்ட களத்தில் வானோர் பூமாரி பொழிய, 
                மணிமுடி  தானேற்க ,வீடணன் வானரக் கோனுடன்
                அழகு தேர் ஏறி அனைவரும்  பின் தொடர 
                அயோத்தி எய்தி, நன்னீராடி, மாலைகள் சூடி,
                 திருமுடி தரித்து , மலர்க் குழலாள் சீதையுடன்
                 பரதனும் தம்பி சத்துருக்குனனும் இலக்குமனும்
                அனுமனோடு   அடியேனும்  அடிபணிய 
                 சீரிய சிம்மாசனம் அமர்ந்து , அனைத்துலகும் 
                 அவர் கோல் செலுத்த வாழ்வித்தருளினார்
            ===========================================


          (   இராமாயண காவியம் ஒரு கடல் .எத்தனையோ மகான்கள்
             இராகவனின் அருள் வேண்டி, அவன் கதையை யாத்திருக்கிறார்கள்
             நானும் ஆவலால் உந்தப்பட்டு  ஒரே வாக்கியத்தில்  இந்த 
             சாதாரணனின் இராமாயணம் எளிய கவிதை வடிவில் 
             எழுதி உள்ளேன். படித்துக் கருத்து கூறுங்கள் )
 


             .