Monday, April 24, 2023

என்னை நானே உணர வை

 

என்னை நானே உணர வை......

                                     என்னை நானே உணர வை.
                                     -------------------------------------

ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
ஆண்டவனே, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.
                             -----------------------------------------


7 comments:

  1. நல்லவனாய் வாழ்ந்து மறைந்தாலே போதும். அதை நாலு பேர் மெச்ச வேண்டும் என்றுகூட நாம் எதிர்பார்க்க வேண்டாமே.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    உங்கள் அனுபவ பகிர்வு அருமை. நம்மை நாம் உணர்தலே நல்ல விஷயம்.

    ReplyDelete
  3. "பேசாதே..  வாயுள்ள ஊமை நீ.. சொந்தம் என்ன பந்தம் என்ன கண்டால் பாவமே... பேசாதே.."  என்று பாடினார் கவிஞர் புலமைப்பித்தன். அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. ஆண்டவனுக்கு எழுதிய உங்கள் விண்ணப்பத்தில் நானும் பங்கு சேர்கிறேன்.

    Jayakumar

    ReplyDelete
  5. சார் பதிவு ரொம்ப யதார்த்தம். பல விஷயங்களை நாம் அமைதியாகக் கடந்து சென்றுவிடுவது நல்லது என்றே தோன்றும். பேசினால் சொந்தங்களும் விலகிப் போகும்...!!

    கீதா

    ReplyDelete
  6. அருமையான கவிதை. தன்னை உணர்ந்தாலும் அதன்படி நடப்பது கடினம்.

    ReplyDelete