Tuesday, October 18, 2011

சௌத்வி க சாந்த் ஹோ.....

சௌத்வி க சாந்த் ஹோ....(சிறு கதை.)
-----------------------------------
வெல்லிங்டன் பாரக்ஸ் அடுத்த வட்டக் குடியிருப்பில் (CIRCLE
QUARTERS) வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களுடன்
எதிரே இருந்த வீட்டு மாடியில் ஒரே பெண்கள் கூட்டம்.

”இந்த டிசம்பர் குளிரிலும் இவ்வளவு பெண்கள் குவிகிறார்களே
என்ன விசேஷமாக இருக்கும்”- என்று ஆனந்திக்கு ஒரே
உளைச்சல்.

வட்டக் குடியிருப்பைச் சுற்றியிருந்த ரோடின் கீழ்ப்பகுதியில்,
விஸ்தாரமான இடத்தில், நான்கு அறைகளுடன் ஒரு குட்டி
பங்களா, குதிரை லாயமென்றுஅதிகாரக் குறிப்பேடுகளில்
பதிவாகி இருந்த இடம் ,குடித்தனக் குடியிருப்பாக, ஆனந்தியின்
கணவனுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு பணியாளர்
குடியிருப்பும் அடக்கம்.

”நேவிஸ், அங்கே வீட்டு மாடியில் ஒரே கூட்டமாக இருக்கிறதே
என்ன விசேஷம்,?”-என்று ஆனந்தி கேட்டாள். நேவிஸ்
ஆனந்திக்கு உதவியாக இருப்பவள், செர்வண்ட் குவார்டர்ஸில்
குடும்பத்துடன் குடியிருந்தாள்.

“அம்மா, அந்த வீட்டு எஜமான் பெயர் அஷோக் புய்யான்
வெல்லிங்டன் செர்விஸஸ் ஸ்டாஃப் காலேஜில் பயிற்சிக்காக
வந்திருக்கும் ராணுவ மேஜர், அஸ்ஸாம்காரர்.இன்றைக்குப்
பௌர்ணமி கழிந்து நான்காம் நாள்.அல்லவா...அவர்களுக்கு
“கர்வா சௌத் என்ற பண்டிகை. அதுதான் கூட்டம்.

அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அனாயசமாகப் பதிவு
செய்து விடுவார்கள், வீட்டுப் பணியில் இருக்கும் பெண்கள்.
அதுவும் ஒரு விதத்தில் சௌகரியம்தான். - ஒருவரைப் பற்றி
ஒருவர் தவறாகக் கூறாத வரையில்.

“கர்வா சௌத்- ஆ.நான் கேள்விப்படாத பண்டிகையாக இருக்கு”

“இளம் பெண்கள் தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க நாள்முழுதும்
விரதம் இருந்து கணவனுக்காக வேண்டிக்கொள்ளும் நாள்.
கார்த்திகை மாசம் பௌர்ணமி முடிந்த நாலாம் நாள் நிலாவைப்
பிம்பத்தில் பார்த்த பிறகுதான் உண்பார்கள். வடக்கே விசேஷமான
நாள்”

” உன் தயவில் ஒரு சமாச்சாரம் தெரிய வந்தது.

” அந்த வீட்டில் இந்த நாள் இன்னும் விசேஷமானது. அம்மா. அந்த
ஐயாவுக்கு நாளைப் பிறந்த நாள் வேறு. இன்னும் தடபுடலாகக்
கொண்டாட்டம் இருக்கும்” என்றாள் நேவிஸ்.

எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின்
நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார
விரதம், காரடையான் நோன்பு, ரக்‌ஷ பந்தன், இத்தியாதி
இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி
ஏதாவது செய்கிறார்களா என்ன.?

அடுத்த நாள் காலையும் எதிர் பங்களாவுக்கு நிறைய விருந்தினர்.

“நேவிஸ், அந்த மேஜருக்கு இன்று பிறந்த நாள் என்றாய். ஆனால்
வந்து போகிறவர்களைப் பார்க்கும்போது என்னவோ அவ்வளவு
குதூகலம் இருப்பது போல் தெரியலியே.”-அவர்கள் குதூகலமாக
இருந்தார்களோ இல்லையோ, ஆனந்திக்கு மனசில் ஏதோ நெருட
லாகவே இருந்தது.

“நான் ஒரு எட்டு போய் ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று
பார்த்துவருகிறேன் அம்மா.”-நேவிஸ் எதிர் பங்களாவை நோக்கி
நடந்தாள். சற்று நேரத்தில் திரும்பி வந்தாள்.

“அம்மா ,நீங்கள் நினைத்தது சரிதான். அந்த ஐயாவும் அம்மாவும்
கவலையாகத்தான் இருக்கிறார்கள்.” என்று விஷயத்தை
விவரமாகக் கூறத் தொடங்கினாள். அந்த மேஜருக்கு 36- வயது
முடிவதாகவும் எல்லோரும் அந்த நாள்நல்லபடியாக முடிய
வேண்டுமே என்று கவலை கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

ஒருஜோசியக்காரன் வெகு நாட்களுக்கு முன் , அந்த மேஜர் 36-/
வயதுக்கு மேல் ஒரு நாள்கூட உயிர் வாழமாட்டார் என்று கூறி
இருக்கிறான். அதை அவர்கள் அப்போது தமாஷாகவே எடுத்துக்
கொண்டு மறந்து விட்டிருந்தார்கள். ஆனால் இந்த பாழாய்ப் போன
மனம் எதைமறந்ததாக எண்ணுகிறதோ,அது ஆழ் மனதில் உறங்கி
கொண்டிருந்துவிட்டு நேரம் காலம் தெரியாமல் நினைவுக்கு
வந்துவிடுகிறது. அந்த மேஜருக்கும் அவர் மனைவிக்கும் அந்த
ஜோசியனின் பேச்சுஅன்று நினைவுக்கு வந்து அலைக்கழித்து
இருக்கிறது. வந்த நண்பர்களுடன் இதைக் கூறி, இருட்டில் பயம்
போக்க விசிலடிப்பவன் போல் ,மேலுக்கு சிரித்து மகிழ்ந்து கொண்
டிருந்தார்கள்.”ஜோசியமாவது மண்ணாவது,எல்லாமே சுத்த
ஹம்புக்.இன்றைக்கு என் முப்பத்தாறாவது பிறந்த நாள். எனக்கு
ஒரு குறையுமில்லை.நானாவது இந்த நாளைத் தாண்டாமல்
இருப்பதாவது;’”என்று தேற்றிக்கொண்டு, மாலை பார்ட்டிக்கு
ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். அவர் மனைவியும் “நான்
விரதம் இருந்து நோன்பு நோற்று, வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
எல்லாமே நன்றாகத்தான் நடக்கும்,”என்ற நம்பிக்கையில்
விருந்தாளிகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.

பார்ட்டி களை கட்டத் தொடங்கியது.பாட்டும் டான்ஸும், கேளிக்
கையுமாக உற்சாக வெள்ளத்தில் நீந்தத் துவங்கினர். விருந்தினர்
எண்ணிக்கை எதிர்பாராமல் அதிகமாகவே வாங்கி வைத்திருந்த
மதுபான வகைகள் போதாதோ என்ற சந்தேகம் மேஜர்
புய்யானுக்கு வரவே, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காரை
எடுத்துக் கொண்டு கேண்டீனுக்குப் பயணமானார்.

விருந்தினர் நடுவே மேஜர் இல்லாதது முதலில் கவனிக்கப்பட
வில்லை. கவனித்ததும் கவலை கொண்டு அவரைத் தேடத்
தொடங்கினார்கள்.தேடிப்போனவர்களுக்கு ஒரு அதிர்ச்சி
காத்திருந்தது.மேஜர் ஓட்டிச் சென்ற கார், ஒரு மலைச் சரிவில்
இறங்கி, விபத்துக்குள்ளாகி இருந்தது. மேஜர் 36-/ வயது
தாண்டாமலேயேப் போய் விட்டார்.

பங்களாவில் சேதி தெரியாமல் கிராம ஃபோனில் “ சௌதவி கா
சாந்த் ஹோ “என்ற பாட்டு ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.
-------------------------------------------------------------------------------

( கலாநெசனின் ”உதய நிலா “ பதிவு படித்ததும் தோன்றிய கற்பனைக் கதை.”   






16 comments:

  1. முடிவு சோகத்தை கூட்டியது.

    ReplyDelete
  2. ஜோசியத்தை ஆதரிக்கும் இன்னும் ஒரு படைப்பு... அருமையான நடை, கடைசி வரை suspense .. ஆனால் கரு உதைக்கிறது..

    ReplyDelete
  3. சௌத்வி கா சாந்த் ஹோ- தலைப்பைப் பார்த்ததும் முகமது ரஃபியின் காலத்தால் அழியாத அந்த இனிமையான பாடல் நினைவுக்கு வந்தது ஐயா!

    ReplyDelete
  4. கிராம ஃபோனில் “ சௌதவி கா
    சாந்த் ஹோ “என்ற பாட்டு ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.
    முடிவு அருமையாக இருந்தது. விதி யாரை விட்டது என்கிறீர்கள்.

    ReplyDelete
  5. சாத்திரத்தை நம்பும் ஆதரிக்கும் ஒரு கதை. பலர் இவைகளை நம்புவதே இல்லை. ஆயினும் கதை சிறயது அடக்கமானது நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. தங்கள் கற்பனைக் கதை நல்லாவே எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ரஃபியின் இனிமையான பாடல்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. (என் அலைபேசியிலேயே அந்தப் பாடலை வைத்திருப்பதால் உடனே ஒருமுறை கேட்டுக் கொள்ளவும் முடிந்தது). இதே ஜோசியம் என் வீட்டில் இருவர் விஷயத்தில் பொய்யானது ஒரு சந்தோஷம்.

    ReplyDelete
  8. ஜோசியத்தை ஆதரிக்கும் படைப்பு என்பதுபோல் ஒரு எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளவும். ஒரு ஜோசியனின் கூற்று நம்பும்போது மனம் அலைக்கழிக்கப் பட்டு. அவன் கூறியதை மெய்ப்பிப்பதே கதையின் கரு. எனக்கு இந்த ஜோசியம் போன்றவற்றில் ஈடுபாடே கிடையாது.கருத்து தெரிவித்தவரின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. '69 களில் கூனுரில் வாழ்ந்த நினைவுகள் நிழலாக மனத்தில் படிந்தன. பெட்ஃபோர்டில் ஹிந்திப் படம் போட்டால் போதும், ஞாயிறுகளில் வெலிங்டன் ஆசாமிகளால் நிரம்பி வழியும். பெரும்பாலும் அந்த திரையரங்கில் ஆங்கிலப் படங்களைத் தான் பார்ப்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தோம்.

    ReplyDelete
  10. கலாநெசனின் ”உதய நிலா “ பதிவு படித்ததும் தோன்றிய கற்பனைக் கதை.”

    நிமமதியாயிற்று கற்ப்னை என்றவுடன்.!

    ReplyDelete
  11. பயத்திலேயே போய் சேர்ந்திருப்பார்
    வேலைக்காரி மூலமாக கொஞ்சம்கொஞ்சமாக
    சேதிகளை சொல்லிப் போகும்
    விதம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  13. ஐயா!
    கதையைக் சொல்லிச் சென்ற
    விதம் அருமை !அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. நல்லதொரு பகிர்வு. தில்லி நண்பர் கலாநேசன் சில வருடங்களாக எழுதுவதே இல்லை என்பதும் ஒரு வருத்தம்....

    என் பதிவில் உங்களுடைய இப்பதிவிற்கு சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. @வெங்கட் நாகராஜ்
    என் சிறுகதைத் தொகுப்பிலும் இக்கதை இருக்கிறதுஜோசியத்தை ஆதரிக்கும் படைப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி சார்

    ReplyDelete