Monday, October 3, 2011

அவதாரக் கதைகள்....(தொடர்ச்சி.)

 அவதாரக் கதைகள் ( தொடர்ச்சி.)
-----------------------------------------------
          நான் இதுவரை ஏழு அவதாரக் கதைகள் பதிவிட்டிருக்கிறேன்.
மீதி மூன்றில் கல்கி அவதாரம் போக இருப்பது இரண்டு அவதாரக்
கதைகள். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்து
எழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றி
பல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதார
கதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,
வழக்கம்போல் எனக்கே உள்ள சந்தேகங்கள் எழுந்து ,எழுதுவதற்கு
தடைபோடுகின்றன.

       நாம், பகவான் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றும்
இன்னும் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துடன் சேர்த்து பத்து
அவதாரம் என்றும் கேள்விப்பட்டும் சொல்லிக் கொண்டும் வந்தி
ருக்கிறோம். சில நாட்களுக்கு முன் “சோ”-வின் “ எங்கே”
பிராமணன் என்னும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் (ஜெயா
டீவியில்11-30-/ முதல்12-/வரை “)மொத்தம் பகவானின் 22-/                  அவதாரங்கள் குறித்து சோஅவர்கள் விளக்கம் கூறி, ( 22- அவதாரங்       களையும் பெயர்களுடன் குறிப்பிட்டார்.) சாதாரணமாகப் பத்து          அவதாரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் புகுந்து தெளிய தற்சமயம் எனக்கு வழியுமில்லை,
வசதியுமில்லை. ஆனால் அவதாரக் கதைகள் எழுதுவது என்று
முடிவெடுத்து எழுதி வந்தவன் முன்னேற முடியாமல் தவிக்கக்
காரணம் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் குறித்த தெளிவு
இல்லாததனால்தான்.

           பக்திமாலை என்ற ஒரு தியான ஸ்லோகத் தொகுப்பில்
தசாவதாரஸ்துதி என்று ஒரு ஸ்லோகம். பத்து அவதாரங்களின்
பெயர்களும் அந்தத் துதியில் வருகிறது.

           “மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி
            வாமன பார்கவ நமோ நமோ
            வாசுதேவ ரகுராம புத்த ஜய
            கல்கியவதாரா நமோ நமோ
            தசவித ரூபா நமோ நமோ “

என்று வருகிறது, இதன்படி புத்தன் ஒரு அவதாரமாகக் கருதப்
படுகிறார்.ஆனால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட
ஸ்ரீ தசாவதாரக் கதைகளில் பலராமனை ஒரு அவதாரமாகக்
கூறப்படுகிறது. நான் எழுதியெதெல்லாம் பெரும்பாலும் இதில்
கூறியுள்ள செய்திகளின் அடிப்படையில் அமைந்ததே.

          ” இதில் திருமால் உழு தொழிலின் மேன்மையை உலகுக்கு
உணர்த்த எண்ணினார். எனவே கலப்பையை படைக்கலமாகக்
கொண்ட பலராமர் வடிவெடுக்க நினைத்தார்” என்று கூறப்பட்டு
இருக்கிறது திருமால் தேவகியின் வயிற்றில் ஏழாவது கருக்
கொண்டதாகவும் , அக்குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு,
மகா காளிதேவி தேவகியின் வயிற்றில் இருந்த கருவை நந்த
கோபனின் இரண்டாம் மனைவி ரோகிணியின் வயிற்றில்
மாற்றி அமைத்தாள் என்றும் ,திருமால் ரோகிணியின் வயிற்றில்
பிறந்து பலராமர் என்ற பெயருடன் விளங்கினார் என்றும் கூறப்
பட்டுள்ளது.

           ஒரே நேரத்தில் திருமால் இரண்டு அவதார புருஷராக
விளங்கினாரா என்ற சந்தேகம் எனக்கெழ, அதைத் தீர்த்துக்
கொள்ளும் அவசியம் உணர்ந்தேன்.

          ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ஸ்ரீ நாராயணீயம் படித்துக்
கொண்டு வரும்போது , முப்பத்தேழாவது தசகத்தில் பத்தாம்
பாடலில் “ மாதவனே, உன் ஏவலினால் பாம்பரசனான ஆதி
சேஷன் ஏழாவது கருவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்.
பின், மாயை அவனை ரோகிணியிடம் சேர்த்தாள். அப்போது
சச்சிதானந்த வடிவமாகிய நீயும் தேவகியின் வயிற்றினுள்
புகுந்தாய்” என்ற ரீதியில் செல்கிறது.

         இப்போது பலராமனை அவதார புருஷ்னாக எடுத்துக்
கொள்வதா, புத்தனை அவதார புருஷனாக ஏற்பதா என்ற
சந்தேகம் வலுக்கிறது. பலராமர் ஆதிசேஷனின் பிறப்பா
பரந்தாமனின் அவதாரமா என்னும் கேள்விகள் எழும்போதும்
பலராமரின் அவதார நோக்கம் நான் படித்த வரையில் சரியாக
விளக்கப்படாத நிலையில் அது பற்றி எழுதுவது உசிதமாகப்
படவில்லை.

           பதிவர்களில் பல விஷயங்கள் தெரிந்தவர் இருப்பர்.
அவர்கள் இவற்றுக்கு விளக்கம் கூறினால் அதையும் சேர்த்துப்
படிக்கும்போது தெளிவுகள் பல உண்டாகலாம். ஆக, அடுத்து
கிருஷ்ணாவதாரக் கதை கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்று
கூறி முடிக்கிறேன்.
----------------------------------------------------------------


        

13 comments:

  1. அதற்க்கான விளக்கத்தை நானும் தேடி கொண்டு தான் இருக்கிறேன், புத்தரை இந்து மதம் விஷ்ணுவின் அவதாரமாய் என்ன முடியாது... ஆகையால் இதற்க்கான விளக்கம் கிடைக்கும் பொழுது தனி பதிவாக போடுங்கள்... ஒரு வரலாற்று சந்தேகம் தீர்ந்து விடும்..

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்கள். பற்பல புதிய விஷயங்களை நாங்களும் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.

    ReplyDelete
  4. புராணக்கதைகள் பலர் சொல்லக் கேட்டவையே. புத்தர் அவதாரம் போல் பகவான் சத்தியசாயிபாபாவையும் ஒரு அவதாரம் என்றே கூறுகின்றார்கள். இது பற்றியும் அறிந்திருந்தால் தயவுசெய்து விளக்குங்கள். சுவாரஸ்யமாகத் தரும் கதைகளை நானும் படித்து இன்புறுகின்றேன்

    ReplyDelete
  5. நல்ல பதிவு. நாமெல்லாம் புராணக்கதைகள் பெரியவங்க சொல்லிக்கேட்டு அறிந்தவைதா, புத்தர், சாயி எல்லாம் தசாவதாரத்தில் அப்பல்லாம் சொல்லப்பட்டதில்லே. நாம தெரிஞ்சு கொண்டது வேறுவிதமாக.

    ReplyDelete
  6. இராம‌ய‌ணமே ப‌ல வடிவ‌ங்க‌ளில், பல்வேறு கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்திருப்ப‌தாய் விள‌க்க‌ ஒரு சிறு க‌தை கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா.அது..

    ராம‌ப‌டாபிஷேக‌த்திற்குப் பின்பு, அனும‌னின் சீரிய‌ செய‌ல்க‌ளுக்கு ப‌ரிசாய், சீதையிட‌ம் அனும‌ன் இல‌ங்கையில் அடையாள‌மாய் காட்டிய‌ க‌ணையாழியை அளித்தாராம். ச‌ந்தோஷமிகுதியில் அதை அனும‌ன் வானில் ப‌றக்கும் போது அது த‌வ‌றி பாற்க‌ட‌லில் விழ‌, அதை தேடி அனும‌ன் க‌ட‌லினுள் அழைந்து தேடித்திரிந்த‌ போது, க‌ட‌ல‌ர‌ச‌னை சந்தித்து த‌வ‌ற‌விட்ட‌ க‌ணையாழியைப் ப‌ற்றிக் கூற‌, அவ‌ரோ ப‌ல‌ க‌ணையாழிக‌ளைக் காட்டி, இதில் எது நீ தேடி வ‌ந்த‌து எனக் கேட்க‌ அனும‌ன் குழ‌ம்பிப் போன‌து என அக்க‌தை முடியும். இராம‌ன் அவ‌தார‌மே ப‌லவாய் இருக்கும் போது, த‌சாவ‌தாரின் அவ‌தார‌த்தை பத்துக்குள் ஏன் க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டும்?

    ReplyDelete
  7. இந்த மாதிரியான இறைவனின் அவதாரங்களும் அவை பற்றிய சிந்தனைகளுமே உருவ வழிபாட்டிற்குத் தோற்றுவாய் என்பது எனது புரிதல்.
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?..

    ReplyDelete
  8. உருவ வழிபாடே கூடாது என்ற கருத்தை
    வலியுறுத்திய புத்தர் மிகச் சரியாகச் சொன்னால்
    இந்து மதக் கொள்கைகளுக்கு
    நேர் எதிரானவராகவேபடுகிறார்
    அவர் எப்படி ஒரு அவதாரமாகக் கருதப்படுகிறார்
    எனத் தெரியவில்லை

    ReplyDelete
  9. ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க
    வளர்க்கப்படுகிறோம்.

    இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆயிரமாயிரம் கதைகளும் புனைவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
    இந்த அவதாரங்களும் அது பற்றியகதைகளும் இதன் விளைவாக இருக்கலாம்.

    கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றார்போல் கதைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்பகுத்தறிந்து புரிந்து கொள்வது அவரவர்சமர்த்துப்படி இருக்கும்.

    ReplyDelete
  10. 'காண முடியாத சக்தி' என்று இல்லாத ஒன்று மாதிரி அதை எண்ணக்கூடாது. அதுவும் காண முடிகிற சக்தி தான்.இப்பிரபஞ்சமாக, இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தோற்றதிலுமாக, அந்த சக்தி பதிந்துள்ளது. நடமாடும் சக்தியாக நம்முள் உயிர்ப்புடன் திகழ்கிறது.

    மனிதன் உயிர்வாழ்வதற்கு உதவிய, உதவும் அத்தனையையும் நன்றியுடன் அவன் வழிபட்டான். அத்தியாவசிய மான அவை இல்லை எனில் தான் இல்லை என்று தெரிந்திருந்தான். இந்தத் தெளிவு தான் பகுத்தறிவின் உச்சக் கட்டம். இதுவே பஞ்சபூத வழிபாடாக-- பட்டும் படாமலும் பிற்காலத்தில் சொல்லப்பட்ட இயற்கை வழிபாடாக-- இருந்தது.

    இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனைப் பார்க்கும் பொழுது விதவிதமான பெயர்களால் அவற்றை விளித்துக் களித்தான். கூறுகள் பலகோடி எனினும் மூலம் ஒன்றே என்கிற ஞானம் அவனுள் பிறந்தது. சூரியக் கதிர்கள் பலகோடியாயினும் சூரியன் ஒன்றே என்கிற மாதிரி.

    இப்பொழுது இறைவனின் அவதாரங்களுக்கு வருவோம். 'இறைவனின் அவதாரங்கள்' என்று சொல்வதற்கும், 'அவதாரக் கதைகள்' என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு என்பது உங்களுக்கும் தெரியும். அதனால் அதற்குள் போக வேண்டாம். இவ்வாறு அவதாரங்கள் எடுக்க தேவை என்ன என்பதற்குள் ளும் போக வேண்டாம்.

    இறைவன் எடுத்த அவதாரங்களுள் வித்தியாசம் காட்டி- ஒவ்வொரு கால கட்டத்திலும் நிகழ்ந்த இவற்றிற்கு வேறுபாடு காட்டித்- தெளிவதற்காக உருவ வழிபாட்டுச் சிந்தனை தோன்றியிருக்கலாம் என்பது என் யூகம்.

    'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு' என்கிற வள்ளுவரின் வாய்மொழிக்கு வகுக்கப்பட்ட நியாயமே வழிபாடுகள்.

    ReplyDelete
  11. புத்தன் அவதாரம் என்று தான் சொல்கின்றனர். ஆனால் பொதுவாக பலராமனைத் தான் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாய்க் கூறுவது வழக்கம்.

    ReplyDelete
  12. ராமர் கூட புத்தனைப் பற்றிக் கூறி இருப்பதால் புத்தன் என்ற பெயரில் இன்னும் சிலரும் இருந்திருக்கலாம். இது குறித்துத் தகவல்கள் திரட்ட அவகாசம் தேவை.

    ReplyDelete