பக்தி--கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி--கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அவதாரக்கதை-பரசுராமர்

அவதாரக் கதை --பரசுராமர்.
--------------------------------------
(அவதாரக் கதைகளில் அதிகம் கூறப்படாத கதைகளை எழுத எண்ணி, 
 பதிவிட்டு வந்தேன். ஆறு அவதாரக் கதைகள் எழுதப்பட்டிருந்த நிலையில் 
AHTHERAI என்ற பெண் நான் தொடர்ந்து எழுத வேண்டுகோள் வைத்திருந்தார்
இளைய சந்ததிகள் இக்கதைகளை படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. மேலும் 
படிக்க வேண்டுகோள் வைக்கிறார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த 
தாத்தாவிடம் கதை கேட்கும் பேத்தி ஆதெரைக்காக இது. )


பரசுராமர் கதை அறியும் முன் அவர்
பரம்பரையும் தெரிதல் நன்று.
புரூர வசு வம்சத்தில் காதி என்பவரின்
மகள் ,சத்தியவதி என்னும் பெயர் கொண்ட
மங்கை நல்லாளை மணக்க ரிசீகர் எனும்
தவச்சீலர் விருப்பம்தெரிவிக்க ,மகளை மணக்க,
காதொன்று கருப்புடனும் உடல் வெண்மையும்
கொண்ட குதிரைகள் ஆயிரம் சீராகக் கொணர்தல்
வேண்டும் என்றொரு நிபந்தனை காதி வைத்தார்

தவ வலிமை கொண்டு வருணனிடமிருந்து
ஆயிரம் குதிரைகள் பெற்றுத் தந்து சத்தியவதியை
மணந்து இனிதே நடத்திய இல்லறம் கொடுத்த
மகன் ஜமதக்கினிக்கு அவன் பெற்றோர், ரேணுகா
எனும் மாதரசியை மணம் செய்வித்தனர்.

ஜமதக்கினி ரேணுகா தம்பதிகள் பெற்ற
பிள்ளை செல்வங்கள் ஐந்தில் கடைக்குட்டி
பரசுராமர் இவரே பரந்தாமனின் அம்சம். அவரும்
பரமசிவனிடம் தவமியற்றிப் பெற்றார் ஒரு கோடரி
அதுவே அவர் பெயருக்கும் காரணம் கூறியது.
( பரசு = கோடரி ).

ரேணுகா அதிகாலை விழித்தெழுந்து
கங்கையில் நீராடி,நீரில் விரலால் வட்டம்
வரைய, நீர்க் குடமொன்று மேல் வரும் ;அது கொண்டு
அவள் கணவன் காலைக் கடன்கள் முடியும்.
தொடர்ந்து வரும் வழக்கம் போல் ஒரு நாள்
பத்தினியவள் நீரில் வட்டம் வரைய , அப்போது
பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய
தோற்றம் நீரில் தெரிய, சற்றே மனசில் சஞ்சலம்
ஏற்பட , வெளிப்படும் நீர்க்குடம் வராமல் நின்றது.
பலமுறை முயன்றும் நீர்க்குடம் வராதது
கண்டு திகைத்து நின்றாள் ரேணுகா.

நேரம் கடந்தும் நீர் வராத காரணம் தவவலிமை
கொண்டறிந்த தபசி ஜமதக்கினி கோபம் கொண்டு,
கங்கைக் கரையில் இருந்த அவர் மனைவியை
வெட்டி வீழ்த்த ஆணையிட,மூத்த நால்வரும்
தாயைக் கொல்ல இசையாமல் மறுக்க,ஐந்தாம் மகன்
பரசுராமரிடம் அவர் தாயை வெட்டப் பணித்தார்.
தந்தை சொல் தட்டாத தனயன் தன் கைப் பரசுவால்
தாயின் தலை துண்டித்து தாதையை வணங்கி நின்றான்.

தன் சொல் தட்டாத மகனிடம் வேண்டியது கேட்கப்
பணித்த முனிவரிடம் ,தாயின் உயிர் வேண்டியும்
சோதரர் சாபம் நீங்கவும் வரம் வேண்டிப் பணிந்தார் பரசுராமர்.

கங்கை சென்று வெட்டிய தலையும் உடலும்
 பொருத்தி அவளை அழைத்தால் உயிர்
 பெற்று வருவாள் என வரமருளினார்.

கங்கைகரை சென்ற பரசுராமர் தாயின்
தலைகண்டு உடல்காணாது வருந்த, பின்
அங்கிருந்த வேறோர் உடலில் தலை பொருத்தி
அழைக்க ரேணுகா உயிர் பெற்றெழுந்தாள்,

மகனுடன் வந்த ரேணுகாவைக் கண்ட
ஜமதக்கினி இனி அவள் காளி மாரி எனும்
பெயருடன் வாழ்வாள் என வாழ்த்தினார்.

ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன்,
காட்டில் வேட்டையாடிக் களைத்து வந்தவன்
தனித்திருந்த ஜமதக்கினி முனிவரிடம் தம் பசி
போக்க வேண்டி நிற்க, கேட்டது தரும் பசு காமதேனு
அவர் வந்தோர் அனைவர் பசியைப் போக்கினார்.

காமதேனுவிடம் ஈர்ப்பு கொண்ட கார்த்த வீரியன்
முனிவரைக் கேளாது அதனை ஓட்டிச்சென்றது
அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார்.

தெய்வாம்சம் கொண்டவன் மன்னன், அவன் தவற்றை
மன்னிப்பதே சிறந்தது, மீறிக் கொல்லல் பாவம், அது
போக்கப் புனித நீராடச் சென்றுவர மகனைப் பணித்தார் .

முனிவர் மகன் நீராடச் சென்றதறிந்த கார்த்தவீரியன்
மைந்தர் தனியே தியானத்தில் இருந்த ஜமதக்கினி
முனிவரை வெட்டி வீழ்த்திக் கொன்றனர்.

கட்டிய கண்வன் மறைவு கண்டு மார்பில் மாறி மாறி
மூவேழு முறை அன்னைக் காளி மாரி அறைந்தது கண்ட,
பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர் குலம்
அழித்தொழிப்பேன் என சூளுரைத்து அன்று முதல்
நீதி நெறி தவறிய மன்னர்களை கொன்று சபதம் முடித்தார்

பின்னாளில் மிதிலையில் மைதிலி கை பிடித்து
திரும்பும் இராமனுக்குத் தன் தவ வலிமைகளைக்
கொடுத்துக் கடமை முடிந்ததென சென்றார் பரசுராமர். .




செவ்வாய், 10 மே, 2011

அவதாரக்கதைகள்--பாகம் 2 --ஆமையாக...........

அவதாரக் கதைகள் --பாகம்  2--ஆமையாக ....
-----------------------------------------------------------

தவ வலிமை மிகுந்த துருவாச முனிவர் ,
திருமகளை வணங்கிவர ,மகிழ்ந்த மகாலட்சுமி ,
அவருக் களித்த ஒரு பூ மாலையை.,எதிரே 
வந்த தேவ ராஜனுக்கு சிறப்பு செய்வதாக 
எண்ணிக் கொடுத்தார். 
தன வல்லமைச் சிறப்பால் செருக்குடனிருந்த
இந்திரன் மாலையைத் தான் அணியாமல், யானையின் 
மத்தகத்தில் வைத்தான். யானை அதனை தன துதிக்கையால் 
எடுத்து காலில் போட்டு மிதித்துவிட ,சினம் கொண்ட 
துருவாசர் தேவேந்திரனை அவன் வலிமை, செல்வம் ,
சிறப்பனைத்தையும் இழக்கக் கடவது, என சாபம் இட்டார்.

வல்லமை  மிகுந்த முனிவரின் வாக்கு பலிக்க 
பொலிவிழந்த இந்திரன் அனைத்தையும் இழக்க, 
அவனுடன் தேவர்களின் நிலையும்  தாழ்ந்தது. 
என்ன செய்ய என்று கூடி ஆய்ந்தவர்கள் 
நான்முகனிடம் குறை கூறிச் சென்றனர். 
பாம்பணைப் பரந்தாமனே சரணம் எனச் 
செல்வதே சிறந்த வழி என்றவன் சொல் கேட்டு 
அனைவரும் திருப்பாற்கடல் சென்று முகுந்தனிடம் 
மன்னித்தருளவும் மறுபடி ஏற்றம் வேண்டியும் யாசித்தனர்.

திருமாலும் திருவாய் மலர்ந்து திருப்பார்க்கடலில்
அமிழ்ந்து  கிடக்கும் செல்வச்சிறப்புகளை 
வெளியே கொண்டுவர ,கடலைக் கடைய கிடைக்கும் 
அமிழ்தம் உண்டால்  அடைவீர் பழைய நிலை ,
பெறுவீர் புதுப்பொலிவும் என்றே அருளி ,தனித்து செய்தல்
இயலாது,கூடவே அசுரர் துணை நாடுங்கள் 
என்று அறிவுரையும் நல்கினார்.

 தேவர்கள் முயன்று பெற்ற நட்பில் அசுரரும் சேர கிடைக்கும் 
பலன்களில்  பாதி பாதிப் பங்கு என்றும் முடிவெடுத்தனர். 

ஒருசேர சிந்தித்து எடுத்த முடிவின்படி, 
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை 
கயிறாக்கி, பாம்பின் தலையை அசுரர் பிடிக்க 
வால் பாகம் தேவர்களின் பிடிக்குள் சிக்க 
திருப்பார்க்கடல்  கடையப் பட்டது. 
அசுரர்  பிடி இறுக,வலி தாங்காத பாம்பு 
ஆலகால விஷத்தைக்  கக்கியது. 

கொடிய  நெஞ்சின் வேகம் தாங்காத தேவரும் 
அசுரரும் பிடி நழுவ விட கடைதல் நிறுத்தப்பட்டதும் 
மந்தார மலை நிலை பிறழ, கதறி அழைத்தனர்,
காத்தருள வேண்டி நின்றனர். 
ஆமை வடிவெடுத்து, மகாவிஷ்ணு மந்தாரமலை
நிலை சமன் செய்ய தன முதுகில் தாங்கினார். 
காக்கும் கடவுளின் பரிந்துரையில் 
ஆலகால விஷத்தை அரனும்  எடுத்துண்டு, 
நஞ்சின் கொடுமையைத் தானேற்றார்

மீண்டும்  கடைதல் துவங்க பாற்கடலில் 
பல பொருட்கள் தோன்றின..திருமகளும் 
தோன்றித் திருமாலைத  தானடைந்தார். 
வாருணி என்றொரு மாது, மயக்கும்  மது அளிப்பவள், 
அரக்கர் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டாள்
வாருணிக்குப்பின் தோன்றிய தன்வந்திரி  கையில் 
அமிர்த கலசம் காணப்பெற அசுரர் அதைப் பற்றினர். 
தேவர் துயர் துடைக்க திருமாலும் அருள் புரிய, 
மயக்கும் மோகினி  வேடமேடுத்தார். 
ஒப்பந்தப்படி அமுதத்தைப் பிரித்துக் கொடுக்க 
தேவாசுரர்  அனைவரும்  வேண்டி நின்றனர். 

அசுரரும் தேவரும் இரு வரிசையில்கண் பொத்தி நிற்க
பங்கீடு துவங்கியது. தேவர்களுக்கு ஒரு முறை 
வழங்கப்பட்ட அமிர்தம் அசுரருக்கு ஈயப்படாமல் 
மறுமுறையும் தேவர்களுக்கே கொடுக்கப்பட, 
கண் விழித்துக் கண்ட அசுரர் ராகுவும் கேதுவும் 
சினமடைந்து , தேவர்களாக உருமாறி, நின்று 
அமுதம் உண்டனர். அருகில் இருந்து உணர்ந்த 
சந்திர  சூரியர்  மோகினியிடம் முறையிட, 
அவரும் உருமாறிய அரக்கர் தலையில்  கரண்டியால் 
ஓங்கி அடிக்க அமுதம் உண்ட அரக்கர் உயிரிழக்க வில்லை. 

காட்டிக் கொடுத்த  சந்திர சூரியரை பகை கொண்டு 
கிரகண காலத்தில் தீண்டி வருவதாகக் கூறுவர்

கற்றறிந்ததை  உணர்ந்தபடி எழுதினேன். 
அவதாரக் கதைகளில் கிளைகள் பல உண்டு, 
சில சமயம் அவையே முதன்மை பெறுவதும் உண்டு.
=============================================. .