நாராயணீயம் பாராயணம்—குருவாயூர் பயணம்.
( சில நாட்களாகப் பதிவுலகுக்கு வர முடியவில்லை. அதில் ஒரு காரணம் நான் ஊரில் இல்லாதது. மற்றொரு காரணம் என் கணினியில் ups செயலிழந்து விட்டது சரிசெய்து இதோ மீண்டும்)
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )
சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
”பாகவதசாரம்” என்றும் அழைக்கப்படும் நாராயணீயம்
எனும் நூல் 1560-ம் ஆண்டு மேலப்பத்தூர் எனும் ஊரில் பிறந்த நாராயண
பட்டத்திரி என்பவரால் பாடப் பட்டது. வாத நோயால் உழன்றவர் நாராயணீயம் பாடி நலம்
பெற்றார் என்றும் தெரிகிறது. நூறு தசகங்கள் கொண்ட நூல் நாராயணீயம் ஒவ்வொரு
தசகத்திலும் பத்துக்குக் குறையாத பாட்டுக்கள், மொத்தம் 1034 கொண்டது.
பகவானின் இயல்பிலும் பெருமையிலும் தொடங்கி கேசாதி பாதம் வரை போற்றி வணங்கி
முடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன நாராயணீயம் பாடல்கள். நாராயணனின் பெருமைகளைப்
பாடுவதாலும் நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்டதாலும் நாராயணீயம் என்ற பெயரோ.?
இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை
பக்தர்களிடையே காணப் படுகிறது. இந்த நாராயணீயம் பற்றிய எந்த விஷயமும் தெரியாமலேயே
என் மனைவி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். சம்ஸ்கிருதத்தில்
உள்ள இதனை உச்சரிப்புப் பிறழாமல் படிக்க வடமொழி அறியாதவர்களுக்கு பயிற்சி மிகவும்
தேவை.
இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் “ அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியில்” அங்கம் வகிக்கும் ஐயப்பன் விஷ்ணு சகஸ்ர நாம மண்டலியின்
குழுவினர், வாரம் ஒரு முறை குழுவாக இதனைக் கோயிலில் பாராயணம் செய்கின்றனர். இதே
பாராயணம் அந்த குருவாயூரப்பன் முன்னிலையிலும் செய்ய விழைந்தனர். பல நாட்கள்
முன்பாகவே திட்டமிட்டு அதற்காகப் பாடுபட்டு பாராயணம் செய்தும் முடித்தனர்.
நாராயணீயம் பாராயணம் பற்றிக் கூறும்போது நான் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். என் மூத்த பேரனுக்கு பெயர் சூட்டலின் போது தேர்ந்தெடுத்த
பெயர் “விபு”.என்பதாகும்.
நாராயணீயத்தில் ஆங்காங்கே ஆண்டவனைக் கூப்பிடும் முறையாக இது வருகிறது. இரண்டாவதாக
அவதாரக் கதைகள் பற்றிப் பதிவிட்டுக் கொண்டிருந்த நான் கிருஷ்ணாவதாரக் கதையை “
கிருஷ்ணாயணம்” என்று எழுதி இருந்தேன்.
கண்ணனின் அவதாரத்தில் நிகழ்ந்த பல
சம்பவங்களின் நிகழ்வுகளைக் கோர்வையாகக் கூற எனக்கு நாராயணீயமே வழிகாட்டியாக
இருந்தது.
குருவாயூரில் அண்மையில் ‘சம்பூர்ண நாராயணீய நித்ய பாராயண மண்டபம்’என்று நிறுவி இருக்கிறார்கள். கிழக்கு நடையின் எதிரே
சற்று வலப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. அங்குதான் இந்தப் பாராயணம் நடைபெற்றது.
பெங்களூரில் இருந்து சுமார் 40 பெண்கள் ( அனைவரும் நாற்பது வயதைத்
தாண்டியவர்கள் ) ட்னமிழ் மலையாள கன்னட மொழியினர் சேர்ந்து ஒருங்கிணைந்து பாராயணம்
செய்தனர். மேடையில் கிருஷ்ணனின் உருவப் பொம்மைகள் சுமார் 20 க்கு மேல் வரிசையாக
வைக்கப் பட்டிருந்தன. கன்னட வழக்கப்படி பஞ்சு மாலைகளும் சார்த்தப் பட்டன.
கண்ணனுக்குப் படைக்க என்று பலவகை இனிப்பு வகைகளுடன், சீடை முறுக்கு போன்ற பல்வேறு
உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. பூவையர்கள் பாராயணம் செய்பவர்கள்
என்று ( வாயனக் காரர்கள் என்று மலையாளத்தில் கூறுகின்றனர் )அடையாளப் படுத்திக்
கொள்ளப் ப்ரௌன் நீற சேலை உடுத்தி இருந்தனர். காலை சுமார் 6 மணிக்குத் துவங்கி
இடைவிடாப் பாராயணம் முடிய மதியம் 12 மணி ஆகிவிட்டது.
குருவாயூருக்குப் பல முறைப் பயணம் செய்துள்ள நாங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது
மாற்றத்தைக் காண்கிறோம். முன்பு போல் கோயிலுக்குச் சென்று மனம் ஒன்றி தரிசனம்
செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தரிசனத்துக்கு வருபவர் எண்ணிக்கை எண்ணிலடங்காமல்
போகிறது. அதுவும் உதயாஸ்தமனப் பூசை என்று இருந்து விட்டால் கோயிலின் நடையை
அடிக்கடி மூடி விடுகிறார்கள். மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.
குருவாயூரில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வெயில்
காலத்தில் ஆண்கள் மேலாடையின்றி ஒருவரை ஒருவர் நெருக்கி . அப்பப்ப்ப்பா ஒவ்வொரு முறையும் சலிப்பே அதிகம் உண்டாகிறது.
கூட்ட நெரிசலில் பெண்கள் மேல் இடிக்கக் கூடாது என்று எண்ணினால் , அவர்களுக்கோ
அந்தக் கவலை ஏதுமின்றி நம்மையே நெருக்கி யடித்து முன்னேறுகிறார்கள். அண்மைக்
காலமாக வயதில் மூத்தவர்களுக்கென்று மாலையில் 4.30 முதல் 5.30 வரை தனி வரிசை
இருக்கிறது. அதனால் கண்ணனின் தரிசனம் கிடைத்தது. குருவாயூரப்பனின் விக்கிரகம்
சிறியது. சுமார் 30 அடி முன்னால் இருந்துதான் ஓரிரண்டு வினாடிகள் தரிசனம்
செய்யலாம். இந்த முறை தரிசனம் செய்யும்போது எங்கும் நிறைந்த உருவம் இல்லாதவனை
படங்களில் காணும் உருவத்தை நினைத்து வழிபட்டேன்.
கோயிலுக்கு கிழக்கு மேற்கு என்று இரண்டு வாசல்கள் உள்ளன. இந்த முறை என்
மாமியார் கூறி இருந்தபடி மேற்கு வாயிலில் இருந்து ஸ்ரீகோயிலின் கர்ப்பக்கிருக
விதானத்தையும் கொடி மரத்தின் உச்சியையும் ஒரே இடத்தில் காண முடிந்தது. இது இதுவரை
நான் அறியாதது.
பிருகஸ்பதியும்( குரு ) வாயுவும் சேர்ந்து கட்டியதால் குருவாயூர் என்று பெயர்
வந்ததாகச் சொல்வார்கள். 1970-ம் ஆண்டு குருவாயூர் கோயிலில் பயங்கரத் தீ விபத்து
நடந்தது ஸ்ரீ கோயிலை சுற்றி இருந்த விளக்கு மாடம் முழுவதும் தீயால் சேதப் பட்ட
போதும் ஸ்ரீகோயிலும் ஐயப்பன் வினாயகர் சன்னதிகளுக்கு எந்த சேதமும் நிகழவில்லையாம்.
கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர்
அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான
யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன்
தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு பதிவின் பின்னூட்டமாக
நான் எழுதி இருந்தது இங்கும் தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது.
-----------------------------------------------------------
.
