Thursday, August 8, 2013

நானும் என் ஆரம்பகாலப் பதிவுகளும்


                               என் பதிவுகளும் வரவேற்பும்
                                --------------------------------------



திரு. தமிழ் இளங்கோ அவர்கள் முதல் பதிவின் சந்தோஷம் எனும் தலைப்பில் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே என் கணினி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது முதல் பதிவின் சந்தோஷம் என்று எழுதுவதைவிட என் பதிவுகளும் வரவேற்பும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்


எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுதைப் போக்குவதற்கு மட்டுமல்ல. என்னை மனசளவில் மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம் நம் மக்களிடையே நிலவும் ஏற்ற தாழ்வுகள்தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் இது குறித்து எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்களென்பது புரியாத ஒன்று.. நான் எழுதுவதன் மூலம் என் எண்ணங்களைப் பதிவிடுவதன் மூலம் அது குறித்த பிறரின் சிந்தனைகளை அறியவும்., முடிந்தால் ஒரு ஆரோக்கியமான சர்ச்சைக்கு வழிவகுக்கவும் உதவும் என்று எண்ணினேன்.என் பதிவுகளை வெறுமே பிறர் பாராட்ட வேண்டும் என்று மட்டும் நினைத்ததில்லை.அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடவும், அதை எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஏற்கவும் தயாராயிருந்தேன்.. ஆனால் என் அனுபவத்தில் பதிவுகளை வாசிப்பவர்கள் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான கருத்துக்கும் வழி வகுத்து இருக்கிறது


ஆகஸ்ட் மாதம் 2010-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தேன். மூன்றாண்டுகாலம் ஆகிறது. 380 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதினேன். தமிழ் மணத்திலிருந்து தமிழில் எழுத வேண்டினார்கள்.MUSINGS எனும் பதிவு எழுதினேன். பதிவுலகில் சற்றும் அறியப்படாதவன். இருந்தும் ஏறத்தாழ 70 பேர் படித்திருந்தனர். ஒருவராவது கருத்துப் பதிவு செய்யவில்லை அதன் பின் போராட்டங்கள் ஒரு கண்ணோட்டம் என்று தமிழில் எழுதினேன். அதுவும் சுமார் நூறு பேர்களால் வாசிக்கப் பட்டது. அதற்கும் யாரும் கருத்துப்பதிவு செய்யவில்லை. போகட்டும் நமது குணாதிசயத்தைப் பற்றி எழுதுவோம் என்று மறதி போற்றுவோம் என்று எழுதினேன். இதற்கும் எந்தக் கருத்தும் பதிவாகவில்லை. அதன் பின் வலைப்பூவில் பதிவுகள் ஒரு விமரிசனம் என்று எழுதி இருந்தேன்.அதற்கு சில கருத்துக்கள் கிடைத்தன. திரு காளிதாஸ் ( இவர் இப்போது முகநூல் பக்கம் போய்விட்டார்) திரு அப்பாதுரை. திரு சுந்தர்ஜி போன்றோரின் பின்னூட்டங்கள் சற்றே தெம்பைக் கொடுத்தது.
அதுவரை அந்தக் காலத்தில் எழுதிய சில காதல் கவிதைகளையும் இடுகையாக இட்டுக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதல் தோன்றி செய்யாத குற்றம் என்ற ஒரு பதிவு எழுதினேன். . உண்மையைச் சொன்னால் அந்தப் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டங்கள் நான் எழுதுவதை வாசித்து ரசிக்கவும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.அந்தக் காலத்தில் வாசிக்காதவர்கள் இப்போது வாசித்தால் எந்த மாதிரிப் பின்னூட்டங்கள் வரும் என்று அறிய, அதையே ஒரு பதிவின் லிங்க்காகக் கொடுத்திருந்தேன். பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது அது.
அதற்கு அடுத்த பதிவாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இயலாமை என்று ஒரு பதிவு எழுதினேன். அது குறித்த விமரிசனமாக பிற்காலத்தில் ஒரு பின்னூட்டம் வந்ததைக் குறிப்பிடலாம்
எழுத் எழுத வாசகர் வட்டம் சற்றே அதிகரிக்க பின்னூட்டங்களும் வர ஆரம்பித்தன. RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்ற ஆங்கிலப் பதிவை தமிழாக்கி எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் என்று எழுதினேன்.

பின் என்ன ? சாதாரணன் ராமாயணம் என்னும் பதிவில் ஆறு காண்ட ராமாயணத்தை ஒரே வாக்கியத்தில் ஒரு அசாத்திய உந்துதலோடு எழுதினேன். பலரது பாராட்டுக்களைப் பெற்ற அதை நானா எழுதினேன் என்று சிலரைக் கேட்கவும் வைத்தது. இப்போது அதைப் படித்துப்பார்க்கும்போது எனக்கே அந்த சந்தேகமெழுகிறது....!இந்த நேரத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து எழுத வைத்தவர்களில் முக்கியமானவர்கள் சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். திரு. ஹரணி, திரு சுந்தர்ஜி, திருமதி.சக்தி பிரபா, டாக்டர் பழனி கந்தசாமி . அப்பாதுரை திரு ஜீவி ஆகியோருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அண்மைக் காலமாக திரு, திண்டுக்கல் தனபாலனை குறிப்பிட வேண்டும். எங்கோ ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!  

( சில பழைய பதிவுகளின் லிங்க் கொடுத்திருக்கிறேன்.படித்துப் பார்க்கலாமே. MUSINGS, மறதி போற்றுவோம், இயலாமை, எண்ணத் தறியில் எட்டுமணிநேரம் )    .     
       




     
         
 

 


 




15 comments:

  1. இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. எண்ணம் என்ற ஊக்கமளிக்கும் டானிக் பெற்றுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், ஐயா.

    ReplyDelete
  3. உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!
    //

    ஆம், கருத்துக்கள் அளிக்கவில்லை வில்லை என்றாலும் நிறைய பேர் படிக்கிறார்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. GMB அவர்களுக்கு நன்றி!
    நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். பதிவுகளை வாசிக்கும் பலரும், ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று விமர்சனத்தில் உண்மையான கருத்துக்களைச் சொலவதில்லை. நீங்கள் கொடுத்த இணைப்புகளுக்கும் போய் பார்த்தேன். தூர்தர்சனில் பணிபுரிந்த காளிதாஸ் அவர்கள் இப்போது வலைப்பக்கம் வருவதே இல்லை. நல்ல் எழுத்தாளர், போட்டோகிராபர் அவர். இவரைப் போல் நிறையபேர் நின்று விட்டனர்.

    // எங்கோ ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .! //

    என்ற உங்கள் அனுபவமே மற்றவர்களுக்கு ஒரு டானிக் போன்றதுதான். வலைப்பதிவு என்பது மனோதத்துவ முறையில் ஒரு தெரபி போன்று ஆறுதலைத் தர வல்லது.

    ReplyDelete
  5. As my transliterator is not working, iam commenting in English.
    As all say, though there are many readers only a handful comments we receive.
    Comments do boost us to write more.
    After retirement, blogging do help us to communicate with like minded people.
    thankyou for a good post.

    ReplyDelete
  6. மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான கருத்துக்கும் வழி வகுத்து இருக்கிறது//

    நான் முன்பெல்லாம் என் மனதில் பட்டதை அது பதிவு எழுதியவருடைய கருத்து நேர் மாறானதாக இருந்தாலும் எழுதிவிடுவேன். ஆனால் அதன் முலம் பலருடைய நட்பை இழந்திருக்கிறேன். நம்முடைய எதிர்மறை கருத்துக்களுக்காக நம்மை தனிப்பட்ட எதிரியாகவே அவர்கள் நினைத்துவிடுவதை எண்ணி வேதனையடந்திருக்கிறேன். இப்படித்தான் பலருக்கும் நடந்திருக்கும். ஆகவேதான் பலரும் 'அருமை, நன்றாக எழுதியுள்ளீர்கள்.' என்று பாலிஷாக சொல்லிவிட்டு நழுவி விடுகின்றனர் என்பது என் கருத்து.

    ReplyDelete
  7. என்னுடைய ஒவ்வொரு பதிவையும்
    குறைந்த படசம் 600 பேருக்குக் குறையாமல்
    படிக்கிறார்கள்.பின்னூட்டமிடுபவர்கள் சுமார்
    25 பேரென்றால் வாக்கிடுபவர்கள் 10 பேர் இருப்பார்கள்
    பதிவுலகின் நிலைப்பாடு இதுதான்
    ஆகையால் நம் கருத்தைச் சொல்ல நாம்
    இவைகளை அளவுகோலாகக் கொள்ளவேண்டியதில்லை
    என்பது என் எண்ணம்
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. // டிபிஆர்.ஜோசப் said... நான் முன்பெல்லாம் என் மனதில் பட்டதை அது பதிவு எழுதியவருடைய கருத்து நேர் மாறானதாக இருந்தாலும் எழுதிவிடுவேன். ஆனால் அதன் முலம் பலருடைய நட்பை இழந்திருக்கிறேன். நம்முடைய எதிர்மறை கருத்துக்களுக்காக நம்மை தனிப்பட்ட எதிரியாகவே அவர்கள் நினைத்துவிடுவதை எண்ணி வேதனையடந்திருக்கிறேன். //

    டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்து ( குறிப்பாக எனக்கு ) முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. இனிய நினைவுகள்.... உங்கள் முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்.....

    ReplyDelete
  10. நீங்க நல்ல வருவீங்க! தொடருங்கள்.

    ReplyDelete
  11. என்னையும் மதித்து நினைவு கூர்ந்ததிற்கு மிக்க நன்றி. நன்றாகவே வளர்ந்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  12. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு தங்களின் வலைப் பூ முயற்சியே ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகப் படுகிறது ஐயா.
    நம் வலைத் தளங்களுக்கு வருபவர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான ,அனபர்களே கருத்துக்களைப் பதிவிடுகிறாரகள்.அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழ் தட்டச்சு அறியாதவர்களாக இருக்கலாம். மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களாக இருக்கலாம், அல்லது எவ்வாறு கருத்திடுவது என்பதை அறியாதவர்களாக இருக்கலாம்.
    ஆனாலும் அன்பர்கள் தொடர்ந்து தளங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
    நன்றி ஐயா

    ReplyDelete

  13. @ இராஜராஜேஸ்வரி
    @ கோபு சார்
    @ கோமதி அரசு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    @ தி. தமிழ் இளங்கோ
    நன்றாக எழுதி இருந்தால் பாராட்டுக்கள் அவசியம்தான் உண்மையான விமரிசனம் என்று வரும்போது காழ்ப்பில்லாமல் மாறுபட்ட கருத்துக்களைக் கூறலாம். நான் கூடியவரை அப்படித்தான் என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்நீங்கள் கூறுவதும் சரியே. ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு எழுதுவது ஒரு தெராபிதான்.I keep myself engaged, வருகைக்கு நன்றி.
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    I just communicate. May be like minded people like it. But surely my intention is not JUST MEANT for LIKE minded people. They are my feelings and I just communicate. Thanks for your views.

    @ டிபிஆர். ஜோசப்
    மாறுபட்ட கருத்துக்கள் எதிரிகளை சம்பாதித்துக் கொடுக்கிறது என்றால் உலகில் அநேகமாக நமக்கு எதிரிகள் மட்டும்தான் இருப்பார்கள். நட்பு என்பது அதையும் மீறியதாக இருக்க வேண்டும். Good friends must agree to disagree.! நன்றி .
    @ ரமணி.
    எனக்கு என் பதிவு சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லையோ என்று தோன்றுகிறது. பதிவில் காணும் பொருள் ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுப்பதில்லையே என்பதுதான் ஆதங்கம்.நாம் பிறரின் பதிவுக்குப் போவது அவசியம். அவர்கள் எழுதுவதைப் பாராட்ட வேண்டும் அப்படிச் செய்தால் பின்னூட்டங்களும் அதிகரிக்கும். எனக்கு ஒரு முறை திரு. அப்பாதுரை எழுதியது நினைவுக்கு வருகிறது.நாம் எழுதுவதற்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ அதே அளவு சுதந்திரம் படிப்பவர் கருத்திடாமல் போவதற்கும் இருக்கிறது VERY TRUE.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ தமிழ் இளங்கோ
    நீங்கள் யாருடையவாவது நட்பை இழந்திருக்கிறீர்களா.?
    @ வெங்கட் நாகராஜ்
    இவை இனிய நினைவுகள் என்றா சொல்கிறீர்கள்? என்னை நானே அசைபோட்டு அலசிக் கொள்கிறேன்.நேரம் கிடைக்கும்போது என் முந்தைய பதிவுகளைப்படியுங்கள். நான் சொல்வதன் பொருள் விளங்கும்.
    @ ப, பிரகாஷ்
    முதல் வருகைக்கு நன்றி, இனி நான் நல்லா வருவதற்கு என்ன. இருக்கிறது.உங்கள் பதிவுகள் சில பார்த்தேன்.குழந்தைகள் என்றால் பிரியமோ. ? வாழ்த்துக்கள்.
    @ டாக்டர் கந்தசாமி
    உங்களை மறக்க முடியுமா ஐயா. நன்றி.
    @ கரந்தை ஜெயக் குமார்
    திரு.ரமணிக்கு எழுதி இருக்கும் பதிலே உங்களுக்கும் சொல்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
  14. பொழுது போவதற்காக எழுதும் எனக்கு உங்கள் motivation புரிவது கொஞ்சம் சிரமம். எழுதும் பொருளுக்கேற்ற கருத்து வருவதில்லை என்ற ஆதங்கம் வருவதும் நீங்கள் பொழுது போவதற்காக எழுத விரும்பாததால் தானோ?

    'அருமை' என்ற ஒற்றை வார்த்தையை எழுதுவது கூட எத்தனை சிரமமென்பதை என்னால் சமீபத்தில் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete
  15. அப்பாதுரை சொல்வதைப் போல அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்வது கொஞ்சம் கஷ்டமே. என்றாலும் நான் உங்கள் பதிவுகளைக் குறித்து அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மையே! :( நேரம் இல்லாமை முக்கியக் காரணம். இணையத்தில் அமரும் நேரம் கிடைக்கும் நேரம் முடிந்த பதிவுகளைப் படிக்கிறேன். இங்கே உள்ள பலருடைய பதிவுகளுக்கு நான் ஒரு வாடிக்கையாளர் இல்லை என்பதும் உண்மை. :(( என்றாலும் அனைவருக்கும் அனைவரையும் தெரிந்திருக்கிறது என்பதே இந்த இணைய நட்பிற்குச் சான்று. உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete