செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கெதிராக....

ஊழலுக்கெதிராக....
-------------------------

நாட்டில் ஊழலில்லாத அரசும் அதிகாரிகளும்வேண்டும் என்பதில்
யருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் ஊழலுக்கு
எதிராக செயல்படும் ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக்
கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியா
யத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள். .
ஊழலுக்கெதிரான பலமான சட்ட அமைப்புகள் இல்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. உண்மையில் அந்த மாதிரி ஒரு பலமான
சட்ட மசோதா கொண்டு வரஅல்லவா இவர்கள் பாடுபடவேண்டும்
லோக்பால்போன்ற சட்டமசோதாக்கள் பாராளுமன்றத்தால் நிறை
வேற்றப்பட வேண்டும். பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட 540-க்கும் மேற்பட்ட அங்கத்தினரைக் கொண்டது..இவர்கள்
பல்வேறு கட்சிகளையும் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். .
இப்போது UPA-ல்பிரதான அங்கம் வகிக்கும் காங்கிரஸ்பெரும்
பான்மைக் கட்சியல்ல. அவர்கள் மட்டும் நினைத்து எந்த சட்டமோ
திருத்தமோ கொண்டு வர முடியாது. லோக்பால் மசோதா போன்ற
எதுவும் ,பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் படாமல் நிறைவேற்ற
முடியாது. தங்களைக் CRUSADER- களாகப் பாவித்துக்கொண்டு,
அகில இந்தியாவுக்கும் சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த பஞ்ச
பாண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.?அரசாங்கம் தயாரித்துள்ள
மசோதாவில் இன்ன குறை, இது சரியில்லை, இது மாற்றப்பட
வேண்டும் என்று பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் பேசி, ஒத்தக்
கருத்தை உருவாக்க வேண்டும். அதை விட்டு, பார்லிமெண்டில்
நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை
இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?

நாடு இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்
டியது மிகமுக்கியமானது இன்னிலையில் மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல்பேசுவதும் நடந்து கொள்வதும்
தலைவர்கள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்
செய்யும் செயலாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்து
தெரிவிக்க, கூட்டங் கூட்டி உண்ணாவிரதம் இருப்பதுதான்
வழியா.?

நாம் சுதந்திரம் பெற்று 64- வருடங்கள் முடிந்து விட்டது.உண்மை
யில் ஏழ்மையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஜாதி மத இன
பேதங்களிலிருந்தும் ,போட்டி பொறாமை, பேராசையிலிருந்தும்
சுதந்திரம் பெறவில்லை. அதற்கான வழிமுறைகளில் ஆக்க
பூர்வமாகத் தொண்டு செய்பவர்களை, நிறைகுடங்களாய்த்
தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல்
வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப் படுத்துவது
தவறு என்றே தோன்றுகிறது,

காங்கிரஸைத் தவிர இருக்கும் மற்ற கட்சிகள் அவர்களது
அபிப்பிராயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்களா?ஒத்த
கருத்து ஏதேனும் இருக்கிறதா.?பாராளுமன்ற Standing Committee-ல்
அங்கம் வகிக்கப் போகிறவர்கள் தானே மாற்றுக் கட்சியினரும்.

தீவிரவாதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

முன்பே நான் கூறியுள்ளபடி ஊழலுக்கான அடிப்படைக்
காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.    
   

சனி, 13 ஆகஸ்ட், 2011

தகுதிக் கேற்றபடி.....

தகுதிக்கேற்றபடி....
-----------------------

சாதாரணமாக எனக்கு அரசியல் பற்றி எழுதுவதில் ஈடுபாடு
கிடையாது. ஏனென்றால் இப்போதெல்லாம் அரசியல் கொள்கை
சார்ந்து நடத்தப் படுவது இல்லை.சந்தர்ப்ப வாதிகள் லாப நோக்கம்
கொண்டே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.மக்கள் சேவை மகேசன்
சேவை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்ட கோஷமே. அரசியல்
முழுக்க முழுக்க சுயலாபத்தை எண்ணியே நடத்தப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஆட்சி நடை
பெறுவதாக அரசியல் சாசனப்படிஇருக்கவேண்டும் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடுவது வெறும்50%க்கும் குறைவானவர்
களே.( சராசரி )தேர்தலுக்கு நிற்பவர் எண்ணிக்கை சட்டமன்றம்
என்றால் ஏழெட்டுபேருக்கும் அதிகமாகவே இருக்கிறார்கள். 50%
ஓட்டு இந்த ஏழெட்டு பேர்களுக்குள் பிரிக்கப்பட்டு 25% ஓட்டு
வாங்கினவர்வெற்றி பெருகிறார் இவர் எப்படிமற்ற75% பேர்களால்
ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்சட்டமன்ற தேர்தலுக்கு நிற்க வெற்றி
பெறவோ, தோல்வியடையவோ செய்யப்படும் செலவு தலை
கிறுகிறுக்கவைக்கிறது இவ்வளவு பணம் செலவுசெய்து தேர்தல்
நிற்பவர் இதை ஒரு முதலீட்டாகவே கருதி லாபமடைய நினைக்
கிறார்சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு சம்பளமாகக் கிடைக்கும் பணம்
அவர்கள் செலவு செய்ததில் ஒரு சதவீதம் கூடத் தேறாது.இங்கே
ஊழலுக்கான விதை ஊன்றி விதைக்கப் படுகிறது. போட்ட பணம்
திரும்ப எடுப்பதிலும் லாபம் சம்பாதிப்பதிலுமே எல்லா முயற்சி
களும் நடைபெறும்.இவர்களாவது மக்கள் சேவை பற்றி
சிந்திப்பதாவது..!

தன் வாழ்வில் சம்பாதித்த பணம் அத்தனையும் நாட்டுக்காகக்
கொடுத்த நேரு குடும்பத்தினர் போலவோ, தனக்கென எதையுமே
வைத்துக்கொள்ளாத காமராசர் போலவோ இக்காலத்தில்
அரசியல்வாதிகள் இருப்பது மிகவும் அரிது. அப்படியிருக்கும்
ஒன்றிரண்டு பேரும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின்
கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நல்லது எதுவும் செய்ய இயலாத
கண்ணுகளாக இருக்கிறார்கள்.

அடிப்படையே இப்படித் தவறாக இருக்கும்போது அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் தானே இவர்கள் சம்பாதிக்க
கைகொடுக்கும் ஆதாரங்கள்.?அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள்
ஒழுங்காக நிறைவேற்றப்பட்டால் பலனடைவது நிச்சயம் அதன்
தேவை உணர்ந்தவனாகவே இருப்பான். இலவசங்கள் முதல் ,
மதிய உணவு திட்டம் முதல்கொண்டு குறைந்த பட்ச வருமான
உறுதி திட்டம்வரை , மக்களுக்குச் சேருவது என்னவோ,
அரசியல் வாதி யுடையவும் ,அதிகாரிகளுடையவும் புறங் கையில்
இருந்து வழிவதுதானே.

லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கள்
தவறு செய்ய வழிமுறைகளை வாரி வழங்கி விட்டு ,குற்றம்
செய்ய அனுமதித்துவிட்டு ,நாற்சந்தியில் மடக்கும் காவ்லாளிகள்
போல்தான் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்வதை எப்படித் தடுப்பது
என்பதே முக்கியம். அதைவிட்டு குற்றம் இழைக்க வழி வகுத்து
தண்டிக்க வழிமுறைகள் நாடுவது, எதிர்பார்க்கும் பலன் தராது.
நம்மிடையே ஒரு சொலவடை உண்டு. “கோலத்தில் போனால்
தடுக்கில் போவதும் ,தடுக்கில் போனால் கோலத்தில் போவது
போல” என்பார்கள். நம் மக்கள் அதில் நன்றாகவே தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள்.

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுத்து காரியங்கள் சாதித்துக்
கொள்வதைத் தவறாகக் கருதாத நாம்,மற்றவர்களால் காரியம்
நடக்க லஞ்சம் கொடுப்பதைப் பெரிய தவறாகக் கருதாதவர்கள்.

இந்த நிலையில் நாட்டையே லஞ்ச லாவண்யத்திலிருந்து
காப்பாற்ற வென்றே அவதரித்தவர்கள் போல் எண்ணுபவர்கள்
உண்மையிலேயே அந்த எண்ணம் கொண்டிருந்தால் நான்
என்ற அகந்தையும் மமதையும் இல்லாமல் உண்மையை
விளங்கும் விதத்தில் பேசி, சுமூகமான ஒரு முடிவுக்கல்லவா
வரவேண்டும்.?சரியோ தவறோ நாம் இப்போது இருக்கும்
அரசியல் சட்டத்துக்குள்தான் செயல்பட வேண்டும். நம்மால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் சட்டமியற்றி செயல்படுத்த
வேண்டும். அதற்கும் மீறிய செயல்களை கட்டாயப்படுத்தி
நிறைவேற்ற ,மக்களுக்கு உண்மை நிலையைப் புரிவிக்காமல்
அவர்களைத் தூண்டிவிட்டு, காந்தி அவதாரமெடுத்தவராகக்
காட்டிக் கொள்ளுதல் பச்சோந்தித்தனம் ஆகும். இவர்களுக்கு
ஆதரவாகக்குரல் கொடுக்கும் கட்சிகளோ, பிரதமர் இந்த
சட்டத்தின் பிடியில் இருப்பவராக இருந்தால் போதும் என்று
நினைக்கிறார்கள்அதற்கு மாறாகக் கூறப்படும் கருத்துக்களை
காது கொடுத்துக் கேட்கவும் இவர்கள் தயாராயில்லை. எதிர்க்
கட்சிகள் என்றைக்கும் எதிலும் எதிரிக் கட்சிகள்தானா.?

நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன். WE GET
WHAT WE DESERVE. THAT"S ALL.
---------------------------------------------------------------------

        

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தணிக்கை ஏன்.?

 தணிக்கை ஏன்.?
---------------------

ஊழலுக்கெதிரான லோக்பால் மசோதா குறித்து அனுதினமும்
ஊடகங்களில் செய்திகள் அலசப்படுகின்றன.சாதாரணமானவரின்
கருத்துக்கள் எப்படியாவது உலகுக்கு உணர்த்தப்பட வேண்டும்
என்றால்நாம் நினைப்பது பத்திரிகைகளிலோ தொலைக்காட்சி
யிலோ வரவேண்டும். வலையுலக எழுத்தும் ஒரு கருவியாக
இருந்தாலும், பத்திரிகைகளில் கருத்து வெளியிட ஆசிரியருக்கு
கடிதம் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆவலால் உந்தப்பட்டு
THE  HINDU பத்திரிகைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அது
இந்த மாதம் 6-ம் தேதி வெளியாயிற்று. பத்திரிகையில் என் கடிதம்
வெளிவந்த செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் அதனைக் கண்டபோது
மகிழ்ச்சி பாதியாகக் குறைந்து சற்றே கோபம் தலைதூக்கியது.
கருத்துக்களைத் தெரிவிக்க கடிதம் எழுதுகிறோம். .அதில் கத்திரி
போட இவர்களுக்கென்ன உரிமை.?வாக்கியப் பிழையோ எழுத்துப்
பிழையோ இருந்தால் திருத்தலாம். எழுதியவற்றில் ஓரிரு
வாக்கியங்களை எடுக்கக் காரணம் என்ன.?இது இது இப்படி இப்படி
இருக்கிறது ,இன்னாரது செயல்கள் சில திருப்தி தருவதில்லை
என்று எழுதுவது குற்றமா.?நாகரிகமான மொழியில் நமக்குத்
தோன்றிய கருத்துக்களை வெளியிடத்தானே பத்திரிகைக்கு
எழுதுகிறோம். அப்படியானால் பத்திரிகையில் பிரசுரிக்க
இவர்களது தணிக்கைக்கு உட்பட வேண்டுமா.?நான் எழுதியதில்
நீக்கப்பட்ட முதல் வாக்கியம் இது
.
While due appreciation has to be given to the civil society members,
for awakening the conscience of the government to fight corruption
and present a Lok pal bill  their" holier than thou "attitude deserves
chiding.

பிரசுரிக்கப்பட்டது இது.

To say the lok pal bill presented by the government , is designed to protect the
corrupt and punish those who raise their voice against corruption is to take the
common man for granted. There may be some deficiencies ,but that has to be
ironed out by discussion and educating the public about where and what these
are.This is a government which has brought in the RTI the RTE and the rural
employment guarantee scheme and can not be just brushed aside.

நீக்கப்பட்ட கடைசி வாக்கியம் இது.

and to question their intention is deplorable. On the surface of it ,if the
prime minister brought under the ambit of the bill, they will be satisfied ,
or so it looks.To lead common man with jargon and jingoism, and to
take him for granted is not good either for the government or the
Anna led civil society.

இதைக் கண்டதும் என் மனதில் தோன்றியது

நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
--------------------------------------------



    

சனி, 6 ஆகஸ்ட், 2011

மொழியின் அழுகை...

மொழியின் அழுகை......!
-------------------------------

கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
----------------------------------------------------------------------






வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நினைவலைகள் தடைபட்டால்....

டெமென்ஷியா எனும் மறதி நோய்.
-----------------------------------------------

அந்தக் கலியாண வீட்டில், அங்கும் இங்குமாய்,பரபரப்பாக
ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.பக்கத்தில் போவோரைப்
பார்த்து ஒரு ஸ்நேகபாவத்துடன் ஒரு புன் முறுவல். அவரை
எனக்கு அறிமுகப்படுத்துகிறான் என் நண்பன்.அவர் அவனுடைய
மாமனார். என் பெயரைச் சொல்லி என்னை அவருக்கு அறிமுகம்
செய்கிறான்.அதே ஸ்நேகபாவச் சிரிப்பு, ஒரு சிறு தலையசைப்பு.
பிறகு எங்கோ சென்று விடுகிறார். சற்றுப் பொறுத்து வந்து என்
நண்பனிடம் என்னை யார் என்று கேட்க, மறுபடியும் அறிமுகம்
செய்யப்படுகிறேன். ஒரு புன் சிரிப்புடன் சென்றவர்சிறிது நேரம்
கழித்து வந்து மீண்டும் விசாரிக்கிறார். நான் யாரென்று. என்
நண்பனும் சளைக்காமல் என்னை மீண்டும் அறிமுகப்படுத்து
கிறான்.அவரை மறுபடியும் நான் பார்க்கும்போது அவர் இடுப்பில்
கட்டியிருந்த வேட்டி, நழுவுவது கூடத் தெரியாமல் நடந்து
கொண்டிருந்தார்.கால் இடறிக் கீழே விழுந்து அடிபட்டு காயமாகி
சிராய்ப்புகள் தெரிந்தும் ஒன்றுமே நடவாததுபோல் எழுந்து ஒரு
புன்சிரிப்புடன் சென்றார். அவருடைய வேட்டியை சரியாகக் கட்டி
வேறொருவரை உதவிக்கு இருக்கும்படி கூறினான். என் முக
பாவங்களைக் கண்ட என்நண்பன் தன் மாமனார் அல்ஜிமர் எனும்
நோயால் தாக்கப் பட்டிருப்பதாகக் கூறினான்.

ஹரித்துவாரில் கங்கைக் கரையில் கங்கா மாதாவுக்கு தீப
ஆராதனை தினம் விமரிசையாய் நடக்கும். நூற்றுக்கணக்கானோர்
பார்த்துப் பங்கு கொண்டு மகிழ்வார்கள். அங்கு அருகிலேயே
சிறு கோவில் இருக்கிறது. கோவிலை வலம் வந்து கங்கா
மாதாவை தரிசனம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும்
காலணிகளுடன் இருந்தோம். அவற்றை பாதுகாப்பாக அங்கு
வைக்க இடமில்லை. இருவர் காலணிகளுக்குப் பாதுகாப்பாக
அங்கிருப்பது ,மற்றவர் தரிசனத்துக்கு செல்வது என்று ஏற்பாடு.
நானும் என் மனைவியும் இருக்க மற்றவர் தரிசனத்துக்குச்
சென்றனர். சற்று நேரம் கழித்து வந்தவர்களில் ஒருவரைக்
காணோம். கூட்ட நெரிசலில் கூட வர முடியவில்லைபோலும்
என்று நாங்கள் அவருக்காகக் காத்திருந்தோம்..முன்பின்
தெரியாத இடம், மொழியும் புரியாது என்ற நிலையில் அவரைத்
தேட நாங்கள் கிளம்பினோம். சுற்றி சுற்றி வந்தும் அவர் தென்
படாததால், ஆளுக்கொரு பக்கம் தேட ஆரம்பித்தோம். சற்றுத்
தொலைவில் எதையும் கவனிக்காமல் அவர் சென்று கொண்டு
இருந்தார்.ஓடிப்போய் அவரைப் பார்த்து அழைத்து வரும்போது
அவர் பின்னால் ஏன் வந்தோம் என்று எங்களைக் கடிந்து
கொண்டார். தரிசனம் எல்லாம் முடிந்து உணவு தேடி
அலைந்தோம்.தென்னிந்திய உணவு கிடைக்கும் இடம் தேடி
உண்ணத்துவங்கினால் அவர் மட்டும் எதுவும் வேண்டாம்
என்று கூறுகிறார்.பசியில்லை என்றார். கட்டாயப்படுத்தி
கொஞ்சம் உணவருந்தச் செய்தோம். எங்கள் அறைக்கு வந்த
அவர் , அவருடைய காலணிகளை எங்கள் அறையில் தேடத்
துவங்கினார். அங்கு இல்லையென்று சொல்லியும் நம்பாமல்
எல்லா இடமும் தேட ஆரம்பித்தார். கூடவே தான் காலணிகளை
அங்குதான் விட்டதாகவும் அடம் பிடிக்கத் துவங்கினார்.ஒருவாறு
சமாதானப்படுத்தி அவர் அறையிலேயே அவர் கட்டிலருகேயே
அவர் காலணிகள் இருப்பதைக் காண்பித்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நான் பதிவிடும் காரணம் அவர்களுக்கே
தெரியாமல் அவர்கள் அல்ஜீமர் நோயால் ( பெரும்பாலும் மறதி
நோய் என்று அறியப்படுகிறது)பாதிக்கப் பட்டிருந்தார்கள் என்று
தெரியப் படுத்தவும், குறிப்பிட்ட சம்பவங்கள் நோயின்
அறிகுறிகளே என்று தெரியப்படுத்தவுமேதான்.

இந்த நோய் அநேகமாக வயதாகும்போது சுமார் அறுபது வயதுக்கு
மேல் தாக்குகிறது. நோய்க்கான காரணம் குறிப்பிட்டுச் சொல்லும்
படியாக ஏதுமில்லை. சாதாரணமாகவே வயதாகும்போது ஞாபக
மறதி எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் கூடவே வார்த்தைகள்
தடுமாற்றம், புரிந்து கொள்ளாமை, நடவடிக்கைகளில் மாற்றம்,
செயல் திறனிழத்தல், பசியின்மை, தூக்கமின்மை,என்று அடுத்து
அடுத்து வருவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாய்
இருக்கக்கூடும்.

டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடுபடுகையில் ஒருவரை அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.

இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
--------------------------------------------------------------

.

.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

என்ன நீதி..?


என்ன நீதி.?
---------------
-

ஒன்றென்று சொன்னால் நினைவுக்கு வருவது
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை.
ஆனால் அறிந்தும் உணர்ந்தோர் அவ்வொருவனுக்கு
ஆயிரம் நாமங்கள்,உருவங்கள் கொடுத்து, உள்ளம்
மகிழ்தல் பொறுக்கலாம்,அவரவர் விருப்பம். ஆனால்
அவன் படைப்பினிலே ஆயிரம் உண்டிங்கு சாதி
என்று ஓங்கி உரைத்தல் சரியோ, இது என்ன நீதி.?

            சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்
            மேதினியில் மேவு பொருள் அனைத்தும்
            இரண்டிரண்டாய் இலங்குதல் காணீரோ.!
            உண்மை பொய், ஆண் பெண் ஒளி இருட்டு,
            என்றெங்கும் எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று
            ஊடே இருப்பினும், ஒன்றில் ஒன்றை பிரித்து
            உணரும் நாம் நம் செயல்களில் நன்றெது என்றும்
            தீதெது என்றும் உணராதிருத்தல் கண்டிங்கு
            ஏதும் கேளாதது என்ன நீதி..?

அநீதி எதிர்க்க இரு கண் போதாதென்றோ
முக்காலம், முப்பரிமாணம் என்று எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மும்மூர்த்தியில்
ஒரு மூர்த்தி, முக்கண் கொண்டெரித்தான்,
அவன் தவம் கலைத்த இந்திரனுக்கும்
ஓராயிரம் கண்ணளித்தான். அவன் படைத்த
உலகில் அவலங்களுக்கெதிராய் ஒரு
கண்ணும் திறவாதது என்ன நீதி.?

           வாழும் நிலத்தை நால்வகைப் படுத்தினான்.
           வாழும் நெறிக்கு நான் மறையென்றான்.
           வர்ணங்கள் நான்கும் செய்தொழில் வகுக்க
           இருபிறப்பெடுத்தவன் உயர்ந்தவன் என்றான்.
           பிறப்பொக்கும் என்று உணர்ந்தும் வகுத்தது
           கொண்டு பிரித்திடல் என்ன நீதி.?

புலன்கள் ஐந்து,பஞ்சபூதங்கள் ஐந்து என்று
பூவுலகில் பிறந்த அனைவருக்கும் பொது
என்று படைத்த இறையா, இயற்கையா
வாய்ப்பென்று வரும்போது வித்தியாசம் காட்டுதல்
பூர்வ ஜென்ம வாசனையின் பலன் என்று கூறல்,
இப்பிழைப்பில் இழைக்காத பிழைப்புக்கு முற்பிறப்பை
காரணங் காட்டுதல் -இது என்ன நீதி.?

           பகிர்ந்துண்ணும் பறவையினங்கள் விலங்கினங்கள்
           பசிக்கு உணவைத் தேடி அலையும் அவை
           அடுத்த வேளைக்கே பதுக்கி வைக்காது.
           ஆவி பிரிந்தால் ஆறடி நிலமே சொந்தமில்லை
           என்றறிந்தவர் சேருமிடத்துக்கு கொண்டா செல்ல
           முடியும் ,தேவைபோய் மீந்தவற்றை
           ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
           அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது, எண்ணத்தில் ஓடியது.
எண்ணில் எழுத்தில் இறைபுகழ் பாட என்னால்
இயலவில்லை.கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவந்தானே. தீயவை தலை தூக்க
தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி.?
-------------------------------------------------------------

         





சனி, 30 ஜூலை, 2011

எண்ணச் சிறகுகளில்.....


எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

        அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
        விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
        கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
        இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

          அந்த நாள் அக்குயவன் கை
          ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
          இந்த நாளில் ஏழையெனை
          ஏனோ குறைகள் கூறுவரே.
          நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
          நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
          வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
          மறந்து நீக்கிச் சென்றிடவே
          சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
        நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

          என்னுயிர்ப் பறவையே,
          நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
          மூடிய கண்கள் விழித்து விட்டால்
          இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.
          ------------------------------------------------------------