பயணம் சந்திப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் சந்திப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூலை, 2015

ஒரு குதூகலப் பயணம்


                                ஒரு பயணமும் பேருவகையும்
                                -----------------------------------------------

நான் அடிக்கடி கூறுவது “திட்டமிட்டுச் செய், திட்டமிட்டதைச் செய்என்பதாகும். ஆனால் சிலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிவதில்லை. திட்டங்களுக்குப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல நாட்களாகத் திட்டமிட்டு வந்தேன். முதலில் என் பயணம் சென்னைக்கு என்றிருந்தது. ஆனால் அங்கு வெயிலின் தாக்கம் கூடுதல் என்பதால் அது நிறைவேற்றப் படாமல் போய் விட்டது. நான்தான் விடாக்கண்டனாயிற்றே. காலம் கனியக் காத்திருந்தேன் என் மனைவிக்கு என்னுடன் தனியே பயணிக்க மிகவும் பயம். கடந்தமுறை பயணத்தின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் நான் விழுந்ததே முக்கிய காரணம். யாராவது கூட இருந்தால் அவளுக்கு பயம் சற்றுக் குறையும் சில நாட்களுக்கு முன் என் மச்சினனிடம்( எனக்கு அவன் மூத்தமகன் போல ) என்னை எங்காவது அழைத்துப் போகக் கேட்டேன். அவனும் சரி என்றான். நடுவில் அவனும் அவன் மனைவியும் மலேசியா பயணம் மேற்கொள்ள இருப்பதால் அது முடிந்து வந்து போகலாம் என்றான் இதனிடையே சற்றும் எதிர்பாராமல் என் பழைய நண்பன் ஒருவன் தொலை பேசியில் அழைத்துப் பேசினான்  இன்னொரு அறுபது வருட நட்புக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. என் தம்பி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் வீட்டு கிரகப் பிரவேசத்துடன் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவன் வீடு கட்டி முடிக்க இன்னும் காலதாமதம் ஆகும் என்று தோன்றியதால் என் பயண திட்டத்தை அதற்கு முன்பே நிறைவேற்ற எண்ணினேன். என் மனைவியை இதற்கு உடன் படச் செய்ய என்னிடம் இருந்த துருப்புச்சீட்டை போட்டேன் அவள் விரும்பும் குருவாயூர் பயணத்தையும் செய்து விடலாம் என்றேன். என் மச்சினனும் மலேசியப் பயணம் முடித்து வந்து விட்டான் ஜூலை 15 தேதிக்குப் பின் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்றான் ரயில் டிக்கெட் எடுப்பதோ முன் பதிவு செய்வதோ ஏற்புடையதாய் இல்லை. விரும்பும் இடத்துக்கு விரும்பும் நேரத்தில் செல்ல மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும் சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள். பாலக்காட்டில் பதிவுலக நண்பர் துளசிதரனையும் சந்திப்பது என்பது தீர்மானமாயிற்று. 16-ம் தேதி காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டால் மாலை நான்கு மணிக்குள் பாலக் காடு சென்று விடலாம் பால்க் காட்டில் மத்திய கேரள பேரூந்து நிலையம் அருகில் ஹோட்டல் கபில வாஸ்துவில் அறைகள் முன் பதிவு செய்தோம் என் பழைய நண்பன் மனைவியுடன் மாலை ஐந்து மணிக்கு வருகிறென் என்று கூறினான் நண்பர் துளைதரனின் இருப்பிடம் பற்றி விசாரித்தால் அவரும் என்னை ஹோட்டலில் வந்து சந்திப்பதாகக் கூறினார். இங்கிருந்து பாலக் காட்டுக்குக் சாலை வழியே சென்றால் 430 கி.மீ. தூரம் என்று தெரிந்தது.எந்த சிக்கலும் இல்லாமல் மதியம் ஒன்றரை மணி அளவில் நேராக ஓட்டலுக்குச் சென்று உணவருந்தி சற்றே ஓய்வாக இருந்தோம் மாலை நான்கு மணியிலிருந்தேமனம் எதிர்பார்ப்பில் நிலை கொள்ளாமல் இருந்தது,  சரியாக ஐந்து மணிக்கு என் நண்பன் சுந்தரேஸ்வரன் மனைவியுடன் வந்தான் அவனுக்கு இதய அறுவைச் சிகிச்சை முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்றான் இவனும் நானும் அறுபது ஆண்டுகளாக நண்பர்கள். ஒரே நாளில் எச்.ஏ எல் -லில்  பயிற்சியில் சேர்ந்தோம் ஊர்ப்பட்ட விஷயங்கள் இருந்தது பேசுவதற்கு. எந்நேரமும் நண்பர் துளசிதரன் வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ரிசெப்ஷன் இலிருந்து துளசிதரன் கூப்பிட்டார், அவர் வரும் போதே எதிர் கொண்டு வரவேற்றேன் பரஸ்பர அறிமுகப் படலம் முடிந்தது, ஏதோ காலம் காலமாகப் பரிச்சயப்பட்டநட்புபோல் இருந்தது, நண்பர் துளசிதரனை இதுவே முதன் முறையாகப் பார்க்கிறேன் ஏதோ சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். சில நொடிகள் மண்டைக் குடைச்சலுக்குப் பின் தெரிந்தது. அவரது குறும் படம் போயட் தெ கிரேட் இல் மொட்டை அடித்துப் பார்த்தது. இப்போது வலது பக்கம் வகிடு எடுத்த தோற்றம் . வந்தவர் என் பதிவுகள் சிலவற்றிலிருந்த விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ,என் பதிவுகள் சிலவற்றை நினைவில் கொண்டு வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் என் பதிவுகள் எல்லாவற்றையும் என் மனைவி படிப்பதில்லை. அண்மையில் எழுதி இருந்த எண்ணச் சிறகாட்டம் என்னும் பதிவில் இருந்த விஷயங்களைப் பற்றி அவளுக்கு ஏதும் தெரியாது. எனக்கோ துளசிதரன் அது பற்றிப் பேசிவிடுவாரோ என்னும் பயம் இருந்தது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டாம் இல்லையா.?என் நண்பன் சுந்தரேஸ்வரனின் அண்ணா மதுசூதன் துளசிதரன் பணிசெய்யும் பள்ளிக்கு வேண்டப் பட்டவர் என்று தெரிந்தது. ஏறதாழ இரண்டு மணி நேரத்தில் துளசிதரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் கவனித்தது , ஆங்கில ஆசிரியரான அவர் பேச்சில் ஆங்கில வார்த்தைகளே வரவில்லை....!சற்றே பின் தங்கிய இடத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் சற்றே பின் தங்கிய மாணவர்கள் துளசிதரன் மாதிரியான ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என் சிறுகதைத் தொகுப்பான வாழ்வின் விளிம்பில் புத்தகத்தை அவருக்குக் கொடுத்தேன் உடன் இருந்த நேரத்தில் அவரது பணிவும் அடக்கமும் என்னைக் கவர்ந்தது. பல காலம் பழகியவர்கள் பிரியும் போது ஏற்படும் pangs of parting  எனக்கிருந்தது. பிரியா விடை பெற்றவர் இன்னும் மூன்று மணிநேரம் மோட்டார் சைக்கிளில் பயணப் பட்டு அவர் இல்லத்துக்கு நீலாம்பூர் செல்ல வேண்டும் என்றார் வழியில் மழையில் அகப்படக் கூடாதே என்று என் மனைவி வருத்தப்பட்டாள்


நண்பர் துளசிதரனுடன்

 ( என் காமிராவில் எடுத்தது, வெகு சுமார் ரகம் .என் மச்சினன் அவனது டிஜிடல் காமிராவில் எடுத்த படங்கள்  கீழே)

துளசிதரனுடன் நான்
என் சிறுகதைத் தொகுப்பு  துளசிதரனுக்கு



சுந்தரேஸ்வரன் நான் துளசிதரன் 
 அறுபது ஆண்டுகால நண்பன் சுந்தரேஸ்வரனின்  அண்ணாதான் காருண்யா இல்லம் நடத்தும் மதுசூதனன். அந்த இல்லத்துக்கு நண்பர் துளசிதரனைக் கூட்டிக் கொண்டு போக விரும்பினேன்.  உலகம் மிகவும் சிறியது.பாருங்கள் துளசிதரன் பணிசெய்யும் பள்ளியின் ஆதரவாளர்களுள் ஒருவர்தான் மதுசூதனன் என்பது தெரிந்ததாலும் , ஏற்கனவே அவரைப் பற்றி துளசிதரனுக்குத் தெரியும் என்பதாலும் நேரம் காலம் லாஜிஸ்டிக்ஸ் சரிப்பட்டு வராததாலும் அங்கு அவரைக் கூட்டிப் போகும் எண்ணத்தைக் கைவிட்டேன்

இன்று 22-ம் தேதி பதிவர் கில்லர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் துளசிதரனைப் பாலக்காட்டில் சந்திக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்திருந்தால் அவரும் வந்து துளசிதரனை சந்தித்து இருக்கலாம் என்று கூறினார். துளசியை சந்திக்கும் ஆர்வம் தெரிந்தது. 

(குதூகலப் பயணம் தொடரும்)

வியாழன், 21 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும் -2


   பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்--2
------------------------------------------------------------------



தஞ்சைக் கவிராயரை நான் சந்திக்க விழைந்ததே முக்கியமாக என் நன்றியை நேரில் தெரிவித்துக் கொள்ள நினைத்ததாலும் முகமறியா நட்பை தக்க வைத்துக் கொள்ள விரும்பியதாலும்தான். கவிராயர் பற்றி இன்னொரு முகமறியா நண்பர் சுந்தர்ஜி மூலம் தெரிந்து கொண்டேன். பொதிகை தொலைக்காட்சியில் ஓரிரு முறை “கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் அவர் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன். நான் என் சிறுகதைத் தொகுப்பை புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய போது அதற்கு அணிந்துரை அளிக்கச் சிறந்தவர் இவரே என்று என் மனம் சொல்லியது.என்னைப்பற்றிய எந்தவித அபிப்பிராயமும் இல்லாமல் கதைத் தொகுப்பினைப் படித்து அவர் அணிந்துரை தந்தால் காய்தலோ உவத்தலோ இல்லாமல் நடு நிலை எண்ண வெளிப்பாடாக இருக்கும் என்று நினைத்தேன். புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என் கணிப்பு சரியே என்று தெரிவிக்கிறது.
(கவிராயரை சந்திக்கும் போது சுந்தர்ஜியும் உடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும், ஆனால் என் துரதிர்ஷ்டம் சுந்தர்ஜி அப்போது சென்னையில் இருக்கவில்லை)



ஜி.எம்.பி.யின் கதைகளைப் படித்துப் பார்த்தேன். இக்கதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆனவை அல்ல. ஆகக் கூடியவையும் அல்ல. பத்திரிகைக் கதைகளுக்கான இலக்கணமோ, உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை. 

தற்காலம் தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளைப் பற்றிச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒன்றும் பிரயோசனமில்லை. அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான் செய்கின்றன. 

ஜி.எம்.பி. இந்த இரண்டு பிரிவிலும் அடங்காதவர். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகியிருப்பதை அடையாளப்படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றித் தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகனின் சுவாரஸ்யத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை.


இக்கதைகளில் உண்மைகள் மினுக்கட்டாம் பூச்சிகளாகப் பறந்து செல்கின்றன. இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது - அவற்றிடம்.
                 =======

ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுத்து விடுகின்றன. ஏன் அடங்க வேண்டும்? பத்திரிகைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை, அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்துத் திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன.

இந்த அணிந்துரை புகழவோ இகழவோ இல்லை. மனசில் பட்டதை எழுதி இருக்கிறார். இவர் ஒரு சுவாரசியமான மனிதராக இருக்கவேண்டும்.இவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற உந்துதலாலும் வெளிவந்த புத்தகத்தின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுக்கவும் ஊரப்பாக்கம் போனோம்
அவர் தினமும் நான்கு மணி அளவில் அவரது பேரனைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வாடிக்கை. நாங்கள் ஏறத்தாழ அதே நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்றோம். எங்களை வரவேற்று இருக்க வைத்து குழந்தையைக் கூட்டிவரப் போனார். போகும் முன் அவர் எழுதி வெளியாகி இருந்த “ வளையல் வம்சம் எனும் கவிதை நூலைக் கொடுத்துச் சென்றார். எந்த நேரத்திலும் கவிதை எழுத முடியும், ஆனால் எல்லா நேரத்திலும் படிக்க முடியாதுஎன்று எழுதி இருப்பது கண்டேன். அணிந்துரை தர அவர் எடுத்துக் கொண்ட நேர அவகாசம் நினைவுக்கு வந்தது. கிடைத்த அவகாசத்தில் பல கவிதைகள் படித்துவிட்டேன். எளிமையான வார்த்தைகளில் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறார்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது சிலர் எழுதும் கவிதைகள் abstract-ஆக விளங்காமல் இருப்பது பற்றிக் கேட்டேன். அவர் பாரதியை மேற்கோள் காட்டினார். பாரதி சொன்னதாக அவர் கூறியது “உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அந்தக் கவிதையைக் கிழித்துப் போடு
குழந்தைகள் பற்றிப் பேசும்போது அவர் சொன்னார். குழந்தைகள் கடவுள் போன்றவர்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துக் கெடுத்து விடாதீர்கள்.அவர்களுக்குக் கல்மிஷம் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளும் மிகக் குறைவு என்றார். நான் என் பங்குக்கு குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்வரை கடவுள் போல. ஆனால் வளர வளர அந்தக் குழந்தைமை காணாமல் போவதைப் பார்க்கும்போது வருந்தக் கூடாது என்றேன். அவரது “அவதாரம் என்னும் கவிதையைப் படியுங்களேன்
“பேரனுக்காக
எவ்வளவோ அவதாரங்கள்
எடுக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் அந்த யானை அவதாரம்
ரொம்பக் கஷ்டம்

இல்லாத வால் ஆட்டி
ஆடாத காது அசைய
நாலு கால் நடையில்
ஒரு கை தூக்கிப் பிளிற வேண்டும்.

முதுகில் உட்கார்ந்து
முன்னேறிச் செல் என்பான்
முழங்கால் வலிக்கும்

அப்புறம் சிங்கம் போல்
உறுமு என்பான்
நான் இருமுவேன்
இருமலிலும் உறுமலின் சாயை
இருந்திருக்கும் போல
விட்டு விடுவான்
பிறகு யார் துணையுமின்றி
கனவுலகில் பிரவேசித்து
தூங்கிப் போவான்
நான் சும்மா
பார்த்துக் கொண்டிருப்பேன்
கடவுளைப் போல

கவிதையைப் படித்து விட்டீர்களா. இப்போது இதையும் படியுங்கள்
“நீங்கள் கை தட்டிப் பாராட்டும்
ஒவ்வொரு கவிதையும்
ஏற்கனவே உங்களால்
நிராகரிக்கப் பட்ட  வாழ்க்கையிலிருந்து
சேகரிக்கப் பட்டதுதான்

தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர். பேசும் போது அவருக்கு அவரது தந்தையின் நினைப்பு அடிக்கடி வருகிறது அவருடைய தந்தையை பற்றி ஒரு சம்பவம் பகிர்ந்து கொண்டார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் அவர் இயல்பை விளக்கச் சொன்ன சம்பவம். தந்தையின் கையில் சில ரூபாய்கள் வீட்டுச் செலவுக்காக  இருந்தது. அதில் செலவு போக ரூ.20/- மிச்சமிருக்க அவரது மனைவி மக்கள் இவர் குணம் தெரிந்து அதை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் என எச்சரித்திருந்தனர். அச்சமயம் நண்பர் ஒருவர் வந்து தம் கஷ்டங்கள் சிலதைக் கூறி பணம் கேட்டிருக்கிறார். உறவினர் இல்லை யென்று சொல்லச் சைகை காட்டி இருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இவர் எழுந்து போய் அந்த ரூ20-ஐயும் அந்த நண்பரிடம் கொடுத்தார். அவர் போனபிறகு உறவினர்கள் இல்லையென்று சொல்வதற்கென்ன என்று கேட்டபோது “இருக்கே எப்படி இல்லை என்று பொய் சொல்வது என்றாராம். தன் தந்தையைப் பற்றிப் பேசும் போது நெகிழ்ச்சி தெரிகிறது. வீட்டின் முன் நிற்கும் புங்கை மரம் தந்தை வைத்தது, இப்போது வளர்ந்து நிழல் கொடுக்கிறது என்று சொல்லி உருகுகிறார்.இனிய எழுத்தாள நண்பர் ஜீஎம்பிக்கு அன்புடன் என்று “வளையல் வம்சம் “ கவிதைத் தொகுப்பினை பரிசளித்தார்.

அவருடன் நிறைய புகைப் படங்கள் எடுக்க் நினைத்தது இயலாது போயிற்று. நான் கொண்டு சென்ற காமிராவில் பாட்டரி தீர்ந்து போய் அதை ரீ சார்ஜ் செய்ய சார்ஜர் இல்லாததால் அதன் பிறகு புகைப் படங்களே எடுக்க முடியாமல் போயிற்று. நல்ல வேளை ஓரிரு புகைப் படங்கள் எடுக்க முடிந்ததே மகிழ்ச்சி.
தஞ்சாவூர் கவிராயர், பேரன், மற்றும் நான்
கவிராயர், பேரன் நான், என் மனைவி



கவிராயரிடம் இருந்து விடை பெற்றபோது மணி ஆறாகி இருந்தது.நண்பர் உமேஷ் ஸ்ரீநிவாசன்  என் இருப்பிடம் வந்து என்னைக் காணமுடியாமல் திரும்பி இருந்தார். அவருக்கு ஈரோடு போகும் வேலை இருந்ததால் சந்திக்க இயலாமல் போயிற்று.ஒன்றைப் பெரும்போது ஒன்றை இழக்க வேண்டியதாயிற்று.   


.......